அருமை
க்ருஷ்ணா ' SaysSister, 51 vadhu Adyayan epponpoduveenga
Priya ' Saysகாலை 6.40 மணிக்கு விக்ரமின் செல்போன் துடித்தது. அரை தூக்கத்தில் கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவன் அலைப்பேசி திரையில் சுகுமார் மாமா என்று வந்திட சட்டென்று எடுத்தான்.
"ஹலோ மாமா! சொல்லுங்க மாமா... இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தான்.
"தம்பி எப்பவும் அப்பா வந்து 5.30க்கு எழுப்பி வாக்கிங் கூட்டிட்டு போவாரு. இன்னைக்கு இன்னும் வர காணோம்னு வீட்டுக்கு வந்து பார்த்தேன்" என சுகுமார் சொல்லி முடிக்கும் முன்பே விக்ரம் முகம் வெளிரியது.
சுகுமார், "கதவ தட்டி பார்த்தேன். சத்தம் ஏதுமில்ல. காலிங் பெல் அடிச்சேன். எந்திரிக்கல. போன் பண்ணியும் பார்த்தேன். எந்த பலனும் இல்ல. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. கதவ உடைச்சு பார்த்தரலாமா?" என கேட்க,
"ஐயோ மாமா. இத கேக்கணுமா? சீக்கிரம் கதவ உடைச்சு என்னன்னு பாருங்க மாமா" கட்சி கொண்டு கட்டிலை விட்டு இறங்க அவன் குரல் கேட்டு எழுந்தாள் சத்யா.
சுகுமார் அருகில் இருந்தவர்களை அழைத்து விஷயத்தை சொல்லி கதவின் தாழ்பாளை உடைத்தார்கள். அவர்கள் வேகமாக உள்ளே சென்றபோது பெட்ரூம் அறை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது உள்பக்கமாக தாழிடப்படவில்லை.
கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கொண்டு தனது மனைவியின் பட்டுப்புடவை தனது நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் எந்த அசைவும் இன்றி அமைதியாக படுத்திருந்தார் செல்வகுமார்.
குளிர்ந்து போன அவரது உடலும் மூச்சற்ற நாசியும் அசைவற்ற உடலும் இறந்து விட்டார் என்பதை உணர்த்தியது. அருகில் காலியாகிப்போன தூக்க மாத்திரை அட்டை சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்திருந்தது.
சரியாக ஏழு மணிக்கு மீண்டும் விக்ரமிற்கு போன் அழைப்பு சென்றது. அதற்கு முன் ஆறு முறை முயற்சி செய்த போதும் சுகுமார் அழைப்பை எடுக்கவில்லை. பதட்டத்தில் இருந்த அவனோ சட்டென்று அழைப்பை எடுக்க "மாப்ள அப்பா நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருடா" என அழுது கொண்டே சொல்ல அப்படியே சரிந்து அமர்ந்தான்.
அவன் உடல் மொழியை பார்த்த சத்யாவிற்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.
"மாமா..." துவண்டுபோன குரலில் திக்கி திக்கி பேசினான்.
"சீக்கிரம் கிளம்பி வாடா. இங்க நாங்க மத்த வேலையை ஆரம்பிக்கிறோம். ஆனா அப்பா தானா சாகலடா. தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கார்னு நினைக்கிறேன். என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் புரியலடா. நம்ம எஸ்ஐ சக்திவேல் கிட்ட சொல்லி இருக்கேன்" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.
"அப்பா.... அப்பா.... " என்று அவன் அழுது கொண்டே கத்தியதில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்தான். சத்யாவும் அழுது கொண்டே சீக்கிரம் கிளம்புங்க போலாம் என்றாள்.
செல்வகுமாரின் உடல் பெட்ரூமில் இருந்து எடுத்து வந்து ஹாலில் தரையில் வைத்தார்கள். தலைமாட்டு அருகில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு செய்ய வேண்டிய முறை செய்தார்கள். சிறிது நேரத்தில் ஊர் முழுக்க அந்த செய்தி பரவியது.
சிறிது நேரத்தில் அங்கு வந்து இறங்கிய ஐஸ்பெட்டிக்குள் உடல் புகுந்தது. உயிரோடு இருந்தவரை செல்வகுமார் என்ற பெயரோடு வாழ்ந்தவர் சில நிமிடங்கள் முன்னால் இருந்து சவம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
"ஏம்பா அவர் பையனுக்கு விஷயத்தை சொல்லிட்டீங்களா? முக்கியமான சொந்த பந்தம் எல்லாத்துக்கும் சொல்லிருங்கப்பா" கூட்டத்திலிருந்து குரல் வந்தது.
"அதெல்லாம் சொல்லியாச்சுப்பா. இந்நேரம் பையன் கிளம்பி இருப்பான். எப்படியும் வர்றதுக்கு ரெண்டு மூணு மணி ஆகும்னு நினைக்கிறேன்"
"எத்தனை மணிக்கு சவத்த எடுக்கிறதுன்னு சொன்னா தானப்பா காட்டுல எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்க முடியும். நம்ம வீரனும் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல"
"அட என்னப்பா சொல்றீங்க! அவ்வளவு தூரத்திலிருந்து பையன் வரான். ஒரே பையன். அவனுக்கு அவங்க அம்மா மூஞ்சி ஞாபகம் இருக்கோ இல்லையோ? அவங்க அப்பன் தான் அப்படி வளத்தான். அவனுக்கு கொஞ்சம் அழறதுக்காவது நேரம் தர வேண்டாமா?" முதியவர் ஒருவர் சொல்ல,
"பெருசு நீ சொல்லிட்டு போயிருவ. எழவ முடிச்சுட்டு மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போக வேண்டாமா? இங்கேயே டோரா போட்டுக்கலாமா? கொஞ்சம் சும்மா இருங்க"
"ஏன்டா உங்கப்பன் செத்தா இப்படித்தான் எடுப்பேன்னு துள்ளுவியா? வந்தோமா எழவு கண்டோமா? விருப்பம் இருந்தா எடுக்கிற வரைக்கும் இரு. இல்லையா நீ பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இரு. அவன் பெத்த பையன் வந்துட்டு இருக்கான்ல. அவன் வந்து எப்ப எடுக்கிறதுனு சொல்லுவான்" என்று அந்த முதியவர் சொன்னவுடன் அவருக்கு சுருக்கென்று இருந்தது.
"விடுங்கப்பா. ஆளாளுக்கு பேசிக்கிட்டு. விக்ரமுக்கு போன் பண்ணி என்ன பண்றதுன்னு கேட்டா சொல்ல போறான். அத விட்டுட்டு நாமளே ஒன்னு பேசிட்டு இருந்தா என்ன பிரயோஜனம்?" என ஒருவர் சொன்னவுடன்,
சுகுமார், "அவனுக்கு யாரும் போன் பண்ண வேண்டாம். அவன் இப்போ என்ன மனநிலையில் இருப்பான்னு நமக்கு தெரியாது. இங்கே என்ன நடந்திருக்குன்னு அவனுக்கு தெரியாது. அவன் வந்த அப்புறம் நாம பேசிக்கலாம். இப்போதைக்கு ஒருத்தர் போய் ஜோசியர் கிட்ட எடுக்குறதுக்கு எது நல்ல நேரம்னு குறிச்சிட்டு வாங்க. இன்னைக்கு சாயந்திரம் இல்லைனாலும் நாளைக்கும் சேர்த்து எழுதி வாங்கிட்டு வாங்க" என்றார்.
செல்வகுமார் இறந்த செய்தி கேட்டு பல உறவினர்கள் விக்ரமிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார்கள் அவர் இறந்த செய்தி உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள.
கண்ணீர் நிறைந்த முகத்துடன் வார்த்தைகள் தொண்டைக்குள்ளியில் சிக்கிக் கொண்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிற பதில் சொல்லி கொண்டிருந்தான். ஹலோ விக்ரம். அப்பா இறந்துட்டாரா?" என்ற கேள்விக்கு, "ஆமா. அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு" என்று சொன்னான்.
அப்பா இறந்துவிட்டார் என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. அவன் மனதில் இருந்த வலியிலும் துக்கத்திலும் அவனிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கேள்வி அப்பா என் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது தான்.
"ஏங்க.. உங்க வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல மாமா தவறிட்டாருனு வச்சிருங்க. நிறைய பேரு உங்களுக்கு போன் பண்றாங்க. யார் யாருக்கு சொன்னாங்கன்னு தெரியல. சொந்தக்காரங்க எல்லோருக்கும் தெரியனுமில்ல" என்றாள் சத்யா.
அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டு தனது செல்போனின் இன்டர்நெட் வசதியை ஆன் செய்தான்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் குழுவில், " எனது அப்பா எங்களை விட்டுவிட்டு அம்மாவிடம் சென்றுவிட்டார். ஊரில் உள்ள அவரது வீட்டில் அவர் உடல் இருக்கிறது" என பதிவு செய்தான்.
இரவில் இன்டர்நெட்டை ஆப் செய்து வைக்கும் பழக்கம் உள்ளதால் காலையில் குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. அதில் தனது தந்தை எப்பொழுதும் காலை அனுப்பும் காலை வணக்கம் குறுஞ்செய்தி இன்று அவனுக்கு வரவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி நள்ளிரவில் வந்திருந்தது.
அதை படித்தவனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. கண்ணீர் வேகமாக கன்னங்களில் விழுந்து ஓடியது. அவன் படித்த அந்த செய்தியை தன் மனைவியிடம் கூட கூறவில்லை.
அவனுக்கு எப்போது வீட்டுக்கு சென்று அப்பாவை பார்ப்போம் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் இப்போது யாரிடமும் பேசக்கூட முடியவில்லை.
தனது செல்போனை தன் மனைவி சத்யாவிடம் கொடுத்துவிட்டு அமைதியாக கண்களை மூடி சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் வழிந்து ஓடிய கண்ணீர் அவன் வலிகளை சொல்லிக் கொண்டே இருந்தது.
அதே நேரத்தில்,
"அவருக்கு என்னதான் பிரச்சனை? இத்தனை நாள் சந்தோசமா தான் இருந்தாரு. காடு தோட்டம் வீடு போய் வருவதற்கு காரு அதை ஓட்டுறதுக்கு டிரைவர்னு காசு பணத்துக்கு குறை இல்லாம நல்லா தானே இருந்தாரு. அப்புறம் ஏப்பா இப்படி மாத்திரை சாப்டாரு?" கூட்டத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
"யாருக்குப்பா தெரியும்? பையன் கூட ஏதாவது சொல்லி இருக்கலாம்?" மற்றொருவர் கூறினார்.
"இத்தனை சொத்தும் அவர் பெயரில தான் இருக்கு. எழுதி வைக்க சொல்லி பையன் கேட்டிருக்கலாம் இல்ல"
''அட சும்மா இருங்கப்பா. இத்தனை சொத்துக்கும் அவன் ஒருத்தன் தானே வாரிசு. என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு தானே எல்லாம். அது காரணமா இருந்திருக்காது"
"அப்ப பையன் ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு காட்ட வித்து காசு குடுக்க சொல்லி இருக்கலாம்... இல்ல"
"அட ஆமாப்பா... பையன் போன தடவை வந்தப்பவே தொழில்ல நட்டமாயிருச்சு. அங்கிருந்தா பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அதான் இங்கு வந்து ஒரு நாலு நாள் இருக்கலாம்னு அன்னைக்கே சொன்னான். அப்ப கூட அப்பாவை ஊருக்கு வாங்கன்னு கூப்பிட்டான். ஒருவேளை அந்த வீட்டை விக்கிறதுக்கு தான் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். பெருசு எப்படியும் முடியாதுன்னு சொல்லி இருக்கும். நேத்து போன் பேசும்போது ஏதாவது சொல்லி இருப்பான். அவசரப்பட்டு மாத்திரை சாப்பிட்டுருச்சு" என்றார் உறவினர் ஒருவர்.
"இல்லன்னா பெரியவர் ஏதாவது அவனை சொல்ல.... அவர ஏன் இன்னும் இருந்து தொல்லை பண்றீங்கன்னு கேட்டு இருக்கலாமில்ல" என ஒருவர் மாற்றி ஒருவர் செல்வகுமார் தற்கொலை செய்து கொள்ள விக்ரம் தான் காரணம் என்று முடிவு செய்து விட்டார்கள். அந்தப் பேச்சுக்களும் துக்க அழுகைக்கு நடுவே காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
மதியம் சரியாக 2.30க்கு விக்ரம் வந்த கார் வீட்டிற்கு வந்தது. ஏற்கனவே பல கார்கள் நின்றதால் ஆனால் வாசல் வரை வர முடியவில்லை. காரை விட்டு இறங்க அவனுக்கு பயம் பற்றியது. கார் கதவை திறக்க கைகள் நடுங்கியது. அவனைப் பற்றி சத்யா அறிவாள். சற்றென்று கார் கதவைத் திறக்க இருவரும் இறங்கினார்கள்.
மொத்த கூட்டமும் இவர்களை தான் பார்த்தது. அருகில் நின்ற சிலர் அவனது தோளை தட்டி முன்னை நகரச் சொல்ல வீட்டில் இருந்து சிலர் வேகமாக ஓடி வந்து அணைத்து அழுதார்கள்.
சத்யாவின் அப்பா குழந்தையை வந்து வாங்கிக் கொள்ள, அவளின் அம்மா அழுது கொண்டு அவளை வேகமாக உள்ளே அழைத்துச் சென்றார்.
அழுது தேங்கி நின்ற விக்ரமை சுகுமார் கைபிடித்து இழுக்க வரமாட்டேன் என தலையாட்டிபடி அங்கேயே அமர்ந்தான்.
"வாடா..."
"எதுக்கு மாமா வரச்சொல்றீங்க. நான் வரமாட்ட"
"எந்திரிடா மாப்ள. வந்து அப்பாவ பாரு"
"இனிமேல் பார்க்க முடியாதுன்னு இப்ப வந்து பாத்துக்க சொல்றீங்களா மாமா. என்ன இப்படி விட்டுட்டு ஏன் மாமா போனாரு" என கண்ணீர் விட்டு கதறினான்.
"டேய் மரியாதையா எந்திருச்சு வாடா. எல்லாரும் உனக்காக தான் காத்திருக்காங்க" என அண்ணன் குமரேசன் சொல்ல,
விக்ரம், "நாங்க இருக்கும். சித்தப்பாவை பாத்துக்குறோம். நீ தைரியமா போயிட்டு வான்னு சொன்னீங்களேடா. அடுத்த தடவை ஊருக்கு வரும்போது அவர் இருக்க மாட்டார்டா" என சொல்லிவிட்டு எழுந்து ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அனைவரும் அவனை பிடித்து இழுக்க, "விடுங்க என்ன. எனக்கு அவரை பார்க்க புடிக்கல. நாம இல்லாம நம்ம பையன் என்ன பண்ணுவான்னு யோசிச்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பாரா? என்ன பத்தி யோசிக்காதவர நான் எதுக்கு பாக்கணும்? விடுங்க... விடுங்க..." என்று கத்த அவனை இழுத்து வந்து வீட்டின் கதவு அருகில் நிறுத்தினார்கள்.
அவனின் கதறல் கேட்டு எந்த அசைவும் இன்றி அமைதியாக கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தார் செல்வக்குமார். அவரின் உடலை பார்த்தவுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அங்கே நின்றான் விக்ரம்.
உள்ளே இருந்து ஓடி வந்த அவனது அத்தை, "விக்ரமு எங்க அண்ணனை இந்த கோலத்துல பார்க்கவா நீ வந்த. இனி எங்க அண்ண கூட எப்படிடா நான் பேசுவேன்" என கதறி அழுதாள். அவனது அக்கா அவனை கைபிடித்து இழுத்து செல்ல குழந்தையை போல் உள்ளே சென்றான்.
செல்வகுமார் தலை அருகில் அவன் நிற்க, சத்யாவை மற்ற பெண்கள் அணைத்து அழுதுகொண்டு இருந்தனர்.
ஐஸ் பாக்ஸ் கண்ணாடி பெட்டியை குமரேசன் எடுத்து கீழே வைக்க சிரித்த முகத்தோடு இறந்து கிடக்கும் தன் தந்தையை பார்த்தவன் சட்டென்று அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
"எப்பவும் அப்பா இருக்கேன்... அப்பா இருக்கேன்னு சொல்லுவீங்களேப்பா. இப்ப மட்டும் எப்ப விட்டு போனீங்க. நான் என்னப்பா தப்பா செஞ்சேன். சொல்லுங்கப்பா.... சொல்லுங்கப்பா... "
"நீ என்ன வேணா பண்ணு. உனக்கு பின்னாடி தான் இருக்கேன். சரி எது தப்பு எதுன்னு சொல்றேன். திருத்திக்கோன்னு சொல்வீங்களே. இனி எனக்கு யாருப்பா அதெல்லாம் சொல்லுவா?"
"அப்பா உயிரோடு இருக்கிறதே உனக்காகத்தானே சொல்லுவீங்களே. இப்ப என்னாச்சுனு தற்கொலை பண்ணிட்டீங்க. பையன் கடைசி காலத்துல பார்க்க மாட்டானு நினைச்சிட்டீங்களா?"
"அம்மா செத்தப்போ எனக்கு இந்த அளவுக்கு வலிக்கல. எனக்கு அப்போ அந்த அளவுக்கு வயசு இல்ல. ஆனா இனி எப்படி இருக்க போறேன்னு தெரியல. ரொம்ப பயமா இருக்குப்பா. எந்திரிங்கபா... சும்மா தூங்கிட்டு தான் இருக்கேன் எந்திரிச்சு சொல்லுங்கப்பா" என கதறினான்.
"போன தடவை ஊருக்கு வந்தப்போ எங்களோடு வாங்க வாங்கன்னு கூப்பிட்டேனே. வர முடியாதுன்னு பிடிவாதமா சொன்னீங்களே. இதுக்குத்தானா? வந்திருந்தா இப்படி ஆகி இருக்காது இல்ல. என் மேல என்னப்பா கோபம். சொல்லுங்கப்பா...." அவன் சத்தம் ரோடு வரை கேட்டது.
அவன் அழுகையும் கேள்வியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு கொண்டிருந்தது. அவரின் இறப்பில் அவனுக்குத் தான் வலி அதிகம் என்பதால் யாரும் அவனை தேற்ற கூட தயாராக இல்லை. இன்னும் சற்று நேரம் அவன் அழட்டும் அமைதியாக இருந்தார்கள்.
சற்றென்று ஒருவர், "தம்பி விக்ரமு அப்பாவை எப்ப எடுக்குறதுன்னு சொல்லுப்பா. காட்டுக்கு சொல்லி அனுப்பணும்" என்றதும் அவர் மேலே படுத்துக்கொண்டான்.
"நான் அப்பாவை எடுக்க விட மாட்டேன். எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க முதல்ல. யாரும் எங்கப்பா தொடக்கூடாது" என்றதும்,
"ஏங்க எல்லாருக்கும் அப்பா இருந்தா இப்படித்தான் இருக்கும். அவன யாராவது முதல்ல வெளிய கொண்டு வாங்க. எல்லாரும் துக்கம் கேட்கணும் இல்ல. எத்தனை மணிக்கு இறந்தாருன்னு தெரியல. சீக்கிரம் எடுத்தரலாம்" என்றார்.
அவர் சொன்னது சரி என்று பட அவனை உள்ளே இருந்து எடுத்து வந்து வெளியே நிற்க வைத்தார்கள்.
எஸ்ஐ சக்திவேல் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். "தம்பி உங்க அப்பா இறந்துட்டாரு. அது தற்கொலையா இல்ல கொலையான்னு பாக்கனும். அதே மாதிரி ஒரு வேளை அவர் தற்கொலை பண்ணி இருந்தாருன்னா என்ன காரணம்னு தெரியனும். போஸ்ட்மார்ட்டம் பண்ணலாமா?" என்று சாதாரணமாக கேட்டார்.
அழுது கொண்டிருந்த விக்ரம், "இது கொலை இல்ல சார். அப்பா சூசைட் தான் பண்ணிட்டாரு"
"ஏன்னு தெரியுமா? இல்ல போஸ்ட்மார்ட்டம் பண்ண கூடாதுன்னு சொல்றீங்களா?" சக்திவேல் கேட்க
தனது செல்போனை எடுத்து நேற்று இரவு சரியாக 12.43 க்கு "அப்பா சந்தோஷமா போய்டு வரேன். நீ பத்திரமா இரு. உனக்காக பீரோல சில பேப்பர்ஸ் வெச்சிருக்கேன். என்ன எடுக்கிறதுக்கு முன்னாடி அதை எடுத்து எல்லோரும் முன்னாடியும் படிச்சுரு. அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும். துக்கத்துல மறந்துடாத" என்று செல்வகுமார் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை காண்பித்தான்.
"இதை எத்தனை மணிக்கு பார்த்தீங்க?"
"காலையில ஒரு 8.30க்கு பார்த்தேன்"
"ஏன் அவ்வளவு நேரம்? உங்களுக்கு மிட்நைட்ல அனுப்பிட்டாரு"
"நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி எப்பவும் நெட் ஆப் பண்ணி வச்சுருவேன். காலையில சுகுமார் மாமா கூப்பிட்டு விசயத்த சொன்னார். அப்பா எங்கள விட்டுட்டு போன தகவல ஸ்டேட்டஸ் வைக்கும் போது தான் பார்த்தேன்" என்றான்.
"போய் அந்த பேப்பர்ஸ் எடுத்துட்டு வாங்க"
"வேண்டாம் சார். எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். நீங்க போயிட்டு வாங்க. எல்லாம் முடிஞ்சா அப்புறம் நானே ஸ்டேஷன் வரேன்" விக்ரம் சொல்ல,
"அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும் மாப்ள. போய் எடுத்துட்டு வா. அவர் பத்தி எனக்கு நல்லா தெரியும். போ" சுகுமார் சொன்னவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். சக்திவேல் வந்த பிறகு அந்த வீட்டில் ஒரு துளியும் அழுகை சத்தம் இல்லை.
பீரோவை திருந்தவுடன் தனது மனைவியின் சேலைக்குள் ஒரு பை ஒன்றை வைத்திருந்தார் செல்வகுமார். அதை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் திறக்க பல சின்ன சின்ன கவர்கள் இருந்தது.
அதில் தனது சொத்துக்கள் ஒவ்வொன்றையும் தன் இறப்பிற்குப் பிறகு மகனுக்கு சேர வேண்டும் என்று எழுதி பதிவு செய்து வைத்திருந்தார்.
ஒவ்வொரு கவராக எடுக்க ஒரு கவரில் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்து பிரித்தான்.
" அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்..." என்ற வரியை படித்தவுடன் அந்த கடிதத்தை அப்படியே போட்டுவிட்டு கைகளால் முகத்தை மூடி "அப்பா..." என்று கத்திக்கொண்டே அமர்ந்தான். அந்த அழுகை அங்கு நிலவிய அமைதியை குலைத்தது.
சக்திவேல் அந்த கடிதத்தை எடுத்து பார்த்தார். "விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும்" என அடுத்ததாக எழுதி இருந்தது.
"எல்லாரும் இங்க வாங்க. இந்த லெட்டர எல்லாரும் கேக்குற மாதிரி சத்தமா படிக்க சொல்லி எழுதி வச்சிருக்காரு. நான் இந்த லெட்டரை படிக்கிறேன். கேளுங்க " என்றார் எஸ்ஐ சக்திவேல்.
"அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்...
விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும்.
உன்னால படிக்க முடிஞ்சா படி. இல்லன்னா வேற யாராவது படிக்கச் சொல்லிடு. ஆனா இந்த லெட்டர் படிக்காம என்னோட உடம்ப எடுத்துவிடாதே.
முதல்ல நீ அப்பாவ மன்னிக்கணும். ஏன்னா நான் உனக்கு பண்ண துரோகம் இது. நம்ம அப்பா நம்மள விட்டுட்டு இப்படி செத்துப் போவார்னு நீ கனவுல கூட நினைச்சு இருக்கமாட்ட. உன்ன இப்படி தனியா விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா எப்படியும் ஒரு நாள் நான் சாக தானே போறேன். அதான் இப்ப கிளம்பிட்டேன்.
விக்ரம் நான் தற்கொலை பண்ணிக்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். எப்ப இருந்துனா உன்னோட 13 வயசுல இருந்து. என்னைக்கு உங்க அம்மா என்னை விட்டு போனாலோ அன்னைக்கு சாகணும்னு நினைச்சேன். ஆனா நானும் போய்ட்டா நீ என்ன செய்வ. உங்க அம்மா இறந்தது விதி. அன்னைக்கு நான் தற்கொலை பண்ணி இருந்தா நீயும் என்னை வெறுத்திருப்ப. ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்ப. அதனால தான் அப்பா சொல்லுவேன் உனக்காக தான் உசுரு வாழ்றேன்னு.
நான் உன்கிட்ட உன் அம்மாவ பத்தி பேசினதே கிடையாது. நீயும் அம்மாவ கேட்டது கிடையாது. எங்கே அம்மாவ பத்தி பேசி உனக்கு ஏக்கம் வந்திருவோம்னு பயந்தே பேச மறுத்துட்டேன்.
ஆனா அவளை பத்தி நினைக்காத நாள் கிடையாது. அவள நினைச்சு கண்ணீர் சிந்திக்காத நாள் கிடையாது. இன்னைக்கு நீ எப்படி என்னை இழந்துட்டு அழுகிறயோ அதே மாதிரி தான் தினமும் அழுதுகிட்டு வாழ்ந்தேன்.
என்னோட உசுரு உங்க அம்மா தமிழ்செல்வி. உங்க அம்மாவ நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரும்போது எங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியாது. கல்யாணம்னா நம்ம உடல் சுகத்திற்கும் புள்ள பெத்துக்கறதுக்கும் வீட்டு வேலை செய்யறதுக்கும் தான்னு நினைச்சுட்டு இருந்த காலம்.
கல்யாணமான கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் நைட் எனக்கும் உங்க அம்மாவுக்கும் சரியான சண்டை. அன்னைக்கு உங்க அம்மாவை ஓங்கி அடிச்சிட்டேன். ஆம்பள திமிரு. உன் அப்பன் வீட்டுக்கு கிளம்பு அப்படின்னு சொன்னேன்.
"என் அப்பா வீட்டிலிருந்து நான் எப்படி வந்தனோ அதே மாதிரி கன்னிப்பொண்ணா என்னை திருப்பி அனுப்புங்க நான் போறேன்" அப்படின்னு சொன்னா. நான் ஆடிப் போயிட்டேன். அவ்வளவு போல்டு என் தமிழ்செல்வி.
அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் நான் பேசவே இல்லை. சமைச்சு வச்சா திங்க மாட்டேன். அவ மூஞ்சிய பாத்தாலே திரும்பி போயிடுவேன். அன்னைக்கு காலையில எழுப்பினா. கண்ணு முழிக்கும்போது உன் அம்மா பக்கத்துல நின்னுட்டு இருந்தா. அவ்வளவு அழகா இருந்த அன்னைக்கு. நான் அவள பாத்துட்டு இருக்குறத பாத்து என் காது பக்கத்துல வந்து ஐ லவ் யூ அப்படின்னு சொல்லிட்டு நெத்தில ஒரு முத்தம் கொடுத்தா. அதுக்கு அப்புறம் அவ மேல இருந்த மொத்த கோபமும் போயிருச்சு.
அவ என் மேல வச்சு அன்பு அவள எப்பவும் மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு நினைக்க வச்சுது. அதுக்கப்புறம் உன் அம்மா இல்லாம எங்கேயும் நான் போகவே மாட்டேன். வாழ்க்கையில கஷ்டம் வரத்தான் செய்யும். மேல இருக்கிறவங்க கீழ போவாங்க. அப்படி நான் போனப்ப எல்லாம் செல்வி தான் என்னோட ஒரே ஆறுதல்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ மடியில் படுத்துட்டு அவகிட்ட சொல்லுவேன். சில தடவை சொல்லவும் முடியாது. ஆனா அவ புரிஞ்சுக்குவா. அவ தந்த அந்த முத்தமும் ஐ லவ் யூவும் என்ன ஓட வெச்சது. அதுக்கப்புறம் நீ பொறந்த. உன் அம்மா எனக்கு மட்டும் தந்த அந்த முத்தத்துல நீயும் பங்கு கேட்ட" என்று சொல்லிவிட்டு சக்திவேல் விக்ரமை பார்த்தார். அவன் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் மட்டும் பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான்.
சக்திவேல் மேலும் படிக்க ஆரம்பித்தார்.
"நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே உனக்கு முத்தம் கொடுப்போம். நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில புயல் அடிச்ச மாதிரி அந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாத்திடுச்சு.
தினமும் உங்க அம்மா எனக்கும் நான் அவளுக்கும் ஐ லவ் யூ சொல்லிட்டு நெத்தில முத்தம் கொடுத்துட்டு தூங்குறது வழக்கம். அன்னைக்கு முதல் நாள் நைட்டும் அப்படித்தான் போச்சு. அந்த நாள் தான் நான் கடைசியா சந்தோஷமா இருந்த நாள்.
என்னோட வாழ்க்கையில நான் அந்த மாதிரி என்னைக்கும் அழுததே இல்ல. எவ்வளவு கஷ்டம் வந்தப்ப கூட நான் சாக நினைக்கல. ஆனா அன்னைக்கு அவ கூடவே செத்துப் போயிடனுமுனு தோணுச்சு. ஆனா நான் சாகாம இருக்க ஒரே காரணம் நீ மட்டும் தான்"
"அப்பா....." விக்ரம் சத்தம் சக்திவேலை ஒரு நிமிடம் அமைதி ஆக்கியது.
"விக்ரம் நீ அப்போ அம்மா அம்மான்னு அழுத. உனக்கு ஆறுதல் சொல்றதா இல்ல நான் அழற தானே தெரியல. என்னோட செல்விய கட்ட மேல அப்படியே படுக்க வச்சிருந்தாங்க. என் ஈரக் குலையே நடுங்கிருச்சு. ஆனா அந்த நிமிஷம் மாறாது. அவளை கட்டி புடிச்சிட்டு அழுதேன். அந்த இடத்துல நான் அவளுக்கு கடைசியா ஒரு ஐ லவ் யூவும் முத்தமும் கொடுத்தேன். அதுக்கப்புறம் என்னால கொடுக்க முடியாம போயிடுச்சு.
அப்பதான் புரிஞ்சுகிட்டேன். ஒரு ஐ லவ் யூ ஒரு மனிதனை எந்த அளவுக்கு சந்தோஷமா வாழ வைக்கிறது அதே அளவுக்கு அழ வைக்கவும் செய்யும்.
அதனால் தான் உன் மனசு கஷ்டத்தில் இருக்கும் போது மட்டும் நான் உன்னை அணைத்து ஆறுதல் சொல்லி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொல்வேன். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லுவ. இப்ப ஆறுதல் சொல்ல நான் இருக்க மாட்டேன் என்பது கஷ்டமாக தான் இருக்கிறது.
என்னோட உலகம் நீ மட்டும் தான். உன்ன நல்லா படிக்க வச்சு, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டேன்.
ஆனா நான் நரகத்தில் தான் வாழ்ந்தேன் விக்ரம். உன் அம்மா இல்லாத இரவுகளை என்னால கடக்கவே முடியல. நான் அழுதா நீ உடைஞ்சு போய்டுவ. அதுக்காக நீ தூங்குன அப்புறம் சத்தம் வராமல் வாயை பொத்திகிட்டு அழுகிற வாழ்க்கை ரொம்ப கொடுமைடா. ஒரு ஆம்பள அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அவனும் மனுஷன் தானே. வலிக்கும்ல.
எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு. அதனாலதான் உன்னை சென்னைக்கு அனுப்பி வெச்சேன். நீ அடிக்கடி கேட்பயே, "ஏன்பா இன்னமும் அம்மாவோட புடவை எல்லாம் வீட்ல வச்சு இருக்கீங்க. தூக்கி போட்டுடலாம்லனு". எப்பவும் நான் உன் அம்மாவோட சேலையை கட்டிப்பிடிச்சிட்டு போத்திகிட்டு தான் தூங்குவேன். அதுல அப்படி ஒரு ஆறுதல் கிடைக்கும். அவ என் கூடவே இருக்க மாதிரி இருக்கும்.
அதனாலதான் நீ மருமகளுக்கு அவ சேலை எடுத்து தரும்போது சண்டை போட்டேன். அவ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் அவகிட்ட உண்மையை சொல்லிட்டேன். உனக்கு தெரிய கூடாதுன்னு சொல்லி இருந்தேன்.
அது உனக்கு சொன்னா புரியாது. அத புரிஞ்சுக்க கூடிய வயசும் அனுபவமும் உனக்கு வரல. இந்த வீட்லதான் நானும் அவளும் வாழ்ந்தோம். இந்த செவரு கூட நான் பேசுவேன். அந்த மரத்தோட நான் பேசுவேன். இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். அவ கூட வாழ்ந்துட்டே இருக்குற மாதிரி தோணும்.
ஆனா பகல்ல இருக்கிற அந்த காதல் அந்த சுகம் நைட் இருக்காது. அப்ப வலி மட்டும் தான் இருக்கும். கண்ணீர் இத்தனை வருஷம் ஆகியும் குறையல. எனக்கு சாகலாம்னு தோணும்போதெல்லாம் நீ என்ன பண்ணுவ அப்படிங்கிற பயம் மட்டும் தான் இருந்துச்சு.
ஆனா இப்ப நான் சந்தோஷமா சாகப் போறேன். உன்ன நீ தனியா பாத்துக்குற அளவுக்கு வந்துட்ட. அப்பா இல்லாமல் பிரச்சனைகளை தனியா முயற்சி பண்ணி முடிக்கணும்னு முடிவுக்கு வந்துட்ட. இனி அப்பா உனக்கு பாசத்துக்கு தவிர வேற எதுவும் தேவைப்பட மாட்டேன். அந்த தைரியம் தான் என்ன தற்கொலை பண்ணிக்க சொல்லுச்சு.
அப்பா மேல கோவப்படாதே. இது பல வருச ஏக்கம். அதுவும் இல்லாம அப்பாவுக்கு வயசு ஆகுது இல்ல. பேரனை நல்லா பாத்துக்க.
எப்பவும் பொண்டாட்டி கூட சண்டை போடாத. போட்டாலும் சமாதானமாக உனக்கு அப்பா பலமுறை வழி சொல்லி இருக்கேன். அது எப்பவும் பிடிச்சுக்க.
அப்பாவுக்காக ஒரே ஒரு விசயம் பண்ணுடா. அப்பாவை இந்த தோட்டத்துல புதைச்சுடு. அப்போ அம்மாவோட சேலையும் சேர்த்து புதைச்சிடுங்க. மக்கி போக போற இந்த உடம்போட கொஞ்ச நாள் அது கூட வாழ்ந்துட்டு போகட்டும்.
அப்பா எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன். ஐ லவ் யூ இப்படிக்கு உன் அப்பா" என்று சக்திவேல் வாசித்து முடித்தவுடன் வேகமாக உள்ளே சென்று அவரை அணைத்துக் கொண்டு "அப்பா..." என்று கதறி அழுதான்.
"என்ன மன்னிச்சிடுங்கப்பா. நீங்க அம்மா மேல வச்சிருக்கிற காதல தெரிஞ்சுக்காம போயிட்டேன்பா... ஆனா என்ன இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே. எனக்கு கெட்ட பேரு வந்துர கூடாதுன்னு இப்படி லெட்டர் எழுதுன உங்கள புரிஞ்சுக்காம போயிட்டேன் பா..." அடுத்த ஒரு மணி நேரம் அவன் அழுகை சத்தம் தவிர வேறு எதுவும் எதுவும் அங்கு கேட்கவில்லை.
சக்திவேல் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
சில நிமிடங்களில் செல்வகுமார் உடலை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் ஆசைப்படி அனைத்தும் நிறைவேறியது.
உறவினர்களும் சுற்றத்தார்களும் செல்வகுமாரின் இருப்பின் ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர் விக்ரமின் யாரும் குறை சொல்லவில்லை. அதைத்தான் அவரும் எதிர்பார்த்தார். பதினாறாம் நாள் காரியத்திற்கு அவரின் புகைப்படம் ஒன்றை பிரேம் போடச் சொல்லி கொடுத்தான் விக்ரம்.
அதை பிரேம் போட்டுக் கொண்டு வந்த பின்னர் பார்த்த விக்ரமின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.
காரணம் புரியாமல் சத்யா அதை கையில் வாங்கி பார்க்க, "ஐ லவ் யூ வும் அன்பு முத்தங்களும்" என்று எழுதி இருந்தது.
அந்த வார்த்தை அவன் வாழ்வோடு இணைந்து விட்டது.
- சேதுபதி விசுவநாதன்
(உங்கள் பின்னூட்டங்களை yaazhistories@gmail.com என்பதிலும்
குனிந்த தலை நிமிராமல் தான் எழுதிக்கொண்டிருந்தான் வள்ளுவன், ஏடுகளில் கூரான எழுத்தாணி உரசும் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தன.
அறத்துப்பால், பொருட்பால் இரண்டும் சேர்த்து 1080 குறள்கள் எழுதி விட்டான், இத்துடன் 'திருக்குறள்'நிறைவு பெற்றதாக கூறி எழுத்தாணியிலிருந்து பிடி தளர்ந்தது வள்ளுவனிடம்...
அப்போதுதான் ஏறிட்டு பார்க்கிறான் தன் மனைவி வாசுகியை..
அங்கே அவள்....
கூர் மழுங்கிய எழுத்தாணி கொண்டு தன் கண்களில் மை தீட்டி கொண்டிருக்கிறாள்,
அப்போது வள்ளுவன் அவளை பார்க்க, மை தீட்டிய கண்களுடன் வாசுகியும் வள்ளுவனை பார்க்க..
அப்போதுதான் 'இன்பத்துப்பால்'பிறக்கிறது, அதன் பின்னர் 250 குறள்கள் எழுதி 1330 குறள்களாக நிறைவு பெற்றது..
இன்பத்துப்பாலில் முதல் குறளே இதுதான்...
"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து"
விளக்கம் : இவள் பார்க்க நான் பார்க்க இவள் மை தீட்டிய கண்களின் எதிர் பார்வை சேனை போல் தாக்குகிறது./Ram(ஒரு கற்பனை தான்)
'கூவம் ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணம்'
நாறிகொண்டிருந்தது.. கூவ ஆற்று நாற்றத்தையும் மீறி வந்தது...
போலீஸ்க்கு தகவல் பறக்க, போலீஸ் கூவத்தில் குதித்தது இல்லை களத்தில் குதித்தது,
போலீஸ் மூக்கை பொத்திக்கொண்டு மூட்டையை புரட்டி போட... அவ்வளவுதான் சோளிமுடிந்தது, அந்த சாக்கு மூட்டையில் பச்சை நிற மசியில்..'இசக்கி முத்து, தந்தை பெயர் நடேசன்.. பிறகு வீட்டு முகவரி..
பிறகு என்ன போலீஸ் வேர்க்கடலையை வாங்கி கொறித்து கொண்டே ஜீப்பில் ஏறி பக்கத்தில் உள்ள தண்டையார்பேட்டை சென்று..
வீட்டில் டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த இசக்கிமுத்து வை அள்ளி கொண்டு சென்றார்கள்..
அவனும் அவன் கூட்டாளிகளும் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்..
அவனை ஜெயிலில் தள்ளும் போது போலீஸ் ஒருவர் சொன்னது..'நீ ரொம்ப நல்லவன் டா! எங்களுக்கு எந்த சிரமும் வைக்காமல் அட்ரஸ் சோடு போட்ட பாரு அதை நினைத்து ரொம்ப பெருமை படுகிறேன் 'என்று பாராட்டியுள்ளார்
வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு, அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குடமுழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி.
ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில், அவன் வீற்றிருக்க, மரங்கள் இரண்டும், இலைகளாலும், பூ, கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை, கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே, "துடியான தெய்வம்." எனப் பயபக்தியோடு கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்துப் பேச்சிக்கு, ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீடு போல், கருப்பன் கோவிலும் ஒரு வீடு தான் தாத்தா, முத்துச்சாமி போல், கருப்பண்ணச்சாமியும் அவளுக்குப் பூட்டன் முறை. அப்படிப் பாவித்துத் தான், அந்தத் தெய்வங்களிடம், உரிமை பாரட்டுவாள்.
"கூறு கெட்ட மனுசன், தலைபிரட்டு புடிச்சு அலையுது. யாருகிட்ட, என்ன பேசுறோமுன்னு, மட்டு மருவாதை இருக்கா. நாலு எழுத்து படிச்சு, கூட்டத்தில பேசிட்டா பெரிய ஆளாக்கும். இவுகளுக்குச் சப்போர்ட்டு பண்றதுக்கும், கை தட்டி துண்டு போர்த்தறதுக்கும் நாலு அல்லக்கை வேற. ஐயா, கருப்பா நீ தான் அவுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்." என வேலையைப் பார்த்துக் கொண்டே, தன் புலம்பலையே வேண்டுதலாக்கி கருப்பனிடம் முறையிட்டாள் முத்துப்பேச்சி.
ஆனால் கருப்பண்ணசாமி அவள் வேண்டுதல் கேட்டும் ஆனந்தமாகவே, அவளது தாத்தா முத்துசாமியைப் போல் சிரித்துக் கொண்டிருக்க, “யார், ஏசினாலும், பேசினாலும் நீயும், உன்னை சாமியாடுற என் தாத்தாவும், ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டு அப்படியே நில்லுங்க.” என்றாள். கருப்பன், தன்னோடு சேர்த்து அவர் பக்தனுக்கும் பேத்தியிடம், பேச்சு வாங்கிக் கொடுத்தார்.
“ஏண்டி நீ மட்டும், கருப்பனை வையலாமாக்கும்.” எனச் சாப்பாடு கூடையோடு வந்த, அவளது அம்மாச்சி பவளாயி கேட்க,
“நான் பேசுறதும்,அவுக பேசறதும் ஒண்ணா. அந்தாளு புத்தியில்லாத பேசுது, நான் அதுக்குப் புத்தியைக் கொடுக்கச் சொல்லி கருப்பனை வேண்டுறேன்.” என அவள் வார்த்தையாட, “ஏசினாலும், பேசினாலும் அப்படியே நிக்கிறாகன்னு, யாரைச் சொன்ன!” எனக் கிழவி கிடுக்கி பிடி போட,
“அது இவரையும், இவரைத் தாங்கி ஆடுற உன் புருஷனையும் தான். பூசை வச்சு, மணி அடிச்சுக் கூப்பிடையில் மட்டும், ஆக்ரோஷமா இறங்குறது. மத்த நேரம், ஒண்ணும் நடக்காத மாதிரி தான நிக்கிறாரு. ஒருக்கா, இவர் சுய ரூபத்தைக் காட்டினா, பேசறவனுங்க நாக்கு மேலன்னத்தில ஓட்டிக்காது, அப்புறம் எப்படிச் சாமி, இருக்கு இல்லைனு பேசுவாங்க.” என அவள் விடாமல் யாரையோ வறுத்தெடுத்துக்க, பொங்கல் வைக்கும் கட்டாந் தரையில் சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு, பேத்தியைப் பார்த்த பவளாயி,
“இப்ப யாருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி வேண்டிக்கிட்டு இருக்கவ!” என்றார்.
“எல்லாம் நீ வளர்த்து விட்ட, கோயில் காளை ஒன்னு, யாருக்கும் அடங்காமத் திரியுதே, உன் கொழுந்தன் மகன், அதுக்குத்தான்.“ என அவள் நொடிக்க,
“உனக்குப் பரிசம் போட்ட, என் மவன் ராசப்பாவ சொல்றீயாக்கும், அவனைத்தான், ஜில்லாவுலையே, பெரிய அறிவாளி, புரட்சி புயல்னு, கருப்புச் சட்டை, சிவப்புச் சட்டையெல்லாம் புகழுது, நீ என்னண்டா, அவனுக்கே புத்தி கொடுக்கச் சொல்லி வேண்டுறவ. ஒரு வேளை , நீ வேண்டிக்கிறதால தான், அவனுக்கு அம்புட்டு அறிவோ என்னமோ?“ எனப் பவளாயி நக்கலாகச் சிரித்தார்.
அவரை முறைத்து விட்டு , “நம்ம சாமி, அவருக்கு அறிவை கொடுத்திருந்தா, அதைத் தூக்கி ஆடுற, என் தாத்தனையே, எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்குமா. அகராதி திண்ட, அந்த மனுஷனைப் பத்தி, இனிமே நாம பேச வேண்டாம் அம்மாச்சி, இத்தோட, அவுக சம்பந்தப் பட்ட விஷயத்தை எல்லாம் முடிச்சுக்குவோம், அவுக சங்காதமே வேண்டாம்.“ என அவள் வேலையைத் தொடர்ந்தாள்.
“அதென்னடி, அப்படிச் சொல்லிபுட்ட, ஊரோட வந்து உனக்குப் பரிசம் போட்டுப் போயிருக்கான், ஐப்பசி பொறக்கவும் கல்யாணம் கட்ட போறவனோட, சங்காதம் வச்சுக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தமுன்னேன்.”
“அந்த நினைப்பு இருந்தா, சாமியாடியான என் தாத்தாகிட்டையே, ஊருக்கு நடுவுல வச்சு, சாமியுமில்லை, பூதமும்மில்லைனு தர்க்கம் பண்ணியிருக்குமா, அவுக சம்மதம் நமக்கு ஒத்து வராது.” என அவள் பேச்சை வெட்ட,
“அவன் நல்லவன், உன்னை வச்சு நல்லா பொழைப்பான்னு, உன் தாத்தனே, இந்தக் கருப்பன் கிட்ட உத்தரவு வாங்கிப் பேசி முடிச்சாரு, எனக்குத் தெரியாதுத்தா, நீயாச்சு உன் தாத்தாவாச்சு, இந்தக் கருப்பனாச்சு, நீங்களே பேசி முடிவுக்கு வாங்க.” எனப் பவளாயி கணவன் வரும் வழியைப் பார்த்தார்.
வயல் வேலையை முடித்து, முத்து சாமி பம்ப்செட்டில் கைகால்களைக் கழுவி கொண்டு, “கருப்பா, எல்லாரையும் நல்லா வை.“ என வேண்டியபடி, சன்னதியில் விழுந்து, விபூதியைப் பட்டையாய் அடித்துக் கொண்டு மனைவியும், பேத்தியும் இருக்குமிடம் வந்தமர்ந்தார்.
கோவிலைச் சுற்றியுள்ள வயல்கள், முத்துசாமியின் பொறுப்பு, அதில் இரண்டு ஏக்கர் இவர் பங்கு எனில் மீதமுள்ள, பத்து ஏக்கர் பங்காளிகளுடையது, மற்றவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து விட்டு, பாட்டாளிகளுக்குக் கூலி கொடுத்து, கருப்பனுக்குப் போக, மீதியில் இவர் குடும்பம் வயிற்றை நிறைத்துக் கொள்ளும்.
“என்னா விஷயம், அம்மாச்சியும் பேத்தியும் கருப்பனையும், பேச்சிலே இழுத்து பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க?” என முத்துசாமி கேள்வி எழுப்ப, ஒரு தூக்கு போணியை அவர் புறம் நகர்த்திய, பவளாயி, பேத்தி நறுக்கி வைத்திருந்த வாழை இலையில் வெஞ்சனத்தை வைத்து நீட்டி விட்டு, பேத்தியின் அங்கலாய்ப்பையும் சொன்னார்.
அதைக் கேட்டு ஹாஹாவெனச் சிரித்தவர், “ஏத்தா சின்னப் பயலுக, அறியாமைல பேசுறதுக்கெல்லாம், மனுஷ கழுதையாட்டம், கருப்பனும், அருவாளை தூக்கணும்னா எப்படி? நிண்டு நம்மையே ஆள்றது தான் சாமி. அதது, அவரவர் பக்குவதில தான் உணர முடியும்.” என்றவர், “கோபமில்லாத, கருப்பன் படியளந்ததைச் சாப்பிடு, வயித்தோட மனசும் குளிர்ந்து போகும்.” எனத் தேற்றியவருக்குப் பேத்தியின் கோபத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றாமை புரியாமல் இல்லை.
முத்துச்சாமிக்கு, விவசாயம் முதல், நாட்டு நடப்பு வரை அத்தனையும் அத்துப்படி. ஊருக்கே யோசனை சொல்லும் சிறந்த மனிதன். அவர் ஒரு வாக்குச் சொன்னால், அது கருப்பன் வாக்கு என்றே, ஊர் மக்கள் சிரம் தாழ்ந்து கேட்பார்கள். அவர் தெய்வ சன்னிதியில் சந்ததம் வந்து, கருப்பனைத் தாங்கி ஆடும் போது, ஊர் சனமே அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கும். அந்த நேரம், வழங்கப்படும் திருநீற்றை, கருப்பனே வந்து தருவதாகவும், வருடம் ஒரு முறை அவன் ஆசி பெற்றாலும் போதும், எந்த நோய் நொடியும், தீவினைகளும் தங்களை அண்டாது என்பது கிராம மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
தெய்வ நம்பிக்கை மிகுந்த அவரது குடும்பத்தில் தான், நாத்திகம் பேசும் மூன்றாம் பங்காளியின் வாரிசு ராசப்பாவும் இருந்தான். பெரியப்பாவோடு, மற்ற விசயங்களில் ஒத்துப் போகும் ராசப்பா, இந்த விசயத்தில் மட்டும் தர்க்கம் செய்து எதிர்த்துத் தான் நிற்பான். ஆனால் தன்னைப் போலவே, உடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, அம்மாவையும் பேணும் அவன் குணத்திலும், அவன் உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, பேத்தியை அவனுக்குக் கட்டித் தர சம்மததித்திருந்தார் முத்துச்சாமி.
ஊரின் நடுவிலிருக்கும் டிக்கடையில் தான், காரசாரமான எல்லா விவாதங்களும் ஓடும். மூன்று நாட்களுக்கு முன், "ராசப்பா, பௌர்ணமி பூசை வருது. கோவில்ல இரண்டு நாளைக்கு, குழாயைக் கட்டி விடு. ஊர் பூரா கருப்பன் பாட்டு கேக்கட்டும்." என அவர், முன்பணத்தை நீட்ட, அதை வாங்க மறுத்தவன்,
"கருப்பனுக்கு, கருப்பனுக்குனு, உழைச்ச காசை எல்லாம் அங்கயே கொண்டு போய்க் கொட்டுங்க. விளைச்சலையும் பங்காளிகளுக்குப் பங்கு வச்சிடுறீங்க. எவன்கிட்டையும் கோயில் வரி வாங்கிறதும் கிடையாது, கருப்பன் உங்களைக் காப்பாத்துறானா, இல்லை நீங்க கருப்பனை காப்பாத்துறீங்களான்னு தெரியலை." என பேச்சை ஆரம்பிக்க,
"எல்லாருக்கும் படியளக்கிறதே, அவன் தான். அவனுக்கு நாம படியளக்க முடியுமா. இதையெல்லாம் புரிஞ்சுகிற பக்குவம் உனக்குக் கிடையாது. விடுய்யா!" என்றார் பெரியவர்.
"புரிஞ்சுக்கிற மாதிரி, எடுத்துச் சொல்லுங்க. நீங்களும் உங்க வயசுக்கு, எழுபது வருசமா, உங்க சாமிக்குச் சேவகம் பண்றீங்க. கஷ்டத்தைத் தவிர அந்தச் சாமி என்ன கொடுத்துச்சு? கைகாலை முடக்கி போட்ட ஒரு மகனை கொடுத்துச்சு, காலம் பூரா, உங்க மகன் சின்ன கருப்பனை தூக்கி சுமந்திங்க, அவனும் அல்ப ஆய்ஸ்ல போயிட்டான். சரி ராக்கம்மா அக்களாவது நல்லா வாழ்ந்துச்சா, முதல்பிரசவத்துலையே அதுவும் போய் சேர்த்துடுச்சு, வயசான காலத்துல பேத்தியை காவல் காத்துகிட்டு திரியிறீங்க." என அவர், வாழ்வை வரிசையாய் பட்டியலிட்டு, சாமியே இல்லை என விதண்டாவாதம் பேசினான்.
“ராசப்பா, எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையில தான் இருக்கு, என் மகன் ஊனமா தான் பொறந்தான், நான் இல்லைங்கல, ஆனால் அவனை சுமக்க உடம்புலையும், மனசுலையும் வலுவ கொடுத்தது என் கருப்பன் தான். அவன் என் வினைப்பயனை முடிக்க, எனக்கு வரமா வந்தவன். மகளும் அதே தான். ஆனால் போக கூடாத வயசில போனாலும், எங்க பிடிமானத்துக்கு பேத்தியை கொடுத்துட்டு போயிருக்கா, அவளை கட்டிக்க நல்ல மனசுக்காரன் நீ வந்துட்ட, நீ என்னை தூக்கி போடாதையா போயிடுவ?” என அதே விஷயத்தை தன் பார்வையில் சொன்னார்.
ஆனால், அதை அப்படியே ஒத்துக் கொண்டால், அவனெப்படி புரட்சியாளன், ஊர், நாட்டு நடப்பை இழுத்துப் பேசி, கடவுள் மறுப்பை அவன் ஆணித்தனமாக எடுத்து வைக்க, முத்துச்சாமி அமைதியானார். ஆனால் அவர் சார்பாகக் கிராம மக்கள், தங்கள் அறிவுக்கு எட்டிய தூரம், கடவுளைத் தாங்கிப் பேசினர். ராசப்பா பக்கமும், இளவட்டங்கள் பேசினர்.
இந்த விசயம், ஊருக்குள், சாமியாடியை, அவர் தம்பி மகன் எதிர்த்திட்டான் என அவரவர் புனைவு, பிறசேர்க்கை எல்லாம் சேர்த்துச் சொல்ல, விசயம் ஊருக்குள் பரவி முத்துபேச்சி காதுக்கும் சென்றது.
ராசப்பா, நல்ல உழைப்பாளி. கொட்டகை, பாத்திரங்கள் முதல், விசேசங்களுக்குத் தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்திருக்கிறான், நல்ல வருமானம். முத்துச்சாமியை காட்டிலும், அதிகம் அடிபட்டதாலும், சுயமரியாதை கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்க் என மைக் செட் அமைக்கும் வேலைக்கு போனவன், அவர்கள் பேச்சைச் செவி மடுத்து, இரண்டுக்கும் பொதுவாக, தனக்கென ஓர் கொள்கையை உருவாக்கிக் கொண்டான்.
போன மாதம் தான் முத்து பேச்சிக்குப் பரிசம் போட்டுச் சென்றான். அது முதல், அங்கங்கே அவளைப் பார்க்கும் நேரமெல்லாம், ஜாடையாய் பேசி, தன் பிரியத்தை அவன் உணர்த்த, அவளுக்குள்ளும் பூ மலர்ந்தது. ஆனால் இயல்பாகவே அவன் பேச்சில் வரும், இறை மறுப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் தன் தாத்தாவிடம் தர்க்கம் செய்ததில் ஏகத்துக்கும் கடுப்பு.
நாளை பௌர்ணமி பூஜை, எல்லாருக்கும் வழி காட்டும் இந்தத் தெய்வம், தனக்கும் நல்ல வழியைக் காட்டட்டும் என மனதில் மருகி நிற்க,
"ஆத்தா பேச்சியம்மா, ராசப்பா, ஆளுங்க, குழா கட்ட வருவானுங்க. இந்தத் தரம் கொஞ்சம், உச்சக்க ஏத்திக் கட்டச் சொல்லு. நாளைக்குப் பூசைக்கு அன்னதானம் யாரோ கொடுக்குறோமுன்னு சொன்னாகளாம், யார் என்னனு ப்ரசிடெண்டை விசாரிச்சிட்டு வந்துடுறேன்.” என அவர் கிளம்ப,
"அந்தாள விட்டா, உங்களுக்கு வேற மைக் செட்டே கிடைக்கலையாக்கும்." என நொடித்த பேத்தியைப் பார்த்து, ஓர் சிரிப்பை மட்டும் உதிர்த்துச் சென்றார்.
பௌர்ணமி அன்று, காலையிலிருந்தே ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, சாமியை வணங்கிச் சென்றனர். இன்று கோவிலில், முத்துசாமி குடும்பம் மட்டுமின்றி, மற்ற பூசாரி, பங்காளி குடும்பங்களும், கருப்பனுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருந்தனர்.
உச்சி காலப் பூஜையில், ஆலய மணி முழங்க, தூப தீபம், பூக்களின் நறுமணம் அவ்விடத்தை நிறைக்க, எழில் கொஞ்சும் பசுமையோடு பூலோக கைலாயம் போல் கோவிலே தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தது. ஆனந்தரூபனாய், அருள் பாலிக்கும் கருப்பன், கோவில் மணியடித்து, பக்தர்கள் சரணங்களை முழங்க ஆக்ரோஷமாய் முத்துசாமி மேல் இறங்கினான். நாக்கை துருத்தி, கண்ணை மலர்த்தி, செவ்வெறி ஓடிய சிலிர்ப்புடன், அருவாளை ஏந்தி சன்னதி முன் ஆட்டம் ஆடியவன், தன் முன் மண்டியிட்டு விழும் பக்தருக்கெல்லாம், அருளாசி வழங்கினான். கண்ணீர் மல்க கதறியவர்களுக்கு, நல்வாக்குத் தந்தான்.
முத்துப்பேச்சி, கருப்பனாகிய தாத்தன் முன் மனக்குறையோடு மண்டியிட, பவளாயி, “அவள் மனச் சஞ்சலத்தைத் தீர்த்து வைங்க.” எனவும், ஓர் அட்டகாசமான சிரிப்போடு, “உன் மனசு குளிர,மனை அமையும்.” என ஆசிர்வதித்தார்.
ஊர் ப்ரசிடெண்ட்டிலிருந்து, காவிசட்டையிலிருந்த வெளியூர்காரர்கள் வரை பயபக்தியோடு வணங்கி நின்றனர். கருப்பன், அனைவருக்கும் அருளாசி வழங்கி மலை ஏறினார். சூட தீபாராதனை காட்டப்பட்டது.
அன்று முழுவதும், ஊர் மக்கள் அங்குத் தான் குடியிருந்தனர், பெரும் புள்ளி ஒருவர், அன்னதானம் வழங்கினார், மற்றொருவர் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தார். சிலர் புதிதாகக் கோரிக்கை வைக்க வர, சிலர் நிறைவேறிய கோரிக்கைக்காகக் காணிக்கை செலுத்த வந்தனர்.
மதியத்துக்கு மேல் கூட்டம் குறையவும், பிரசிடெண்ட் அழைத்து வந்த காவி சட்டை, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ,தான் இருக்கும் அமைப்பைப் பற்றியும், இந்தக் கோவிகளைப் பாதுகாத்து, கருப்பனின் அருளை வெளியுலகுக்கு பிரபலப்படுத்தும் யோசனையும் சொன்னார். அதன் மூலம் பக்தியையும், மதத்தையும் வளர்க்கலாம் என்றார். தங்கள் அமைப்பை, கட்சியின் செல்வாக்கைப் பற்றி அடுக்கியவர் கடைசியில் முத்துசாமியை தங்கள் அரசியல் கட்சியில் சேரச்சொல்லி வலியுறுத்தினார்.
“நம்ம கட்சியில் சேர்ந்துட்டீங்கன்னா, மத்த மதத்துக்காரங்க உங்களை எதிர்க்கத் துணிய மாட்டாங்க. நம்ம மதத்திலிருந்து, மதம் மாறுவதைத் தடுக்கலாம். நாத்திக கூட்டம், உங்களை ஒரு வார்த்தை பேசும் முன்ன யோசிப்பாக. நீங்க தனி ஆளா இருக்கப் போய்த் தானே, உங்க சொந்தக்காரன், ஊர் மத்தியில் உங்களை அசிங்க படுத்தியிருக்கான். இனிமே அதெல்லாம் நடக்காது, நாங்க உங்களுக்குத் துணையா இருப்போம், பேசுறவனுக்கு, நம்ம சாமி, அங்கேயே தண்டனை தருவார், அவன் பல் உடையும்.” என முத்துசாமியை மூளைச் சலவை செய்து கொண்டிருக்க, அம்மாச்சியும், பேத்தியும் தூரத்திலிருந்த பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மைக் செட்டை அவிழ்க்க, ராசப்பவே வந்தான், நேற்றே அவன் எடுபிடி சீனி, குழாய் கட்ட வந்தவன் முத்து பேச்சியின் வாயை பிடுங்கி , அவளது மனத்தாங்கலை, கேட்டு அறிந்து, “நயன்டிஸ் கிட்ஸ்சுக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது அண்ணன், உனக்கு மேடையில் பேசுற அளவுக்கு, வீடு விவகாரத்தில் விவரம் பாத்ததுன்னேன், மதனிகிட்ட அடங்கிப் போ, அப்பத்தான், அது உன்னைக் கட்டும். அதை விட்டு, அவுக தாத்தா, சாமியாடிகிட்டையே போய் ஒரண்டை இழுத்துகிட்டு இருக்க!” என அறிவுரை வழங்க,
“பொடிப்பய, நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்ட!” என முறைத்தவன், 'காவி கூட்டமெல்லாம், உள்ள வர்றது இந்த ஊருக்கு நல்லதில்லை, அதுக்காகவாவது, நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்.' என வந்து சேர்ந்தான்.
பவளாயி, அவனை வரவேற்றுச் சாப்பிடச் சொல்ல, முத்துப் பேச்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு அம்மன் பீடத்துக்கு அருகில் சென்று நின்று கொண்டாள், அவன் தான் அங்கு வரமாட்டானே!
ராசப்பாவை பார்க்கவும், காவி சட்டை கொஞ்சம் ஸ்ருதியைக் குறைத்து, “சரிங்க ஐயா, நாளைக்குப் பார்ப்போம், இப்ப நீங்களும், கருப்பனும் எனக்கு உத்தரவு கொடுங்க.” எனக் கையைக் கூப்ப.
“இருங்க தம்பி, கருப்பனை கும்பிட வந்துட்டு, சும்மா போகலாமா.” என்றவர், ராசப்பாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கருப்பன் சன்னதிக்குச் சென்று, நறநறவென இருந்த சாம்பல் விபூதியை, தன் நெற்றியிலும், உடலிலும் பட்டையாக அடித்துக் கொண்டு வந்து தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றார்.
“இது, எங்க ஊரு, எங்க சாமி. நாங்க பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து, இந்த வயல் வெளியில் வச்சு, அவனைக் கும்பிட்டு வரோம். காவி சட்டைக்காரன் சொல்லித் தான், நாங்க எங்க சாமியை கும்புடணுங்கிறதும் இல்லை, கருப்பு சட்டைக்காரன் சொல்லி, அவனை மறுக்கணும்கிறதும் இல்லை. எவன் வந்தாலும், போனாலும், சொன்னாலும் சொல்லைனாலும், எங்க அப்பனை ஆத்தாளை, நாங்க கும்பிடத் தான் செய்வோம்.
நாட்டில் நடுக்கிற அக்கிரமத்தையெல்லாம் பட்டியல் போட்டு, உங்க சாமி இருக்கா, இருந்தா இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு கருப்பு சட்டைகாரன் கேட்கிறான். அவனுங்களுக்குப் பதில் சொல்ல, காவி சட்டைக்காரன் கச்சை கட்டிட்டு இறங்குறீங்க.
'தீதும், நன்றும் பிறர் தர வாரா' நம்ம செஞ்ச தப்பு தான், நமக்குத் தண்டனையா வரும், அந்தத் தப்பு எப்போ செஞ்சேன்னு கேட்காத, அப்பாவியா இருக்கச் சின்னப் பிள்ளைகளைக் கூடச் சீரழியுதுங்களேன்னு கேட்டுத் தர்க்கம் பண்ணாதே. எந்தச் ஜென்மத்துல, எந்த உசிரு என்ன பாவம் செஞ்சது, இப்ப பாவம் செய்யிறவன் என்ன கதி ஆவான், என்ன கணக்குன்னு நமக்குத் தெரியாது, ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் கணக்கு தப்பவும் தப்பாது.
ஒருத்தன் சீரழிச்ச புள்ளைக்கு, அது சீரழிவு இல்லைனு புரிய வை. மனசு சுத்தம் தான் கடவுள். நல்லதோ கெட்டதோ சமநிலையில் பார்க்கிற பக்குவம் தான் அவன் அருள் கொடை. உன் பக்குவத்துக்கு ஏத்த மாதிரி அவன் காட்சி கொடுப்பான். இது அவனவனா உணர்ந்து தெளிய வேண்டிய விஷயம்.
இது சரி, இது தப்பு, நீ கும்பிடு, கும்புடாதேன்னு அடுத்தவனுக்குச் சொல்லித் தராதே. எங்க பிள்ளைகளுக்கு நாங்க சொல்லி கொடுத்துவுக்கோம்.” என முத்து சாமி, ஆக்ரோசம், ஆவேசமின்றி அமர்த்தலாகச் சொன்னார்.
“அப்ப மதம் மாறி போறவங்களுக்கு என்ன சொல்றிங்க?“ எனக் காவி சட்டைகேட்க. “எல்லாச் சாமியும் ஒன்னு தான், அவனுக்குக் கடவுள் எந்த விதத்தில் காட்சி கொடுத்தாரோ, அதை பிடிச்சுக்குறான். ஆனால், நீ இதைச் செய், நான் உன்னைக் கும்புடுறேன்னு போறவன், எந்த மதத்துக்கும், ஏன் அவனுக்கு அவனே உண்மையானவனா இருக்க மாட்டான்.” என்றார்.
“சாமி கும்பிபுடுங்கிற மாதிரி, சாமி இல்லைங்கிறதும் ஒரு கொள்கை தானே, அதைச் சொன்ன எதுக்கு ஒதுக்கி வைக்கிறிங்க?” என் ராசப்பா கேள்வி எழுப்ப, முத்துப்பேச்சி மறுபடியும் ஆரம்பிக்கிறியா என முறைத்தாள்.
“உன்னை எப்ப நான் ஒதுக்கி வச்சேன், அப்படி ஒதுக்கி வச்சா என் பேத்தியை உனக்குக் கட்டி கொடுக்கச் சம்மதிச்சு இருப்பேனா. உன்னைக் கேள்வி கேட்க கூடாதுன்னும் சொல்லலை, ஆனால் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனா, பிடிவாதமா கேட்காத, உனக்குள்ள கேள்வியைக் கேளு.
சங்கடம் வரும் போது, தானே சாமியே இல்லைனு வசனம் பேசுறீங்க, அந்தச் சங்கடம் தான், உன்னை வலுவான மனுசனா மாத்தும், மனுச சித்தம், நாளுக்கு நாள் மாறக் கூடியது. உன் கையும், காலுக்கு ஓயும் போது, உன் மேலையே உனக்கு நம்பிக்கை குறையும். நம்பிக்கை குறைஞ்ச மனுஷன் ரொம்ப ஆபத்தானவன். அவனையும் காத்து, சமுதாயத்தையும் காத்து நிக்கிறது இறை நம்பிக்கை, அங்க துணை நிக்கிறவன் தான் கடவுள்.“ என முத்துசாமி பேச,ராசய்யா சிந்திக்க ஆரம்பித்தான்.
அவன் யோசித்து நிற்கும் நேரமே, 'கருப்பா, இந்த விபூதியை, மாமன் பூசிக்கிச்சுன்னா, நான் அதைக் கட்டிக்குவேன், இல்லையினா உனக்குச் சேவகம் பார்த்துகிட்டு இருந்துக்குறேன், முடிவு உன்னது தான்.‘ என முத்துப்பேச்சி, விபூதியை ராசப்பாவின் நெற்றியில் பூச வர, ஒரு நிமிடம் தயங்கியவன், அவள் முகம் சுருங்கவும், “உன் நம்பிக்கைக்காகப் பூசிக்கிறேன்.” என நெற்றியை நீட்டினான். “கருப்பா, என் மாமனுக்கு நல்ல புத்தியைக் கொடு." என்ற வேண்டுதலோடு பூசி விட, பவளாயி சிரித்தார்.
“அய்யா, கடவுள் இருக்கார்னு ஒத்துக்குறிங்க, நம்ம மதத்து கடவுளைத் தான் கும்புடுறீங்க, நம்ம கட்சியில் சேரலாமே!” எனக் காவி சட்டை கருத்து தெரிவிக்க,
மீண்டும் கலகலவெனச் சிரித்த, முத்துசாமி, “நீங்க, உங்க கட்சியை வளர்க்க மதத்துக்குக் காவலன் வேஷம் கட்டுறீங்க, அவுங்க சாமி எது, பிற்பாடு வந்த சம்பிரதாயம் எதுன்னே தெரியாமல் எதிர்த்து நிக்கிறாங்க. உங்க இரண்டு கட்சியும் ஆரம்பிக்கும் முன்னையும், நாங்க சாமி கும்பிட்டோம், உங்களுக்கு அப்புறமும் நாங்க சாமி கும்பிடுவோம்.
எங்க நம்பிக்களுக்குள்ள, உங்க கட்சியை வளர்க்க பார்க்காதீங்க, அவுங்க அப்படி தான் கத்துவாங்கன்னு, உங்களை கடந்து போயிகிட்டே இருப்போம். நீங்க சட்டையில், அடையாளத்தில் காட்டுறிங்க, நாங்க வேட்டியில் பக்தியை காட்டுறவுங்க. எங்க ஊர், எங்க சாமி, நீங்க உள்ள வராதீங்க!“ என முடித்தார் சாமியாடி முத்துசாமி.
எங்க ஊரு எங்க சாமி! நீ உள்ள வராதே!
நடப்பு
"தேவி இந்த வருஷம் மே லீவுக்கு ராமசாமி மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோம். மாமா ரிடையர் ஆகிட்டா அப்பறம் அங்கே போக முடியாது."
"சரி போவோம் நானும் வரேன்." .
அந்த நாளும் வந்திடாதோ, என ஏங்கி பல நாட்கள் 'வடிவேல்' பாணியில் 'ப்ளான்' பண்ணி எங்கள் திட்டத்தை செயல் படுத்தினோம். ஆளுக்கு ஒரு ஊரில் குடியேறி இருந்தவர்கள், காவிரி அகன்று ஓடும் அந்தச் சிராப்பள்ளி நகருக்கு, அக்கா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
பல வருடங்களுக்கு பிறகு, எங்கள் குழந்தை பருவம் கழிந்த, நாங்கள் பிறந்து வளர்ந்த குவாட்டர்ஸ் வீடுகளை காணும் ஆவலில், எனது மகன், மகளை மட்டும் அழைத்துக் கொண்டு நானும் என் தங்கை தேவியும் காட்டூர் பஸ் ஏறினோம். அந்த பேருந்தே ஏதோ ஓர் விட்ட குறை, தொட்ட குறை சொந்தம் போல், எங்களை நலம் விசாரிப்பது போல் தோன்றியது.
இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், எங்கள் பிறந்த இடத்தின் சொர்கத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் முன் அவ்விடத்தின் இனிமை நினைவுகளை அக்காளும், தங்கையுமாய் அசைப் போட்டபடி பயணித்தோம்.
அது ஒரு சர்க்கரை ஆலை, அதனுள் அமைந்த குடியிருப்பு பகுதியில் தான் எங்களின் பாலபருவ சொர்க்கம் இருந்தது. வளரும் போதே பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒரு வேலி உணர வைத்தது, ஆம் குடியிருப்பை, அதிகாரிகள், தொழிலாளர்கள் என்ற பாகுபாடு செய்வித்து இரண்டாக பிரித்திருந்தார்கள். இன்று நினைக்கும் போது ஆபீஸர்களின் குடியிருப்பு ஒற்றை படுக்கையறை, அல்லது இரண்டு படுக்கையறைக் கொண்டாத இருந்திருக்கும் அவ்வளவே. ஆனால் அன்றை தினத்தில் அங்கு வசிக்கும் மக்களை, ஏதோ பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் போல் எண்ண வைத்தது.
காலணி பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி, காய்கறிக்கடை, ஒரு கிளினிக் இவை வரிசையாகவும், இதைத் தாண்டிய பெரிய மைதானம், என நான் சிறு பிள்ளையில் நினைத்த ஓர் மைதானம், குடியிருப்பு வீடுகள்,
கிளப், ஒரு ஸ்கூல், பேக்டரி, சர்க்கரை விநாயகர் கோவில் எல்லாம் உள்ள ஒரு சிறிய (சிறு பிள்ளையில் நான் பெரியதாக நினைத்த) உலகம்.
பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் ஒரு பெரிய கேட் இருக்கும், பல்குனி ஆறு என காவியத்தில் வர்ணிக்கப்படும் புண்ணிய நதி, தற்போது அது பங்குனி வாய்க்கால் என்ற பெயரோடு சிறு ஓடையாக இருபது அடி அகலத்தில் அந்த கேட்டுக்கு முன்னே ஓடுகிறது. எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை, அங்கு வரை வந்து பேருந்தில் வழியனுப்பி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த நேரம் இந்த வாய்க்காலுக்கு மேலே பாவிய பாலத்தின் தடுப்புச் சுவர் கட்டையில் அமர்ந்து அதன் நீரோட்டத்தை வேடிக்கை பார்ப்பது எங்கள் தனியாத ஆசையில் ஒன்று.
அந்த பிரசித்தப் பெற்ற வாய்க்காலைத் தாண்டிய கேட்டில் நேபாளி கூர்க்காக்கள் காவல் காக்க அமர்ந்திருப்பார்கள். நல்ல சிவந்த நிறமும் ஈடுதாடான உடல் வாகும், காக்கிச் சட்டையில் போலீஸ்காரர்களுக்கு சவால் விடும் மிடுக்கோடு நின்றிருப்பர். அவர்களைப் பார்க்கும் போதே ஒரு பயம் வரும். புதிதாக வரும் யாரையும், யார் எவர் யார் வீட்டுக்கு என விசாரித்த பின்பே உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும். எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் முன் எங்கள் அப்பாவுக்கு போனில் தகவல் சென்று விடும்.
ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா, சித்தப்பா வரும் போது, வாட்ச்மேன் அவர்களை கேள்வி கேட்காமல் உள்ளே விடுவார், "தெரியும் சார் பாலு சார் அண்ணன்." என சரியாக அடையாளம் கண்டு கேட்காமல் அனுப்புவர், "எப்படி டா அவன் கரரெக்டா சொல்லிடறான்?" என ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா ஆச்சரியமாய் கேட்பார். இதில் சிறப்பு என்னவென்றால், ஆறு மாதக் குழந்தை கூட அசப்பில் ஒரே மாதிரி இருக்கும் இவர்களை ஒருவரோ என குழப்பம் கொண்டு ஏமாறும். இவர்கள் உருவப் பொருத்தம் அப்படி. அந்தப் பெருமையைத் தான் பெரியப்பா அப்படி சிலாகித்துக் கொள்வார்.
அந்த மரபுப்படி, எங்களுக்கே ஓர் அறிமுகம் தேவைப் படுகிறதே என மனது கனத்தாலும், இருபது வருடம் சும்மாவா என மனதை தேற்றிக் கொண்டு, நாங்களும் மாமாவின் பெயர் சொல்லி உள்ளே சென்றோம் .
குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் வழியின் இரு புறமும் பண்ணீர், புங்கை குல்மோஹர் மரங்கள் நிறைந்த நிழல் பாதை. வலது புறம் பாக்டரியின் கழிவு நீர் சுத்திகரித்து செல்லும் நீர் பீச்சிகள் வெதுவெதுப்பான நீரை பீச்சிக்கொண்டு இருக்கும், இடது புறம் வாய்க்காலை ஒட்டிய பகுதி மரங்கள் நிறைந்து இருக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப் பட்டு வாய்காலில் பாயும்.
அந்தப் பாதையில் சென்றால் நேரே ஒரு பாதையும், வலது புறம் ஓர் பாதை பிரியும். வலது பிரியும் பாதையில் பத்தடி தூரத்தில் ஒரு மைதானம் வரும் அதன் பிறகு செடிக்கு பாத்திக் கட்டியதுபோல் வரிசைக்கு பத்து என 40 வீடுகளும், பக்கவாட்டில் 2வரிசை 20 வீடுகளும் இருக்கும். இந்த வீடுகள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வரிசை வீடுகள்.
நினைவுகள்
மனம் இருந்தால் குருவிக்கூட்டில் மான்கள் வாழலாம், என்பது போல் இருக்கும் அங்கு எங்கள் வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் 3,4 பிள்ளைகள், ஒரு தாத்தா, பாட்டி என குடும்பங்கள் நிறைந்து வாழ்ந்தன அங்கே. வரிசையாய் உள்ள எல்லா வீடுகளிலும் உள்ளவர் அனைவரும், அத்தை,மாமா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என முறை வைத்தே அழைக்கப்பட்டனர் .
80 களில் வாழ்ந்த அந்த 100 குடும்பங்களை கொண்ட காலணி, குதூகலம் நிறைந்த உயிரோட்டமுள்ள ஒரு கூட்டுமுறை வாழ்வு போல் இருந்தது. அந்த குடியிருப்புகளை தாண்டி ஒரு சிறு பள்ளிக்கூடம், ஒரு க்ளப் இவை உண்டு.
இந்த ஆரம்பப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி அந்த சிறுவனோ, சிறுமியோ கையை தலையை சுற்றி அடுத்த காதைத் தொட வேண்டும் என்பதே.
சிறுமியாக இருக்கும் போது, என் தாத்தா என்னை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வார். எதிரே வரும் பெரிய டீச்சரிடம், "என் பேத்தியை உங்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்." என்பார், பெரிய டீச்சர் என் கையை தலை சுற்றி காதை தொடச் சொல்வார். கொஞ்சம் எட்டாமல் இருக்கும் என் கை, "கொஞ்சம் நாள் ஆகட்டும் ஐயா!" என பதில் சொல்லி எங்களை கடப்பார்கள். "என்ன ஐயா பேத்தியோடு வாக்கிங்கா?" என எதிர் வருவோர் எல்லாம் தக்கபடி விசாரித்தே நகர்வர்.
வீட்டில் இருக்கும் என் அப்பாயியிடம் பள்ளிக்கு கிளம்பும் முன் தலை வார, எனக்கும் பக்கத்து வீட்டு ராஜி அக்காவுக்கும் எப்போதும் போட்டி நடக்கும், பூனைக்குட்டி போல் குடுமி வைத்துள்ள உள்ள நான், ஜடையை மடித்துக் கட்டினாலே இடுப்பு வரை தொங்கும் அந்த அக்காவிடம் போட்டி போடுவேன். காய் நறுக்கிக் கொண்டோ, மோர் கடைந்துக் கொண்டோ உட்கார்ந்திருக்கும் என் அப்பாயியிடம், "அம்மா என்ன செயகிறீர்கள்?" என்கிற விசாரிப்போடு உரையாடல் நடந்து கொண்டிருக்கும். பார்ப்பவர் பாசமாய் விசாரிக்கும் இந்த விசாரிப்புக்குத் தான் இன்றைய பெரியவர்கள் ஏங்குகின்றனர் என்பது இப்போது புரிகிறது.
"ஒரு டம்ளர் சீனி, வேணி அம்மா கிட்ட வாங்கியது. திருப்பி குடுத்துட்டு வா." என அம்மா ஓசி வாங்கியதை திருப்பித்தரச் சொல்லி அனுப்புவதும், சாப்பிடும் போது வெஞ்ஞனமாக வைத்தக் காய் பிடிக்க வில்லை எனில், குமாரத்தை வீட்டு ஊறுகாய் தேடி ஓடுவதும் எங்கள் வழக்கம். அம்மா பிழிந்து வடகத்தை காக்கா கொத்தாமல் பாதுகாப்பது எங்கள் பொழுதுபோக்கில் சேர்த்தி. காக்கைக்கு பதில் நாங்கள் கொத்துவோம் அது வேற கதை.
மாலை 5 மணி சங்கு ஊதும் போது சரியாக எங்கிருந்தாலும் எங்கள் அப்பா வரும் நேரம் வீட்டில் ஆஜராகி விடுவோம் நாங்கள். மதியம் சாப்பாடு, அப்பா, தாத்தாவுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தே சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தவுடன் என் அப்பா 20 நிமிட ஓய்வில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள். அப்போது அப்பா கால் மிதித்து விடுவது என்னுடைய தலையாய கடமை.
மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்பது போல், வெயில் வீணாக போகாமல் காலணி முழுவதும் சுற்றித் தீருவோம். பம்பரம், குண்டு, கிளித்தாண்டு, புளியம் முத்து செதுக்கல், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், கல் விளையாட்டு, உப்பு, நாடு பிடித்தல், மரம் ஏறுதல், கண்ணாம் மூச்சி என நேரத்திற்கு தகுந்தாற் போல் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடுவோம்.
பள்ளிக்கூடம் ஆண்டு விழா எனில் நடனம், நாடகம் ஏதாவது ஒன்றில் பங்கேற்று கட்டாயம் மேடை ஏறுவோம். விளையாட்டு போட்டியில் பரிசு வருமோ, இல்லையோ ரன்னிங் ரேஸில் கடைசி வந்தாலும், ஸ்கிப்பிங்கில் முதலில் தடுக்கி விழுந்தாலும், பாட்டிலில் தண்ணீர் நிரப்பு வதில், கையிலேயே தண்ணீர் எல்லாம் வழிந்தோடினாலும், அதைப்பற்றி கவலை இல்லாமல் கலந்து கொள்வோம். அந்த மகிழ்வை இன்று எங்குத் தேடினாலும் கிடைக்காது.
பள்ளிக்கூடத்தை அடுத்து ஒரு கிளப் இருக்கும், பகல் பொழுதில் ஒன்று, இரண்டாவது பள்ளி வகுப்புகள் அதில் நடை பெறும். மாலையில் அதே இடம் பொழுது போக்கு இடமாக மாறி விடும். ஒரு வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டி அங்கே இருக்கும், அதில் தான் dd யில், 13 வார நாடகங்கள், ஒளியும் ஒலியும், திரைப்படம் எல்லாம் பார்ப்போம். ஒரே டிவியில் மொத்த காலணியும் சேர்ந்து வெள்ளிக்கிழமை இரவில் டெக்கில் புது படம் எடுத்துப் போடுவார்கள், போர்வை சகிதம் இடம் பிடித்து முந்திச் சென்று பார்ப்போம். இப்போது 24 மணி நேரமும் ஏதாவது ஒரு படம் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடினாலும் அன்று பார்த்த சுவரசியத்திற்கு ஈடாகாது.
பள்ளிக்கூடம் தாண்டி ஒரு கருவேல மரம் நிறைந்த பகுதி இருக்கும், அதில் மரத்துக்கு அடியில் கூட்டி சுத்தப் படுத்தி ரகசிய இடம் எல்லாம் வைத்திருப்போம்.
பக்கத்து வீட்டு புளியமரம் இருக்கும் அதில் பிஞ்சு விடும் நேரம் எங்களுக்கு வேட்டைதான். எங்கள் வீட்டு மாடிக்கு படி எல்லாம் கிடையாது, கான்க்ரீட் ஓடு நடுவில் குவிந்து, இரு புறம் சரிந்த ஒட்டு வீடு போல் தான் இருக்கும். அதில் வீட்டுக்கு பின்புறம் போடப்பட்ட கொட்டகையின் தென்னம் தட்டியில் காலை வைத்து லாவகமாக ஏறி விடுவோம், ஓட்டு மேலே ஏறி, புளியம் பூ, பிஞ்சுகளை சாப்பிடுவோம், அந்த ஓட்டு மேலே ஏறுவது எந்த ஒரு சாகசத்திற்கும் குறைந்தது இல்லை தட்டியில் உள்ள சிலாம்பு குத்தும், சுளுக்கி எறும்பு கடிக்கும். இந்த சோதனைகளுக்கு நடுவே தான் சாதனையாக ஓட்டு மேல் ஏறுவோம்.
இந்த வேலை எல்லாம் அம்மா மதியம் தூங்கும் போது தான் அரங்கேற்றுவோம். ஒருமுறை எங்கள் தம்பி சிறுவனாக இருந்தவன் எங்களை தொடர்ந்து எப்படியோ, எங்கள் முயற்சியும் சேர்ந்து மேலே ஏறிவிட்டான், ஏற்றிவிட்டோம். பின்னர் சிறிது நேரம் சென்று இறங்கும் போது இருந்தது வேடிக்கை, அவனுக்கு உயரத்தைப் பார்த்து பயம் வந்து விட்டது. பின்னர் பலர் கூடி, நெட்டை குமார் அண்ணன் உதவியுடன் பல கலவரங்களுக்கு பின் கீழே இறங்கினோம்.
இப்படியான எங்களுடைய பல வருட மலரும் நினைவுகளை நினைத்தபடி காலணிக்குள் சென்ற எங்களுக்கு அங்கே இருந்த மாற்றங்கள் தந்தது பேரதிர்ச்சி .
இப்போது உள்ளது போல் ஆண்ட்ராய்டு போன்கள் அந்த சமயம் புழக்கத்தில் இல்லை, எனவே ஒரு டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு எங்கள் நினைவுகளை பதிவு செய்து கொள்ள சென்றோம்.
நான் சொன்ன அந்த மைதானம் இப்போது உரு மாறி யூகலிப்டஸ் காடாக இருந்தது. பாக்டரியில் இருந்து வரும் காற்று மாசுபாடை தவிர்க்க யுக்கலிப்டஸ் வளர்த்திருக்கிறார்கள் .
அதனை கடந்து எங்கள் மாமா வீட்டிற்கு செல்ல, எங்கள் தோழிகளும் எங்களைப்போலவே உரு மாற்றம் பெற்று சுட்டி பசங்களுக்கு தாயாகவும் ஆகி இருந்தார்கள் . ஒவ்வொரு விடுமுறைக்கும் இவர்கள் இங்கே வந்து விடுவது வழக்கமாம். ஒருவருக்கு ஒருவர் மகிழ்ந்து கூடி விசாரித்து மனம் நிறைந்தோம். எல்லாமே மாறிடுச்சுடி என என் தோழி சொல்ல, அதன் பின் உண்டு முடித்து எங்கள் பழைய பெரும் உலகத்தை வலம் வர ஆரம்பித்தோம்.
கடந்த கால எச்சங்கள்.
உயிர்ப்புள்ள ஓவியமாக திகழ்ந்த எங்கள் காலணி எலும்பு கூடு போல் இருந்தது. எங்கே வீட்டுக்கு வீடு குழந்தைகளும், கும்மாளமும் நிறைந்து இருந்ததோ அவை வெறுமைப் பட்டு வெறிச்சோடி இருந்தன. நாங்கள் சுதந்திரமாய் சுற்றிய இடங்கள் பல கம்பி வேலிக்குள் அபாயகரமான கட்டுமானம் ஆகி சிறை இருந்தன.
ஆட்கள் நிறைந்த வசிப்பிடம், ஆள் அரவமற்ற இடமாக இருந்தது. சில வீடுகளில் வேற்று மொழி காண்ட்ராக்ட் வேலையாட்கள் முரட்டு சிங்கிள் ஆக தங்கி இருந்தனர்.
எது வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்ற நடுத்தர வர்க்க சுற்றம் இல்லை, மேல் தட்டு படாடோபம் நிறைந்த ஆஃபீஸ்ர் குடும்பங்கள் இல்லை, ஊரையே சுற்றி காவல் செய்த, நேபாளி கூர்காக்கள் இல்லை, எங்கிருந்தோ குறைந்த பட்ச கூலிக்கு ஆட்களை கொணர்ந்து ஆலையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு 20 வருட இடைவெளியில் இப்படி இங்கே வசித்த குடும்பங்கள் இதனில் இருந்து பணி ஓய்வு, வேலை இழப்பு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை என ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்விடம் விட்டு குடி பெயர்ந்து இருக்க, எஞ்சிய ஓரிரு குடும்பங்கள் மட்டுமே அங்கிருந்தன.
நாங்கள் வசித்த வீடு, எங்கள் பள்ளி, இந்த மரம், அந்த செடி என ஏதோ சிலவற்றோடு டிஜிட்டல் கேமராவில் பதிவு செய்து கொண்டு, மாற்றங்களுடன் உருக்குலைந்த எங்கள் காலனியை பிரிந்து அடுத்த நாள் கனத்த மனதோடு கிளம்பினோம்.
கேமராவில் பதிந்த பிம்பங்களை, கணினியில் மாற்றி சேமிக்கும் நேரம் ஏதோ பிழை காரணமாக நாங்கள் எடுத்த நிழற்படங்கள் அழிந்து போயின. கடந்த காலத்தின் இந்த எச்சங்கள் எங்கள் மலரும் நினைவுகளான குழந்தைப் பருவ உயிரோவியத்தை சிதைக்காமல் இருக்கவே கணினி பிழை செய்தது போலும்.
காலமும் காலனும் யாருக்காகவும் இரக்கப்பட்டுவதில்லை.காலச் சக்கரம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.
காலை 8 மணி
" என்னங்க குளிச்சாச்சா? ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் ரெடியா இருக்கு.சீக்கிரம் சாப்பிட வாங்க.ஆஃபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குன்னீங்களே!".
" இதோ வந்துட்டேன்மா",
என்று வந்து அவசர அவசரமாகக் காலை உணவை முடித்து விட்டுக்
கிளம்பினான் அநிரன்.அன்பு மனைவி மாளவிகாவின் இதழில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு அந்த இனிமையுடன் கிளம்பினான்.ஆறு மாத கர்ப்பிணியான அவளின் மேடிட்டிருந்த வயிற்றில் அடுத்த முத்தத்தைப் பதித்து
விட்டு வேகமாகக் கிளம்பினான்.
பகல் 11 மணி
ஸெல்ஃபோன் விடாமல் அடிக்க வேலைகளை முடித்து விட்டு அப்போது தான் உட்கார்ந்த மாளவிகா
ஃபோனை எடுத்தாள்.
" ஹலோ மிஸஸ்.மாளவிகா தானே பேசறது? உங்கள் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கிறார்.சீக்கிரமாகக் கிளம்பி வாங்க",
என்று மற்ற விவரங்கள் எதுவுமே சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டார் அந்த முகம் தெரியாத மனிதர்.
காதல் திருமணம் என்பதால். இரண்டு பக்கப் பெற்றோரும் இன்னமும் முறைப்பிலேயே இருக்கிறார்கள்.உதவிக்காக ஆஃபிஸ் நண்பருக்கு ஃபோன் செய்து விட்டுக் கையில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பினாள் மாளவிகா.
பகல் 3 மணி
ஜி.ஹெச்.சில் தலைமை மருத்துவரின் அறை.மாளவிகா கவலையுடன் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.ஆஃபிஸ் நண்பர் மாளவிகாவின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
" மேடம்.வெரி ஸாரி.உங்களுடைய கணவருக்குத் தலையில் பலத்த அடி.அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தோம்.ஒன்றும் பலனளிக்கவில்லை.இப்போது அவருக்கு மூளைச்சாவு ஆகி விட்டது.இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.நீங்கள் ஓகே சொன்னால் உங்களுடைய கணவரின் ஆர்கன்களை தானம் செய்யலாம்.ஆர்கன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஐந்து நோயாளிகள் பயனடைவார்கள்.நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்",
தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மாளவிகா நிமிர்ந்து பார்த்தார்.
" இதில் யோசிக்க டயம் தேவையில்லை டாக்டர்.நான் முழு சம்மதம் தருகிறேன்.
எந்த பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லுங்கள்",
கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய மாளவிகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த டாக்டர்.
இரவு 8 மணி
கணவனின் உடலோடு வீட்டுக்கு வந்தாள் மாளவிகா.அடுத்த நாள் காலையில் அநிரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அலுவலக நண்பர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
அவளைப் பார்க்கப் புதிதாக ஐந்து பேர் வந்து கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் நன்றி கூறினார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்குத் தான் அநிரனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப் பட்டிருந்தன.
" அம்மா நீ தான் எங்களுக்கு இனி தெய்வம்.எங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறாய்.
உனக்கு எவ்வளவு பண உதவி வேணுமோ தயங்காமல் கேளும்மா",
என்ற அவர்களைக் கை கூப்பித் தடுத்து நிறுத்தினாள் மாளவிகா..
" பணத்தாசை காண்பித்து என் கணவரின் உடல் உறுப்புகளை விற்ற
பாவத்தை என் மேல் போட வேண்டாம். முடிந்தால் நீங்கள் யாராவது எனது தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தர முடியுமா? எனது குழந்தைக்காக நான் உயிர் வாழ வேண்டும்",
என்று சொன்ன அந்த வீரப் பெண்ணை பிரமிப்புடன் பார்த்தார்கள்.
" கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறோம்மா",
என்று சொல்லி நகர்ந்தார்கள்.
காலத்தை வென்ற அந்தப் பெண்
மனித நேயத்தில் உயர்ந்து நின்றாள்.
புவனா சந்திரசேகரன்.
பகலெல்லாம் வேண்டுதலை
காதில் வாங்கிய நந்தி...
இரவெல்லாம் அசை போட்டது..
'மனிதர்களுக்குத்தான் இவ்வளவு ஆசைகளா'என்று!!
தன்னை காப்பாற்றுபவனை..
கடவுள் என்கிறது இந்து மதம்,
ஆண்டவர் என்கிறது கிருஸ்த்துவ மதம்,
இறைவன் என்கிறது இஸ்லாம்...
குழந்தைகள் மட்டுமே சரியாக சொல்கிறது,
அழகாக சொல்கிறது "அம்மா"என்று
மூங்கில் இலை மேலே, மூங்கில் இலைமேலே,
தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரே...
தூங்கும் பனி நீரை
தலாட்டும் வெண்ணிலவே
'கள்ளமில்லாத சிரிப்பு'தான்
ஆனாலும்
கொள்ளை கொண்டு தானே
போகிறது மனதை.
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
முருகனின் திருநீறை நெற்றியில் நேசத்துடன் பூசிக்கொள்ளும் போது பாசவினைகள் ஆசைகள் அனைத்தும் நீங்கப்பெற்று முருகனின் திருப்பாதத்தில் நீங்காமல் இருக்க முருகனின் திருவருளே துணைபுரியும். வேலை ஆயுதமாக உடைய முருகப்பெருமானே! என்னை அன்போடு காத்து, எனக்கான உணவையும் பொருளையும் மிக மிக சௌகர்யமாக பெருக்கி தருவாயாக!
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எதையும் சாதிக்கவல்ல ஆற்றல்களை (சித்திகள்) அடியவர்களாகிய நாம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும். மயிலோடு இருக்கும் முருகன் வாழ்க. அழகிய வேலொடு இருக்கும் முருகன் வாழ்க எங்களுக்கு ஞானம் அளிப்பதற்காக மலைமீது குருவாக இருக்கும் முருகன் வாழ்க குறமகள் வள்ளியோடு வாழ்க வெற்றிமுழக்கத்தோடு பறந்து முருகன் புகழை பறைசாற்றும் சேவற்கொடி வாழ்க உன் புகழை பாடும் என் வறுமைகள் என்னை விட்டு நீங்க வேண்டும.
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
என்னிடம் பல குறைகள் இருந்தாலும், பல தவறுகளை செய்து இருந்தாலும், என்னை பாதுகாக்கும் தாய் - தந்தை முருகப்பெருமான் மட்டுமே குருவாக வந்து வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது ஆகும். முருகப்பெருமானின் அன்பை பெற்றவளான குறமகள் வள்ளி பெற்று எடுத்த பிள்ளை போல அடியேனை அன்புகாட்டி பிரியத்துடன் பாதுகாக்க வேண்டும். உன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டு மனமகிழிச்சியுடன் உனது அருளை தரவேண்டும். முருகப்பெருமான் மீது நம்பிக்கையுடன் வரும் அடியவர்கள்/ பக்கதர்கள் பாதுகாத்து மென்மேலும் வளம் பெற்று வாழும் படி அருள் செய்ய வேண்டும்.
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
முருக பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்பி பால தேவராயன் ஸ்வாமிகள் உருவாக்கி அனைவரும் அறியும் வகையில் எல்லோருக்கும் கொடுத்த கந்த சஷ்டி கவசம் என்னும் இந்த பாடலை நமது உடலை முறைப்படி தூய்மை படுத்தி மனதில் வேறு சிந்திக்காமல் முருகப்பெருமான் சிந்தனையுடன் காலைபொழுதிலும், மலைப்பொழுதிலும் மற்றும் எப்போதும் மனதில் உணரும் படி படிக்கலாம்.
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
இந்த கந்த சஷ்டி கவசத்தை வேறு சிந்தனைகள் கவனம் சிதறாமல் மனதில் உணர்வோடு சிந்தித்து 'ச ர வ ண ப வ' எனும்அட்சரத்தை தொடர்ந்து மனதில் ஓதிக்கொண்டே (சொல்லிக்கொண்டே) இருக்கும் பொது
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ரவ
ப வ ச ரவ ண
வ ச ரவ ண ப
36 அட்சரமாக உரு மாறும் விருப்பத்துடன் திருநீறு (விபூதி) பூசி, அவ்வாறு முருகனை வேண்டி வந்தால் நாம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் ஆளும் மன்னர்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். நமக்கு வசப்பட்டு நாம் நினைப்பதை செயல்படுத்துவார்கள்.
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
நாம் அறியாத நபர்கள் அனைவரும் நம்மை மதித்து வணங்குவார்கள். ஒன்பது கோள்களும் மகிழ்ச்சியோடு நன்மை அளிக்கும். புதிய பொலிவுடன் மன்மதன் போல அழகான பிரகாசமான ஒளி பெற்ற உடம்பு பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் பதினாறு செல்வங்கள் அதாவது
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2. குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
பெற்று வாழ்வார்கள் முருக பெருமான் கையில் எப்போதும் உள்ள வேல் போல எப்போதும் பதினாறு செல்வங்கள் நம்கைவசமாகும்.
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
இந்த கந்த சஷ்டி கவச வரிகளை வீடுபேறு அடைய வழி என நினைத்து துதித்தால் மெய்ப்பொருளாக விளங்கும். முருகப்பெருமானின் அருள் பொங்கும் விழிகளால் நம்மை பார்க்கும் பொது நம்மிடம் இருக்கும் அகப்பேய்கள் அவையாவன
1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை
4) மோகம் – மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை
போன்ற துர்குணங்கள் பயந்து வெருண்டு ஓடும், பொல்லாதவற்றை பொடி பொடியாக்கும், நல்லவர்களாக நம்மை மாற்றி நம் உணர்வில் மெய் எழுச்சி பெற்று நடனம் புரியும்.
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
அனைத்து எதிரிகளையும் வென்று தீய எண்ணங்களை அழித்து நல்லவர்களாக மாற்றும் முருகப்பெருமானை அறிந்தகொண்டது நம் உள்ளம் , சூரபதுமனை வதைத்து அஷ்ட லட்சுமிகளில் (ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி , தனலட்சுமி) ஒருவரான வீரலட்சமி விருந்து படைத்தது முருகப்பெருமானின் திருக்கரம் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பதவிகளை மீட்டு அளித்தார். லட்சுமி மற்றும் தேவர்களுக்கு குருவாக திருஆவினன்குடி அருள்பாலிக்கிறார் பழனி மலையில் குழந்தையாக சிவந்த காலடி போற்றி வணங்குவோம்.
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
நாம் தவறான பாதைக்கு செல்லாதபடி தடுத்து நம் மனதில் குடிகொண்டு நம்மில் முழுவதும் பரவி அழகிய வேலனை வணங்கி புகழுவோம்.
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
தேவர்களின் சேனை தலைவராக போர்புரிந்து சேனாதிபதியை போற்றுவோம், குறத்தி மகளான வள்ளி மனம் மகிழ்ந்து அரசனைப் போற்றுவோம், வல்லமை பொருத்திய அழகான உடம்பை பெற்றவரைப் போற்றுவோம், துன்பத்தை தீர்க்கும் இடும்பா உனைப் போற்றுவோம், கடம்ப மலர்களை சூடும் கடம்பா போற்றுவோம், போரில் வெற்றி பெற்று வெட்சி பூவை சூடும் (தமிழர் மரபு) வேல் ஏந்தியவரை போற்றுவோம்.
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
உயர்த்த மலையான கந்தகிரி பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு மாமன்னராக மயில் போல மனதை கவரும் நடனம் ஆடும், உன் மலர் போன்ற மென்மையான பாதங்களை கதி என சரணம்/ தஞ்சம் அடைகின்றோம். முருகப்பெருமானின் அட்சரமான சரவணபவ சரணம் அடைகின்றோம். ஆறு திரு முகம் ஒளி வீசும் முருகப்பெருமானின் சரணம் அடைகின்றோம்.
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! எனது வார்த்தையானது நாக்கு அசைய வெளிப்படும் போது பொன்னாலான வேலானது விரைந்து வந்து காக்க வேண்டும். இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காக்க வேண்டும்! பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காக்க வேண்டும். முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவில் சிறந்த வேலானதுகாக்க வேண்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பொன்னாலான வேலானது காக்க வேண்டும்! தாமதமின்றி ஒரு நொடியில் நோக்கி அருள வேண்டும். தடைகள் (இடைஞ்சல்கள்) அடித்து விலக்க வேண்டும். முருகனின் அருள் பார்வையால் நம் செய்த பாவங்கள் அனைத்தும் பொடி பொடி தூளாகி ஒழிய வேண்டும்
பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும் என்னை நெருங்கிவராமல் விலக வேண்டும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும்
கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் கொள்ளிவாய் பேய்களும் குறளை எனும் குட்டி பேய்களும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்.
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட
பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு, காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் பல்லக்கில் வரும் பூதங்களும் கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் முருகனின் பக்தரான என் பெயர் கேட்டாலே இடி விழுவதை போல பயந்து ஓடவேண்டும்.
ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
வெறும் கண்ணால் காண முடியாத பதுமைகளும், பூனையினுடைய முடி பிள்ளைகள் எலும்பும், நகங்களும், மயிரும் நீண்ட முடியை உடைய தலையும், மரத்தினால் செய்த பொம்மைகள், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், வீட்டில் தீங்கு விளைவிக்கும் பொருட்டு புதைத்து வைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த பகைவர்களின் கர்வமும் மந்திரித்துச் செய்த மரத்தினால் செய்த பொம்மைகள்.
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
தீய சக்திகளுக்குத் கொடுக்கும் காசும் பணமும், ஆடு கோழி காவு கொடுத்து அதன் ரத்தத்தில் புரட்டிய சோறும், மாந்திரீகம் சொல்லுகின்ற அஞ்சன வித்தையும், சிந்தை கவர்ந்து பித்துப்பிடித்து போகச் செய்யும் மாய மந்திரமும், இந்த மேற்குறிய துஷ்ட செயலை செய்வோர்கள் முருகன் பக்தரான அடியேனை பார்த்தவுடனே நேராக பார்க்கமுடியாமல் இங்கும் அங்கும் அலைந்து எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் பயந்து குலைந்து பேசவேண்டும். பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும் எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும்.
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்
பயந்து நடுநடுங்கவும் அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும், வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும், படியினில் முட்டிக்கொள்ளவும், பாசக்கயிற்றினாலே கட்டி உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! காலும் கையும் ஒடியவும் படி அவர்கள் கதறும் படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
கண்விழிகள் வெளியே பிதுங்கி வருபடியாக மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அனைவரையும் கவரும் அழகனே சூரர் பகை அழித்த அழகனே! கூரிய வேலால் குத்தி அழிப்பாய்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக
முருகனை நன்றாக பிடித்து கொண்டவர்களுக்கு பிரகாசமாக எரியும் சூரியன் வெப்பம் கூட தணிந்து குறைந்து இதமாக இருக்கும்.
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட
புலியும், நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பயந்து ஓடும் படி வேலை விடுவாயாக!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
தேள்களும் பாம்பும் செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஒளிப்பும், நரம்பு சுளுக்குதலும்,ஒரு பக்கத்தலைவலியும், வாதம்(வாயு சம்பந்தமான வியாதி) வலிப்பு, குளிர்நோயும் இழுப்பு நோயும், பித்தநோயும், சூலைநோயும், சயம், குன்மநோயும் சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்,பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்,கடுவன், படுவன் என்னும் சிலந்தியும் கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் பார்த்தவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஓட அருள் புரிவீராக!
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
பதினான்கு உலகமும் என்னுடன் நட்புடன் இருக்க வேண்டும், ஆண்களும், பெண்களும், எல்லோரும், ஆள்கின்ற மன்னர்களும் என்னோடு மகிழ்ச்சியுடன் நல்ல நட்போடு உறவாக இருக்க அருள் புரிய வேண்டும்.
உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
உன்னை போற்றி வணங்க கூடிய "சரவணபவ" எனும் திருநாமம் உடைய சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! எல்லா திசையிலும் புகழ்பெற்று ஒளிரும் ஒளியினை உடையவனே!, பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவி துயரான பாவத்தை போக்கும் சக்தியை உடையவனே!
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!
திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகனே! தேவலோகத்தை காத்து! தேவர்களுடைய கடுமையான சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! கந்தக் கடவுளே! மனித மனம் எனும் குகையில் குடியிருக்கும் குகனே! கதிர் ஒளிபொருந்திய வேல் ஏந்தியவனே! கார்த்திகை பெண்களின் மகனாக வளர்த்தவனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் போரில் வென்று அருள் புரிந்தவனே! இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் மகனே!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற கதிர் ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! குழந்தை வடிவில் பழனி எனும் தலத்தில் தலைவனாக வாழ்கின்ற பால குமாரா! திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்க்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மா மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே! சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு ஆள்பவனே!
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
கரிய மேகங்களை போல கூந்தலை உடைய கலைமகளான சரஸ்வதி தேவி ஞானம் சிறக்குமாறு எனது நாவில் இருந்து, அடியேன் உன் புகழைப் பாட வேண்டும். என்னோடு எப்போதும் இருந்து வரும் என் தந்தை போல வழிநடத்தும் முருகனை நினைத்து நெஞ்சம் நெகிழ பாடினேன் ஆடினேன். எல்லையற்ற அனந்த நிலை ஆடிக்கொண்டே திருஆவினன் குடியை (பழனி) அடைவேன்.
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம் போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும், பன்னிரண்டு செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும் அழகுபொருந்திய திருமார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
பலவகையான ஆபரணங்களும் மார்புப் பதக்கமும் நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும் அணிந்து மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க அழகுடைய மேன்மையான வயிறும், கொப்பூழும் அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும்
நவ ரத்தினங்கள் பதித்த பார்ப்பதற்கு வரிசையாக அழகுற அமர்ந்துள்ளது
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
இரண்டு தொடைகளின் அழகும் இரண்டு முழங்கால்களும் ஓசை எழுப்ப அழகிய திருவடிகளில் சிலம்பு ஒலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
அகரமுதலென தொடங்கும் திருப்புகழில் இதே ஓசைகளை அமைத்திருப்பார் அருணகிரிநாதர் ஸ்வாமிகள். பிரபஞ்சம் உருவான பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் என அருணகிரிநாதர் ஸ்வாமிகள் கூறியுள்ளார். உதாரணமாக தடதட வென ரயில் வந்தது, சடசட என மழை பொழிந்தது என்ற ஒலிகளை விவரிக்கும் (இரட்டைக்கிளவி) சொற்கள் ஆகும். அது போல செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை முருகனின் சிலம்பொலி ஓசை போல மறைபொருளாக பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இவை தாள ஜதிகளுடன் முருகனை அழைக்கும் மந்திர வார்த்தைகள் ஆகும். இந்த அரிய மந்திரங்களை முருகனின் சிலம்பொலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளனர்.
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! உயிர் சக்தியை உள்ளடக்கிய மூலாதார பரம்பொருளே, மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! மயில் என்பது ஓம்கார வடிவாகும், என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன், முன்னதாகப் புறப்பட்டு முந்தி வரும் முருகனின் வேல். உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கின்ற லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க லீலா லீலா லீலா என்னும் பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து என்னைக் காத்து அருள் செய்வாயாக! என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன். அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை புனித வேல் காக்க வேண்டும். ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும்.
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! காக்க வேண்டும்! இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காக்கவேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்! என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்தியவேல் காக்க வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லி நாக்கை செம்மை கொண்ட வேலானது காக்க வேண்டும். கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காக்க வேண்டும். எனது இளமையான கழுத்தை இனிமையான வேல் காக்க வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகியவேலானது காத்தருள வேண்டும்.
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காக்க வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காக்க வேண்டும். முதுகுப் புறத்தினை அழகுடன் முதுகை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காக்க விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காக்க வேண்டும்.
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காக்க வேண்டும்! சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காக்க வேண்டும்! நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காக்க வேண்டும்! ஆண்குறி இரண்டும் கூர்மையாகிய வேலானது காக்க வேண்டும்! இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காக்க வேண்டும்! இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேல் காக்க வேண்டும்! ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காக்க வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காக்க வேண்டும்!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்! நாக்கில் சரஸ்வதி நல்ல துணை ஆக இருக்க வேண்டும்! (நாபி) உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காக்க வேண்டும்! மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காக்க வேண்டும்!
கந்த சஷ்டி கவசம்
“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை”.
கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை (துதிப்போர்க்கு) படிபவர்களுக்குக் வலிமை வாய்ந்த கொடிய வினை (வல்வினை போகும்) இடர்ப்பாடுகள் துயரங்கள் போகும் (துன்பம் போகும்) நெஞ்சில் பதியும் படி. உணர்ந்து முழுமனதோடு ஓதுபவர்களுக்குக் (பதிப்போர்க்கு) செல்வம் சேரும் மேலும் வந்த செல்வம் குறையாமல் பெருகும் (கதித்து ஓங்கும்) ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்கள் இல்லாத தூயவன் (நிமலன்) அருளால் ஆழ்ந்து தியானம் மூலம் இறைவனை உணரும் நிலை (நிஷ்டை) கைகூடும்.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
அமர்களாகிய தேவர்களின் துயரை போக்க போர் புரிந்த குமரன் காலடி நோக்கியே நம் மனம் வணங்கி நிற்கட்டும்.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
சூரசம்காரம் எனும் சஷ்டி பொழுதில் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை மனதிற்குள்ளே கூறிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு உதவும் செங்கதிர் (சிவப்பு நிறம் கொண்ட) வேலோன்.
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட கிண்கிணி என்னும் மணிகள் அசைந்து ஆட
எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு கையில் வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் வந்தருள்வாராக! வேல் ஆயுதம் கொண்டவரே வருக!!மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்வந்து அருளுக!
இந்திரன் முதலாக இந்திரன் (கிழக்கு) – தேவர்களின் அரசன்.,அக்னி (தென் கிழக்கு) – நெருப்பு கடவுள்,எமன் (தெற்கு) – இறப்பு கடவுள், நிருத்தி (தென் மேற்கு) – அழிவு மற்றும் அழியாத தன்மையுடைய தெய்வம்,வருணன் (மேற்கு) – கடல் மற்றும் நீரின் கடவுள், வாயு (வட மேற்கு) – காற்று மற்றும் வாயுக்களின் கடவுள், குபேரன் (வடக்கு) –செல்வத்தின் கடவுள்,ஈசானன் (வட கிழக்கு) – ஈசனின் (இறைவனின்) ஒரு வடிவம்.எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து வந்து அருளுக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
தேவேந்திரனின் மருமகனே! வந்து அருள்க அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் கந்தக்கடவுள் வந்து அருள்க! ஆறு திருமுகங்களைக் கொண்ட தலைவனே வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக! சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! விரைவாக வருக சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
ரவண, பவச, ரரா. ரிவண பவச ரி ரி "சரவணபவ' என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ''போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப் பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும்.
விணபவ சரவண வீரா நமோ நம-சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர மூர்த்தியாக விளங்கும் வீரரே உம்மை நான் வணங்குகிறேன். நிபவ சரஹண நிற, நிற நிறென-ஆறெழுத்து மந்திரத்தின் ஒளிவடிவமாய் பிரகாசிக்கின்ற. சரவணப் பொய்கையின் வீராதி வீரன் இறைவன், தனது வாகனமான மயிலின் மீது வந்தடையும் அவனை வணங்குகிறோம். அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்களின் வீரத் தலைவனாக இருப்பவரை வணங்குகிறோம்.
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
என்னை ஆட்கொண்டு அருளும் சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் கையில் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும் பரந்து விரிந்த பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க என்னைக் காக்க வேகமாக வந்தருள்க!
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள் இது 'ஈம்,' 'கிள்ம்,' 'சௌம்' என்ற பீஜ மந்திரங்கள் குறிக்கிறது. 'பீஜ' அல்லது 'விதை' என பொருள் சொற்களின் தொடராக இருந்து, அதற்கு ஒரு தனிப்பட்ட 'சக்தி'யையும் அளிக்கிறது.
பீஜ மந்திரங்களில் நுண்மையான மற்றும் மர்மமான உள் அர்த்தம் உள்ளது.
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்: விழிகளும், கரங்களும் தெய்வீக அடையாளங்களுடன் இணைந்து, படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தெய்வீக பண்புகளை குறிப்பிடுகின்றன. உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்: உய்யும் ஒளியாகவும் (தெய்வீக பிரகாசம்-அருட்பெரும் ஜோதி), உயிரின் ஆதியாகவும், செழிப்பும் காத்திடும் ஆற்றலாகும். கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்: கரங்களிலும் ஒளி, இந்த ஒளி தெய்வீக காந்தம் மற்றும் சண்முகனின் பிரகாசமான உருவம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. நிலைத்து நிற்குமாறு எனக்கு முன் நாள் தோறும் ஒளிவீசுகின்ற ஆறுமுகனாகவும் நீயும் உன்னதமான, தனித்துவமான ஒரு ஒளி “அருட்பெரும் ஜோதி” அல்லது சிறப்பு ஆறுமுகனின் மகிமையுடன் பொருந்தி, மிக உயர்ந்ததாக இருக்கும், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சிவ அருளை பெற்று ஒவ்வொரு நாளும் மேலோங்க நம் மனத்தில் குடியிருக்கும் முருகன் (குகன்) வந்து அருள்க
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்
கந்த சஷ்டி கவசம் என்றல் என்ன?
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌணர்னமிக்கும் அடுத்து வரக்கூடிய ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். செவ்வாய் அதிபதி முருகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி,
சஷ்டி என்பது சூரனோடு முருகன் போர் புரிந்த காலம் ஆகும். போரிலே மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் தன்னோடு வைத்துக் கொண்டார். இதனை சங்கரன் மகன் சட்டியில் மாவரத்தான் என்று வட்டார மொழிச் சொற்களில் கூறுவது உண்டு. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை நோக்கி தொழுவது சஷ்டி விரதம் ஆகும்.
சஷ்டி பொழுதில் கணவன் மனைவி இருவரும் இணைந்து விரதம் இருந்தால் மக்கட் பேரு கிடைக்கும். இதனை “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவது உண்டு. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்றும் கூறுவார்கள்
சஷ்டி என்றால் ஆறு, ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். மனக்கவலை நீங்க ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன். முருகனை வணங்க எல்லா தீய வினைகளும் ஒழியும் வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். பழனியில் கிரிவலப் பாதையில் பலரும் நோயினால் அவதிப்படுவதை பார்த்து மனம் வருந்தி அதனை தீர்க்க முருகனை வேண்டி இயற்றப்பட்ட பாடல் ஆகும்.
கந்த சஷ்டி கவசம் என்ன பயன்?
இந்த கவசத்தை படிப்பதால் அல்லது பாடுவதால் நமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். இதில் உள்ள 240 வரிகளை தொடர்ந்து வாய் திறந்து படுவதால் நாளமில்லா சுரப்பிகள் சீராக வேலை செய்யும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் குணமடையும், மனஅமைதி கிடைக்கும், புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். உணர்ந்து முழுமனதோடு பாட வேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் மனதார நினைத்து சரி படுத்துவது யோகக் கலையில் ஒருவித முறையாகும். இதனை மறைப்பொருளாக சஷ்டியில் கொண்டுள்ளது.
கொடிய விஷமும் கண்களுக்கு, தெரியாத பில்லி சூனியங்களும், சஷ்டியை படிக்க படிக்க நம்மை விட்டு விலகும். இதனை எந்த நேரத்திலும் படிக்கலாம். தீராத பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் முருகன் தீர்த்து வைப்பார் அல்லது தீர்க்க வழி காட்டுவர்.
ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.
முன்னுரை
அகவும் மயிலும், கூவும் சேவலும், கூரான வேலும், பொங்கும் கடலும், பொதிகை மலையும், ஒதும் தமிழும் சிந்தையுள் நிறைந்த சித்தர்கள் வழிபடும் சிவமைந்தன் பெயரை, குறை தீர்க்க குன்றம் தோறும் குடியிருக்கும் குமரனையே கூறும்.
அறிமுகம்
முருகனின் வரலாறு என்றால்
பகுத்தறிவாளர்களும் அறிவியல் சிந்தனையாளர்களும் கந்தனை கடவுளாக பார்ப்பதில்லை இருப்பினும் குறமகள் வள்ளியை மணந்த குமரனை குறிஞ்சி நில தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர் அவர் முன்னர் ஒரு காலத்தில் இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்து உலகத்துக்காக போர் புரிந்து மக்களை காப்பாற்றி நல்வழி காட்டும் தலைவனாய் இருந்திருப்பார் என ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஷண்முகம் (ஆறுமுகம்)
ஈஸ்வரனின் "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருமுகம்- அதோ முகம் சேர்ந்து நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த அருட்பெரும் ஜோதி ஆறுமுகங்களாக மாறியது.
ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்)
ஓகம் என்ற தமிழ் கலையே வடமொழியில் யோகம் என பெயர் பெற்றது. இரண்டாக உள்ள பொருளை ஒன்று சேர்ப்பது ஓகம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும் விஞ்ஞானமே ஆகும். ஓகக் கலையின் நாயகன் முருகனே, மூலாதாரம்-ஓங்காரம், நிராகுலம் (சுவாதிஷ்டானம்)-நிலம், மணிப்பூரகம்-நீர், அனாகதம்-நெருப்பு, விசுத்தி-வளி(காற்று), ஆக்கினேயம்- வான்(ஆகாயம்) ஒரே நேர்கோட்டில் நிற்க வெளிப்படும் பேராற்றல் முருகன் என்ற அறியப்படுகிறது,
தமிழ் ஆயுதம் -வேல்
அரிதான யோக முறையால் புருவ மத்தியில் சக்தியாக திரண்டு சுழலும் உன்னத நிலையே முருகனின் அவதாரமாகும். கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள் ஃ இந்த மூன்று புள்ளிகளுக்கு இடையே தமிழின் ஆயுத எழுத்தான ஃ வடிவில் விரிவடையும் இந்தப் புள்ளிகளையும் 6 மையங்களையும் ஒன்று சேர்த்தால் வேல் வடிவில் உருவம் தோன்றும், யோகத்தில் இந்த உயர்ந்த நிலை அடையும்போது அவரது உடம்பு சூரியனைப் போல பிரகாசிக்கும் அனைத்து வித சித்திகளும் கைகூடும்
துரியம் (Crown or உச்சிமண்டை )
மனித உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன. இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாகவும் சுழுமுனை முருகனாகவும் உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள். மனித உடம்பு இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர இணையும்போது அங்கே ஏழாவது சக்கரமான துரியம் (சகஸ்ரநாமத்தில்) நிலைக்குச் செல்லும்.அப்போது ஓரு மனிதன் இறை தன்மை எனும் தெய்விக நிலையை அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது மருத்துவர்கள் பயன்படுத்தும் முதுகு தண்டில் இரண்டு பாம்புகள் பின்படுவது போல் உள்ள அடையாள குறிகளும் முருக தத்துவமே.
ஆறுமுகம்(நதி)
ஆறுமுகம் என்பது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் ஆறு சக்கரங்களை குறிப்பதாக கூறலாம். எண்ணிக்கை அடிப்படையில் ஆறு என்றும் மற்றும் ஓடும் நதிகளை ஆறு என்று கூறுவோம். இவை அனைத்தும் முருகனுக்கு உவமையாக இருக்கலாம். மலைகளிலே மழையாய் பொழிந்து, சுனையாய் ஒன்றிணைந்து, அருவியாய் கொட்டி, நதியாய் பெருகி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்த்து, பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகி. பெருங்கடலில் கலக்கும் ஆறு போல முருகனும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவ சக்திக்கு மைந்தனாக அவதரித்து குறிஞ்சி நிலத்தில் தவழ்ந்து ஆறுமுகமாக ஒன்றிணைந்து சூரனை அழிக்க வீறு கொண்டு எழுந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருளை வாரி வாரி கொடுத்து பிறப்பு இளமை முதுமை நோய் இறப்பு என்கின்ற கர்ம வினை கொண்டு அவதியுறும் பக்தர்களை குருவாய் அமர்ந்து ஞானம் கொடுத்து பரமாத்மா எனும் பெருங்கடலில் சங்கமிக்க ஞான வழிகாட்டியாக இருக்கிறார்.
ஆற்றுப்படுத்தல்
ஆறு என்ற சொல்லுக்கு ஆறுதல், ஆற்றுப்படுத்தல் என்ற பொருளும் உண்டு. சூடான தேநீர் சற்று ஆறிய பின் குடிக்க இதமாக இருக்கும். வேகமாக ஒருவர் ஓடிய வந்த பின்பு அவருடைய மூச்சு வேகமெடுக்கும், (இளைப்பு) அப்போது ஓய்வெடுக்கும் நேரம் மூச்சுக்காற்று சீராகும். (இளைப்பாறு). சாப்பிட்டு விட்டீர்களா என கேட்பதற்கு பதிலாக பசியாறியாச்சா (பசியாற்று) எனவும் கேட்பது உண்டு. ஏதோ ஒரு விஷயத்திற்கு நம்முடைய நெஞ்சம் அஞ்சும் போது மனம் பதைக்கும் போது யாமிருக்க பயமேன் என ஒருவர் நம்மை தேற்றும் போது நம் மனம் ஆறுதல் அடையும்.
ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்
இங்கே மேற்கண்ட பதத்தில் ஆறு என்பது தணிப்பு/ தணிக்கை எனப் பொருள் கொள்ளலாம். தணிகை என்ற சொல்லும் (திருத்தணிகை தணிகாசலம் தணிகை வேல்) முருகனுக்கே உரியது,
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
என்ற திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஆறு என்ற சொல் ஆறுதல் console என்ற பொருளிலே கையாண்டுள்ளார்.
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை
முருகனை குறித்த பாடலில் கவியரசு கண்ணதாசன் கையாண்டுள்ளார்
அபாயத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கு அபய கரம் நீட்டும் முருகனின் ஆறுதல் அளிக்கும் முகமே ஆறுமுகம் ஆகும்.
ஆறு எழுத்து மந்திரம்
சிவனை வழிபடுவோர் நமசிவாய என் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் அதுபோல முருக பக்தர்களுக்கு சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரம் ஆகும் சரவணபவன்-நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் சரவணபவ - என்பது ச–செல்வம், ர-கல்வி, வ-முக்தி, ண-பகை வெல்லல், ப-கால ஜெயம், வ–ஆரோக்கியம் குறிக்கும் அல்லது ச(கரம்)-உண்மை, ர(கரம்)-விஷயநீக்கம், அ(வ)(கரம்)-நித்யதிருப்தி, ண(கரம்)-நிர்விடயமம், ப(கரம்)-பாவநீக்கம், வ(கரம்)-ஆன்ம இயற்கை குணம் என விளக்கங்களை அளிக்கின்றனர்
காலங்களும் கார்த்திகை நட்சத்திரமும்
வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டமைப்புகளுக்கு கார்த்திகை நட்சத்திரம் என பெயர் வைத்தனர்.கார் என்றால் குளிரைக் குறிக்கும் சொல் தீ என்றால் வெப்பத்தை குறிக்கும் சொல் இவ்விரண்டையும் இணைத்து கார்த்திகை என அழைத்தனர். இந்த கால மாறுபாட்டை கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணித்தனர்.
ஆறு சிறுபொழுது
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நாள் எடுக்கும் இதனை ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர் 1.வைகறை( 2 am to 6 am) 2.விடியல்(6 am to 10 am). 3.நண்பகல்(10 am to 2 pm), 4.எற்பாடு(2 pm to 6pm), 5.மாலை (6 pm to 10 pm), 6.யாமம்(10 pm to 2am) ஆகும்.
ஆறு பெரும்பொழுது
சூரியனை பூமி சுற்றிவர ஒரு வருட காலமாகும் இதனையும் தமிழர்கள் ஆறு காலங்களாக பிரித்தனர் இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி), கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக் காலம் (மார்கழி, தை), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி) ஆறுமுகனை வழிபடும் தமிழர் காலத்தையும் நேரத்தையும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணக்கிட்டுஆறு பிரிவுகளாகவே பிரித்தனர் இதன் மூலம் காலநிலை அறிந்து அதற்கு ஏற்ப வேளாண்மை செய்தனர்.
சூரசம்காரம்
முருகனை குறிஞ்சி நிலத்தலைவன் என்பது மட்டும் உண்மையானால் சூரசம்ஹார போர் மனிதர்களுக்கும் மனிதர் அல்லாத விலங்குகளுக்கும் நடந்திருக்கும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனை மற்றும் சூரனை தோளில் சுமந்து போரிட்டு காட்சிப்படுத்தினர் எனவே சக்கரம் மற்றும் ரதம் கண்டறியாத காலமாக இருக்கும் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலமாக இருக்கும். சூரசம்கார விழாவில் சுரன் யானை முக வடிவிலும் சிங்க முக வடிவிலும் அசுரமுக வடிவிலும் முருகனோடு போர் புரிகின்றான். சூரனின் தங்கை அஜமுகி (ஆடு முகம்) என்றும் போருக்கான முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பெரிய கோள்களில் காணப்படும் யாழி முக்கிய வகையாக மூன்று வகையாக பிரிக்கலாம் ஆட்டுத்தலை கொண்ட மகர யாளி, யானை தலை கொண்ட கஜ யாளி, சிங்க தலை கொண்ட சிம்ம யாளி. யானை குதிரை சிங்கம் புலி மயில் குரங்கு ஆகிய விலங்குகளை தெய்வ வாகனமாகவும் வணங்கும் இந்து சமயம் யாளியை வணங்குவதில்லை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துள்ளது. அரண்மனைகளில் மன்னர் வேட்டையாடிய பொருளை காட்சி பொருளாக வைப்பது வீரத்தை வெளிக்காட்டும் தமிழ் மரபு அதுபோலத்தான் முருகனின் வீரத்தையும் வெளிகாட்ட யாளியை காட்சிப்படுத்திருக்கக்கூடும் ஆனால் பூஜை செய்வது இல்லை.
வேலுண்டு வினையில்லை!
மலைகளிலும் காடுகளிலும் வாழ்வோர்கள் கையில் உயர்ந்த கம்பு/தடி எப்போதும் வைத்திருப்பார்கள் விஷச் செடிகள் பூச்சிகள் விலங்குகள் இவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் மேலும் மலையற்றத்தின் போது கீழே விழாமல் இருக்க கையில் கம்பு இருப்பது மிக அவசியம் இன்றும் பெரிய மலைகளில் ஏறுபவர்கள் கையில் குச்சியில் பிடித்துக் கொண்டு ஏறுவது நடைமுறையில் உள்ளது. மலைகளில் வாழ்ந்த முருகன் கையில் வேல் வைத்திருப்பது இயல்புதான். சூரன் படை மிருக கூட்டம் எனில் போர் என்பது எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலாகதான் இருக்கும் எனவே கூர்மையான வேல் எப்போதும் கையில் இருப்பது தன்னையும் தன் குடிமக்களையும் காப்பதற்காகவே.
மயிலுண்டு பயமில்லை
மயில் தொலைதூரம் பறக்கின்ற பறவை கிடையாது சிறிய தூரம் மட்டுமே பறக்கும் யானை குதிரை ஒட்டகம் போன்ற விலங்கு போல் மனிதனை சுமந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் கிடையாது. அதேசமயம் முருகன் மயில்லோடு தான் இருக்கிறான் காரணம் என்னவெனில் மயில் முருகனைப் போன்றே அழகான ஆண் இனம் மேலும் மழை வருவதை முன்னரே உணர்த்தும் அறிவு படைத்தது. கொடிய விலங்குகள் தாக்குதலை முன்னரே உணர்ந்து பிற உயிரினங்களுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மேலும் தன் இருப்பை எப்பொழுதும் தன் குரலால் ஒலித்துக் கொண்டே இருக்கும் (ஆகவும்). சூரன் ஒரு விலங்கினமாக இருந்தால் போர் என்பது எதிர்பாராத தாக்குதல் அச்சமயத்தில் அபாய ஒலியை எழுப்பவும் முருகன் இருக்கும் இடத்திற்கு அறிந்து கொள்ளவும் செய்தி அனுப்ப முருகனின் மயில் உதவி செய்திருக்கும். மயில் மற்ற எல்லா வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் வித்தியாசமானது பழகிய மனிதரை தவிர வேறு யாரிடத்திலும் நெருங்கி பழகாது குறிப்பிட்டு நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகும். சேவலுக்கும் ஏறக்குறைய இதே குணாதிசயம் உண்டு.
கந்தன்உண்டு கவலை இல்லை
மறைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் ஈட்டு வீரனை அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு முருகன் நினைவாக எழுப்பப்பட்ட தூண் கந்து என்று அழைக்கப்படும். முருகன் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல சித்தர்கள் வணங்கும் சித்தராக தலைசிறந்த ஞானியாக இருந்தார் பிறப்பு இளமை முதுமை கர்மவினை நோய் இறப்பு என்னும் இயற்கை விதிகளை அறிந்து அதனை மாற்றும் வல்லமையும் பெற்று இருப்பார். முருக அடியார்களான அகத்தியர், ஔவையார், போகர் புலிப்பாணி அருணகிரிநாதர் வள்ளலார் இவர்களுக்கும் இயற்கை விதியை மாற்றியமைக்கும் வல்லமையோடு இருக்கிறார்!. பேசாத குழந்தையான குமரகுருபரரை பாட வைத்தது முருகன் அருளே! பாம்பன் சுவாமிகள் முறிந்த எலும்பை சரி செய்ததும் கந்தனின் கருணையே! ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 14/02/1984, 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என திருவள்ளுவரின் வாக்கின்படி முருகன் போர் வீரனாக, தலைவனாக மட்டுமல்ல கருணையே வடிவான இறைவனாக மாறியவன். அபாயத்தில் அஞ்சி இருப்பவருக்கு அபய கரம் நீட்டும் ஆறுதல் அளிக்கும் முருகனின் திருவருள் என்றென்றும் தொடரும்
நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஒரு மாலை நேரம் ராத்தோட் ஸ்வர்ண மஹலில் ருத்ரா காரை துடைத்து வைத்துக் கொண்டு தயாராக நின்றான். இன்று அவனின் ராணிஷாவிற்கு விருது வழங்குகிறார்கள், அதுவும் 'பிரைட் ஆப் இந்தியா!’ எனும் அங்கீகாரம். ஒரு பிரபல நாளிதழும், பெரிய நடிகரின் அமைப்பும் சேர்ந்து சமூகத்திற்கு நன்மை செய்யும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள், மற்றும் அதன் நிறுவனர்கள், சாதனையாளர்களுக்கு இந்த விருதைத் தருகின்றனர்.
இந்த நான்கு வருடத்தில், மும்பாவை கைப்பற்றிய ஜானகியின் பார்வையில் அதே போன்ற பாதிக்கப் பட்டப் பெண்கள் அவள் கண்களில் பட்டனர். இவர்களுக்கு நன்மை செய்ய என ஒரு அமைப்பை ஏற்படுத்தினாள். ரகுவீர் ஆதரவும், ருத்ராவின் பாதுகாப்பும், சைலேந்திரனின் உதவியும் இருந்ததால் பாதிக்கப்பட்டப் பெண்களை மீட்க முடிந்தது. ஜானகியை எதிர்வந்த மிரட்டல்களை அவளே அலட்சியமாகத்தான் பார்ப்பாள், அது அவள் இயல்பு, ஆனால் ரகுவீர் தோள் தந்தான், கூரை ஏறிக் கொடிப் பிடித்தாள், அவளை ஆபத்து நெருங்காது வண்ணம் ருத்ரா சுவராக நின்றான். ருத்ராவைக் கொண்டே ரகுவீர் ஜானகியையும் காத்து வந்தான் என்றே சொல்ல வேண்டும்.
விழாவிற்கு ராஜ், மஞ்சரி தாதாஷா, தாதிஷாவுடன் காரில் வெளியேறினர், அதே நேரம் தன்னுடைய காரிலிருந்து இறங்கிய ரகுவீர், "ருத்ரா உங்கள் ராணிஷா ரெடியா?" எனக் கேட்டான்.
"உங்களுக்காகத் தான் ராத்தோட்ஷா எதிர்பார்த்துக் காத்திருக்காங்க." என்றான் ருத்ரா. "சரி நீ ரெடியா இரு. இதோ வந்துடுறேன். ஃபங்சன் ஆரம்பிக்கும் முன்னால் போகனும்." என்றவாறு லிப்டில் ஏறினான்.
மூன்றாம் தளத்தில் இறங்கும் போதே, "படே பப்பா மை கை சிஹூம்." எனத் தக்கி முக்கிய மழலையில் கேட்டது ராஜ்வீர், மஞ்சரி மகள் இரண்டரை வயது ஸ்வர்ண ஸ்ருதி.
"ஓ மேரி ஸோனு, பகூத் அச்சிஹோ." எனத் தூக்கி ஆரத் தழுவி கன்னத்தில் முத்தமிட்டான் ரகுவீர்.
"படே பப்பா மேக்கப் கராப் ஹோகயி." எனத் தனது பவுடர் பூச்சைக் காட்டி இறக்கி விடச்சொன்னது.
"வீரூபா, நீ ஏன் இவ்வளவு லேட். ஜானுமா அவார்ட் ஃபங்சனுக்கு இவ்வளவு லேட் பண்ணுவியா, பஹூத் கந்தா ஹை. கித்னே தேர் இந்தஜார் கர்தே ஹை. பாத் மத் கர்ணா. உன் கச்சி டூ." எனத் தமிழ் ஹிந்தி இராஜஸ்தானியில் கலந்துக் கட்டி சண்டைப் போட்டாள் ஸ்வர்ன ராகவி. ரகுவீர் ஜானகியின் சீமந்தப்புத்ரி.
"மேரி ஸோனு குடி ஹைனா. பாபா சே பாத் கரோ ஸ்வராகி." [அப்பாவின் தங்கப் பிள்ளை, பேசுங்கடா]எனக் கெஞ்சினான் ரகுவீர். அது மேலும் முறைத்துக் கொண்டது.
'அம்மா மாதிரியே அடம்.' என மனதில் நினைத்த நேரம்.
"பாபு. அவளை விடுங்க. ஜல்தி ரெடி ஹோ ஜாவ். மாஷா வெயிட்டிங்!" எனப் பெரிய மனிதனாகத் தீர்ப்புச் சொன்னான் விஜேன் எனும் விஜயேந்தர் சிங் ராத்தோட். குட்டி
அவன் மகள் கோபமாக இருப்பதில் நிற்க, "ரகுவீ சீக்கிரம் ரெடியாகு. நாங்கள் எல்லாரும், குழந்தைகளோடு போகிறோம். ருத்ரா வண்டியோடு இருப்பான். நீயும் ஜானியும் வந்து சேருங்க. இப்பப் போனால் தான் முதல் வரிசையில் உட்கார முடியும்." என ஷப்னம் பேரன், பேத்திகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். ராஜேன், கஜேன், ஸர்குன், பூனம் அனைவரும் சீக்கிரம் வந்துடு ரகுவி எனச் சென்றனர்.
"தாதாஷா, தாதிஷாவை ராஜ்வி, மஞ்சரி கூட்டிட்டுப் போயிட்டாங்க." என உபரித் தகவலைத் தந்து போனார் அமரேன். "எதிர்க்கப் பார்த்தேன் சாச்சா." என்றான் ரகுவீர்.
ரகுவீர் மேல் தளத்திற்குத் தங்கள் அறைக்குச் சென்றான். ஜானகி ட்ரெஸ்ஸிங் ரூமில் ப்ளவுஸோடு போராடிக் கொண்டிருந்தாள். ரகுவீர் உள்ளே நுழைந்து சேலை தழுவாத அவள் மேனியைக் கண்டு மோகத்தோடு பின்னியிருந்து அணைத்துக் கொண்டான். அவளோடு இழைந்து, "என்னோடைய பிரைடை இன்னைக்கு இந்தியா, தன்னுடைய பிரைடா சொல்லிக்குதுடி.வாழ்த்துக்கள்டி லுகாயி, என்ன கிப்ட் வேணும் சொல்லு." என்றான்.
"ம்க்கும், அதுவும் உங்களால்தான், உங்க சப்போர்ட் இல்லமால் உங்கள் லுகாயி ஒண்ணுமே இல்லை." என அவனோடு இழைந்து குழைந்துக் கொண்டிருந்தவள், நினைவு வந்தவளாக
"வீரூஜி ரொமான்ஸுக்கு நேரமில்லை ஃபங்சனுக்கு நேரம் ஆச்சு. ப்ளவுஸ் ஹூக்கை மாட்டி விடுங்கள். உங்களுக்கும் ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன் போட்டுக் கிளம்புங்கள் ப்ளீஸ்." என டென்ஷனாகச் சொன்னாள்.
"மேரிஜான், நீ விட்டால் தான் நான் கிளம்ப முடியும். பூகி ஸேர்ணி. என்னைக் காளையன்னு சொல்லுவ நீ என்னவாம்?" என்றான்.
"நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்க. இரண்டு ரூம் கட்டி என்ன பண்றது, என் புருஷனைக் கட்டிக்கிட்டு தூங்க கூட விட மாட்டேங்குதுங்க. மூனுத்துக்கும் நம்ம பெட் தான் வேணுமாம், மஞ்சி இங்க தள்ளிட்டு ஆனந்தமாக இருக்கா." எனப் புலம்பினாள் ஜானகி.
ரகுவீர் ஹாஹா எனப் பெரிய சிரிப்பாகச் சிரித்தவன். "மாட்டிட்டேன். சேலையைக் கட்டிட்டுக் கிளம்பு. இராத்திரி பஞ்சாயத்தை வச்சுக்கலாம்." என அவள் லிப்ஸ்டிக் போடாததை உறுதிப் படுத்திக் கொண்டு வன்மையான இதழொற்றளை தந்து போனான்.
அரங்கம் நிரம்பி இருந்தது. நாம் ஏற்கனவே சொன்னது போல் நாட்டின் முன்னணி நாளிதழும், பெரும் நடிகர் ஒருவரின் அமைப்பும் சேர்ந்து பல்வேறு நல்ல விசயங்களைச் செய்யும் நல்லவர்களை ஊக்கப் படுத்தத் தரப்படும் உயரிய விருது. 'ப்ரைட் ஆப் இந்தியா' அதனை இன்று ஜானகியும் பெறுகிறாள்.
ராத்தோட்ஸ் தாதாஷா, தாதிஷா முதல் ஸ்வர்ண ஸ்ருதி வரை எல்லா ராதாதோட்ஸ்களும் ஆஜர். ஜானகி, சிம்பிள் அண்ட் எலிகண்ட் டிசைனர் ப்ளவுஸ் மற்றும் உயர் ரகக் காட்டன் சேலையோடு மிடுக்காக இருந்தாள். ரகுவீர் கோட் சூட்டில் வர இருவருமாக ஃபங்சனுக்கு வந்து சேர்ந்தனர்.
விருது வாங்குபவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ரகுவீருக்கும் அங்கே இருக்கை இருந்தது. விழா ஆரம்பித்துப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவைத் தொகுத்து வழங்கும் நபர் அடுத்த அறிவிப்பை தொடர்ந்தார்.
"அடுத்து நாம் விருது வழங்க இருப்பது ஓர் இளம் பெண்மணிக்கு, இவர் இளமையான தாய். தங்கள் குடும்பத் தொழிலை நிர்வகிக்கும் சிறந்த நிர்வாகி. புகுந்த வீடே கொண்டாடும் அதிசய மருமகள்.
இத்தனைக்கும் மேலாக அவருடைய சாதனையாக நாம் காண்பது அவரின் சக்தி. நூற்றுக்கணக்கான வழி தவறி, பாதை மாறியப் பெண்களின் வாழ்வைச் சீர்படுத்தி அவர்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் 'SAKTHI' எனும் பெண்கள் சுய முன்னேற்ற நல அமைப்பின் ஸ்தாபகர் திருமதி. ஜானகி தேவி ரகுவீர் சிங் ராத்தோட். கரவொலியோடு அவரை மேடைக்கு அழைக்கிறோம். அவருக்கு விருது வழங்க மும்பை மகிளா நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரகுமாரி சர்மாவை மேடைக்கு அழைக்கிறோம். அதற்குள் இவரைப் பற்றிய குறும்படம்." என வீடியோவை ஓடவிட்டனர்.
"மும்பையின் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தின் மருமகளான, ஜானகி சிங் ராத்தோட், அபயம் எனத் தன்னை நாடி வரும் பெண்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறார். ஆதரவற்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தருவதே இந்தச் சக்தி அமைப்பின் முதல் உத்தேசம் எனச் சொல்லும் ஜானகி சிங் ராத்தோட், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாளெடுத்துப் போராடவும் தயாராக நிற்கும் கலியுக ஜான்சிராணி.
இவர்களது சக்தி அமைப்பின் மூலம் இந்தக் குறுகிய வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காப்பாற்றப் பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து ஒரே நேரத்தில் மும்பை காவல்துறையோடு சேர்ந்த முப்பது பெண்களை மீட்டனர். இவ்வாறு பல பெண்களுக்கு வழி காட்டியாக அபயகரம் நீட்டி அரவணைக்கும் சக்தி அமைப்பையும், அதன் நிறுவனர் ஜானகி சிங் ராத்தோடையும் கவுரவிப்பதில் எங்கள் நாளிதழ் பெருமை கொள்கிறது. இவர்களுக்கு ப்ரைட் ஆப் இந்தியா என்ற விருது சரியான அர்த்தத்தில் தரப்படும் விருது என்பதில் ஐயமில்லை." என அவர்கள் அமைப்பின் கட்டிடம், செயல் பாட்டு முறை ஜானகியின் சாதனை எனச் சொல்லி முடிந்தது.
கரவொலி அரங்கை அதிர வைத்தது. இருபதின் கடைசியில் இருக்கும் சிறிய பெண் இத்தனை சாதித்தாரா என்ற வியப்பு அரங்கத்தில் உள்ளோரின் முகங்களில் தெரிந்தது.
ஜானகி உணர்ச்சிப் பெருக்கில் மேடை ஏறியவள், "அனைவருக்கும் வணக்கம். நான் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க நினைத்தது முதல் அது நினைவாகி இன்று வெற்றிகரமாக நடந்து, பல பெண்களை மீட்டது வரை அனைத்திலும் என் கணவர் ரகுவீர் சிங் ராத்தோட் உறுதுணையாக இருக்கிறார். வீரூஜி மேலே வாங்க." என அவள் அழைக்கவும் தயங்கி பின் நீதிபதியும் அழைத்தவுடன் மேடை ஏறினான்.
"இன்று இத்தனை பெண்களின் நல்வாழ்வுக்கு வழி ஏற்படுத்தித் தந்ததும் எனது கணவர் தான். ஐந்து வருடங்களுக்கு முன் நானும் மனரீதியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டேன்." எனச் சொல்லும் போது ஜானகியின் தோள்களை அணைத்து நின்றான் ரகுவீர்.
"இரும்புக் கோட்டை போன்ற எங்கள் ஹவேலியில் இருந்தே நான் கடத்தப் பட்டேன். செல்வச் செழிப்பு மிக்க, பாதுகாப்பான கோட்டை, சொந்த பந்தங்களுக்கு நடுவில், என்னை உயிராய் நினைப்பவர்கள் மத்தியிலிருந்தே கடத்தப் பட்டேன். என்னை எங்கள் படைபலம், உறவினர் நண்பர்கள் என்று அனைத்து சாதகமான சூழ்நிலையும் இருந்ததால் இருபத்தி நான்கு மணி நேரத்தில் என் கணவரால் மீட்கப் பட்டேன். ஆனாலும் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. எனது கணவரின் பொறுமை, விடா முயற்சியின் பலனாக மீண்டு வந்தேன். எனது இரு குடும்பங்களும் என்னைக் கையில் வைத்துத் தாங்கினர். நான் சிதையாமல் மீண்டேன்.
என்னைப் போல் இத்தனை பின்புலம் இல்லாத பெண்களின் நிலை என்னவாகும், இந்தச் சிந்தனையில், பெண்களின் மீதான அக்கறையில் அதற்காகத் தொடங்கப் பட்டதே சக்தி. இது மகிளா சக்தி. தன் வலிமையை உலகுக்குக் காட்டும் பெண்களின் சக்தி.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநிலையைச் சீர் படுத்தி, மனவலிமை உடல்வலிமை, சுயச்சார்பாக இருக்கப் பொருளாதார வலிமையை உருவாக்கித் தருகிறோம். அபலையாக வரும் பெண், தன்னைச் சார்ந்த மற்றவரையும் காக்கும் வல்லமையோடு புதிய சக்தியாக வெளி உலகிற்குச் செல்கிறாள்." என நீண்ட உரையைத் தந்தாள் ஜானகி.
மகிளா நீதிமன்ற நீதிபதி, "வசதியான குடும்பத்தில் தங்களுக்கெனத் தொழில் பொழுது போக்குக்குக் குறைவில்லாத செல்வம் இத்தனையும் இருந்தும், பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றிக் கை தூக்கிவிடும் துணிச்சல் மிகு செயலைச் செய்யும் ஜானகி சிங் ராத்தோடிற்கு இந்த விருதை வழங்குவதில் ஒரு பெண்ணாகவும், மகிளா நீதிமன்ற நீதிபதியாகவும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இவருக்கு உறுதுணையாக இருக்கும் மிஸ்டர் ராத்தோட் மற்றும் அவரது குடும்பத்திற்கும் எனது பாராட்டுக்கள்." எனப் பாராட்டினார்.
அரங்கம் கரவொலி எழுப்ப நீதிபதி கையால் விருது வழங்கப்பட்டது. ஜானகி ரகுவீர் அருகில் இருக்கப் பெற்றுக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை லைவாகப் பார்த்தனர் சிவகுருவும், ராகினியும். நண்பர் குடும்பங்கள் லைவில் பார்த்து மகிழ்ந்து நின்றனர்.
விழா முடிந்து திரும்பிய ராத்தோட் குடும்பம் அதைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தனர்.வீடு வந்து சேர்ந்தனர்.
ஜானகிக்கு சிவகுருவிடமிருந்து போன் வந்தது ஸ்பீக்கரில் போட்டபடிப் பேசினா ஜானகி . "ஜானும்மா ரொம்பச் சந்தோஷம்டா. விருது எல்லாம் வாங்கிக் கலக்குற. என் மகள்னு சொல்லும் போது கர்வமாக இருக்கு. அதே நேரம் ஆபத்து வருமோன்னு பயமா இருக்குடா." என்றார் சிவகுரு.
"அப்பாஜான் பயப்படாதீங்க. உங்கள் மருமகன் அரண் மாதிரி என்னைப் பாதுகாக்கிறார். ரெஸ்க்யூ டீம் இருக்குப்பா. கோ ஆர்டினேட் பண்றதுதான் என் வேலை. பயப்படாதீங்க." என்றாள். போனை பிடுங்கிய ராகவி
"ஹேய் தாத்தா, பயப்படாதே, ஜானும்மா ஸ்ட்ராங் லேடி. வீரூப்பாவையே அடி பின்னி ஜெயிச்சிடும். சிந்தா மத் கர்ணா. நாநிஷா எங்கே?" என்றாள்.
"அடிப் பாவி, நான் எப்படி உங்கப்பாவை அடிச்சேன். அப்பாஜான் இவள் பொய் சொல்றா." எனக் கத்தினாள் ஜானகி. சிவகுரு பேத்தியின் பேச்சில் மகிழ்ந்தவர்.
"எங்கள் தேவதை பேத்தி இருக்கும் போது என்ன கவலை. அம்மாவைப் பார்த்துக்கங்க. உங்கள் நாநிஷா கார்த்திக், பவித்ராக்கு கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க." என்றார்.
கார்த்திக் மூன்று வயது அமுதன் மயூரி மகன். பவித்ரா இரண்டரை வயது பாலன் அமிர்தா மகள். "நாநிஷாகிட்ட குடுங்க. அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கதையா. ராகவிக்கு ஒண்ணுமே சொல்லலை." என்றாள் குட்டி ஜானகி.
"இதோ குடுக்குறேன் மகாராணி." எனச் சிவகுரு ராகினியிடம் நீட்டினார். "நாநிஷா, நீ ஜானும்மா அவார்டு ஃபங்சன் பார்க்காமல் கதை சொல்லிக்கிட்டு இருந்தியா?" எனக் கேட்டாள். ஜானகி, "ஸ்வராகி நீங்க. இருந்தீங்களான்னு மரியாதையா பேசனும்.” என்றாள்.
"அப்ப நீயே பேசு நான் போறேன், முஜே பாத் நஹி கர்ணா." எனக் கோபித்து ஜானகியிடம் போனை தூக்கிப் போட்டுச் சென்றாள் ராகவி.
"அடியேய் போனைத் தூக்கிப் போடுற, அடிப் பின்னிடுவேன்." என மகளை மிரட்டியவள், "மாதாஜி இப்ப கேட்டதெல்லாம் காதுக்குக் குளிர்ச்சியா இருந்திருக்குமே." என்றாள் ஜானகி.
"கங்கிராட்ஸ் டா ஜானும்மா. நீ எங்கள் எல்லாரையும் விட ஒருபடி மேலப் போயிட்ட. நான் எதை உன்னுடைய அதிகப்பிரசங்கித்தனம்னு நினைச்சேனோ, அதுவே உன்னுடைய இயல்பான பலம் ஜானும்மா. ரொம்பச் சந்தோஷம்டி, எத்தனை பெண்களுக்கு உன்னால் மறுவாழ்வு கிடைச்சிருக்கு. வாழ்த்துக்கள் ஜானும்மா." என்றார் ராகினி.
"மாதாஜி என்ன இவ்வளவு எமோசனல், எல்லாம் உங்கள் வீரூ தான் இதுக்கெல்லாம் காரணம். அவர் சப்போர்ட் பண்ணலைனா நான் என்ன செய்ய முடியும். சரிம்மா ரொம்ப நேரம் ஆச்சு. அண்ணன் மயூ, பாலன், அமித்து எல்லாம் எங்கே?" என்றாள்.
"ஶ்ரீராம் தங்கையுடைய ரிஷப்ஷன், அதனால் தெய்வா, தம்பியோடு நாலுபேரும் மதுரைக்குப் போயிருக்காங்க. பசங்களை நாங்கள் பார்த்துக்குறோம். சரிடா உன் மருமகன், மருமகள் சாமியாடுதுங்க. தூங்க வைக்கிறேன்." எனப் போனை வைத்தார்.
அமுதன், பாலன், மயூரி, அமிர்தா, தெய்வா சண்முகம் வீடியோ காலில் தங்கள் வாழ்த்துக்களைச் சொன்னார்கள்.
ரன்வீருக்கு தீப்தியிமிருந்து போன் வந்தது. "ரன்வீ, ஜானி தீதி கலக்கிட்டாங்க. நாங்களும் லைவ் பார்த்தோம்." என்றாள்.
தீப்தி, சிவகணேஷ், சாந்தினி சேர்ந்து போட்டோகிராபி மேற்படிப்பு படித்து, தனியாகச் சென்னையில் அட்வர்டைசிங் கம்பெனி வைத்து நடத்துகிறார்கள்.
ரன்வீர் அவ்வப்போது அவர்களுக்காக மாடலிங் செய்யச் சென்று வருவான். இதைச் சாக்காக வைத்து தீப்தியைப் பார்த்து வருவான்.
"ராஜ் பேபி, ஜானகி அவார்ட் வாங்கினதில் ஜீஜூக்கு எவ்வளவு பெருமை. பூரிச்சு இருந்தார். ரெனாவத்துக்குத் தண்டனை வாங்கித் தந்த தருணத்தை விட இன்னைக்குத் தான் ஹேப்பியா இருந்தார்." என்றாள் மஞ்சரி தங்கள் அறையில் விழாவிற்கு சென்று வந்த ஆடைகளை மாட்டிக்கொண்டே பேசினாள் .
"ஆமாம் பேபி, ஜானிக்கிட்ட தான் எத்தனை மாற்றம். எல்லாம் பையாவால் தான் சாத்தியம் ஆனது. ஆனால் ரெனாவத்துக்குத் தண்டனை எங்கக் கொடுத்தார். அவனே ஹேண்டிக் காப்டா ஜெயிலில் சடையிறான். அவன் குடும்பத்துக்கு இன்னும் உதவி செய்கிறார். கேட்டாள் படி தாதிஷா பிறந்த குடும்பமாம். சரி விடு. ஆமாம் நாம பெற்ற மகள் எங்கடி?" என்றான்.
"அது எங்க இங்க வருது, எல்லாத்துக்கும் ஜானிம்மா தான் வேணும். அவங்க பெட்டில் படுத்துக்கிட்டு வரமாட்டேங்குறா. ஜீஜூ நீ போ நாங்க பார்த்துக்குறோம்னு சொல்லிட்டாங்க." என்றாள்.
"உனக்கு வசதி தான்." என ராஜ்வீர் சொல்லவும் மஞ்சரி கோபமாக முறைத்தாள். இல்லடா பேபி எனச் சமாதானத்தில் இறங்கினான் ராஜ்வீர்.
ரகுவீர், "ஜானும்மா தீதியும், ஜீஜூவும் போன் பண்ணாங்க. அவங்களும் லைவ் பார்த்தாங்களாம். ரொம்ம சந்தோஷம்னு சொன்னாங்க." என்றான்.
ரகுவீர் பெட்டின் ஒரு கோடியில் இருக்க, ஜானகி மறு கோடியிலிருந்தாள். நடுவில் ரகுவீர் கழுத்தைக் கட்டிய படி, கால்களை அவன் மேல் தூக்கிப் போட்டு ஸ்வராகி எனப் பெற்றவர்களால் அழைக்கப்படும் ஸ்வர்ன ராகவி படுத்திருந்தாள். ஜானகியை கட்டிக் கொண்டு ஸ்ருதி மஞ்சரி மகள் படுத்துக் கிடக்க, நடுவில் விஜேன் படுத்திருந்தான்.
"எனக்கும் மெசேஜ் போட்டிருந்தாங்க. பல்லா மாமாஜி, பாண்டே மாமாஜி, ரெட்டி மாமையா எல்லாரும் மெசேஜ் செய்து இருந்தாங்க." என்றாள்.
"ஜெய், ஆரவ் பசங்க நம்ம பசங்களை விட மூத்தவங்க தானே." என்றான் ரகுவீர்.
"மூன்று மாசத்துக்கு மூத்ததுங்க. அமித் ஶ்ரீநிதி டெல்லியில் செட்டில் ஆகிட்டாங்களாம். மாமாஜியோட பிஸ்னஸ் பார்த்துக்கிறான்னு ஒரே சந்தோஷமா அன்னைக்குப் பேசினாங்க."
"பைலட் பிஸ்னஸ் மேன் ஆகிட்டானா. ரெனாவத் ரிசார்டில் என்னை அவன் இறக்கி விட்டதுக்கு நான் அவனுக்குக் கடமை பட்டிருக்கேன்." என்றான்.
"நீங்க யாருக்குத் தான் கடமைப்படலை. என்னைக் காப்பாற்ற வந்த அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை செய்துக்கிட்டே தான் இருக்கீங்க." என்றாள் ஜானகி.
"என் லுகாயிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் செய்வேண்டி." என்றவன் கண்களால் அவளை அழைத்தான். அவள் பிள்ளைகளைப் பார்த்தாள்.
பிள்ளையோடு கட்டில் நடுவில் நகர்ந்தவன், அவளையும் அதே போல் வரச் சொன்னான். ரகுவீர் ஜானகி முகம் மட்டும் தலையணையில் நெருங்கி இருந்தது. உடலில் கங்காருக் குட்டி போல் அவ்வீட்டின் இளைய இளவரசிகள் தொங்கிக் கொண்டிருந்தனர்.
ரகுவீர் காதலாகி அவளைப் பார்த்து, நெற்றியில் முத்தமிட, ம்ம் என முகத்தைச் சுழித்தாள். கண்களில் கன்னங்களில் எனப் பயணித்து இதழை சிறைபிடித்தான் அவளின் ஆசைக் கணவன் வீரூஜி.
ராகவி கையைத் தூக்கி ரகுவீர் நெஞ்சில் சத்தெனப் போட்டது. ரகுவீர் ஜானகியிடமிருந்து விலகி தன் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டான். ஜானகி கிலுக்கிச் சிரித்தாள். அதை ஆசையாகப் பார்த்தபடி, "உனக்கா எதுவும் செய்வேனடி மேரிஜான்." என மனதில் வார்த்தைகளைப் படித்தான்.
"உனக்காகப் பிறந்தேனே எனதழகா" என ஜானகி, மனதின் வார்த்தைகளைப் பாட்டாக வடித்து ரகுவீரை கண்களில் நிறைத்து காதாலாகப் பாடிக் கொண்டிருந்தாள், ரகுவீர் அவளின் விழிகளில் லயித்திருந்தான்.
இத்தோடு ராத்தோட்களின் ஸ்வர்ண மஹலை, ரகுவீர் ஜானகியைத் தற்காலிகமாகப் பிரிந்து செல்வோம். பிறிதொரு காலத்தில் ரகுவீரோ, ஜானகியோ தங்கள் வாழ்வின் லட்சியங்களை விவரிக்க அழைத்தால் அவர்கள் பயணங்களின் ஸ்வாரஸ்யங்களைப் பகிர நினைத்தால் வந்து பார்ப்போம். அதுவரை ஒருவர் மனதை மற்றவர் புரிந்து நடந்து கொள்ளட்டும். தொடரட்டும் இவர்கள் காதல் பயணம், லட்சியங்களோடு கூடிய வாழ்க்கைப் பயணம். நாமும் விடை பெறுவோம்.
கம்மாகனி ராணிஷா, கம்மாகனி ராத்தோட்ஷா.
சிவமாளிகையில் அந்த வீட்டின் பெண்ணரசி ஜானகி, ஆவலாக அன்றைய தினத்தின் அதிகாலையில் விழிப்புத் தட்டி விட மணி எப்போது ஆறு ஆகும் எனப் பார்த்திருந்தாள். வயிறு லேசாக மேடிட்டு இருந்தது. இன்றோடு தொண்ணூறு நாட்கள் ஆகிறது, ரகுவீர் அவளை விட்டுச் சென்றும் நாற்பது நாட்கள் ஆகியிருந்தன. மும்பை சென்று நடுவில் வந்து செல்ல அவன் செய்த முயற்சிகள், வர இயலாதவாறு தோற்றுப் போயின.
ஜானகி இங்கு மசக்கையில் அவதிப்பட்டால் எனில், ரகுவீர் அதை அங்கே சிடுசிடுத்தவாறே எதிரொலித்தான். வீட்டில் காட்ட இயலாத கோபத்தை ஆபீஸ், ஃபாக்டரியில் காட்டினான். ராஜ்வீர் ஹனிமூன் முடித்து வந்து ஒரு வாரத்தில் கிளம்பினான்.
அமுதன், மயூரி திருமண வரவேற்பு மும்பையில் ஒரு வாரத்தில் நடந்தது. ராகினி சிவகுரு சென்று திரும்பியவரிடம் ரகுவீர் ஜானகிக்குப் பிடித்த சில பதார்த்தங்களை அனுப்புவதாகப் போனில் சொல்லும் போது, இல்லை வீரூஜி நீங்க விரும்பி சாப்பிடுவதை அனுப்பி வைங்க.
உங்க பேபிக்கு அதுதான் வேணுமாம் என்று சொல்லவும், இத்தனை நாள் தனக்கு எது பிடிக்கும் என அறியாது இருந்தவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். ஷப்னம், ஜானகி இருவரும் அவனுக்குப் பிடித்ததைச் சொன்னார்கள். இது போல் சில இராஜஸ்தானி டிஷ் மாத கணக்கில் வைத்துச் சாப்பிடக் கூடியதையும் அனுப்பி வைத்தான்.
ஜானகியைக் கீழே உள்ள விருந்தினர் அறையில், முன்பு ரகுவீர் காயம் பட்ட போது இருந்த அறையில் தங்கச் சொன்னார்கள். அவளுக்கும் அந்த அறை அவனோடான நெருக்கத்தின் சாட்சியாகப் பிடித்தமானதாகவே இருந்தது
சிவகுரு மகளை எந்நேரமும் கவனித்த வண்ணம் இருப்பார். அப்பத்தா முக்கால் வாசி அவள் அறையில் தான் தங்கினார்.
சண்முகம் அவர்கள் தோட்டத்தின் சிறந்த பழங்களைக் கொண்டு வந்து தள்ளுவார். "பாப்பா, இதைச் சாப்பிட்டுப் பாரு, தெய்வா அம்மா மசக்கையா இருந்தப்ப இது தான் கேட்டாள்." எனப் புளியம்பழம், புளித்த மாங்காயைக் கொண்டு வந்தார். அந்த ருசியும் ஜானகிக்குப் பிடித்துப் போக, அவ்வப்போது தோட்டத்திலிருந்து வரும்.
அமுதன், மயூரி ஒரு வாரம் மும்பையிலிருந்து விட்டு வந்தனர். பாலன் அமிர்தா இரவு தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் ஜானகியுடன் பொழுதைக் கழித்தனர். இந்த ஜோடிகள், தங்கள் ஹனிமூன் பயணத்தை ஜானகி மும்பை சென்ற பிறகு வைத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டனர்.
எத்தனை பேர் எத்தனை விதமாக அவளைக் கவனித்துக் கொண்ட போதும், ரகுவீரின் அணைப்புக்காக ஏங்குவாள் ஜானகி. அவனோடு எடுத்துக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்.
இன்று காலை ஃப்ளைட்டில் ரகுவீர் வந்து இறங்குகிறான், அவனை அழைத்து வர அமுதன் அதிகாலையில் கிளம்பிவிட்டான், அதிலிருந்து ஜானகி கேட்டைப் பார்த்தவண்ணம் இருக்கிறாள்.
காலைக் காபி பருகியபடி முன்பக்க ஸ்டோன் பென்சில் அமர்ந்து இருந்தாள். மயூரியும் அவளோடு அமர்ந்திருந்தாள். இருவருமாகப் பேசிக் கொண்டு இருக்கும் போதே அமுதன் கார் ஹாரன் கேட்டது.
"ஜானி வேகமா எழுந்திரிக்காதே பையாவே இங்கே வருவாங்க." என மயூரி அவள் கையைப் பற்றி நிறுத்தியிருந்தாள். கண்கள் காரையும், அதன் கதவைத் திறந்து இறங்கும் தன்னவனையும் ஆவலாகப் பார்த்து இருந்தன.
"ஜானும்மா, எப்படி டா இருக்க?" என அவளை நோக்கி வந்து கை நீட்டியபடி இருந்தவளை அணைத்துக் கொண்டான். இத்தனை நாள் இதற்காக ஏங்கிய ஜானகியின் வதனம் அவனோடு ஒட்டிக் கொண்டது. ஜானகியை அணைத்தவண்ணம் "சோட்டி இங்க அங்க சந்தோஷத்தில் வெயிட் போட்டு இருக்கடா." எனத் தங்கையின் தலையில் கை வைத்து அவளையும் அணைத்துக் கொண்டான். பேசியவாறே உள்ளே செல்ல வீட்டினர் முகமன் கூறி வரவேற்றனர்.
“ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என ஜானகி இருக்கும் அறைக்குள் நுழைய ஜானகி பின்னோடு வந்து கதவை தாழிட்டாள். "அத்தான்!" என அவனைக் கட்டிக் கொள்ள அவனும் அவளை அணைத்து கழுத்து வளைவில் முகர்ந்து அவளைக் கிறங்கடித்தான் .அவனது கைகள் அவள் எதிர்பார்த்த தழுவலைத் தந்தது. லேசாக மேடிட்ட வயிற்றைத் தடவியவன், "நம்ம சொல்ற தேதி தப்பா ஜானும்மா, நானும் நெட்டில் இதைப் பற்றிப் படித்ததை விடப் பெரிசா இல்லை." என்றான்.
"இன்னைக்கு ஸ்கேன் பண்ணாத் தெரியும், இரண்டு முறை கைனக் வந்து பார்த்துவிட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க." என்றவள் , அவன் முகத்தைத் தொட்டு, "கன்னமெல்லாம் ஒட்டிக் கிடக்கு, சாப்பிடுவிங்களா இல்லையா?" எனக் குறை பட்டாள்.
"அதை விடுடி, உனக்கு வாந்தி குறைஞ்சு இருக்கா. சாப்பிட முடிகிறதா?" என்றான். "இப்ப பரவாயில்லை வீரூஜி. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வாந்தி வருது." என்றவள், "நீங்க ப்ரெஷ் பண்ணுங்க. நான் காபி கொண்டு வரேன்." என்றாள்.
"நீ எதுக்கு அலையிற, நான் வந்து எடுத்துக்குவேன்." என்றான்.
"உங்களுக்கு எடுத்துட்டு வரது ஒண்ணும் அலைச்சல் இல்லை." என்றபடி தானே கிட்சனில் சென்று அவனுக்கான காபியைக் கலந்தாள். தெய்வா தான் செய்து தருவதாகச் சொல்லியும் மறுத்துத் தானே கலந்தாள்.
அறைக்கு எடுத்துச் சென்றாள். " நிறைய இருக்குடி!" என்றவனிடம். "எனக்குப் பாதி." என அவன் கை வளைவில் அமர்ந்தே அதே கப்பில் குடித்து முடித்தாள்.
காலை பதினோரு மணிக்குத் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் செக்கப்பிற்குச் சிவகுரு, ராகினியுடன் இவர்கள் இருவரும் சென்றனர். ஸ்கேன் பார்த்து வந்த டாக்டர் நால்வரையும் அமர்த்தி, "கங்கிராட்ஸ் ஜானகி. உன் குழந்தைகள் ஆரோக்கியமா இருக்காங்க." என்றார். ஜானகி கவனமாக, "என்ன டாக்டர் குழந்தைங்கன்னு ப்ளுரலில் சொல்றீங்க?" என்றாள்.
டாக்டர் சிரித்துக் கொண்டே, "ட்வின்ஸ்!!!" என்றார். சிவகுரு ரகுவீர் கைகளைப் பிடித்து மகிழ்ச்சி தெரிவிக்க, ராகினி மகளைக் கட்டிக் கொண்டார். ரகுவீர் ஜானகி தான் நம்ப மாட்டாமல் ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்தனர். பின்னர்ச் சேரில் இருந்தபடியே அவளைத் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் ரகுவீர்.
"ஆமாம் இங்கே பாருங்கள்." என ஸ்கேன் போட்டோக்களைக் காட்டி விளக்கம் சொன்னார் டாக்டர்.
மும்பை கூட்டிச் செல்வதைப் பற்றிக் கேட்கவும், "கூட்டிட்டுப் போகலாம். ஃப்ளைட் தானே, ஆனால் டெலிவரியும் அங்கேயே வச்சுக்குங்க. திருப்பி அலைய வைக்க வேண்டாம்." என்றார்.டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
இரட்டை குழந்தைகள் ஜானகியின் கருவில் உள்ளது எனத் தெரி்யவும் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. "ஜானி சூப்பர்டி!" என மயூரி அமிர்தா கட்டிக் கொண்டனர். "அடியே பெண்டுகளா,உங்கள் நாத்தனார் ரெட்டை பையனை பெற்றாளென்றால், நீங்களும் இரண்டு பொண்ணுங்களைப் பெத்துக்குங்க." என்றார் சிவகாமி.
"வாழ்த்துக்கள் அத்தான் , இது தான் ஜாக்பாட். ஒரே நேரத்தில் டபுள் புரமோஷன்." என அமுதன் வாழ்த்தினான். ஜானகியை மும்பை அழைத்துச் செல்வது குறித்து ரகுவீர் பேசினான்.
தமிழ் மாதக் கணக்குக்கு இது ஐந்தாம் மாதம் எனக் கணக்கிட்டு, மருந்துக் கொடுக்கும் சடங்கை இங்கே நடத்தி அழைத்துச் செல்லச் சொன்னார் அப்பத்தா.
அதன் படி அன்றிலிருந்து மூன்றாம் நாள், உளுந்தங்களி கிண்டி, பாலில் குங்குமப்பூ போட்டு வைத்திருந்தனர். அது இல்லாமல் துளசி, வேப்பிலை, செந்தட்டி, வெற்றிலை முதலிய ஐந்து மூலிகைகளை அரைத்துச் சாறுபிழிந்து சூடு படுத்தி ஆற விட்டு வைத்திருந்தனர்.
ஜானகியை அமரவைத்து மருந்துக் கொடுக்கும் சடங்கைச் செய்தனர். சுந்தரவள்ளி வந்திருந்தார், எனவே அவரைக் கொண்டு முதலில் மருந்து கொடுக்கச் சொன்னார்கள், ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தார்.
"ம்ம், அத்தை கசக்குது." என முகம் சுளித்தாள் ஜானகி. "ஆத்தா மருந்து அப்படித் தான் இருக்கும்." என்ற சுந்தரவள்ளி, வெல்லத்தைக் கடிக்கக் கொடுத்தார். அடுத்து சிவகாமி, ராகினி கொடுத்தனர்.
தெய்வா, சுந்தரவள்ளி மருமகள் கவிதா, மயூரி, அமிர்தா ஆகியோர் குங்குமப்பூ கலந்த பாலை தந்தனர். பிறகு ஆலம் சுற்றி எழுப்பி விட்டு உளுந்தங்களியை நல்லெண்ணெய், கருப்பட்டி சீவிப் போட்டுச் சாப்பிடக் கொடுத்தனர். இது இடுப்புக்கு வலு சேர்க்கும் எனச் சாப்பிடச் சொன்னார்கள். அத்தை ஆயிரம் அறிவுரைகள் வழங்கி ஊருக்குக் கிளம்பினார்.
மறுநாள் இரவு ப்ளைட்டில் ரகுவீர், ஜானகியை அழைத்துக் கொண்டு மும்பை செல்கிறான். சிவகுரு, ராகினி அவர்களோடு மும்பை செல்கின்றனர். சிவகாமி அப்பத்தா, தெய்வா இருவரும் மாற்றி, மாற்றிக் கருவுற்ற சமயம் ஏற்படும் தொல்லைகள் அதற்கான மருந்துகள் எனப் பெரிய மருத்துவப் பெட்டகத்தை ஏற்படுத்தி, அமிர்தா அதற்கான விளக்கத்தோடு அதனைப் பேக்கிங் செய்தாள்.
இதோ கிளம்பிவிட்டாள் ஜானகி சிறுமலையிலிருந்து, நாமும் தற்காலிகமாகச் சிறுமலையின் வனப்பும், குளுமையையும் விடுத்து, பிரியாவிடைத் தந்துக் கிளம்புவோம். பிரித்தொரு காலத்தில் இந்த மலைப் பகுதியை வாய்ப்புக் கிடைத்தால் தரிசிப்போம்.
"அப்பத்தா, தெய்வாம்மா என் பிரசவ நேரத்தில் நீங்க இரண்டு பேரும் மும்பை வந்திடனும்." எனப் பிரியாவிடைப் பெற்று அண்ணியாய் போன தோழிகளிடமும் அண்ணன்கள், ஷண்முகப்பா தாத்தாவிடமும் ஆசி வாங்கி அவர்கள் பூசிய திருநீறு குங்குமத்தோடு விடை பெற்றாள் ஜானகி.
அடுத்த நாள் அதிகாலையில் ராத்தோட் மாளிகையில், மருமகளுக்காக ஷப்னம் காத்திருந்தார். அவரோடு பூனம், ஸர்குனும் அலாரம் வைத்து எழுந்து வந்து விட்டனர். ரகுவீர் ஜானகி வீட்டு முகப்பில் காலடி வைக்கும் முன் ஆரத்தி எடுத்தனர். "ஜானிமா வெல்கம் டியர்." என மூன்று மாமியாரும் உபசரணையாக வரவேற்றனர். சிவகுரு ராகினியையும் வரவேற்று உபசரித்தனர்.
தாதாஷா, தாதிஷா பேத்தியைக் காணும் ஆவலில் சீக்கிரம் விழிப்புத் தட்டி விட ஹாலுக்கு வந்தனர். "ஜமாயிஷா, ராகினி வாங்க. ஜானிமா ஆவோ மேரி ஸோனு!" என அணைத்துக் கொண்டார் தாதிஷா.
"சபாஷ் ரகுவி, நம்ம பரம்பரையில் முதல் ட்வின்ஸ் உங்களுக்குத் தான். ஜானி வீரமான ராத்தோட்ஸைப் பெற்றுக் கொடு." என்றார் தாதாஷா.
"நாநாஷா, அப்ப இதுவரை வீரமான ராத்தோட்ஸே இல்லை என்கிறீர்களா?" என்றாள் ஜானகி.
"ஏண்டாமா, உன் புருஷன் வீரூஜி வீரம் பத்தலையா? காளை மாடெல்லாம் அடக்கினான்." என்றார் தாதாஷா.
"அதை நானே அடக்கியிருப்பேன். நடுவில் உங்க போத்தா வந்து காயப் பட்டதது தான் மிச்சம்." என ரகுவீரையும் வம்பிலுத்துப் பேசினாள் ஜானகி.
"தாதாஷா, இவள் கிட்ட வாயைக் கொடுக்காதீங்க, உங்களில் இருந்து, இவள் வயிற்றில் இருக்க ராத்தோட் வரை எல்லாரையும் வம்பிலுப்பாள்." என்றான் ரகுவீர். "அது சிவகாமியம்மாள் பள்ளிக்கூடம் மாப்பிள்ளை இரத்தத்தில் வந்தது. அடுத்து உங்கள் மகள் வந்தால், அது ஹிந்தியிலும் வெளுத்து வாங்கும்." என்றார் சிவகுரு.
"ஆமாம் பூஃபாஷா, என் மகள் வந்து தான் உங்கள் மகள் வாயை அடைப்பாள்." என்றான் ரகுவீர். "பீந்தினி காபி கொண்டு வா குடிச்சிட்டு ஓய்வு எடுக்கட்டும்." என்றார் தாதிஷா. அலுத்து வந்தவர்களுக்குக் காபி வழங்கி ஓய்வெடுக்க அனுப்பினர்.
ரகுவீர், ஜானகியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான். ஜானகி, மஞ்சரி இருவரும் இல்லாத நேரத்தில் இரண்டு சூட்களைச் சேர்த்து மற்றொரு அறை, கப்போர்ட் வசதி செய்து வைத்திருந்தான் ரகுவீர்.
தங்கள் அறைக்குள் வந்து சுற்றிப் பார்த்த ஜானகிக்குத் திருப்தியோடு சிரிப்பும் வந்தது. ரகுவீர் என்னவென்று வினவினான்.
"ஒரு பேபின்னு நினைச்சு ஆல்டர் பண்ணியிருப்பீங்க, இப்ப ட்வின்ஸ் வராங்க என்ன பண்ணுவிங்களாம்?" என்றாள் ஜானகி.
அவளைக் கட்டிலில் அமர்த்திச் சாய்வாகத் தலையணையை அண்டக் கொடுத்தான். "எத்தனை பிள்ளை வந்தாலும் ராத்தோட்ஸ் ஸ்வர்ண மாளிகைத் தாங்கும்." என்றான்.
தானும் அவளருகில் அமர்ந்தவன், அவள் வயிற்றில் கை வைத்து, முத்தமிட்டவாறு, "இரட்டை வாலு வரப் போகுதுங்கன்னு இன்னும் நம்ப முடியலையே?" என்றான். ஜானகி அவன் மார்பில் ஒன்றிக் கொண்டு, "இரட்டை பிள்ளைனா நம்மளை என்ன நினைப்பாங்க?" என வெட்கப்பட்டாள்.
"இதில் என்ன இருக்கு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராத்தோட் ரொமான்டிக் கப்பில்னு நினைப்பாங்க." எனக் கேலிப் பேசினான்.
"ஆமாம், ஆமாம் நீங்க ரொம்ப ரொமான்டிக் தான், உங்களைக் கிருஷ்ணனாக வரைஞ்சதுக்கு, நீங்க செட்டே ஆகமாட்டீங்கன்னு அமித்துக் கிண்டல் பண்ணினாள். நான் தான் அதெல்லாம் இல்லை ராத்தோட்ஷா பயங்கரமான ஆளுன்னு சொன்னேன்." என்றாள் ஜானகி.
"அப்படி என்னடி பயங்கரமாப் பண்ணினேன்." என ரகுவீர், அவள் கழுத்து வளைவில் முகத்தை உரசியவாறு கேட்டான்.
"ஞாபகம் இல்லை, இதே இடத்தில் மப்புல கிடந்தீங்களே, மேலே தவறி விழுந்தவளை, இப்படியா பண்ணுவீங்க. சரியான காளையன்." என அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டே சொன்னாள் ஜானகி.
"இப்பையும் காளையன் தாண்டி வயிற்றில் ட்வின்ஸ் இருக்குதுங்களேன்னு கண்ட்ரோலா இருக்கேன்." என அவளைத் தன் மேல் கவனமாகப் போட்டுக் கொண்டு சொன்னான் ரகுவீர்.
அவளும், "அத்தான்!" என மார்பில் முகம் புதைத்து காதலாகி இழைந்துக் கொண்டிருந்தாள். ரகுவீர் நிலை இன்னும் மோசம். அலைப்பேசி அழைப்பு விடுத்தது. அவளை மார்போடு இறுக்கமாக அணைத்து, இதழ் ஒற்றலில் சிறிது முரட்டுத்தனத்தைக் காட்டி அவள் லேசாகத் திணறவும் விடுவித்தான்.
ஒரு பெரும் மூச்சுடன், "நீ தூங்குடி ஜான். பாபுஷா தான் கூப்பிடுறாங்க. பார்த்துட்டு வரேன்." எனக் கட்டிலை விட்டு இறங்கப் போனவனை, "ம்ம்ம் இருங்கப் போகலாம், மாமாஷாகிட்ட போனில் பேசுங்கள். என்னை விட்டுட்டுப் போகாதீங்க அத்தான்." என்ற ஜானகியின் சிணுங்கலில் ரகுவீர் டோட்டல் ஃப்ளாட் ஆனான்.
போனில், "வந்தாச்சு பாபுஷா, நல்லா இருக்கா, ஒண்ணும் பிரச்சனை இல்லை." என வைத்தான்.
"உன்னைத்தான் கேட்டாங்க, ட்ராவல் பண்ணினது ஒண்ணும் பிரச்சினை இல்லையேன்னு கேட்கிறார்கள்." என்றான் ரகுவீர்.
மீண்டும் தன்னவளை அணைத்துக் கொண்ட ரகுவீர், அவளின் ஒவ்வொரு ஆணைகளையும் நிறைவேற்றினான். இவர்கள் ஒருவரில் மற்றொருவர் லயித்து இருந்தாலும், வயிற்றில் குடியிருக்கும் ஜூனியர்கள் கேட்பதாக இல்லை. பசி எடுக்க ஆரம்பித்தது ஜானகிக்கு.
"வீரூஜி பசிக்குது." என்றாள். இன்டர்காமில் ஜூஸ் வரவழைத்தான். அவள் அதைக் குடித்த பின்னர், "பாத்ரூம் தாழ் போடாமல் குளிச்சிட்டு வா. பிறகு கீழே போகலாம்." என அவளை அனுப்பினான்.
காலை உணவுக்கு வந்த போது மாமாஷாக்கள் மருமகளைப் பாசத்தில் மிதக்க விட்டனர். ராகினி, சிவகுருவும் உணவு மேஜையில் கூடியிருந்தனர்.
"ஜானிமா இதைச் சாப்பிடுடா." எனக் கஜேன் ஒன்றைத் தந்தார்.
"பையா, ஜானிமா வழக்கமா சாப்பிடுற நெய் ரோஸ்ட்." என அமரேன் தந்தார். "அம்மு ஜானிமா வயிற்றில் இருக்கிறது இராஜஸ்தானி, அதனால் பாஞ்சி டேஸ்ட்டும் மாறிடுச்சு. சரிதானே ஜீஜூஷா?" எனக் கஜேன் வம்பிலுத்தார்.
"வெளியே வரட்டும் இட்லி, தோசை, மீன் குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு தந்து, எங்கள் ருசிக்கு எங்க பேரனோ பேத்தியோ மாத்திக்குறோம்." என்றார் சிவகுரு.
"இப்பவே உங்கள் ருசிக்குச் சாப்பிடும் உங்கள் மகளையும், எங்கள் பஹூவா, பாஞ்சியாய் மாத்திடுச்சு ஜீஜூஷா." என அமரேன் விடாமல் பேசினார்.
"ஜானும்மா என்னடா, உங்கள் மாமாஷா பக்கம் சேர்ந்துட்ட?" எனக் குறை பட்டார் சிவகுரு.
"அப்பா ஜான், நான் எங்கப்பா மாறி இருக்கேன். இதுங்க அவங்க அப்பா மாதிரி இருக்குங்க, விடுங்க உங்கள் ஜானு மாதிரி வருமா." என அவர் கையால் உணவு ஊட்டிக் கொண்டாள்.
"போதும், எல்லாரும், இவளோடு சேர்ந்து டிராமாபாஸ் ஆகிட்டிங்க." என்றார் ராகினி. மஞ்சரி இறங்கி வந்தவள் ஜானகியைக் கட்டிக் கொண்டாள்.
"ஜானி நான் சொன்னதை நிறைவேற்றிட. ட்வின்ஸ் வருவதற்கு முபாரக்." என்றாள் மஞ்சரி.
ராகினி, " இந்த ஸ்வீட், உனக்கு ஸ்பெஷலா அப்பத்தாக் குடுக்கச் சொன்னாங்க. ஜானகி கர்ப்பமா இருக்கிறதுக்கு, உன் வாய் முகூர்த்தம் தான் பலித்ததாம்." என ஊட்டி விட்டார் ராகினி.
ரகுவீர், "புவாஷா, கடினமா உழைச்சது நானு, பாராட்டு இவள் வாய் வார்த்தைக்கா?" என்றான் . ஜானகிக்குத் தான் அவன் சொன்னதின் கற்பனையில் முகம் சூடானது. "சும்மா இருங்க வீரூஜி!" எனக் கையைக் கிள்ளினாள்.
ராஜேன், "போதா, போதி நிறைய வேணும்னு உன் மாமிஷா ஆசையை ஒரே தடவையில் இரட்டையா நிறைவேற்றிட்டே, இனி ஷப்னத்தைக் கையில் பிடிக்க முடியாது." என்றார்.
"பின்னே நம்ம பஹூ மாதிரி வருமா, மஞ்சி அடுத்து உன் டேர்ன்." என்றார் ஷப்னம். "மாமிஷா, ஜானி முதலில் பெற்றுக்கட்டும், அந்தச் சோட்டூ, மோட்டூ ராத்தோட்ஸ்ஸை கொஞ்சினப் பிறகு தான், நாங்க ரிலீஸ் பண்ணுவோம்." என்றாள் மஞ்சரி.
பூனம், "மஞ்சி இரண்டு பஹூவும் ஒரே நேரம் ப்ரெக்னட்டா இருந்தாலும், உங்கள் சாசுமா எல்லாம் சமாளிப்போம். அதனால் ஒரு ப்ளானும் வேண்டாம், இயற்கையா இருங்க." என்றார்.
"ஜானியை விடச் சின்னப் பிள்ளையா காட்டிக்கலாம்னா விட மாட்டிங்களே?" என்றாள் மஞ்சரி. ஹேமந்த், பங்குரி நிறையப் பழங்களை அள்ளிக் கொண்டு ஜானகியைப் பார்க்க வந்தனர். ராத்தோட்ஸ் முறையாக வரவேற்றனர்.
"வாங்க மாசூஷா, மாஸிஷா வாங்க!" என ஜானகி அழைக்கவும், அவள் தலை மீது வாஞ்சையாகக் கை வைத்த ஹேமந்த், "ரொம்பச் சந்தோஷம்டா ஜானிமா!" எனக் கண் கலங்கினார்.
பங்குரி, ஜானகியை அணைத்துக் கொண்டார். ராகினியிடம் பங்குரி மற்ற விசாரணைகள் செய்தார்.
சிவகுரு, ஹேமந்த் ஜானகியின் இரு பக்கம் அமர்ந்து அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, "அப்பாஜான், நீங்களும், மாஸூவும் ஒரே மாதிரி சிவாஜி கணேசன் மாதிரி உருகுறீங்க." எனக் கிண்டலடித்தாள்.
"ஆமாம்டி ஜானி, அதனால் எனக்குச் சிறுமலையில் இருக்கும் போது பாபுவை பிரிஞ்சு இருக்கிற ஃபீலே வரலை." என்றாள் மஞ்சரி.
கஜேன், ஸர்குன் ஒரு கண்ணாடி பௌல் நிறைய மாதுளம் முத்துக்களைக் கொடுத்து, "ஜானிமா, மாமிஷா உனக்காக உரித்தாள். மதியத்துக்குள்ள சாப்பிட்டு முடிக்கனும்." எனத் தந்தார்.
"மாமாஷா, எவ்வளவு இருக்குப் பாருங்கள், நான் மட்டும் எப்படிச் சாப்பிடுறது?" என்றாள் ஜானகி.
அமரேன், "நீ மட்டும் எங்கடா சாப்பிடப் போற உள்ளே இருக்க ராத்தோட்ஸ்ஸும் சாப்பிடுவாங்களே!" என்றார்.
"நான் சாப்பிட்டு, சாப்பிட்டே பங்கின் மாதிரி ஆகப் போறேன். இன்னும் யாராவது உங்கள் ஜானகி மேல உங்கள் அன்பைக் காட்ட பாக்கி இருக்கீங்களா?" எனக் கூவினாள்.
"பாபிஷா இதோ வந்துட்டேன். தாதிஷா வாங்கிட்டு வரச் சொன்ன நட்ஸ்." எனப் பெரிய பேக்கோடு ரன்வீர் வந்தான்.
ராஜ்வீர் ஒரு சிறு மரப்பெட்டியைக் கொண்டு வந்தான். ரகுவீரை அணைத்துக் கொண்டவன், பூஃபாஷாக்களை வரவேற்றான்.
"ஜானிமா உனக்காகக் கஷ்மீரி கேசர். குங்குமப் பூ. பாலில் கலந்து சாப்பிடனுமாம். மாஷா இந்தாங்க." என ஸர்குனிடம் கொடுத்தான்.
"ரகுவி நைட் ஜானி படுக்கும் முன்பு இதைப் போட்டுக் குடிக்கனும். இந்தக் கப்போர்டில் வைக்கிறேன்.” என இடத்தைக் காட்டினார். சரி எனத் தலை ஆட்டினான்.
ஹேமந்த், "ஜமாயிஷா இரண்டு பேரும் ப்ளானைப் பார்த்தால் சேஞ்சஸ் இருந்தால் செய்துட்டு, கட்டிட வேலை ஆரம்பிக்கலாம். சாலேஷா எல்லாம் பார்த்துட்டாங்க." என்றவர். "சிவா நீயும் பார்த்துச் சொல்லு, அங்க மில் கட்டின அனுபவம் இருக்குமே!" எனக் கேட்டார்.
அந்த ப்ளானை கவனமாகப் பார்த்த மூவரும் அவரவர் யோசனையைச் சொல்ல, சிறு மாற்றங்களுடன், மற்றொரு மில்ஸ் யூனிட் கட்ட ஏற்பாடு ஆனது. அந்தக் கான்ட்ரெக்டை ஹேமந்திடம் கொடுத்தனர்.
சிவகுரு ராகினி நான்கு நாட்கள் தங்கி விட்டு சிறுமலைக் கிளம்பினர். தமிழ் மாதக் கணக்குப்படி ஒன்பதாம் மாதம் ஆரம்பத்தில் வளைகாப்பு வைத்துக் கொள்ளலாம் என நாள் குறித்துச் சென்றனர்.
ரகுவீர் ஜானகியை அழைத்துக் கொண்டு, ஷப்னம் துணைக்கு வரச் சிப்பி ஹாஸ்பிடல் சென்றான். மற்றொரு ஸ்கேன் எடுக்கப்பட்டு அலர்ஜி டெஸ்ட் எல்லாம் எடுக்கப்பட்டது.
"மிஸஸ் ராத்தோட், நல்லா சாப்பிடுங்க, வாக்கிங் போங்க. மருந்து மாத்திரை செக்கப் எல்லாம் சரியா செய்தால் நார்மல் டெலிவரி ஆகும்." என நம்பிக்கை கொடுத்து அனுப்பினார் மருத்துவர்.
திரும்பி காரிடாரில் வரும் போது ஒரு ஆள் வந்து இவர்களுக்கு முன்னால் மண்டியிட்டுக் கை கூப்பியபடி, "கம்மாகனி ராணிஷா. உங்களை இப்படிப் பார்ப்பதில் ரொம்பச் சந்தோஷம்." என்றான். குரல் பரிச்சயமாக இருந்தது. முகம் புதிதாக இருந்தது. ஜானகி குழம்பமாக ரகுவீரை பார்க்கவும், "உங்கள் சாசனத்து அடிமை ருத்ரநாத் பவாரியா." என்றான் ரகுவீர்.
ஜானகிக்குச் சிரிப்பில் கண்கலங்கியது."ருத்ரா நீ தானா, டிப்டாப்பா டிசர்ட் எல்லாம் போட்டு. ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணியாச்சா? ம்ம் வீருஜி இனி நீங்க எல்லாம் அவுட் ஆப் மார்க்கெட். ருத்ராக்கு தான் கேர்ள்ஸ் மத்தியில் டிமாண்ட் வரப் போகுது." என்றாள். ரகுவீர் முறைத்தான். ருத்ராவுக்கு வெட்கம் வந்தது. "ருத்ரா எங்கே இருக்க?" என்றபடி ஒரு நர்ஸ் வந்தாள்.
"ராணிஷா, இது சாம்பவி, என்னை நல்லா பாரத்துக்குச்சு. ராத்தோட்ஷா ஆதரவும், இது அனுசரணையும் தான் நான் மனுசனா இருக்கேன்." என்றான்.
"ரொம்பச் சந்தோஷம் ருத்ரா, சீக்கிரம் தேதி பாரு நானே வந்து முன்னே நின்று ஷாதி செய்து வைக்கிறேன்." என அந்த நர்ஸிடமும் ஓரிரு வார்த்தைப் பேசி ஜானகி கிளம்பினாள்.
"வீரூஜி, ருத்ராக்கு நம்ம செக்யூரிட்டி வேலை போட்டுக் கொடுக்கலாம்ல, திருந்திய மனுஷனுக்கு ஆதரவு தரனும்." என்றாள்.
"நீ வரட்டும்னு இருந்தேன். நம்ம வீட்டில் செக்யூரிட்டியா போடலாம். நீ ஆப்டர் டெலிவரி வெளியே எங்கேயாவது போனால், அவன் டிரைவ் பண்ணட்டும்." என்றான் ரகுவீர்.
"இரண்டு பேரும், ஜாடிக்கேத்த மூடிதான். கடத்துனவனையே செக்யூரிட்டி ஆகிட்டிங்க." என்றார் ஷப்னம்.
ஒரு நாள் இரவு உணவு முடிந்து ஹாலில் அமர்ந்து இருந்தனர். ஹரிணியும், அமர்சிங்கும் பிள்ளைகளோடு ஜானகியைப் பார்க்கவென வந்திருந்தனர். ஜானகி நடுவில் அமர்ந்திருந்தாள். ரகுவீர் பக்கத்தில் அமர்ந்து அவளின் இடுப்புக்கு மேல் உள்ள அல்லையைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி இந்த வலி வந்து அவளைப் பாடாய்ப் படுத்தும், டாக்டரிடம் கேட்கும் போது, "ப்ரக்னென்சியில் இது போல் சிலது வரும்." என்றார்.
அதிலிருந்து லேசாக ரகுவீர் அமுக்கி விடுவான். இப்போதெல்லாம் ரகுவீர் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுகிறான். முதலில் கேலி செய்த மஞ்சரியே ஜானகி படும் அவஸ்தையில் வாயடைத்துப் போனாள்.
ரோஹன், ஹாசினி ஜானகியைச் சுற்றி விளையாடிக் கொண்டு இருக்க, "பக்டோ, பக்டோ." என்ற ரோஹனின் குரலில் ஜானகி வயிற்றில் துள்ளல் தெரிந்தது. ஜானகி அப்பா எனப் பிடித்துக் கொண்டாள். ரகுவீரும் அதிர்வை உணர்ந்தான். ஹரிணியும், அமர்சிங்கும் குழந்தை அசைவைப் பற்றிப் பாடம் எடுத்தனர். அன்றிலிருந்து தினமும் அசைவைக் கவனித்து அனுபவிப்பது இவர்கள் வழக்கமானது. ஜானகி வயிற்றில் குனிந்து குட்மார்னிங் குட்நைட் என மஞ்சரி, ராஜ், ரன்வீர் பேச ஆரம்பித்தனர்.
ரகுவீர் அருகிலிருந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஆட்டம் ஜாஸ்தியாக இருக்கும். ஜானகி சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் காமெடி படங்களாகப் போடுவார்கள். அவளாக இருக்கும் போது , தமிழ்ப் படங்கள், வடிவேல் காமெடிகளை ரசித்துப் பார்ப்பாள், ரகுவீரையும் பழக்கப் படுத்தி இருந்தாள். அவனே அவ்வப்போது, "முடியலை!" என வடிவேல் டயலாக் பேசுவான்.
சில நேரங்களில் மொட்டை மாடியில் அமர்ந்து மாற்றி மாற்றிப் பாட்டுப் பாடுவார்கள். ப்ரகனன்சியை முழுமையாக அனுபவித்தாள் ஜானகி, அவளோடு ரகுவீரும் அனுபவித்தான்.
ஒரு நாள் பத்து மணிக்கு மேல், "வீரூஜி எனக்குப் பட்டர் ஸ்காட்ச் வேணும். ஒரு ட்ரைவ் போகலாம்." என்றாள் ஜானகி.
அவள் ஆசையைத் தட்ட முடியாத ரகுவீர் காரை எடுத்தான். ஜானகி அவனை முத்தமிட்டு ஓவர் கோர்ட் ஷாலோடு கிளம்பினாள்.
மும்பையின் வீதிகளில் ரகுவீரின் ஆடிக்கார் வழுக்கிக் கொண்டு சென்றது. அதிகப் போக்குவரத்து இல்லாத ரோடு, தங்கள் ஷாதி முடிந்த வந்த ரோட்டில் மலரும் நினைவுகளாய் ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி சென்றனர்.
கடலோரம் இருந்த ரோட்டுக்கடை ஐஸ்கிரீம் ஷாப்பில் இரண்டு கோனை வாங்கியவன், கடலைப் பார்த்த வண்ணம் அவளை அமர்த்தி ஷால் போர்த்தி விட்டு, தானும் அருகில் அமர்ந்தான். ஜானகியின் மகிழ்வில் உள்ளிருந்த ராத்தோட்ஸ் குஷியாகினர். "வீரூஜி இதுங்களுக்கும் ஐஸ்கிரீம் ரொம்பப் பிடிச்சிருக்கு போல, ஆட்டத்தைப் பாருங்கள்." என்றாள்.
"ஆக மொத்தம், இந்த ஷாப்புக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிடுவோம்." என்றான் ரகுவீர்.அவளுடைய கோனை முடித்துவிட்டு, ரகுவீர் கையிலிருந்ததை வளைத்துச் சுவைத்தாள். "ஏண்டி நீ தான் சாப்பிட்டையே?" என்றான்.
"ஆமாம் வீரூஜி, இது உங்கள் புள்ளைங்களுக்கு." என்றாள். இனி அவன் எங்கே பேச? நேரமாகிறது எனக் கிளப்பினான்.
கார் மெதுவாக வந்து கொண்டிருக்கும் போத
நேற்று தான் இரண்டு திருமணம் முடிந்து சிவமாளிகைக்கு இரண்டு மருமகள்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் மஞ்சள் கயிற்றின் மணம் மணக்கும் போதே, மூத்த சுமங்கலி சிவகாமி அப்பத்தாவுக்கு மற்றொரு முறை மங்கள நாண் பூட்ட புது மாப்பிள்ளை ஆனார் சிவபரங்கிரி.
தனது வாழ்வின் விடலை பருவத்தில் கட்டுக்கடங்காத காளையாகத் திரிந்தவரைக் கட்டுக்குள் கொண்டு வர பதினான்கு வயது சிறுமியான சிவகாமியை, அவருக்கு மனைவியாக்கினர். சிறுமலையின் சீறிப் பாயும் காளை அவர், அவருக்கு இளம் வயதில் ஒன்றும் அறியாத பதின்பருவ மங்கையாக வாழ்க்கைப் பட்டவர், தனது கணவனுக்கு ஈடு கொடுத்து, வாழ்க்கை பயின்று இதோ இன்று பழுத்தப் பழமாக மஞ்சள் பூசிய சிவந்த முகம், ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்க, கெட்டித் தாலிச் சரடும், வைரக் கம்மல், வைர மூக்குத்தி, கழுத்தை ஒட்டிய அட்டிகையும், நெற்றியில் விபூதிப் பட்டை அதன் நடுவே வட்டப் பொட்டு, உயர் ரக நெகமம் காட்டன் சேலை என மிடுக்காக இருப்பார்.
சிவபரங்கிரி நல்ல ஈடு தாடான மேனி, இயற்கை பழங்களால் உரம் ஏறிய உடற்கட்டு. பட்டு வேட்டி முண்டா பனியனோடு வீட்டின் பின் தோட்டத்தில் போட பட்டிருந்த மரச் சேரில் தன் மனையாளோடு அமர்ந்து இருந்தார். பக்கத்தில் அண்டாக்களில் வாசனைத் திரவியம் கலந்த பூக்கள் தூவிய தண்ணீர் நிறைத்து இருந்தனர்.
இரண்டு சல்லடைகளை இவர்கள் தலைக்கு மேலே மூத்த பேரன் சங்கரப் பாண்டியும், அவன் மனைவியும் பிடித்துக் கொள்ள, சுந்தரவள்ளி சொன்ன வரிசையில் தண்ணீர் ஊற்றினர். முதலில் சிவகுரு, ராகினி சேர்ந்து அவர்கள் தாய் தந்தைக்கு வெள்ளிச் சொம்பில் நீர் நிரப்பிச் சல்லடை வழியாகத் தலை வழியே வடியும் படி தண்ணீர் ஊற்றி ஆசி பெற்றனர்.
அடுத்துச் சண்முகம், தெய்வா தம்பதியுடன் சிவகணேஷ். அடுத்து அமுதன் மயூரி, பாலன் அமிர்தா எனத் தண்ணீர் ஊற்றி ஆசிர்வாதம் பெற்றனர். முருகானந்தம் சுந்தரவள்ளி ஊற்றி முடியவும், ஜானகி ரகுவீரை அழைத்தனர்.
ஜானகி அப்பத்தாவிற்கு ஆசையாக முகத்தில் மஞ்சள் பூசி விட்டாள். தாத்தாவிற்குச் சந்தனம் பூசினாள்.
பிறகு ரகுவீரோடு சேர்ந்து தண்ணீர் ஊற்றினாள். "என் ஆத்தா, யாருக்காவது இதெல்லாம் தோனிச்சா, என் பேத்திகளுக்குத் தான் தோனும்." ஏன சிவகாமி அவள் முகம் வழித்து நெட்டி முறித்தார். சந்தோஷமா இருடா கண்ணு என வாழ்த்தினார்.
"மகன் வீட்டுப் பேத்தின்னு சொன்ன உடனே ஒரு ஸ்பெஷல் தான்.” எனச் சுந்தரவள்ளி குறைபட்டார். "அவளுக்கு இருக்க யோசனை உனக்கு இருக்கா, சும்மா பேச வந்திட்டா." என மகளை அடக்கினார் சிவகாமி.
ரகுவீர், ஜானகி சல்லடையை வாங்கிக் கொண்டு, சங்கரப் பாண்டி தம்பதியை அனுப்பினர். அவன் மகன் மகளோடு ஊற்ற, அடுத்து சந்தனப்பாண்டி. இவர்கள் வரிசை முடியவும் ராத்தோட்கள், தாதாஷா, தாதிஷா ஊற்றினர்.ராஜேன், ஷப்னம் ஊற்றி ஆசி வாங்கினர். கஜேன், ஸர்குனுடன் ரன்வீர் சேர்ந்து ஊற்றி ஆசி பெற்றான். அமரேன், பூனம், ஹேமந்த், பம்மி வரை ஊற்றினர்.
மஞ்சரி, "அப்பத்தா தொங்கத் தொங்கத் தாலி கட்டி நூறு வருஷம் வாழனும்." எனத் தமிழில் அப்பத்தாவின் சொலவடைச் சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் . பிறகு ராஜ்வீருடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி ஆசி வாங்கினாள்.
"அடி என் அழகே, அசராமல் இரட்டைப் பிள்ளையாப் பெற்றுப் போடு, உன் மாமியார்கள் வளர்க்கட்டும்." என்றார் சிவகாமி.
"அப்பத்தா எனக்கு மூத்தவ, உங்கள் பேத்தி இரட்டைப் பிள்ளை பொத்து கொடுக்கட்டும். போட்டிக்கு நானும் பெத்துக்குவேன்." என மஞ்சரி வாய் சொல்லி ஓயவில்லை, ஜானகி பக்கத்தில் நின்ற அமிர்தா கையில் ஜல்லடையைக் கொடுத்து விட்டு செடியை நோக்கி ஓடினாள். ரகுவீர் பாலனிடம் கொடுத்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.
சிவகுரு நண்பர்கள் மகன் மகள் மருமகள் என அனைவரும் ஒருவர் பின் மற்றொருவராக நீராட்டினர். அவர்களைத் துணி மாற்ற அழைத்துச் சென்றனர்.
ஜானகி டைனிங் பக்கம் இருந்த பக்கவாட்டு தாழ்வாரத்தின் படியில் அமர்ந்து, வெளியே மண்ணில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். ரகுவீர் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான். ஹரிணி கையில் தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு நின்றாள்.
தெய்வா வேகமாக வந்தவர், "என்னடாம்மா?" எனவும் அவரை உட்காரவைத்து மடியில் தலை சாய்த்தாள். தெய்வா ரகுவீரிடம் அமிர்தாவை அழைக்கச் சொன்னார். அதற்குள் அமிர்தாவே வந்து விட்டாள், "எலுமிச்சை பழச்சாறு உப்பு ஒரு சிட்டிகை போட்டு சீனி தூக்கலாப் போட்டுக் கொண்டுவா." எனப் பணித்தார்.
"தம்பி ஶ்ரீநிதியை வரச் சொல்லுங்கள்." என்றார். செய்வது அறியாது நின்ற ரகுவீர், ஜானகியை விட்டு அகல முடியாமல், அமித்துக்குப் போன் போட்டு அவளை அனுப்பச் சொன்னான்.
ஶ்ரீநிதி வருவதற்குள் ஜானகிக்கு முகம் கழுவி விட்டு தன் முந்தியில் அவள் முகத்தைத் துடைத்தார் தெய்வா. அமிர்தா எலுமிச்சை சாற்றை ஜானகிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பல்லில் படாமல் மெல்ல ஊற்றினாள். அதற்கும் குமட்டல் வந்தது.
"அமிர்தா, தேன் ஒரு ஸ்பூன் ஊற்றி, எலுமிச்சை சாறு அதில் விட்டுக் கொண்டு வா அழகு கிட்ட கேளு இருக்கும் இடம் சொல்லுவா." என அனுப்பினார்.
ரகுவீர், அமிர்தா தந்தது போல் ஒவ்வொரு மடக்காகப் புகட்டினான். ஶ்ரீநிதி வந்து விட்டாள். "ஜானும்மா எந்திரி." என்றார் தெய்வா.
"அம்மா வாந்தி வர்ற மாதிரி இருக்கு நான் இங்கேயே இருந்துக்குறேன்." என்றாள். ரகுவீர் ,"உள்ளே ரூமில் உட்காரலாம் வாடா, வாந்தி வந்தாலும் வாஷ் ரூம் போகலாம்." என்றான்.
ஶ்ரீநிதி நாடிப் பிடித்துப் பார்த்துச் சிரித்தாள். "ஜானி ரூமுக்கு வா." எனத் தன் பேகில் இருந்த மெடிக்கல் கிட்டை கொண்டு வரச் சென்றாள்.
ரகுவீர் ஜானகியைத் தூக்கியவன், எங்கே போவது என யோசிக்கும் முன், "எங்க ரூமுக்குப் போங்கத் தம்பி." என்றார் தெய்வா.
"அத்தான், நானே நடந்து வரேன்." என்றவளின் வார்த்தைக்கு அவனிடம் பதில் இல்லை.
தெய்வா ரூமில் ஜானகியை உட்காரவைத்து ஃபேனைப் போட்டுவிட்டான். அவள் மயங்கி இருந்தாள், பக்கத்தில் பதட்டமாக நின்றான். தெய்வா தன் மடியில் ஜானகியைத் தாங்கினாள். ஶ்ரீநிதி கிட் பேகுடன் வந்து, மற்ற இருவரையும் வெளியே அனுப்பிக் கதவை அடைத்து ப்ரக்னன்ஸி டெஸ்ட் எடுத்தாள். ரகுவீர் பதட்டமாக வாசல் கதவு அருகில் நின்றான். தெய்வா ஹார்லிக்ஸ் எடுக்கச் சென்றார்.
ஶ்ரீநிதி வெளியே வந்தவள், "கன்கிராட்ஸ் ப்ரோ, நீங்க அப்பாவாகப் போறீங்க." எனவும், "தாங்க்ஸ் சிஸ்டர், கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்கள். என் பொண்டாட்டியைக் கொஞ்சிக்கிறேன், அதுக்கப்புறம் எல்லார் கிட்டயும் சொல்லலாம்." எனக் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றான்.
ஹரிணி ஶ்ரீநிதியின் பின்னோடு வந்தவள் பார்க்கும் முன் ரகுவீர் கதவை அடைக்க, ஶ்ரீநிதி, ஹரிணியிடம் குஷ்கப்ரியையும் சொல்லி, ரகுவீர் சொன்னதையும் சொன்னாள்.
"சரி வா, சோட்டே இப்போதைக்குக் கதவைத் திறக்க மாட்டான். ஷாதி மண்டபத்தில் பார்த்துக்கலாம். வேன் கிளம்புது." என அழைத்துச் சென்றாள்.
ஜானகி மகிழ்ச்சி, வெட்கம், உடல் அசௌகரியம் என எல்லாமாக அமர்ந்திருந்தாள். ரகுவீர் அவள் அருகில் சென்று தூக்கிச் சுற்றி இறக்கிவிட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டான். "ஜானும்மா, நிஜம்மாவே ஜானு மாஷாவா ஆகுறடி. நான் பாபுஷா. தாங்க்ஸ்டி மேரிஜான்." என அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவனோடு கட்டியணைத்து ஒன்றிக் கொண்டாள் ஜானகி. இருவரும் மோன நிலையில் லயித்து இருந்தனர்.
பிறகு ரகுவீரைக் கட்டிலில் அமர்த்தித் தான் பக்கத்தில் நின்று, தன் மார்போடு அவனைச் சாத்திக் கொண்டு, அவன் கையைத் தான் கரு சுமக்கும் அடி வயிற்றில் வைத்துக் கொண்டாள். "அத்தான், கடத்தலுக்குப் பின்னாடி மனோ வியாதிக்காரியா இருந்தேன். என்னைத் தனியா விடாமல், அப்படியே ஏத்துக்கிட்டிங்களே. அன்னைக்கு நிலையில் நான் தாம்பத்தியத்துக்குக் கூடத் தயாரா இல்லை. எந்த நம்பிக்கையில் என்னைக் கல்யாணம் பண்ணீங்க. அதுக்கு அப்புறம் எத்தனை பாடு. இன்னைக்கு நான் அம்மாவாகப் போறது, உங்கள் காத்திருப்பு, பொறுமைக்குக் கிடைச்ச பரிசு." எனக் கண்ணீர் விட்டாள்.
அவளையும் பக்கத்தில் அமர்த்திய ரகுவீர், அவள் கண்களின் நீரை தன் இதழ்களால் துடைத்து, "மேரிஜான் என்பது வெறும் வார்த்தை இல்லைடி , நிஜமாகவே நீதான் என் உயிர். இப்போ வயிற்றுக்குள் இன்னொரு ஜான் வேற. சந்தோஷமா இருடி. கண்ணீரெல்லாம் போதும்." என அவள் வயிற்றில் முத்தமிட்டவன், "ஓ மை டார்லிங், பாபுஷா பேசுறேன். நீங்க பாபு சொன்னதைக் கேட்டு வந்ததுக்குத் தாங்க்ஸ்." என்றான்.
அவனின் குனிந்திருந்த தலையைத் தடவியவள், "வீரூஜி, ஐ லவ்யூ!" என அவன் சிகையில் முத்தமிட்டாள். அவன் நிமிர்ந்து பக்கத்தில் அமர்ந்து, "அங்க இல்லடி இங்க கொடு" எனக் கன்னத்தைக் காட்டவும். கற்பனைத் தோழனாக இருந்த தன் வீரூஜி, காதலனாகி, கசிந்துருகி அவளுக்காகத் தவித்து, காயம் பட்டு, அவளை மோகமாகவும் ஆக்கிரமித்து கணவனாகத் தாம்பத்தியத்தில் சுகிக்க வைத்து, இன்று தாய்மையில் மிளிர வைத்துள்ளான். அதை நினைத்து உருகியவள், அவன் முகம் முழுவதும், இதழ்களால் அளந்து, "அத்தான்!!!" என உணர்வு மிகுதியில் அழைத்தாள்
"ஜானும்மா, தாத்தா, அப்பத்தா ஷாதி இருக்குதே போகலாமா. நம்மை எதிர்பார்ப்பாங்க." என்றான் ரகுவீர்.
"உங்கள் ஜூனியருக்கு மட்டும் குடுத்தீங்க, எனக்கு…" என ஜானகி முகத்தைத் தூக்கவும், "மேரிஜான் உனக்குத் தாண்டி முதலில் கொடுத்தேன். அதனால் கரும்புத் திண்ணக் கூலியா என்ன?" என்றவன் அவள் கன்னங்களில் இதழ் ஒற்றினான், அவள் இன்னும் சமாதானம் ஆகாமல் இருக்கவும் நெற்றிக் கண் எனப் பயணித்து இதழில் முடித்தான். பிறகு திருப்தியுற்றவளாக ஜானகி சமாதானம் அடைந்தாள்.
"ஜானகி, வீரூ, ரகுவி, ஜானிமா!!!" என இரு அம்மாக்களின் குரலும் கேட்டது
."மாதாஜி இரண்டும் வந்திடுச்சு, இனி என் பொண்டாட்டி எனக்கு இல்லை." எனப் புலம்பியபடி போனான். ஜானகி சிரித்துக் கொண்டாள்.
கதவைத் திறக்கவும், இருவரும் ரகுவீரைக் கட்டியணைத்துக் கொஞ்சி விட்டு, ஜானகியை நோக்கிச் சென்றனர்.
ராகினி முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஷப்னம் "ஜானிமா, என்னைத் தாதிஷா ஆக்கிட்ட." எனக் கட்டிக் கொண்டார். "கடைசியா எப்ப ஆன, என்கிட்ட சொல்லவே இல்லையே?" எனக் குறைப் பட்டார்.
"மாஷா, எனக்கு இந்த ஷாதி அலைச்சலில் ஞாபகமே இல்லை." என்றாள்.
தெய்வா ஹார்லிக்சோடு வந்தார். "அக்கா மண்டபத்துக்குக் கிளம்பனும்." என்றார். ராகினி மகளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தவர், "ஜானும்மா, உன்னை இப்படிப் பார்க்கனும்னு தாண்டா அவ்வளவு ஆசை. யாராவது என் வளர்ப்பைத் தப்பா பேசிடுவாங்களோன்னு பயமா இருக்கும், அதனால் தான் உன்னைக் கண்டிச்சுக்கிட்டே இருப்பேன். வீரூவை கல்யாணம் பண்ணப் பிறகு, எனது டென்ஷனும் அதிகமானது, இப்ப ரொம்பச் சந்தோஷம்." என்றார் .ஷப்னம், "ராகினி நீ என் பஹூவை நினைச்சுத் தேவையில்லாமல் பயபடுற. ஜானிமா பத்னியா கிடைக்க ரகுவி கொடுத்து வச்சிருக்கனும். இவனுக்கு ஷாதி இவ்வளவு நாள் தள்ளிப் போனதே, இந்தத் தேவதை வருவதற்குத் தான் என்னடா நான் சொல்வது சரிதானே!" என ரகுவீரைப் பார்த்துக் கேட்டார் ஷப்னம்.
"நூறு சதவீதம் கரெக்ட். உங்கள் பஹூ தான் எனக்குச் சரியான ஜோடி." என மாஷாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டான்.
"பாபி உங்கள் பஹூவை இனி நான் ஒரு வார்த்தை சொல்லலை போதுமா, வீரூ நாங்க முன்னாடிப் போறோம், நீ ஜானுவை தனியாகக் காரில் கூட்டிட்டு வா." எனச் சென்றார். பின்னோடு ஷப்னம், தெய்வாவும் சென்றனர்.
சிவகுரு தம்பி அறைக்குள் வராமல் தயங்கி நின்றார். தெய்வா, "அத்தான் உள்ளே போங்க, ஜானகியும், மாப்பிள்ளையும் தான் இருக்காங்க." என அனுப்பி வைத்தார்.
சிவகுரு உள்ளே வந்தவர், அங்கே நின்ற ரகுவீரை கட்டியணைத்து வாழ்த்துக்கள் சொன்னார். மகளிடம் சென்றவர், அவள் தலையைத் தடவவும், "அப்பாஜான்!" என அமர்ந்தபடி அவரைக் கட்டிக் கொண்டாள். "தங்கப் பிள்ளை, நீயே எனக்குக் குழந்தை தான், உனக்கு ஒரு குழந்தையாடா?" என அவர் உணர்ச்சிவயத்தின் உச்சத்திலிருந்தார் கண்களில் தாரையாகக் கண்ணீர். மருமகனைத் தலையசைத்துக் கூப்பிட்டவர், அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டார். வார்த்தை தேவையில்லாத உணர்ச்சிப் பூர்வமான காட்சியானது.
பின் சுதாரித்து, தன் கார் சாவியை ரகுவீரிடம் கொடுத்து விட்டு, "நீங்க, நான் போன் போடும் போது மெதுவா வாங்க." எனக் கிளம்பினார். ரகுவீர்
ஜானகிக்கு ஹார்லிக்ஸ் கொடுத்து, அவள் உடையைச் சீராக்கி ஹாலுக்கு அழைத்து வந்தான். மற்ற அனைவரும் மண்டபத்துக்குக் கிளம்பி இருக்க, ராஜேன், ஷப்னம் காத்திருந்தனர். சிவகுரு தான் இவர்களை நிறுத்திவிட்டு சென்றார்.
ரகுவீரைக் கண்ட ராஜேன், கட்டிக் கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். மருமகளைப் பார்த்து, "ஜானிமா என்னைத் தாதாஷாவாக்கிட்ட, என்ன வேணுமோ கேளு மாமாஷா தரேன். " என்றார்.
"மாமாஷா வேறென்ன குடும்பம் பெரிசாகுது, ட்ரெஸ் வைக்கக் கப்போர்ட் வேண்டும்." என்றாள் ஜானகி. அவர் ஹாஹா வெனச் சிரித்தார். "நல்ல பொண்ணுமா நீ, ராத்தோட் மேன்சனையே கேட்பியா அதை விட்டுட்டுக் கப்போர்ட் கேட்கிற." என்றார்.
ஷப்னம், "உங்கள் பாப்-பேட்டேக்கு என் பஹூதான் சரி." என்றார். ரகுவீர் காரை செலுத்தினான். ராஜேன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். ஷப்னம் தோளில் தலை சாய்த்துக் கொண்டு வந்தாள் ஜானகி.
"மாஷா, வாந்தி வர மாதிரி இருக்கு." என்றாள் ஜானகி.
"ஒண்ணும் இல்லைடா, இதை நாக்கில் வை சரியாப் போகும்." என ஒரு குட்டி கண்ணாடி சீசாவில் தேன், எலுமிச்சை சாறு கலந்த கலவை இருந்ததை, தொட்டு நாக்கில் வைக்கச் சொன்னார். தெய்வா, கிளம்பும் போது ஷப்னத்திடம், இந்தக் கலவை, உப்பில் பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை, மாங்காய் எனச் சிறிய டப்பாக்களில் போட்டு தெய்வா கொடுத்துச் சென்றார்.
அதைத் தான் ஷப்னம், ஜானகிக்குத் தந்தார். கண்ணாடி வழியே பார்த்த ரகுவீர், "மாஷா, காரை ஓரமாக நிறுத்தவா?" எனக் கேட்டான்.
"நீ காரை ஓட்டு, நான் வேணும்னா நிறுத்த சொல்றேன். ஐந்து நிமிடம் இடம் வந்திடும்." என்றார் ஷப்னம்.
சிவப்பரங்கிரி ஐயா, சிவகாமி அம்மாவின் திருமணம், நேற்று இளையவர்களுக்கு நடத்த அதே பந்தலில் நடந்தது. கணபதி பூஜை, ஆயுஷ் ஹோமம் மட்டும் செய்து முடித்து விட்டு பேத்தி வருகைக்காகக் காத்திருந்தனர்.
பெரிய மேடையில், நடுவில் போட பட்டிருந்த மேடையில் தன் வாரிசுகள் சூழ என்பது வயது தந்த வாழ்க்கை அனுபவத்தின் ஆளுமையில் கனிவும், மிடுக்கும் ஒன்றிணைந்து மரபெஞ்சில் அமர்ந்திருந்தனர்.
ரகுவீர், ஜானகி, ஷப்னம், ராஜேனுடன் மணப்பந்தல் நோக்கி வந்தனர். விசயம் பரவி இருக்க, ஜானகியை உற்றார் ஆவலாகப் பார்த்தனர். ஜானகி அப்பத்தா பக்கத்தில் வரவும், அவளை உச்சி முகர்ந்த அப்பத்தா, "இதை விடச் சிறந்த பரிசு இல்லையடி இராசாத்தி." எனக் கொஞ்சினர். அமிர்தா பின்னால் இருந்து ஜானகியைக் கட்டிக் கொண்டாள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.
ஐயர், தமிழில் தாலிக் கட்டும் மந்திரங்கள் சொல்ல, தாதிஷாவை நாத்தனார் முறைக்கு முடிச்சிட பின்னால் நிறுத்தி இருந்தனர். தாதாஷா தாத்தா பக்கத்திலிருந்தார். மஞ்சள் கயிற்றில் மீனாட்சி சொக்கர், தங்கத் தாலியும், இரண்டு குண்டு மட்டும் கோர்த்திருக்க, அதனை அட்சதை மலர்கள் தூரல் மழையாகப் பொழிய, ஆரஞ்சு வண்ண பழுத்த முகத்தில் இன்றும் வெட்கம் மிளிர பதின்வருட சிறுமியாய் கைப்பிடித்த சிவகாமியை, கிழம் பழமாக அறுபது கல்யாணம் முடித்து, என்பதாம் கல்யாணம் மூன்றாவது முறையாகத் தாலி கட்டினார் சிவபரங்கிரி.
ரகுவீர், ஜானகிக்கு முதல் ஆசி வழங்கினர். "எங்களை மாதிரி என்பதாங் கல்யாணம் கண்டு பெரிய குடும்பியா நூறு வருஷம் வாழனும்." எனத் தாத்தா சிவபரங்கிரி ஆசி வழங்கினார்.
தாதாஷா, தாதிஷா தாத்தா அப்பத்தாவிற்குத் தங்கத்தில் சங்கிலிப் போட்டு ஷாலைவைப் போர்த்தி மரியாதை செய்தனர். அடுத்து மகன், மகள், மருமகள் பேரன் பேத்தி என வரிசையாக ஆசி வாங்கினர். விபூதி, குங்குமம் பூசினர். சிவகாமி அப்பத்தா ஆசி வாங்கிய சுமங்கலிகளுக்கு, மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு, ஒரே மாதிரியான வெள்ளி குங்குமச் சிமிழைப் பரிசாகத் தந்தார்.
தாதாஷா, தாதிஷாவிடம் ஜானகியோடு வந்த ரகுவீர் தான் மட்டும் குனிந்து இருவருமாக ஆசி வாங்கி, குஷ்கபரியைச் சொன்னான். தாதிஷாவின் மகிழ்ச்சி எல்லைத் தாண்டியது, ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, "குஷ் ரஹோ மேரி லாட்லி!" எனத் தலையில் கை வைத்து அணைத்துக் கொண்டார். தாதாஷா ரகுவீரிடம் அன்பை வெளிப்படுத்தி, "ஜானிமா, அடுத்தத் தலைமுறை ராத்தோட் ரெடியா, சந்தோஷம்டா மேரி ஸோனு" என அணைத்தவர்,"இந்தப் புடியாவை, பர் தாதிஷாவாக்கி படிபுடியா(பெரிய கிழவி) ஆக்கிட்ட ரொம்பச் சந்தோஷம்." என்றார். வீரேந்தர் சிங் ராத்தோட்.
"நான் பர் தாதின்னா, நீங்களும் பர்தாதா தான். இந்தப் புட்டேக்கு மட்டும் வயசு திரும்புமாக்கும்." என வம்பிலுத்து இருவரும் தங்கள் அடுத்தத் தலைமுறை வாரிசின் வருகைக்குக் கட்டியங் கூறும் இச்செய்தியைக் கொண்டாடினர்.
ஜானகியின் மற்ற இரு மாமான்களும், மாமிகளும் விசயம் கேட்டு மகிழ்ந்தனர். ஆசிர்வாத நிகழ்வு முடிந்து அமர்ந்திருந்த இளையவர்கள் ரகுவீர் ஜானகிக்கு வாழ்த்துக்கள், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அமுதன் ஜானகி அருகில் வந்து, அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டான், "ஜானும்மா, செல்லக்குட்டி, உனக்கு ஒரு பேபியாடி, ஜானுவை அம்மாவா நினைக்கும் போதே சந்தோஷமா இருக்கே. நான் மாமா ஆகப்போறேன். அத்தான் கங்கிராட்ஸ். ரொம்பச் சந்தோஷம்." எனக் கண்களில் நீர் தளும்பத் தனது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினான்.
"ஜானும்மா தாயை விடத் தாய் மாமனுக்குத் தான் உரிமை ஜாஸ்தி. நான் தான் உன் பிள்ளையை முதலில் தூக்குவேன்." எனப் பாலன் சொன்னான்.
"அதெல்லாம் இல்லை, அத்தை தான் முதலில், ஜானி மகனை நான் தான் தூக்குவேன்." என அமிர்தா அவளைக் கன்னத்தில் கிள்ளி கொஞ்சினாள்.
"பையா, ஜானி கங்கிராட்ஸ். படே பையா குழந்தை வந்து என்னைப் புவாஷான்னு சொல்லும்." எனக் கண்களில் ஆர்வத்துடன் இருவரையும் கட்டிக் கொண்டாள் மயூரி.
"ஹனி, பொண்ணு பிறந்தால், பால்ய விவாஹ், இல்லை சிசு விவாஹ் செய்து நம்ம வீட்டுக்கு கடத்திடுவோம்." என்றான் அமர்சிங்.
"லட்கா பிறந்தால் என்ன செய்யறது?" என்றால் ஹரிணி.
"சின்னவனா இருந்தாலும் பரவாயில்லை என ஹாஷினிக்கு பண்ணிடுவோம். எனக்குச் சாலேசா சம்பந்தீ ஆகனும்." என்றான் அமர்சிங்.
"பாய்ஷா, எங்கள் லட்காவை விடப் பெரிய பொண்ணு எல்லாம் கட்ட மாட்டோம், வேணும்னா, ஸ்வரூ, அம்ரூவோட போட்டிக்கு ஹரிணி தீதியையும் இறக்கிவிடுங்க." என மயூரி சொன்னாள். முதலில் புரியாது என்ன போட்டி என யோசித்த பின்னே, ஆண்கள் தங்களவர்களைப் பார்த்தப் பார்வையில் பெண்கள் முகம் சிவந்தனர். அதற்கும் மஞ்சரி கமெண்ட் தந்தாள். "என்ன ப்ரோஸ் ரெடியா?" என்றாள்.
"மஞ்சி, ஜானி பொண்ணு பெற்று குடுக்கலைனா நீ பெற்று கொடு." என்றார் ஹரிணி.
"இவ்வளவு தானே ஹரிணி தீதி, பார்த்துக்கிட்டே இருங்க, நீங்க போதும் போதும்னு சொல்ற அளவு ராத்தோட் பஹூஸ் பெற்றுத் தள்ளுவோம், என்னடி ஜானி, இதற்கெல்லாம் நாம் பயந்தவங்களா என்ன." என்றாள் மஞ்சரி. ஜானகிக்குத் தான் வெட்கம் வந்தது.
ரகுவீர் சிரித்துக் கொண்டே, ராஜ்வீரிடம், "உன் லுகாயியை அடக்குடா, இஷ்டத்துக்குச் சவால் விடுறா, உன் பாடு கஷ்டம்." என்றான்.
"பையா, அவளை அடக்கவெல்லாம் முடியாது. உங்களையும் சேர்த்துத் தான் இதில் இழுக்குறா. என்னால் முடியலைனாலும், நீங்க சமாளிப்பீங்க." என்றான் ராஜ்வீர்.
"பிஸ்னஸ் ஓகே ராஜ்வி, இதிலையுமா?" என்றான் ரகுவீர். இதையெல்லாம் ரகசியமாகப் பேசியபடி, "ஜானி என்னால் சமாளிக்க முடியாத பிரச்சினையைப் பையா ஈஸியா முடிப்பார் தானே?" எனச் சத்தமாக ராஜ்வீர் ஜானகியிடம் கேட்டான்.
அவள் ஆம் எனத் தலையாட்ட ராஜ்வீர் சத்தமாகச் சிரித்து, "மஞ்சி சொன்னதை எங்கள் பையா, பாபி சேலஞ்ச் ஒத்துக்கிறாங்க. சம்பந்தி எல்லாம் ராத்தோட்ஸ் கூடத் தைரியமா டீல் போடலாம்." எனச் சகோதரிகளைப் பார்த்துச் சொன்னான் ராஜ்வீர்.
"ஜானும்மா, ராஜ்வி, வரிசையா பிள்ளைகள் பெற்றுக்கிறதை பத்தி சொல்றான்டி, உனக்கு ஓகேவா. எனக்கும் ஒண்ணும் பிரச்சினை இல்லையா?" என்றான் ரகுவீர்.
வெட்கத்தில் சிவந்த ஜானகி, "போங்க வீரூஜி!" என அவ்விடம் விட்டு சிவகுரு இருந்த இடம் நோக்கிச் சென்றாள்.
பல்லாஜி, பாண்டே, ரெட்டி, ஹேமந்த் ஜோடிகள் அவருடன் அமர்ந்து இருந்தனர்."ஜானிமா, வாடாம்மா, வாடாக் கண்ணு இப்ப தான் எங்கள் எல்லாருக்கும் சந்தோஷம்." என்றார் பல்லாஜி. "ஏன் மாமாஜி?" என்றாள் ஜானகி.
"பின்ன என்னம்மா, உங்க அப்பன், இன்னும் ராகினியை சைட் அடிச்சுக்கிட்டு ஜவான் லட்கா மாதிரி சுத்தித் திரியிறான். இனி தப்பிக்க முடியாது சிவா தாத்தா ஆகிட்டானே." என்றார் ரெட்டி. ஜானகிக்கு வசதியாகச் சேரை இழுத்துப் போட்டு தன்னருகே அமர்த்திக் கொண்டார் சிவகுரு.
"நீங்கள் எல்லாரும் தான் இன்னைக்கு இருக்கும் சந்தோஷத்தின் அடித்தளம் அமைச்சுக் கொடுத்தது. நன்றி மாமாஜி'ஸ்." என்றாள் ஜானகி.
“ஜானிமா, நீ நன்றி சொல்ற அளவு பெரியமனுசி கிடையாது. நீ இன்னும் மாமாஜிகளின் செல்ல மருமகள் தான்." என வாஞ்சையாகப் பேசினார் ரெட்டி.
"புத்தரு, எதையும் சமாளிச்சு முன்னேறுவது தான் உன் பலம். என்னைக்கும் இது தொடர்ந்து இருக்கனும்." என்றார் ப்ரீத்தோ.
"சரி மாமிஜி, ஜெய் பாயி, ஆரவ் பாயி வீட்டிலும் விசேசம் எனவும் சந்தோஷம்." என்றாள் ஜானகி.
"ஆமாம்டா, அதனால் தான் அமித் மட்டும் வந்தான். கவனமா உங்கள் அம்மாக்கள் தருவதை வாங்கிச் சாப்பிட்டு உடம்பில் பலத்தைச் சேர்த்துக்கோ." என்றார் பர்க்கா. பம்மி, "அதெல்லாம் ஜானிமா சமத்து சொன்னதைக் கேட்டுக்குவா." என்றார்.
"உன் மகள் கேட்கலைனா, ஜமாயிஷா விட்டுருவாறாக்கும், ஜானிமா வந்து அரை மணி நேரம் ஆச்சு. இன்னும் ஜமாயிஷா வரலையே?" என ஹேமந்த் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, ரகுவீர் ஜானகியைத் தேடி வரவும், மாமனார் கூட்டம் சிரித்தது.
"என்ன பூஃபாஷா" என ரகுவீர் கேட்கவும், "உங்களைக் காணோமேன்னு ஜானுமாவிடம் கேட்டுக் கொண்டிருந்தோம்." என்றார் சிவகுரு. ஒரு தலையசைப்புடன் ஜானகியை அழைத்துச் சென்றான் ரகுவீர்.
மதிய உணவை ஒரு தட்டில் அவளுக்காக எடுத்து வைத்திருந்தான். "ஜானுமா காலையில் சாப்பிட்டதையும் வாந்தி எடுத்திட்டியே. எதை ஊட்டி விட?" என ரகுவீர் கேட்டான்.
அமிர்தா அங்கு வந்தாள். "இருங்கண்ணா நான் அவளுக்குப் பிடித்ததா எடுத்துத் தருகிறேன்." என, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி காய்கள் ஊறுகாய் அப்பளம் வைத்து நீட்டினாள், நான்கு வாய், ஆர்வமாகச் சாப்பிட்ட ஜானகிக்கு மீதி இறங்க மறுத்தது. வேண்டாம் என வைத்து விட்டாள். ரகுவீருக்கு கவலை பிடித்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பந்தி பரிமாறப் பட்டு உறவினர், மூத்தவர்கள் கிளம்பி இருந்தனர். கடைசிப் பந்தி வீட்டினர் மட்டும் இருந்தனர்.
ஜானகி, "வீரூஜி, நீங்க சாப்பிட்டு வாங்க நாம வீட்டுக்குப் போகலாம்." என்றாள்.
"நீ சரியாகவே சாப்பிடலைடி, எனக்குச் சாப்பிட மனசே வரலை." என்றான் ரகுவீர். ஜானகி அவனை டேபில்ல் அமர்த்தித் தானும் அமர்ந்து கொண்டு பரிமாறுபவரிடம் அவனுக்குப் பிடித்ததைச் சொல்லிப் பரிமாறச் சொன்னாள்.
அவனுக்குப் பரிமாறும் இரஜஸ்தானி உணவு, ஜானகிக்கு என்றும் பிடித்தம் இல்லை. அதனால் ரகுவீர் கட்டாயப் படுத்தவும் இல்லை. ஆனால் ஆச்சரியத் தக்க வகையில் அதைச் சாப்பிட வேண்டும் என ஜானகிக்கு ஆசை வந்தது. அவன் அருகில் உட்கார்ந்து, "வீரூஜி, உங்கள் டேஸ்டில் எனக்கு ஊட்டி விடுங்கள்." என வாயைத் திறந்தாள். ரகுவீர் பரம சந்தோஷத்துடன் உணவை அவளுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டான்.
தாத்தா, அப்பத்தாவின் என்பதாம் திருமணம் மனநிறைவோடு, இனிதே முடிந்தது. ராத்தோட்ஸ் அடுத்த நாள் காலையில் கிளம்ப இருந்தனர்.
மாலையில் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது ராகினி ஷப்னத்திடம், "பாபிஷா, ஜானகி இந்த நிலையில் ட்ராவல் செய்ய வேண்டாம். இரண்டு மாதம் இங்கே இருக்கட்டும், நூறு நாள் தாண்டிய பிறகு, மும்பைக்குக் கூட்டிட்டு வரேன்" என்றார்.
"நானும் இதே யோசனையில் தான் இருந்தேன்." எனும் போதே, ரகுவீர் எதிர்ப்புத் தெரிவித்தான். "புவாஷா, என் லுகாயியை விட்டுட்டு எல்லம் போகமுடியாது. ஃப்ளைட் தானே போயிடலாம், இல்லனா ட்ரைனில் புக் பண்றேன்." என்றான் ரகுவீர்.
" ரகுவி இதில் எல்லாம் அடம் பிடிக்காதே. மூன்று மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்கனும், அலைச்சல் கூடாது. மசக்கை அவளால் பயணம் செய்யவும் முடியாது." எனத் தாதிஷா கட் அண்ட் ரைட்டாகச் சொன்னார். அவர் சொல்லவும் பேசாமல் இருந்தான். முகம் தான் சோகத்தை அப்பி இறுகி இருந்தது. யாருடனும் பேசாமல் எழுந்து சென்றான்.
ஜானகி தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் சென்றவன், அவளருகில் அணைத்தவாறு அமர்ந்து இருந்தான். ஜானகி மெல்லத் தூக்கம் கலைந்தாள். ரகுவீர் அருகில் அமர்ந்து இருக்கவும், அவன் மார்பில் தலை வைத்து, சாய்ந்துப் படுத்துக் கொண்டாள். இன்னும் அரை மயக்கம் தான். ரகுவீர் அவள் தலையில் முத்தமிட்டுக் கட்டிக் கொண்டான். சற்றே தெளிந்து ஜானகி, ஏதோ சரியில்லை என உணர்ந்தாள். நிமிர்ந்து உட்கார்ந்து, அவன் தோள் வளைவில் அமர்ந்து, "வீரூஜி என்ன விசயம், கோபமா இருக்கீங்களா?" என்றாள்.
"ம்ப்ச், யார் மேல் கோபப்படு
ராத்தோட்களின் ஸ்வர்ண மஹல் அன்று வண்ண விளக்குகள், தோரணங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
"ஜானிமா பாராத் கிளபம்பனும் எல்லாம் ரெடியா?" என ஷப்னம் அவசரமாகக் கேட்டார். "எல்லாம் ரெடி மாஷா, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. ஷாதி மும்பையில் தானே நடக்குது, ரிலாக்ஸ். நான் எவ்வளவு சொல்லியும், உதய்பூரில் வேண்டாம்னுட்டீங்க. எனக்கு அதில் வருத்தம் தான்." என்றாள் ஜானகி.
"ஹேமந்த் பாயிஷாவே அங்க வேண்டாம்னு சொல்லிட்டார், நாம என்ன பண்றது. ராஜ்வீர் ரெடியா பார்." எனக் கேட்டார் ஷப்னம்.
"உங்கள் பேட்டா, தன் சோட்டே பாயியை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கார். பார்த்துட்டு வரேன்." என லிப்டில் ஏறினாள் ஜானகி.
ராஜ்வீர் அறைக் கதவைத் தட்டப் போன அவள் கைகளைப் பிடித்து நிறுத்தி, தன் அறைக்கு இழுத்துச் சென்றான் ரகுவீர்.
"அத்தான், இது என்ன இப்படிப் பண்றீங்க. பாராத் கிளம்பும் நேரமாச்சு." எனச் சிணுங்கினாள் ஜானகி.
ஜானகியின் முக்காட்டுக்குள் சென்று, அவளின் அழகைப் பருகிய ரகுவீர், "இன்னைக்கு என் லுகாயி, முழு இராஜஸ்தானியாகக் கலக்குறாளே!" என அவளோடு உரசி நின்றான்.
"ஆமாம், முழுசா ஒரு மாசம் யூரோப் ட்ரிப்பில் ரசிச்சது எல்லாம் பத்தாதாக்கும்?" என அவனோடு ஒத்துழைத்துக் கொண்டே, கேட்டாள் ஜானகி. "ஏண்டி, நீயும் தான் இழையிற, சும்மா வாய் தான் ஆட்சேபனை சொல்லும். மற்றதெல்லாம் வாடா மச்சான்னு அழைப்பு விடுக்கும்." எனக் கொஞ்சினான் ரகுவீர்.
"தமிழில் உங்களுக்குத் தேவையானதை மட்டும் கத்துக்குங்க. கொஞ்சம் நல்லா புரிஞ்சு உங்கள் கூடத் தமிழில் பேசமாட்டமான்னு ஆசையா இருக்கு." என்றாள் ஜானகி.
"ஒரு நாள் நிச்சயம் தமிழ் கத்துக்குறேன்டி. நீயே அதை நான் ஈசியா கத்துக்கிற மாதிரி கத்துக் கொடு." இது என்ன என அவள் அங்கங்களின் பெயர் பட்டியலை அறிந்து கொண்டிருந்தான்.
"ஜானிமா, துல்ஹா ரெடியான்னு பாரு.” என ஸர்குன் குரல் கொடுத்தார்.
"வீரூஜி, மாமிஷா கூப்பிடுறாங்க, வாங்கப் போகலாம், நாளைக்கு வச்சுக்கலாம் தமிழ்ப் பாடத்தை." என அவனை விலக்கி வெளியே வந்தாள்.
ரகுவீர் பின்னோடு உரசிக் கொண்டே வந்தான். ஹரிணி அமர்சிங் ராஜ்வீர் அறைக்கு வந்தவர்கள், இவர்களைப் பார்த்து, "சாலேஷா, முகத்தில் ஒட்டியிருக்கிறதை துடைச்சிட்டு வா, என்ன தான் நாம ரொமான்டிக் மூடில் இருந்தாலும், உலகம் நம்மைப் புரிஞ்சுக்காது." எனக் கேலி செய்தான்.
ரகுவீர், முகம் முழுவதும் தொட்டுப் பார்க்க, ஜானகி கணவனை எக்ஸ்ரே கண்களோடு பார்த்து எதுவும் இல்லையே எனக் குழப்பமானாள்.
ஹரிணி கலகலவெனச் சிரித்தவள், "அமர்ஷா சும்மா இருங்க, அங்க பாருங்க என் சோட்டே எல்லா இடத்தையும் தொட்டுப் பார்த்து, ஜானி மானத்தை வாங்குறான்." என்றாள்.
அப்போது தான் அமர்சிங் கேலி புரிந்து, "ஜீஜூஷா, ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்." எனவும் ஜானகி தலையைக் குனிந்து, கூங்கட்டுக்குள் மறைந்தாள்.
ரன்வீர், ராஜ்வீரை அழைத்து வரவும் எல்லாரும் ஹாலுக்கு இறங்கினர். ஸ்வர்ண மயூரி அம்சமாகக் கிளம்பி பெரியவர்களுடன் நின்றாள். மயூரியை தாதிஷா கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, அடுத்து உன் ஷாதி தான். யார் கண்ணும் படக்கூடாது எனக் காலா டீக்கா வைத்துக் கொண்டிருந்தார்.
ராஜ்வீர் தங்க நிற செர்வானியில் கம்பீரமாக நிற்க, ஸர்குன் தலைப்பாகை, பகடி அணிவித்தார். தாதிஷா திலக் வைத்தார், தாதாஷா வீரவாளை அணிவித்தார். ஹரிணி, மயூரி இணைந்து முத்துப் பாசிகளால் ஆனச் செஹ்ரா கட்டினர். மூத்த ராத்தோட் சகோதரர்கள் மிடுக்காக நின்றனர். மற்ற சம்பந்திகளும், பங்காளிகளும் வந்து இணைந்தனர். சைலேந்தர் குடும்ப உறுப்பினராக வந்து சேர்ந்தான். "கம்மாகனி பாபிஷா!" என ஸ்பெஷல் வணக்கம் ஜானகிக்குச் சொன்னான்.
"கனி கம்மா, தேவர்ஷா, இன்னைக்காவது போலீஸ் டூட்டிக்கு ஓய்வு கொடுத்தீங்களே." என்றாள்.
"வேலை அப்படி,என்ன செய்யறது. ஹாங் சொல்ல மறந்துட்டேன், ராணிஷா எப்ப வருவாங்க, குஷ் கபரி இருக்கான்னு, உங்கள் சாசனத்து அடிமை ஒருத்தன் கேட்டுகிட்டே இருக்கிறான்." என்றான் சைலேன். அவள் கேள்வியாக நோக்கவும், "ருத்ரநாத் பவாரியா!" என்றான். அவள் அவன் உடல் நிலை முகக் காயம் பற்றிக் கேட்டு அறிந்துக் கொண்டாள்.
ராஜ்வீர் பாராத் மஞ்சரியை சட்டப்பூர்வமாக மணம் முடிக்க அழைத்துச் செல்கிறான். பால்ய விவாகம் செய்த குழந்தைகள் வளர்ந்து, இன்று முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது. வழக்கமாகச் சொந்த ஊரில் சொந்த வீட்டில் ஷாதி செய்யும் முறையைப் புறக்கணித்து மும்பையில் ஷாதி நடத்துகிறார்கள்.
ஹேமந்தின் இந்த முடிவு செகாவத் குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பைரவ் சிங் செகாவத் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க, ஜானகி, ராகினிக்கு இழைத்த துரோகத்தின் பரிகாரம் என முடித்து விட்டார்.
பைரவ் தவிர மற்ற ஹேமந்தின் பங்காளிகள், அவருடைய தயவு தேவை என்பதால் ஹேமந்துக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். கிழட்டு நரியான பைரவை புறக்கணிக்க ஆரம்பித்தனர். முதலில் இருமாப்பாகவும், பின்னர்க் கோபமாகவும் இருந்த பைரவ், நாள் செல்லச் செல்ல தனிமை படுத்தப்பட்டார். அவருடைய சகோதரர்கள், மனைவி யாரும் உயிரோடு இல்லாத நிலையில், பாஞ்சா, பாஞ்சிக்களும் கை விட்டனர். பைரவ் கிறுக்குப் பிடித்தது போல் ஆனது.
ரகுவீர், யூரோப்பில் இருந்து வந்த பின்னர், உதய்பூருக்கு ஒரு விசயமாகக் கட்டாயம் போக வேண்டியது இருந்தது. ஜானகி தானும் வருவதாகப் பிடிவாதம் செய்து, அவனோடு சென்றாள். பின்கட்டு ஏரி, அவள் தங்கியிருந்த அறை என நினைவு கூர்ந்து, தங்கள் சங்கமத்துக்கான அடித்தளங்களைப் பார்த்திருந்தாள்.
அங்கிருந்த சரஸ்வதி பெண், செகாவத்தின் நிலைக் குறித்துச் சொல்லவும், ரகுவீரை அழைத்துக் கொண்டு சென்றாள். முதலில் பார்க்க மறுத்த பைரவ், அவர்கள் பிடிவாதமாகக் காத்திருக்கவும், வேறு வழி இல்லாமல் வந்தார். இன்று தான் ரகுவீர், ஜானகியை ஊன்றி கவனித்தார். ஜானகியின் சாயலில் அவருக்கு ஓர் அச்சம் ஏற்ப்பட்டது. தன் சாசுமாவின் சாயலும், அதிகாரம் குணமும் , தோரணையும் பார்த்தவர் ஜானகி பேச்சுக்குக் காது கொடுக்க ஆரம்பித்தார்.
ஜானகி மெல்ல அவரிடம், தாதாஷா, என அழைத்துப் பேசினாள். ரகுவீருக்குக் கோபம் இருந்தது, ஆனால் ஜானகிக்காக மௌனத்தைக் கடைப்பிடித்து இருந்தான். ஜானகிப் பேசப் பேச பைரவ் மனம் உடைந்தது. எல்லாருடைய வெறுப்பையும் பெற்றிருந்தவரின் வாழ்க்கை தனிமையில் உழன்று கிடந்தது.
அதில் விடி விளக்கென, ஜானகி அவருக்கு ஒளிக் காட்டினாள். மற்றவரோடு அன்பாக இருக்கத் தூண்டி விட்டாள். மஞ்சரி போல் தானும் ஒரு பேத்தி என்பதை அவர் மனதில் விதைத்து வந்தாள். மஞ்சரி ஷாதிக்கு வரமுடியாது என ஹேமந்திடம் மறுத்தவர், ஷாதி தினத்தன்று வந்து சேர்ந்தார். ராகினி, சிவகுருவிடம் மன்னிப்பும் கேட்டார்.
சிவகுரு நண்பர்கள் வழக்கம் போல், லட்கிவாலே வாகி, ராத்தோட்களை வரவேற்கத் தயாராக வாசலில் நின்றனர். சிவமாளிகை தாத்தா, அப்பத்தா முதற் கொண்டு தெய்வா, சண்முகம், அமிர்தா, பாலன் அனைவரும் மஞ்சரிக்காக வந்து சேர்ந்தனர்.
அந்த நாளும் வந்திடாதோ, என மஞ்சரி காத்திருந்த ஷாதி நாள் வந்தே விட்டது. ரகுவீர் ஜானகி யூரோப் ட்ரிப் முடித்து வந்த பதினைந்தாம் நாள் இதோ ஷாதி நடக்கிறது. இருவரும் எல்லாப் பொறுப்புகளையும் தங்களது ஆக்கிக் கொண்டு, பம்பரமாகச் சுழன்றனர்.
பஞ்சாராக்களின் பாரம்பரிய நடனம், பேண்ட் வாத்தியம் சேர்ந்து, படு கிராண்டாக ராத்தோட்ஸ் வந்து இறங்கினர். குறுகிய காலத்தில் உறவினர்கள், பிஸ்னஸ் சரகில், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து இருந்தனர். மண்டபம் கூட்டத்தால் நிறைந்தது.
மஞ்சரி, ஜெயமாலை அணிவித்து, தான் பால்ய காலம் முதல் கணவனாகக் கொண்ட ராஜ் பேபி கழுத்தில் சுலபமாக மாலையைப் போட்டாள்.
ராஜ் வீரைத் தூக்க ரகுவீர், ரன்வீர் தயாராக இருந்த போது, அன்ன நடை பயின்று வந்த மஞ்சரி, ராஜ் அருகில் வேண்டும் என்றே கையில் மாலையோடு தடுமாற, ராஜ்வீர் மஞ்சு பேபி என முன்னால் வந்தான். அவன் குனிந்து இவள் காலை ஆராயும் போது மாலையைப் போட்டுவிட்டாள் மஞ்சரி. ராஜ்வீர் ஏமாந்து போனான். ராஜ்வீர் மாலையைப் போட வந்த போது முதலில் ஆட்டங் காட்டிய மஞ்சரி, ராஜ் பேபியின் வாடிய முகம் கண்டு பொறுக்க மாட்டாமல் மனமிறங்கி தன் மாலையைப் பெற்றுக் கொண்டாள்.
ராஜ்வீர் காதில், "சாலேஷா, இதே டேக்டிஸை காலம் முழுவதும் பிடித்துக் கொள்." என அமர்சிங் ராஜின் காதில் ரகசிய அட்வைஸ் தந்தார். ராஜ் பலமாகத் தலையை ஆட்டிக் கொண்டான்.
அதைத் தொடர்ந்து, முகூர்த்தம் இனிதே நிறைவேறியது. விதாயி முடிந்து சற்றே மூத்த தம்பதியாக, ரகுவீர் கார் ஓட்ட ஜானகி முன்னால் அமர்ந்து, மணமக்களைத் தங்கள் வீட்டுக்குக் கிரகப்ரவேசம் செய்ய அழைத்துச் சென்றனர்.
மஞ்சரி, அரிசிக் கலசம் தள்ளி விட்டு, சிவப்புச் சாந்துக் கால் தடத்தை வீட்டில் பதித்து, கேன்வாஸில் கைத் தடத்தைப் பதித்தாள். மற்ற சடங்குகளும் முடித்துப் பள்ளியறையில் அவளை அமர்த்தி முக்காடு இட்டு மூடிவிட்டு, அவளிடம் ரகசியம் பேசி கலாய்த்து விட்டு வந்தாள். ராஜ்வீருக்காக் காத்திருந்தாள் மஞ்சரி.
ஐந்து நாட்களாக வேலை, வேலை என ஓடிய ஜானகி, தன் அறைக்கு வந்து அக்கடா என விழுந்தாள் ஜானகி. ரகுவீர் விருந்தினர்களை அவரவர் இடத்தில் அமர்த்தி ஏற்பாடு செய்து விட்டு வந்து பார்க்கும் போது, ஜானகி கை கால்களைக் குறுக்கி குழந்தையெனப் படுத்திருந்தாள்.
ரகுவீருக்கு அவளைக் காணக் காண மனம் பூரித்துப் போனது. 'என்னோடு சரிசமமாக எல்லாக் கடமைப் பொறுப்புகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறாயே என் தேவதையே, ஜென்ம ஜென்மமாகத் தொடர்கிறதோ நம் பந்தம்.' என அவன் உணர்ச்சி ததும்பப் பார்த்திருந்த நேரம், கண் விழித்த ஜானகி, ஷோபாவில் அமர்ந்திருந்த தன்னவனைக் கை நீட்டி அழைத்தாள். ரகுவீர் அவளை அள்ளி அணைத்ததிலிருந்த வேகத்தில், அவன் எமோஷனலாக இருப்பதை அறிந்தவள்,
"இப்ப என்னவாம் ராத்தோஷாவுக்கு இவ்வளவு ஃபீலிங். இன்னைக்கு ஜானும்மா எதுவுமே ஸ்பெஷலா செய்யலையே?" என்றாள்.
"நீயே ஸ்பெஷல் தாண்டி. என்றவன், அவளைப் படுக்க வைத்து, அவள் கால்களைத் தன் மடியில் வைத்து மெல்லப் பிடித்து விட்டான். "வீரூஜி இது எதுக்கு, எனக்கு ஒண்ணும் கால் வலிக்கலை." என்றாள்.
"எனக்குத் தெரியும் நீ தூங்கு.” எனப் பாதத்தைப் பிடித்து விட்டான். அவள் அலுப்பில் சுகமாக இருக்கவும் அப்படியே தூங்கிவிட்டாள்.
அடுத்த நாள் பஹ்பிரேவுக்கு ராஜ் மஞ்சரி ஹேமந்த் வீட்டுக்குச் சென்றனர். சிவ மாளிகை குடும்பத்தினர் அமுதன், மயூரி திருமணம் குறித்துப் பேச ஹாலில் கூடியிருந்தனர். இன்றிலிருந்து பத்தாம் நாள் சிறுமலை வந்து ரிசார்டில் தங்கிக் கொள்வதாக ராத்தோட்கள் முடிவு செய்தனர். அங்கு உள்ள ஹாலில் மற்ற சடங்குகள் செய்து கொள்ளலாம் என முடிவானது.
இன்றிலிருந்து பதினைந்தாம் நாள், அமுதன் மயூரிக்கு அதிகாலையில் முகூர்த்தமும், பாலன் அமிர்தாவுக்குப் பத்தரை பன்னிரண்டு முகூர்த்தமும் ஏற்கனவே முடிவு செய்யப் பட்டு இருந்தது.
தாலிக்கு பொன் தரும் சடங்கு, கணபதி ஸ்தாபனாவை நாளையே ஆரம்பிக்கலாம் எனப் பேசினர். ஜானகி தான், தன் அண்ணன்கள் இருவருக்கும் இங்கேயே தாலி செய்து விடுவதாகப் பிறந்த வீட்டில் சொன்னாள். நாளை அதைச் செய்யலாம் என்றனர்.
ஷப்னம், ஸர்குன், பூனம் தங்கள் பஹூ ஜானகியை அவள் பிறந்த வீட்டினரிடம் வாய் ஓயாமல் புகழ்ந்தனர். சிவகாமி அப்பத்தாவே, ஜானகி இதெல்லாம் செய்தாளா என வியந்தார். குமாரி ஜானகிக்கும், திருமதி ஜானகிக்கும் அவ்வளவு வித்தியாசம் இருந்தது. சிவகுரு தனது மகளின் பொறுப்பான மாற்றத்தில் மனம் மகிழ்ந்திருந்தார். ராகினி தன் பிறந்த வீட்டுக்கு, தன் மகள் நிறைவான மருமகளாக இருக்கிறாள் என்பதில் திருப்தியாக இருந்தார்.
அமரேன், பூனம் தங்கள் மகளுக்கு ஷாதி என்பதில் மகிழ்ந்திருந்தாலும், விதாயியை நினைத்து கலங்கி இருந்தனர். "மாம்ஸ் அந்த மகள், சசூரால் போனால் என்ன? இந்த மகள் உங்களைப் பார்த்துக்குவேன்." என மயூரிக்கு முன்பாகவே ஜானகி அவர்களைத் தேற்றியதைக் கண்ட மயூரி அவளை முறைத்தாள். "ஏய் பாபிஷா, இன்னைக்குத் தான் இதுக இரண்டும் கொஞ்சம் ஃபீல் பண்ணுச்சுங்க, அதுகூடப் பீல் பண்ணக் கூடாதா, ஆறுதல் சொல்ல வந்துட்ட!" என்றாள் மயூரி.
"நீ சிவமாளிகை ஆட்களை ஃபீல் பண்ணாமல் பார்த்துக்க." என்றாள் ஜானகி.
அடுத்த நாள் காலை அமுதன் மயூரியை அமர வைத்து கணபதி ஸ்தாபனா பூஜை செய்தனர். பின்னர்த் தங்கள் நகைக்கடையில் இருந்து ஆசாரியை வரவழைத்து இருந்தனர், ஜானகி தான் போட்டிருந்த தங்கத் தாலியை மெழுகில் அச்செடுத்துக் கொடுத்தாள். அதற்கான பணத்தையும் தட்டில் வைத்துக் கொடுக்க, கடை முதலாளியாக ராஜேன் பெற்றுக் கொண்டார். அன்று மதியம் ஜானகியின் பிறந்த வீட்டினர் கிளம்பினர்.
ஜானகி, மஞ்சரி என இரு பஹூராணிகளுமாக இப்போது ராத்தோட் மேன்சனில் வளைய வந்தனர். இரண்டுமே படாகா (வெடி) தான் ஆனால் ஒவ்வொரு ரகம். சிறு வயதிலிருந்து இவர்களோடு பழகியவள் மஞ்சரி, அதனால் ராத்தோட்களோடு நல்ல பழக்கம். ஜானகி குறுகியகாலத்தில், அந்த வீட்டின் மகள் வழிப் பேத்தியாக , அதற்கும் முன்பே தனது தனித்தன்மையால் அவர்களை வசீகரித்து வைத்திருந்தாள்.
சில நேரங்களில் ரகுவீர், ஜானகி இணைந்து மஞ்சரியை ஓட்டுவார்கள், அதற்கெல்லாம் சலைத்தவளா நம் மஞ்சி, "உங்களிடமிருந்து கற்றப் பாடம் தான் தீதிஷா!" என ஜானகியிடம் ஆரம்பித்து, ரகுவீரிடம் வம்பை முடிப்பாள். ராஜ்வீர் பார்வையாளன் மட்டுமே. ரன்வீருக்குத் தான் பொழுது நன்றாகப் போனது. பாபிஷாக்களின் ஸ்வரஸ்யமான பேச்சுக்களில் மாறி மாறி அணி மாற்றி இருவரையும் கலாய்ப்பான். ஏற்கனவே தோழிகள் ஆதலால் ஓர்படி சண்டை இல்லை. ஏதாவது உரசல் வந்தாலும், ஒருவர் மற்றவரிடம் தானகவே வந்து தீர்த்துக் கொள்வர்.
ஒரு நாள் தாதாஷா, தாதிஷாவும் ஹாலில் அமர்ந்து இருக்கும் போது, ராஜேனிடம் வந்து நின்ற ஜானகி, "மாமாஷா, எனக்கு இந்த வீட்டில் வேறொரு ரூம் தாங்க." என்றாள்.
ஏதேனும் சண்டையோ என மற்றவர் பதறி என்னவெனக் கேட்டனர். "ஏம்மா ரகுவி எதுவும் சண்டை போட்டானா?" என்றார் , ரகுவீர் அங்க வந்து சேர்ந்தான். அவன் ஜானகியை முறைத்துக் கொண்டு நின்றான்.
"மாமாஷா, உங்கள் பேட்டேக்கு என் மேல் ரொம்பக் குறை. இவர் ரூமில் இருக்கும் கப்போர்ட் பூரா நான் ஆக்கிரமிச்சுக்கிறேனாம். இவர் ட்ரெஸ் வைக்க இடமே இல்லையாம். நீங்களே இதுக்கு ஒரு வழி சொல்லுங்க." அவர் என்ன சொல்லுவார் பாவம், ரகுவீராவது தைரியமாகச் சண்டை போட்டான், அவருக்கு அந்த உரிமையும் இல்லை.
ஷப்னம், "ஜானிமா, நல்ல ஆள் பார்த்த உனக்குப் பஞ்சாயத்து செய்கிறதுக்கு, இவரும் இதே குறை தான் என்கிட்ட சொல்லுவார்." என்றார். ரகுவீர் பாதிக்கப்பட்டோர் சங்கத்தில் பாபுஷாவும் இருக்கிறார் என ஆறுதல் அடைந்தான்.
அமரேன், கஜேனும் வந்து சேர்ந்தனர். பிரச்சினையைக் கேட்டு, "ஜானிமா, ரகுவி சொல்றதும் நியாயம் தானே, ஷாதிக்கு அப்புறம் எங்கள் கப்போர்ட் சுருங்கிப் போகிறது." என்றார் அமரேன்.
"ஆமாம், ஆமாம் ஸரூவின் சாரிஸ் தான் கப்போர்ட் முழுதும் நிறைஞ்சு இருக்கு, எனக்குப் போனால் போகுதுன்னு ஒரே ஒரு செல்ப். " என்றார் கஜேன்.
"ஸுன்யேஜி, அப்போ இனிமேல் புதுத் துணி எடுத்துக் கொடுக்காதீங்க." என்றார் ஸர்குன்.
"ஆமாம், உங்களோடு பார்ட்டிக்கு வரும் போது பழசையே மாற்றி மாற்றிப் போட்டுக்குறோம்." என்றார் பூனம்.
"ராஜ் பேபி, நீயும் உன் பையா, பாபுஷா மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணுவியா?" என்றாள் மஞ்சரி.
"ம்கூம், நான் எதற்குச் சொல்லப் போறேன், நீ இடம் கொடுத்தா நான் கப்போர்ட்டில் வச்சிருக்கேன். இல்லைனா பெட்டியில் வச்சுக்கிறேன்." என்றான் ராஜ். மற்றவர்கள் சிரித்து விட்டனர்.
"இரஜஸ்தானி ஷேர், என்னடா இப்படி விழுந்துட்ட?” என்றான் ரகுவீர்.
"ஜானிமா, அவன் பாட்டுக்குச் சொல்லட்டும். நீ வச்சுக்கடா. திருப்பிச் சண்டை போட்டால், கெஸ்ட் ரூமில் சிப்ட்டு ஆகிடு. நைட்டும் அங்க தான், இவனை உள்ளே விடாதே." என்றார் ஷப்னம்.
"மாஷா, பாபுஷா ஏன் வாயே திறக்கலைனு இப்ப தானே தெரியுது. பஹூவுக்கு நல்ல அட்வைஸ் தரீங்க. நான் ஒரு வார்த்தை சொல்லி இரண்டு நாள் ஆகிறது, அவள் சும்மாவே திரும்பிப் படுத்து வெறுப்பேத்துறா, இதில் நீங்க வேற, சிப்ட் ஆகனுமாம். இங்க பாருடி மிர்ச்சி கப்போர்ட் பூரா நீயே வச்சுக்க. நான் பெட்டியில் வச்சுக்கிறேன்." என ரகுவீர் கோபமாகச் சொன்னான்.
"மாமிஷா சொன்ன மாதிரி, இனிமேல் புதுசா எடுத்தே குடுக்காதீங்க. ஜானும்மா இது உனக்கு நல்லா இருக்கும்னு எதையும் எடுத்துட்டு வராதீங்க. மயூ மேரேஜ்க்கு பழசே போட்டுக்குறேன். மாதாஜி எடுத்துக் கொடுத்தாலும், அங்கேயே வச்சுட்டு வந்துடுவேன்." என ஜானகியும் கோபமாகப் பேசினாள்.
தாதாஷா, "அரே பேட்டே, இது எல்லாக் குடும்பத்திலும் உள்ளப் பிரச்சனை. சிங்கிள் மேன், டபுள் ஆகிறதும், இன்னும் பெரிசா வளருவதும் இயல்பானது. ரகுவீர் ரூமை ஆல்டர் பண்ணு. உன்னுடைய ராஜ்வீர் ரூமை டபுள் பெட்ரூம் உள்ளே இருக்கிற மாதிரி மாற்றிக் கட்டு. உங்களுக்கும் ஷாதி ஆகிடுச்சு. அடுத்துப் பிள்ளைகள் வரும். அந்தத் தேவையை யோசித்துக் கட்டு." என்றார்.
"சரிங்க தாதாஷா, மயூ மேரேஜ் முடித்து இதை ஆரம்பிப்போம்." என்றான் ரகுவீர். ஜானகி ஏதோ யோசனையில் நின்றாள்.
"என்னம்மா, பாபுஷா சொன்னது சரிதானே?" என்றார் ராஜேன்.
"டீக் ஹை மாமாஷா. நான் வரேன், ஒரு வேலை இருக்கு." என மாடிக்கு லிப்டில் ஏறினாள். கோபமோ என ரகுவீர் அவளைப் பின் தொடர்ந்தான். நாளை இரவு சிறுமலை செல்ல ஃப்ளைட் ஏறுகிறார்கள்.
ஜானகி யோசனையாக வந்து, மாத காலேண்டரைப் பார்த்துக் குழம்பிக் கொண்டிருந்தாள். பின்னால் இருந்து ஜானகியைக் கட்டிக் கொண்ட ரகுவீர் "என்னடி ஜானும்மா யோசனை, கெஸ்ட் ரூம் போக நாள் பார்க்குறியா, அதெல்லாம் வேண்டாம். இரண்டு நாள் நீ முகத்தைத் திருப்பினதே எனக்குக் கஷ்டமா இருந்தது. நானும் ராஜ்வி மாதிரி ஃபுல் சரண்டர்." எனக் காதோரம் ரகசியம் பேசி, அவள் பின்னங்கழுத்தில் இதழ் ஊர்வலம் நடத்திக் கொண்டு இருந்தான். கைகள் இடையின் இடைவெளி தாண்டி அவளை மேலே இம்சித்துக் கொண்டிருந்து.
"வீரூஜி, நான் கடைசியா எப்ப ஆனேன்னே ஞாபகம் இல்லை." என்றாள் ஜானகி. ரகுவீருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. "அப்படின்னா என்ன அர்த்தம்?" என்றான். அவள் தலையில் கை வைத்து, "முருகா, கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி மாதிரியே இருக்கே?" எனத் தமிழில் புலம்பினாள். ப்ரம்மச்சாரி மட்டும் புரிந்தது. என்ன எனக் கேட்கவும், அவன் காதில் ரகசியமாகச் சில விசயங்களைச் சொன்னாள்.
"ஆனால் நான் உன்னை அப்படி வித்தியாசமா பார்த்ததே இல்லையே!" என்றான் . நீங்க அப்ப இங்கே இருந்தீங்க, அடுத்து…" என யோசித்தவள், யூரோப் ட்ரிப்பின் நடுவே ஆனது ஞாபகம் வந்தது. நாற்பது நாட்கள் ஆனது. ரகுவீரிடம் தனது ஐயத்தைச் சொன்னாள். ரகுவீர் வாயடைத்து நின்றான். "ஜானும்மா நிஜமா?" எனக் கேட்டான்.
"வீருஜி, இருக்கலாம் தான். இன்னும் கன்பார்ம் ஆகல. இப்போ யார்க்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க. ரொம்ப எதிர் பார்ப்பாங்க. இன்னும் ஒரு பத்து நாள் ஆகனும், நெகட்டிவ் வரவும் சான்ஸ் இருக்கு." என்றாள் ஜானகி.
அவளை ஷோபாவில் அமர்த்தித் தானும் அமர்ந்தவன், அவளை அணைத்து முத்தமிட்டான். "இருந்தால் ரொம்பச் சந்தோஷம், இல்லைனா விடா முயற்சி எடுப்போம் ஓகேயா?" என ஜானகியைப் பார்த்துக் கண்ணடித்தான்.
வெட்கத்தில் அவன் மார்பில் சாய்ந்தவள், "இப்ப என்னமோ சும்மா இருக்க மாதிரி. ஆனால் கன்பார்ம் ஆச்சுனா, எனக்கு உங்களை மாதிரி 'குட்டி வீரூ' வேணும்." என்றாள்.
"ம்கூம், அடுத்து அவன் வரட்டும், முதலில் குட்டி ஜானு தான், இதே கண்ணு, மூக்குச் சேட்டை எல்லாம் சேர்ந்த ஃபுல் பேக். நானும் அப்பாஜான் ஆகனும்." என்றான் ரகுவீர்.
ஜானகி சிரித்துவிட்டு, "அப்பாஜானா இருக்கிறது ரொம்பக் கஷ்டம் வீரூஜி, பாபுவாகவே இருங்கள்." என்றாள் ஜானகி.
"இதை நீ, உதய்பூரில் ஏரியில் குதிச்சப்ப நானும், பூஃபாஷா வும் பேசினோம். அவங்க பேசும் போது அப்பா மகள் உறவின் அருமை புரிந்தது." என்றவன் ஜானகி வயிற்றில் கை வைத்துத் தடவி, முத்தமிட்டு, "குட்டி பேபி, பாப்பா (அப்பா) வெயிட்டிங், ஏமாத்தாம வந்திடுங்கடா." என டீல் போட்டான். அவன் தலை முடியைக் கோதியவள், அவன் தலை மீது தன் தலையை வைத்துக் கொண்டாள். ஞாபகம் வந்தவளாக, "நான் கெஸ்ட் ரூம் மாறிக்கவா, மாஷா சொன்னாங்க." என்றாள்.
அவன் மடி விட்டு எழுந்து அவளை முறைத்தவன், "இப்ப தானடி சரண்டர் ஆகி நீயே வச்சுக்கன்னு சொன்னேன். திரும்பத் திரும்பப் புருஷனை ஒத்துக்க வைகிறதில் லுகாயிகளுக்கு ஒரு சந்தோஷம். அடிமை எல்லை மீறுதா, புரட்சி பண்ணுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துக்குவீங்க." எனக் கேட்ட விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.அவனை அணைத்தபடி, "ஆமாம்." என்றாள்.
சிறுமலை எஸ்,எஸ் ரிசார்ட்டுக்கு ராத்தோட் குடும்பம் மொத்தமும் வந்து சேர்ந்தது. சிவகுரு, ராகினி, சண்முகம், அமுதன், பாலன் என அவர்களை எதிர் கொண்டு அழைக்க ரிசார்டில் காத்திருந்தனர். கம்மாகனி, வணக்கம் சொல்லி பாசத்தைப் பகிர்ந்தனர். ஜானகி, அப்பாஜான், மாதாஜியை அணைத்துக் கொண்டாள்.
சம்பந்திகளுக்கு வணக்கம் சொல்லி, "பஹூராணி வந்தாச்சு. வெல்கம் மருமகளே!" என மயூரியை வரவேற்று, மஞ்சரியிடம் "புதுப் பொண்ணு எப்படி இருக்கீங்க?" எனக் குசலம் விசாரித்து, ரிசார்ட் சிப்பந்திகளுடன் அமுதன், பாலன் ஒவ்வொருவரை அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அமுதன், மயூரியிடம், "ஃபைனலி என் பொண்டாட்டி , என் கண்ணை நிறைக்க வந்தாச்சு." என அவள் பெட்டியை வாங்கி உருட்டிக் கொண்டு, கையோடு கை கோர்த்துக் கேட்டான். முன்னால் அமரேன், பூனம் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தனர்.
பாலன், கஜேந்தர் ஃபேமலி, மஞ்சரியோடு வாயாடிக் கொண்டே கூட்டிச் சென்றான். சண்முகம் ராஜேன் பேமலியோடு ரகுவீரை அழைத்துச் சென்றார். ராகினி மாஷா, பாபுஷாவை பக்கத்திலிருந்த அறைக்குக் கூட்டிச் சென்றார்.
தந்தையும் மகளும் மட்டும், தனித்திருந்தனர். அவளைத் தலை முதல் பார்த்த சிவகுரு, "ஜானும்மா, எதுவும் விசேசமாடா?" என ரகசியமாகக் கேட்டார்.
"அப்பாஜான், கன்பார்ம் ஆனால் உங்களுக்குத் தான் முதல் குஷ் கபரி சொல்லுவேன். மாதாஜியே கவனிக்கலை நீங்க எப்படிக் கவனிச்சீங்க?" என அதிசயமாகக் கேட்கவும்.
"உங்கள் அம்மா, அவள் அப்பாவைத் தான் முதலில் பார்ப்பாள், நான் என் மகளைப் பார்ப்பேன்." என உச்சி முகர்ந்தவர், "நல்ல செய்தியாக வரட்டும்." என்றார்.
ராகினி, "பாபுஷா, நம்ம வீட்டிலேயே தங்கலாமே எதுக்கு ரிசார்டில் தங்கனும்?" என்றார். "லட்கிவாலே, இங்கே வசதியா இருந்துக்கிறோம். இதுவும் உன் இடம் தானே!" என்றார் தாதாஷா.
ரகுவீர், ஜானகி இருக்குமிடம் வந்து சேரவும், சிவகுரு மருமகனைக் கட்டியணைத்துக் கொண்டார். "சந்தோஷம் மாப்பிள்ளை, எல்லாம் நல்லபடியா இருக்கட்டும்." என்றார்.ரகுவீர் அதிர்ச்சியாகி அவருக்கு முதுகில் ஜானகியிடம் சொல்லிட்டியா என விழியால் கேட்டான். "அவங்களே கேட்டாங்க!" என்றாள் ஜானகி.
"பூஃபாஷா, இன்னும் கன்பார்ம் ஆகலை, செக்கப்பும் முடிஞ்சு ஷாதிக்கு அப்புறம் சொல்லுவோம். கவனம் அமுதன், மயூரி கிட்ட இருக்கட்டும், எங்கள் பக்கம் திரும்ப வேண்டாம்." என்றவன். "வாங்க வீட்டுக்குப் போகலாம். நானும், ஜானுவும் நைட் ஸ்டே அங்க. மற்ற நேரம் இங்க இருந்துக்குறோம்." என அழைத்துச் சென்றான்.
சிவகாமி, தெய்வா ஜானகியின் முகம் பார்த்தே அறிந்தனர். கட்டியணைத்து உச்சி முகர்ந்து சந்தோஷத்தை வெளிப் படுத்தினர். "அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீங்க இரண்டு பேரும் இதைப் பற்றியே பேசக்கூடாது." எனத் தடைப் போட்டாள் ஜானகி.
மெஹந்தி, ஹல்தி, சங்கீத் என எல்லாச் சடங்கும் நடந்தது. அமிர்தாவையும் ஒரே இடத்தில் கூட்டி வந்து, ரிசார்ட் ஹாலில் விழாக்களை நடத்தினர்.
ரகுவீர், ஜானகியை மற்றவர் கவனம் கவராத வண்ணம் பார்த்துக் கொண்டான். மஞ்சரி எல்லா விசேசத்திலும் முன்னே நின்று வேலைகளைச் செய்தாள். சிவகணேஷ், ரன்வீர் இங்கும் அங்குமாக அலைந்தனர். அமர்சிங் ஹரிணி , சௌஹான் குடும்பம், பைரவ் செகாவத் முதற் கொண்டு செகாவத் குடும்பமும் மெஹந்தி அன்று வந்தது.
சிவகுரு நண்பர்கள் சங்கீத்துக்கு வந்தனர். சிறுமலையில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை, சுத்தப்படுத்தி மேடை அமைத்து, கல்யாண மண்டபம் போல் அமைத்திருந்தனர். சுற்று வட்டார ஊரே பேசும் திருமணமாக, இரண்டு திருமணச் சடங்குகளும் நடந்தது. ஒரு லோக்கல் டிவி இவர்கள் நிகழ்ச்சிகளைக் கவர் செய்தனர்.
அமிர்தாவை மணப் பெண்ணாகப் பார்த்த ஜானகி மனம் நெகிழ்ந்து போனாள். கட்டியணைத்து மகிழ்ச்சி யை வெளிப் படுத்தி, "பாலன் கொடுத்து வச்சவன்டி, உன்னை மாதிரி கேரிங் மனைவி கிடைக்கிறதுக்கு. என்னையே அப்படிப் பார்த்துக்கிட்ட." என ஜானகி உணர்ச்சி வயப்பட்டாள்.
திருமணத்தை வயது வாரியாக உட்கார்ந்து அனுபவித்தனர். சிவபரங்கிரி ஐயா, வீரேந்தர் ராத்தோட், பைரவ் செகாவத்தைச் சேர்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். வீரேந்தர், தன் ஜீஜூஷாவின் இளமைக்கால வீரப் பிரதாபங்களைச் சொன்னார். "சாலேசா நீ மட்டும் என்ன, பஹன்ஷா வரும் முன்ன ரெனாவத் வீட்டுப் பெண்ணைச் சுத்திகிட்டு இருந்தியே." எனப் பைரவ் ரகசியத்தை போட்டு உடைத்தார். மயூரா தேவி முறைத்துக் கொண்டிருந்தார்.
"ஜீஜூஷா, சம்பந்த்ஷா மாதிரி அடுத்த வருஷம் நான் என்பதாம் ஷாதி பண்ணலாம்னு பார்த்தால், ரகசியத்தை வெளிய
ஜானகி ஆசைப்படி கட்டிய மஞ்சள் கயிற்றுப் பொன் தாலியைக் காலையில் முகூர்த்த நேரம் பார்த்து அப்பத்தா, தங்கத் தாலிக் கொடியில் மாற்றி விட்டார். அவள் மஞ்சள் கயிறே இருக்கட்டும் என அடம்பிடித்த போதும், நாலு பக்கம் போக வர இருப்பவள் எனச் சொல்லி, தங்க செயினில், மஞ்சள் கயிறு கோர்த்து, தாலியை அதில் கோர்த்தார்.
ஜானகி தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள். தாத்தா, அப்பா, அம்மா அண்ணன்கள் என மாற்றி அவளை அழைத்து வைத்துப் பேசினர். ஆளாளுக்கு அவளுக்குப் பிடித்ததைப் பரிசளித்தனர். அமிர்தா காலையிலிருந்து அவளையே ஒட்டித் திரிகிறாள். ஜானகிக்கான பேக்கிங், தேவையானதை எடுத்து வைப்பது எனச் சகலமும் அவள் வேலையானது.
“ஜானி, உன்னை விட்டுட்டு எப்படி இருக்கிறது. நீ அண்ணா கூட இருந்தால், என்னை நினைக்கக் கூட மாட்ட!” என உரிமைச் சண்டையும் போட்டாள்.
அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட ஜானகி, "அமித்து டார்லிங், எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டுப் போறது அவ்வளவு ஈஸியா என்ன. எத்தனை வருஷமா நாம ஒன்னா இருக்கோம். நீ சொல்லு வீரூஜியை பேக் பண்ணிட்டு நான் இங்கேயே இருக்கேன்." என்றாள் ஜானகி.
"ஆமாம் ரொம்ப இருப்ப, பதினைந்து நாள் விட்டுட்டுப் போனதுக்கே அந்தப் பாடு. இப்ப இன்னும்... நான் தான் நேற்று தோட்டத்து வீட்டுக்கு போய்ட்டு வந்ததிலிருந்து பார்க்கிறேனே." எனச் சொல்லும் முன் அமிர்தா சிவந்தாள்.
"ஏண்டி, தோட்டத்து வீட்டுக்கு போய்ட்டு வந்தது நானு, நீ என்னமோ சிவக்கிற?" என்றாள் ஜானகி. அதே சமயம் ரகுவீர் உள்ளே வரவும், தோழிகள் பேசா மடந்தைகள் ஆனார்கள். ரகுவீர் என்ன என விழியால் கேட்டான். அவனுக்கும் சிவந்த கன்னங்களோடு வெளியே போங்க எனச் சைகையில் உத்தரவிட்டாள் ஜானகி. ரகுவீர் அறையை விட்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றவன், "ஜானு, என்னுடைய ஜீன்ஸ் எங்கடி வச்ச?" என்றான்.
"எந்த ஜீன்ஸ்ஸை கேக்குறீங்க?" என்றாள் ஜானகி இங்கிருந்தபடி.
"இங்க வைத்திருந்ததைக் காணோம்." எனக் கத்தினான் ரகுவீர்.
"ஜானு, அண்ணன் கேக்குறாங்க, போய்ப் பாருடி, நான் இதெல்லாம் பேக் பண்றேன்." என்றாள் அமிர்தா.
"இருடி பார்த்துட்டு வரேன்" என உள்ளே வந்த ஜானகியை, கதவைச் சாத்திவிட்டு கட்டிக் கொண்டான் ரகுவீர். அவள் மேல் மோகமாக, வேகமாக ஆரத்தழுவி, முகத்தைக் கழுத்து வளைவில் புதைத்து, கைகள் இடையில் விளையாடியது. அவன் தாக்குதலை எதிர்பார்த்தே வந்த ஜானகியும் அதற்கு இசைந்து நின்று, அவனுக்குத் தேவையானதையும் கொடுத்தாள்.
"எந்த ஜீன்ஸ்ஸை காணோமாம்?" என அவன் காதில் முணுமுணுத்துக் கேட்டாள். கார் ஓட்டுவதற்கு வசதி என ஜீன்ஸ் குர்தியில் இருந்தாள் ஜானகி.
"இந்த ஜீன்ஸ் தான்." என அவள் இடையைப் பிடித்து நின்றதை இழுத்துக் காட்ட, "ம்ம், தருவாங்க, ராத்தோட்ஷாவுக்கு, என்கிட்ட இருக்கிறதில் தான் கண்ணு." எனத் தோளில் கடித்தாள்.
"ஏய் வலிக்குதுடி, ட்ராகுலாவாடி நீ, குட்டி பிசாசு. நேற்று என்ன சொன்ன , ஒண்ணும் தெரியாத குட் கேர்ள். அதுக்கே இப்படியா?" எனப் பேசி அவளைச் சிவக்க வைத்தான்.
அவனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள், "போடா, மருதுக்காளை, காளையன், காய்ஞ்சு கிடந்து எகிறுது. இதில் டெஸ்ட் வைப்பாராம், பாஸ் பண்ணனுமாம். ஒரு பீடாக்கே தாங்கலை." என வம்பிலுத்தாள். தள்ளிய அவளைக் கையைப் பிடித்து முரட்டுத்தனமாக அணைத்தவன், "எகிறுனா எப்படி இருக்கும்னு காட்டவாடி?" எனச் செயலில் இறங்கினான். அவன் வேகம் எடுக்கும் போது, ஸ்பீடு ப்ரேக்கராக அமிர்தாவின் குரல் வந்தது. ரகுவீர் பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் அடங்கினான். சத்தம் இல்லாமல் குலுங்கிச் சிரித்தாள் ஜானகி.
அமிர்தாவுக்குக் குரல் கொடுத்து விட்டு, அவனை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்துவிட்டு, "காளையா." என அழைத்துக் கண்ணடித்துச் சென்றாள். ரகுவீர் கண்ணை மூடி அனுபவித்தவன், வழக்கம் போல் டிஸ்யூ எடுத்து லிப்ஸ்டிக் கரையைத் துடைத்துக் கொண்டான். இப்போது எல்லாம் மிகக் கவனமாக இந்த வேலையைச் செய்த பின்னே தான் அறையை விட்டு வெளியேறுகிறான். 'இல்லைனா இமேஜ், ரொம்ப டேமேஜ் ஆகுதப்பா.'.
மதிய உணவுக்கு, வீட்டில் அனைவரும் ஆஜராகி இருந்தனர். ஜானகிக்குப் பிடித்த பதார்த்தங்கள் உணவு மேஜையை நிறைத்தன. இருவரும் அளவாக உண்டனர். மயூரி, மஞ்சரி, அமிர்தா மூவரும் அமைதியாக இருந்தனர். இன்று ஜானகி பிறந்த வீட்டை விட்டுக் கிளம்புவது போல், அவர்களும் ஒரு நாள் கிளம்புவார்கள். திருமணத்திற்குப் பின் அடிக்கடி வந்தாலும், போனாலும், பார்த்தாலும் அது என்னவோ, இந்த 'விதாயி' என்பது மனதைப் பொறுத்தவரை ஒரு பிரிவு உபசாரமாகிறது.
இன்று காலையில் சிவகணேஷ் அக்காவை வழியனுப்ப வந்துவிட்டான். ஒரு மிட் செமஸ்டர் லீவ் என வந்தான். "அத்தான், காளை மாடெல்லாம் அடக்கி கலக்கிட்டீங்க. ஆனால் எங்க அக்கா கிட்ட அடக்கிட்டீங்களே!" எனக் கலாய்த்தான்.
"அதெல்லாம் உனக்குப் புரியாது சாலா, நீயும் காதலித்துப் பார், ஷாதி பண்ணிப் பார் அப்பத் தெரியும்." என்றான் ரகுவீர்.
"உங்கள் சொல்லைத் தட்டுவேனா, நீங்க சொன்னதைச் செய்யறேன் அத்தான்." என்றான் கணேஷ்.
"கணேஷா, நீ சொன்னதை அம்மாகிட்ட மொழி பெயர்க்கவா?" என்றான் பாலன். "அண்ணா, இப்ப வேண்டாம், நாலு வருஷம் ஆகட்டும், நீங்க எல்லாரும் செட்டில் ஆனப் பிறகு சொல்லிக்கலாம்." என்றான் கணேஷ்.
"டேய் தம்பி, எங்கேயோ ரூட் போடுற, பார்த்துடா!" என்றான் அமுதன்.
"அதெல்லாம் அத்தான், ப்ராமிஸ் பண்ணியிருக்கார், என்னத்தான்???" என்றான்.
"அவ்வளவு தானே பார்த்துக்குவோம், நீ தான் புவாஷா பற்றி முதன் முதலில் எனக்குச் சொன்ன, நீதான் ஜானு யாரென்று சொன்ன. நீதான் அவள் தீவிலிருந்ததையும் சொன்ன, உனக்காக நீ கேக்குற விசயத்தில் சப்போர்ட் பண்ணுவேன்." என்றான் ரகுவீர்.
"தாங்க்ஸ் அத்தான்!!!" என்றவனை அணைத்துக் கொண்டான் ரகுவீர்.
ரகுவீர், ஜானகியை சாமி அறைக்கு அழைத்துச் சென்ற அப்பத்தா, தாத்தாவை சூடம் ஏற்றச் சொல்லிக் காண்பித்தார். ஒரு தட்டில் வைத்திருந்த சேலை துணிமணியைச் சிவகுரு, ராகினி இளைய ஜோடிக்குத் தந்தனர். ரகுவீர், ஜானகி ஜோடி, தாத்தா, அப்பத்தா, சிவகுரு, ராகினி, தெய்வா, சண்முகத்திடம் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினர்.
தாத்தா, ரகுவீரிடம், "பேராண்டி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்துட்டு போங்க. ஜானகியை , அப்ப அப்ப இந்தக் கண்ணுல பார்த்தால் தான் மனசு நிறையும்." என்றார்.
"ஜானகி கண்ணு, உங்கள் நாநாஷா மேல் வைக்கிற பாசத்தில், இந்தக் கிழவனை மறந்துறாத." என்றார் தாத்தா. அவரைக் கட்டிக் கொண்டு, அவர் கன்னத்தில் முத்தமிட்ட ஜானகி, "உங்களை எப்படி மறப்பேன். மை டார்லிங் தாத்தா." என்றாள்.
"எவடி எம் புருஷனை டார்லிங்குனு கொஞ்சறது." என்ற சிவகாமியிடம்.
"அது தானே, சிவகாமி பேத்தியாளைத் தவிர யாருக்கு அம்புட்டுத் தைரியம் வரும்." என அப்பத்தா கன்னத்தைக் கிள்ளினாள் ஜானகி.
"ஏண்டி, உன் ஆசைக்கு என் கன்னம் தான் கிடைச்சதா, அதெல்லாம் பேராண்டி கிட்ட வச்சுக்க. கவனமா கேட்டுக்க, எங்கள் என்பதாங் கல்யாணத்தப்ப கொள்ளுப்பேரன் வந்திடனும்." என்றார் அப்பத்தா.
"ஏன், அப்பத்தா, இப்ப கணக்கு வச்சாலும் பத்து மாசம் ஆகாது. தாத்தாக்கு இரண்டு மாசத்தில் என்பது வயசாகிடுமே?" என ஒன்றும் அறியாதது போல் வினவினாள். ரகுவீர் சிரித்துக் கொண்டான்.
"குஷ் கப்ரி( நல்ல செய்தி) சொல்லச் சொல்றாங்க. ஓவர்டைம் செய்யனும்டி லுகாயி!" என ஜானகிக்கு மட்டும் கேட்கும் படி, அவள் நெற்றியில் விபூதி குங்குமத்தைச் சரி செய்வது போன்ற பாவனையில் சொன்னான் .
"அப்பத்தா சொன்னதுக்காகத் தான் வருவீங்க, இல்லைனா, உங்களுக்கு ஒன்றுமே இல்லை காளையா?" என அவன் கையைக் கிள்ளினாள்.
"புவாஷா, கிள்றா பாருங்க. கட்டாயம் இவளைத் தவுட்டுக்குத் தான் வாங்கி இருப்பீங்க." என்றான் ரகுவீர்.
ராகினி கண் கலங்கியவாறு இவர்கள் அருகில் வந்தவர், "பிறந்தபோது ரோஜாப்பூ குவியல் மாதிரி கை நிறைய இருந்தாள், இப்ப தான் பிறந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள பெரிய மனுசியா விதாயிக்கு வந்து நிற்கிறாள்." என்றார் ராகினி.
"ஆமாம், ஜானகி கிளம்புறாள், இனிமேல் இவள் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருங்க. நான் சசூரால் போய், அவங்களைப் படுத்த ஆரம்பிப்பேன்." எனக் கண்ணீர் வந்ததை மாற்ற உற்சாகமாகப் பேசினாள்.
தெய்வா, "ஜானகிம்மா, விளையாட்டெல்லாம் போதும், இனி அந்தக் குடும்பத்து மருமகளாய் நீதான் எல்லாம் பார்க்கனும். இன்னும் சின்னப் பிள்ளை இல்லை சரியா?" எனக் கன்னத்தில் முத்தமிட்டவர் , ரகுவீரிடம், "பார்த்துக்குங்க மாப்பிள்ளை, ஒரே பொண்ணுன்னு ரொம்பச் செல்லமா வளர்த்திட்டோம்." என முந்தானையை வாயில் வைத்து அழுதார்.
ஜானகி கஷ்டப்பட்டுக் கண்ணீரை அடக்கி இருக்க, தெய்வா ஆரம்பித்து வைத்து விட்டார். "அம்மா!!!" எனக் கட்டிக் கொண்டாள் ஜானகி. இருவரும் அழுகை படலத்தை ஆரம்பித்து வைக்க, மற்றவரும் கலங்கி அழுதுக் கொண்டிருந்தனர்.
சண்முகம், "ஏய் தெய்வா, புள்ளைக் கிளம்பும் போது அழ வைக்காதே . பாரத்துக்கங்க மாப்பிள்ளை." என ரகுவீர் கையைப் பிடித்தவர், அவனை ஆரத்தழுவி கொண்டார்.
ராகினி, சிவகுரு விடம் வந்த ஜானகி, "அப்பா ஜான் போயிட்டு வரேன்." என்ற சொன்ன நொடி உடைந்து அழுதார் சிவகுரு. ஜானகி அவரைக் கட்டிக் கொண்டவள், "அப்பா ஜான், நீங்க எப்பவுமே அப்பா- ஜான் தான், நான் புகுந்த வீடு போய்ட்டேன்னு, அப்பா-அமுதன் எல்லாம் ஆகக்கூடாது." எனக் கண்ணீரின் ஊடே சொன்னாள்.
"எப்பவுமே, அப்பா ஜான் தாண்ட என் கண்ணம்மா, எப்பவுமே அப்பா ஜான் தான். தினமும் போன் பண்ணு , ஜானும்மா தேவையில்லாத விசயத்தில் தலையிடாதே. புதுசா எந்த வம்பும் வேண்டாம். உன் சேப்டி எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம். மாப்பிள்ளை சொல்ற மாதிரி கேட்டு நடத்துக்கடா. சரியா? உனக்கு ஒன்னுனா, இனிமே தாங்குற சக்தி இல்லை, அப்பாஜான் உயிரே போயிடும்." எனக் கண் கலங்கினார். ஜானகி, "அப்பாஜான், அப்படி எல்லாம் சொல்லாதீங்க." என அழுதாள்.
சிவகாமி தான், "குரு, ஊருக்கு போறப் பிள்ளைக்கிட்ட இப்படி எல்லாம் பேசாதே!" எனக் கண்டித்தார்.
ஜானகியை, ஒரு கையில் அணைத்தவாறு, ரகுவீரிடம் வந்தவர், "மாப்பிள்ளை ஜானும்மா எங்கள் உயிர். உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை, இருந்தாலும் அவள் அப்பாஜான், அதனால் சொல்றேன்." என ரகுவீர் கைகளைப் பற்றித் தலையை அதில் வைத்தார்,
ரகுவீர் பதறிவிட்டான், "பூஃபாஷா, என் உயிரும் அவள் தான், கவலை படாதீங்க. என்னை மீறி எதுவும் அவளைத் தொடாது. இது என்னுடைய ப்ராமிஸ்." என்றான் ரகுவீர்.
ராகினியிடம் வந்த ஜானகி, "மாதாஜி போய்ட்டு வரேன், எப்பவுமே உங்க கண்ணில் சந்தோஷம் தான் இருக்கனும். உங்களுடைய சோகமான முகத்தை, தவிப்பைப் பார்க்க முடியாமல் தான், உங்கள் பிறந்த வீட்டோடு சேர்த்து வைக்க ஆசைப் பட்டோம். நீங்களும், அப்பாஜானும் அடிக்கடி மும்பைக்கு உங்கள் பிறந்த வீட்டுக்கு வரனும். இப்போ அது உங்கள் மகள் வீடும் கூட, என்ன வீருஜி" என்றவுடன் ரகுவீர், "ஆமாம் புவாஷா, மும்பைக்கு அடிக்கடி வரனும். நான் மிஸ் பண்ணிய புவாஷா-வீரூ டைம் எல்லாம், வாபஸ் வேணும்." என அவர் கையைப் பிடித்தான்.
"நான் உங்களை எங்கள் வீட்டுக்கு ஜானகி ரகுவீர்சிங் ராத்தோடாக, இன்வைட் பண்றேன் மாதாஜி. நீங்க எப்பவெல்லாம், பிறந்த வீட்டில் சீராடனும்னு ஆசை படுறீங்களோ, பறந்து வந்துடுங்க. மூன்று தலைமுறை உங்களுக்காக வெயிட்டிங்." எனக் கண்ணீரைத் துடைத்து, ஜானகி ராகினிக்கு அழைப்பு விடுத்தாள்.
"ஜானும்மா, நான் உனக்கு அம்மாவா என்ன செஞ்சேன்னு தெரியலை, ஏன்னா உனக்குத் தேவையானது எல்லாம் தெய்வா செய்திடும். ஆனால் என் முகத்தில் சந்தோஷம் வரனும்னு நீ எனக்கு அம்மா மாதிரி, பார்த்திருக்கியேடி. போன ஜென்மத்துப் புண்ணியம் தான், எனக்குக் கிடைத்த வரம் என் பிள்ளைகள்." என ஜானகி ரகுவீரை வாரி அணைத்துக் கொண்டு, அமுதன், பாலன் கணேஷை பார்த்துக் கண்ணால் அழைத்தார், அவர்கள் அனைவரும் வந்து ராக்கினியைக் கட்டிக் கொண்டனர். அங்கு ஒரு அழகிய தாய் சேய்கள் சங்கமம் நடந்தது.அமுதன், பாலன், கணேஷிடம் டெயரிமில்க் சாக்லேட் பாரை ஒரு கடி கடித்துவிட்டு அவர்களுக்கும் ஊட்டினாள் ஜானகி.
அமிர்தா, ஜானகியைக் கட்டிக் கொண்டு விம்மி அழுதாள், ஜானகியும் அழுதாள், சமாளித்து, "இப்ப அழுகையை நிறுத்த போறியா இல்லையாடி. எப்பப் பார் ஓவர் சீன். டெய்லி ஃபுல் பேக்கப்போட, நிமிஷத்துக்கு நிமிஷம் நீ செய்யறது எல்லாம் இனி எனக்குத் தெரியனும்." என மிரட்டினாள்.
"ஜானும்மா, அம்மு என் கூட இருக்கும் போது மட்டும் கொஞ்சம் சென்சார் ஆகும்." என்றான் பாலன். அமிர்தா அவன் கையில் அடித்தாள். இளையவர்கள் சிரித்தனர்.
மயூரி, மஞ்சரியிடம் வந்தவள், "இரண்டு பேரும் ப்ராஜெக்ட் சமிட் பண்ணிட்டு, அடுத்த வாரம் மும்பையில் இருக்கனும்." என்றாள் ஜானகி.
"சரிங்க பாபிஷா!" என இருவரும் கோரஸ் பாடினர். அமுதன் ரகுவீரை கட்டியணைத்தவன், "அத்தான் பார்த்துக்குங்க." எனக் கண்கலங்கினான்.
"சாலேஷா உன் சோட்டிக்கிட்ட சொல்லு, என்னைப் பார்த்துக்கச் சொல்லி. மும்பையிலும், எல்லாம் இவள் டீம் தான்." என்றான் ரகுவீர்.
மயூரியின் தலையை வருடியவன், "ஜானு சொன்ன மாதிரி அடுத்த வாரம் மும்பை வந்திடனும் சாசாஷா வெயிட்டிங்." என நெற்றியில் முத்தமிட்டான்.
"ஓகே பையா!" என அமுதனைப் பார்த்தவாறு பதில் சொன்னாள் மயூரி.
"ஜீஜூஷா, ஜானி ஹேப்பி ஜர்னி, ஹேப்பி ஹனிமூன். என்ஜாய் பண்ணிட்டு வாங்க." என்றாள் மஞ்சரி.
ரகுவீர், "மஞ்சி யூரோப் போய்ட்டு வந்து முதலில் உன் ஷாதி தான், ரெடியாகிக்கோ. சீக்கிரம் மும்பை வந்து ஷாப்பிங் ஆரம்பிச்சிடு. டிசைனர் அட்ரஸ் ராஜ்விகிட்ட கொடுத்துட்டுப் போகிறேன். போய்ப் பாரு." என்றான்.
"தாங்க்யூ ஜீஜூ, தாங்க்யூ வெரிமச்." என ரகுவீரை, தழுவி வழியனுப்பினாள் மஞ்சரி.
ஜானகி, ரகுவீர் புறப்படுவதற்கு அவர்களது கார், முதல் சர்வீஸ் போய் வந்து தயாராக நின்றது. இருவரும் ஜீன்ஸ் டிசர்ட், குர்தி கூலர்ஸ் என மேட் ஃபார் ஈச் அதர் எனச் சரியான ஜோடியாக இருந்தனர்.
மூன்று மணிக்கு முன் கிளம்ப வேண்டும் என அப்பத்தா பரபரத்தார். எல்லாரையும் கட்டியணைத்து, தாக்கப் படி பேசி ஜானகி பிரியாவிடைப் பெற்றாள்.
ரகுவீர், கைக்கூப்பி ராகினி, சிவகுருவிடம் நின்றான். அவர் ரகுவீரை கட்டியணைத்து, "பார்த்து மெதுவாகவே போங்க மாப்பிள்ளை." என விடை கொடுத்தார். ராகினி, ரகுவீர் கட்டியணைத்து, "புஜ்ஜி, உங்க லாட்லியைப் பற்றிய கவலையே வேண்டாம். டென்ஷன் ஃப்ரியா, பஹூ ராணியை வரவேற்க சாசும்மாவாக ரெடியாகுங்க." என அவரை முத்தமிட்டான். அவரும் ரகுவீர் கன்னத்தில் முத்தமிட்டவர், "எனக்கு என் வீரூவே, என் ஜமாயிஷாவா ஆனது சொல்லமுடியாத அளவு பெரிய சந்தோஷம்." என்றார் ராகினி.
ஜானகி அப்பாவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு, "போயிட்டு வர்றேன் அப்பாஜான். மாதாஜி அப்பாஜானை பார்த்துக்குங்க." எனக் கண்கலங்கி, அவர் அழும் முன் தன் கூலர்ஸை மாட்டி, "அமித்து வரேன்டி!" என அவளிடமும் விடை பெற்று, எல்லாருக்கும் ஒரு' பை' யோடு, "வீரூஜி வண்டியை எடுங்க!” எனக் காரில் ஏறி அமர்ந்தாள்.
அவள் சட்டென ஏறி அமரவும் எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆனது. அமுதன் மட்டும் அவளோடு வந்து, கார் கண்ணாடியை இறக்கச் சொல்லி, குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு. “டேக் கேர் மை டியர்." என்றவன். வழிந்தக் கண்ணீரைத் துடைத்து. "போய்ட்டு வாடி என் செல்லக்குட்டி." என அவள் கன்னத்தைப் பிடித்தும் கொஞ்சினார்.
"போயிட்டு வாங்க அத்தான்." என ரகுவீரையும் வழியனுப்பி வைத்தான்.
எல்லாரும் பார்த்திருக்க,அந்தக் கருப்பு நிற ஆடிக் கார் , மலைகளின் ஊடே பறந்தது. சிவமாளிகையின் செல்வமகள் தன் கணவனோடு காதலாகிக் கசிந்துருகி பிறந்த வீட்டின் பிரிவில் கண்ணீர் மல்கக் கிளம்பி விட்டாள் ஜானகி தேவி ரகுவீர் சிங் ராத்தோட்.
மலையை விட்டு இறங்கி ஓர் ஓரமாகக் காரை நிறுத்திய ரகுவீர், ஓட்டுனர் சீட்டிலிருந்தபடியே, ஜானகியைக் கட்டியணைத்தான், கிளம்பும் போது அழக்கூடாது என ஜானகி அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் தோள்களை நனைத்தது. மெல்ல முதுகை வருடி, "ஓகே டி மேரிஜான், நீ நினைச்ச உடனே எப்போ வேணும்னாலும் இங்குப் பறந்து வரலாம். இப்ப அத்தானையும் கொஞ்சம் கவனி, இரண்டு மணி நேரம் ஆச்சு." எனக் கழுத்து வளைவில் அவன் திருவிளையாட்டை ஆரம்பித்தான்.
அழுகை அடங்கி, குறும்பு மேலிட அவன் தோள்களைப் பற்களால் கவ்வினாள். "ஆ வலிக்குதுடி குட்டிப் பிசாசு, எலும்பு வாங்கித் தரேன், என்னை விட்டுடு மேரிமா." என அவள் வாய்க்குத் தண்டனை அளித்து, தண்ணீரை நீட்டினான். அழுது சிவந்த முகம், வெட்கச் சிரிப்பைப் பூசிக் கொண்டது.
அவனும் மனைவி முகத்தின் புன்னகையில் மகிழ்ந்து வண்டியை எடுத்தான். கூகுள் மேப் உதவியுடன், கரூர் ரோட்டைப் பிடித்தனர். மேலும் அரை மணி நேரப் பயணத்துக்குப் பின், ஒரு காபி குடித்து விட்டு, ஜானகியிடம் ட்ரைவிங்க் பொறுப்பைக் கொடுத்து விட்டு ரகுவீர் கொஞ்சம் டென்ஷனாகக் கவனித்து வந்தான். ஜானகிக்கு முகத்தில் புன்னகை அரும்பியது.
"வீரூஜி, கூல் நான் நல்லா ஓட்டுவேன், எனச் சரியான வேகத்தில் லாவகமாக, காரை ஓட்டினாள். தொப்பூர் வனப்பகுதி, மலைப்பகுதியில் ஓட்டச் சிரமம் என ரகுவீர், தான் ஓட்டுவதாகச் சொல்லும் போதும் ஜானகி மறுத்தாள்.
"வீரூஜி, எல்லாப் பொறுப்பும் நீங்களே தான் பார்க்கனுமா? கொஞ்சம் நேரம் ரிலாக்ஸாக, ஜெர்னியை என்ஜாய் பண்ணுங்க. நான் உங்கள் எல்லாப் பொறுப்பிலும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புறேன். கொடுத்துத் தான் பாருங்களேன்." எனச் சாலையில் கண் வைத்தவாறே, அவனிடம் பேசினாள்.
"டீக் ஹை, ராணிஷா, உங்கள் ஹீக்கும்.” என்றான் ரகுவீர்.
"அது" என அவளும் சிரித்தாள்.பயணத்தின் போது, நீண்ட நேரம், ஒருவரோடு ஒருவர் ரசித்துப் பேசிக் கொண்டே வந்தனர். ரகுவீர் பள்ளி, கல்லூரி, வெளிநாட்டுப் படிப்புப் பயணம் என வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான். ராஜ்வீர் சொன்னது போல், ஜானகியோடு சேர்ந்து நன்றாகப் பேசக் கற்றிருந்தான். ஜனகியும் சுவாரஸ்யமாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு வந்தாள். அவனும் ஈடு கொடுத்து, யாரிடமும் பகிராத, அல்லது தேவையில்லாத எனத் தோன்றும் ஒவ்வொன்றையும் கூட அவளோடு பகிர்ந்தான். நேரமும் காரும் வேகமாக ஓடியது.
ஓசூர் வந்த பின் தான் அவனிடம் காரைத் தந்தாள் ஜானகி. ரகுவீர் கையில் வண்டி சீறிப் பாய்ந்தது. ட்ராபிக் குறைவாக இருந்த வழியைத் தேர்ந்தெடுத்து ஒன்பது மணிக்குப் பெங்களூர் சென்றடைந்தனர். இரவு உணவைச் சாப்பிட்டு முடித்து, தனியாகப் பேக் செய்திருந்த, பேகுடன், ஏற்கனவே புக் செய்திருந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தனர்.
நாளை பன்னிரண்டு மணிக்குத் தான் ப்ளைட். தங்கள் கம்பெனி ட்ரைவர் வந்தவுடன் காரை அவனிடம் கொடுத்து விட்டுக் கிளம்புவதாகத் திட்டம். ஜானகிக்குப் பெங்களூரு என்றவுடன் ஊரின் மேல் ஒரு பாசம் வந்தது. அவள் ஏதோ நினைவில் லயித்திருந்தாள். ரகுவீர், குளித்து உடை மாற்றி வந்தவன், அவளைப் பார்த்து, "ராணிஷா என்ன பலமான யோசனையில் இருக்காங்க?" என்றான்.
"பெங்களூர் வந்தவுடனே, பழைய ஞாபகம். மயூரியும், நானும் ஏற்கனவே பழக்கமாகி ஹவுஸ்மேட்ஸா இருந்த போதும், கடைசிச் செமஸ்டரில் தான் மாமா மகளென்று தெரியும். மயூரி தன் படே பையாவை பற்றிச் சொல்லும் போது வரும் கற்பனை வேறு. என் வீரூஜி வேறு. எனக்குச் சேர்த்துப் பார்க்கத் தோன்றவே இல்லை. ஆச்சரியமா இருக்கு." என்றாள் ஜானகி.
"உனக்குத் தான் பால் கோபால் ஆச்சே, அப்புறம் எப்படித் தோணும்." என்றான் ரகுவீர், அவளைக் கை வளைவில் இருத்தி இருந்தான்.
"ஆனால் உங்கள் குரல் போனில் கேட்கும் போது ரொம்ப அதிகாரமாகத் தோனிச்சு. அவளும் படே பையா, பிஸ்னஸ் மேன் என ஏகப் பில்டப் கொடுத்து வச்சிருந்தாள்." என்றாள் ஜானகி, அவன் தோளில் தலை சாய்த்து, கால் நீட்டி பெட்டில் அமர்ந்திருந்தனர்.
"ஆனால், நீ பேசும் போது , உன்னுடைய குரல் ரொம்பப் பரிச்சயமான, நெருக்கமான குரலாக இருந்தது. புவாஷா குரலும், உன்னுடைய குரலும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் தான், ஸ்வரூவை அனுப்பவும் சம்மதிச்சேன்." என்றான் ரகுவீர்.
"ஆமாம், ஆமாம் சம்மதிச்சிங்க, விசாரணை கைதி மாதிரி ஏகப்பட்ட கேள்வி!" என்றாள் ஜானகி.
"அதுக்கு என்னடி பண்றது, உங்க அண்ணன் தெரிஞ்சு அனுப்பினான். நான் தெரியாமல் தானே அனுப்பினேன்." என அவளைத் தலையணையில் படுக்க வைத்து தானும் சரியாகப் படுத்தான்.
"ஆமாம், அன்னைக்கே ஒரு டிடெக்டிவ் வைத்திருந்தால், உங்கள் புவாஷாவை கண்டு பிடிச்சு இருப்பீங்க." என்றாள்.
"எல்லோரும் சேர்ந்து என் கிட்ட மறைச்சீங்களே. ஆனால் நீ புவாஷா கி லாட்லின்னு தெரியும் முன்னாடியே, ஐ லவ்டு யூ." என்று அவளை முத்தமிட்டான். அவனோடே ஒன்றிக் கொண்டாள் ஜானகி.
காலையில் கண் விழிக்க முடியாமல் அசத்தியது இருவருக்கும். ரகுவீர் போன் இசைத்ததில், தன் மேல் கொடியெனப் படர்ந்திருந்தவளை விலக்கி போனை எடுத்தவன். ஓட்டுநரைக் காத்திருக்கச் சொன்னான். முதல் முன்னிரவில் கார்ப் பயணமும், பின்னிரவில் காதல் பயணமும் அவளைச் சோர்ந்திருக்கச் செய்தது. அவளைக் கொஞ்சி, கெஞ்சி மும்பை செல்ல ஏர்போர்ட்டுக்கு கிளப்பினான் ரகுவீர் சிங் ராத்தோட்.
மும்பையில் இறங்கிய படே பையா, பாபிஷாவை வரவேற்க ரன்வீர் ஏர்போர்ட்டுக்கே சென்று விட்டான்.
"பாபிஷா வெல்லம் டூ மும்பை. பாய் வெல்கம். வீ மிஸ் யூ போத்!" எனக் கட்டிக் கொண்டான். ரன்வீரை இத்தனை நாள், ஒரு சிறு வயது நண்பன் என்ற எண்ணம் மட்டுமே இருந்த ஜானகிக்கு, அண்ணி, கொழுந்தன் உறவு முறையின் பாசம் வந்தது.
"சரி விடு ரன்வி , நான் தான் வந்துட்டேன் இல்லை, இனி ஒரு கைப் பார்ப்போம்." என அவனுக்கு ஹை ஃபை கொடுத்தாள்.
"ஏய் மிர்ச்சி, அவன் சும்மாவே ஆடுவேன் , நீ வேறு சேர்ந்தால், ஸ்வர்ண மஹல் உருப்பட்ட மாதிரி தான்." என்றான் ரகுவீர் .
மதியம் இரண்டு மணி அளவில் ராத்தோட் மேன்ஷன் வந்து சேர்ந்தனர் தம்பதியினர். ரகுவீர், ஜானகிக்கு உணர்ச்சிப் பூர்வமான, வரவேற்பு கிடைத்தது. சாப்பிட்டு உட்கார்ந்து இருந்த பெரியவர்கள், இவர்களைப் பார்க்கவும், "ஆவோ, ஆவோ!" எனக் காலில் விழுந்த, தம்பதியைக் கட்டியணைத்துக் கொண்டனர் தாதாஷா, தாதிஷா.
ரகுவீரைப் பார்த்துத் தாதிஷா, "காயம் ஆறிடிச்சா?" எனக் கேட்டார்.
"எல்லாம் காயமும் ஆறிடிச்சு. உங்கள் நாத்தி(மகள் வழிப் பேத்தி) எல்லாக் காயத்தையும் ஆறவச்சுட்டாள்." என அவளைப் பார்த்தவாறு இரு பொருள் படச் சொன்னான்.
தாதாஷா, "இப்ப தான் வீட்டுக்கு ஒளி வந்த மாதிரி இருக்கு." என நாத்தியைக் கொஞ்சினார்.
"நாநாஷா, சிறுமலையிலிருந்து பேக் பண்ணி, ராத்தோட் பஹூவா வந்துட்டேன்." என்றாள் ஜானகி.
"பிறகு, நம்ம வீட்டில் தானே நாம இருக்கனும், இரண்டு பெண்ணைக் கொடுத்து ஒரு பெண்ணைத் தானே கூட்டிட்டு வந்திருக்கோம்." என்றார் தாதாஷா.
“இந்த ஒரு பொண்ணு அந்த ரெண்டு பொண்ணுக்கு சமம். " என்றான் ரகுவீர். ஜானகி அழகு காட்டினாள். "ராகினி நல்லா இருக்கிறாளா, ஜமாயிஷா, சம்பந்த்ஷா எல்லாம் நலமா?" என்றார் தாதிஷா.
"எல்லாரும் நல்லா இருக்காங்க, எல்லாருக்கும் ஜானகி கிளம்புகிறாளேன்னு ஒரே பீலிங்." என ஜானகியின் முகம் வாடியது.
தாதாஷா, தாதிஷாவுக்கு அவள் முகம் வாடியது கண்டு பொறுக்கவில்லை, "மேரி ஸோனு லட்கி, உனக்கு இங்கே என்ன வேணும் சொல்லு நாங்கள் செய்கிறோம்." என்றார் தாதிஷா.
"ஆமாம் நாநிஷா உனக்காக டான்ஸ் கூட ஆடுவாள்." என வம்பிழுத்தார் தாதாஷா. "ஆமாம் இந்தப் புட்டே ராத்தோட்ஷாவும் கூட ஆடுவார்." என்றார் தாதிஷா. ராத்தோட்ஷா எனத் தாதிஷா சொன்னதில் ரகுவீரைப் பார்த்துச் சிரித்தாள் ஜானகி.
ஷப்னம், மகன், மருமகளைப் பார்த்து விட்டு, பரிமாறிக் கொண்டிருந்தவர் விரைந்து வந்தார். இருவரும் அவர் கால்களைத் தொட, "குஷ் ரஹோ!" எனப் பாதியில் தூக்கிக் கட்டியணைத்துக் கொண்டார்.
பஹூராணியின் முகத்தில் இருந்த புதுக் கலையையும், மகனின் முழுச் சந்தோஷமான முகத்தையும், நொடியில் ஆராய்ந்து அறிந்தவர் மனம் நிறைந்து போனார்.
"மாஷா நான் வந்துட்டேன், இனிமே உங்களுக்கு ரெஸ்ட் தான்." என்றாள் ஜானகி. "ஜானிமா, எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாம். இன்னும் நிறைய வேலை வாங்கு. என் போதா, போதி பின்னாடித் திரியனும்." என்றார் ஷப்னம். ஜானகி வெட்கத்தில் முகம் சிவந்து டைனிங்கில் மாமன்களைக் காணச் சென்றாள்.
"மாஷா, இப்ப தான் அவள் ஒத்துக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பச்சிருக்கோம். உங்கள் பேட்டா கொஞ்சமாவது என்ஜாய்ப் பண்ணிக்கிறேன், அதுக்குள்ள போதா, போதின்னு ஆரம்பிக்காதீங்க." என ரகுவீர் அம்மாவின் தோளில் கைப் போட்டுச் செல்லம் கொஞ்சினான். ஷப்னம் வெட்கத்துடன் அவனை ஒரு அடிப் போட்டு, "மாஷாகிட்ட பேசுறப் பேச்சா இது. பேஷரம் கைக்கா (வெட்கம் இல்லாதவன்)." என்றார்.
ராஜேன் அங்கு வந்தவர், "என்ன என் மகன், அப்படிப் பேஷரமா செஞ்சிட்டான." என்றார். ஷப்னம் தலையில் கை வைத்து, "பேட்டாக்கு மேல் நீங்க தான் பேஷரம். நான் என் பஹூ கிட்டப் போறேன்." எனப் புன்னகையோடு சென்றார் ஷப்னம்.
மகனைக் கட்டியணைத்த ராஜேன், "ரகுவி தும் டீக் ஹோ, மாடு முட்டிய காயம் சரியானதா?" என்றார். "ஸப் டீக்ஹை பாபுஷா." என்றவுடன், சாப்பிடு போ என அனுப்பி வைத்தார். டைனிங்கில் வந்து பார்த்தால், ஜானகி இரண்ட
மயனின் கலையும், மன்மதனின் பார்வையும் ஒருங்கே பெற்ற இடமாக, அந்தத் தோட்டத்து வீட்டு மாடி காட்சி அளித்தது. எஸ்.எஸ். கார்டனுக்குத் தாத்தா அப்பத்தாவோடு, புதுமணத் தம்பதியான ரகுவீர், ஜானகி தங்கள் வாழ்க்கையின் தடைகளைத் தாண்டி புது வாழ்வை ஆரம்பிக்க வந்தனர்.
சிறுமலையின் இந்தக் காட்டுப் பகுதி மூலிகை வனம். அதில் அவர்களின் சங்கமம் நடந்தால் நலம் என நினைத்த சிவகாமி அப்பத்தா , ஷண்முகத்தை அனுப்பி ஏற்பாடுகளைச் செய்தார். இரண்டு மணி நேர கேப்பில் எல்லா ஏற்பாடும் செய்து வந்தார். அவர்கள் தோட்டத்து மலர்களைக் கொண்டே அலங்காரம் செய்திருந்தனர்.
தோட்டத்து வீட்டுக்குள் இருந்து, மாடிக்குப் படி இருந்தது. அதிலிருந்து ஹால், ரூம் பெரிய பால்கனி . பால்கனியில் ரூபிங் போட்டிருந்தனர். சுற்றி இடுப்பளவு மட்டுமே உள்ள சுற்றுச் சுவர். அதில் ஒரு மரக்கட்டில் மெத்தை, சுற்றி திரைச்சீலை, கொசுவலை, பூ அலங்காரம் என இடமே ரம்யமாக இருந்தது.
ரகுவீர், ஜானகி தாத்தா, அப்பத்தாவின் சண்டையைக் கேட்டவாறே மேலே வந்து சிரித்தனர். ரகுவீர் தாத்தாவைக் கேலி செய்ய ஜானகிக்குக் கோபம் வந்தது. அவளும் வம்பிலுத்தாள்.
"எங்க தாத்தாவை பார்த்தீங்கல்ல, எல்லாத் தப்பும் செஞ்சேன்னு, எவ்வளவு கெத்தா சொல்றார்." என்றாள் ஜானகி.
"ஆமாண்டி, ஒரு பெக்கை நீட்டுறார். நான் ஆடிப் போயிட்டேன். ஒரு வேளை என்னை டெஸ்ட் பண்றாரோ?" என்றான்.
"இருக்கும் வீரூஜி, இவங்க இரண்டு பேரும் ஜாடிக் கேத்த மூடி தான்." என்றாள் ஜானகி. ஹால் தாண்டி ரூமிற்குள் வந்து பார்த்தாள் கட்டில் இல்லை, "கீழே படுத்துகிறதா, பெட் எதையும் காணோமே?" என்றான் ரகுவீர்.
"கிழவி வேற ஏதாவது செய்து இருக்கும் இருங்க பார்க்கிறேன்." என்றவள், பால்கனி கதவைத் திறந்தாள். கட்டில் மெத்தையும், திரைச்சீலைகளும், பூச் சரங்களும் ஒரு செட்டப்பாக இருந்தது. அங்கங்கே மெழுகுவர்த்திக் கண்ணாடிக் குடுவையோடு இருந்தது.
"ரொமான்டிக் அப்பத்தா தான். எவ்வளவு ஏற்பாடு செய்திருக்காங்க!" என ரகுவீர் சுற்றிப் பார்த்தான். "தண்ணீர் விழும் சத்தம் கேட்குதே?" என்றான் ரகுவீர்.
"ஆமாம் ஒரு சுனை இருக்கு, மலையிலிருந்து வரும் தண்ணீர் அதில் விழும், தொட்டி மாதிரி கட்டி அதில் விழும் படி செய்து இருப்பாங்க." என்றாள் ஜானகி. "ஓ சூப்பர் காலையில் பார்ப்போம்." என்றான் ரகுவீர்.
அங்கிருந்த ஷோபா ஊஞ்சலில் அமர்ந்தனர், "வீருஜி, உங்களைக் காதலிக்க என்னை விட்டால் எவளும் வரமாட்டாள்னு தெரியும். இருந்தாலும் ஃபாரின்ல படிச்சீங்களே, டேட்டிங் கூட யாரும் கூப்பிட்டது இல்லையா?" என்றாள்.
"ஏன் கூப்பிடாமல் என்ன, அது தினம் எவளாவது கூப்பிடுவாள், ஒருத்தி லவ் பண்றேன், லிவ்விங் டு கெதராக இருக்கலாம். பிடிக்காமல் போனால் விலகிடலாம்னு கூடக் கூப்பிட்டாள்." என நிறுத்தினான்.
"அப்புறம் என்ன சொன்னீங்க?" என்றாள். "இதில் சொல்றதுக்கு என்ன இருக்கு, நாட் இன்ட்ரஸ்டட்னு சொல்லிட்டேன்." என்றான்.
"அப்ப உங்களுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. எனக்கும் ஒரு இழவும் தெரியாதே!" என வருந்தினாள் ஜானகி.
"உனக்கா ஒண்ணும் தெரியாது. ஏன் க்யூரியாசிட்டியில் என்ன ஏதுன்னு ஆராயாமலா விட்ட???" என நமட்டுச்சிரிப்புச் சிரித்தான் ரகுவீர்.
"ஹலோ நான் குட் கேர்ள் தெரியுமா, புருஷனா வர்றவன் சொல்லிக் கொடுப்பான்னு இருந்துட்டேன்." என்றாள் ஜானகி. அவள் சொன்ன விதத்தில் ரகுவீருக்குச் சிரிப்பு வந்தது.
அவள் கன்னம் பிடித்துக் கொஞ்சியவன், "சோ ஸ்வீட் லுகாயிடி. நிஜமாவே தெரியாதா, அப்ப என்னடி பண்றது?" என்றான் அப்பாவியாக.
"இந்தச் சொசைட்டி, கல்யாணத்துக்கு முன்னாடி, இதைப் பத்தி பேசாதே, பார்க்காதே, படிக்காதே அது குற்றம்னு சொல்லுது. அதே கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனைச் சந்தோஷமா வச்சிக்கோ, அனுசரிச்சுக்கோன்னா எப்படி?" என தீவிரமாக யோசித்தாள் ஜானகி.
"ஜானும்மா சொசைட்டி பற்றிப் பேசுற நேரமாடி இது. இருந்தாலும் என் லுகாயி சொன்னான்னு கவர்மெண்ட்டுக்கு மனு போடுறேன்." என்றான் ரகுவீர் கண்களில் கேலி அப்பட்டமாகத் தெரிந்தது.
"என்னைய வச்சு காமெடி பண்றீங்களா? போங்க உங்க கூடப் பேசமாட்டேன்." முறுக்கினாள் ஜானகி.
"ஜானும்மா நிஜமாவே உன்னுடைய இந்த விசயம் சர்ப்ரைசிங்டி. புவாஷாவை சேர்த்து வைக்கனும்னு வந்த. பெரிய பிஸ்னஸ் க்ராக் பண்ற, கடத்தும் போது தைரியமா இருந்த. ரெனாவத்தை வாளெடுத்து வீசின. இதில் என்னடி பூஜ்யம். சினிமா எல்லாம் பார்ப்ப தானே. இப்ப மொபைல்ல எல்லாம் வந்துடுச்சே!" என்றான்.
"வீரூஜி, ரொமான்ஸ் எல்லாம் ஓகே. அது ஃபீல் தன்னால் வருதே. நான் தான் குட் கேர்ள்னு சொன்னேனே. மற்றது எல்லாம் ஒமட்டும் அதனால் பார்க்க மாட்டேன்." என்றாள் ஜானகி.
"நம்ப முடியலையே, உதய்பூரில் பத்தாம் மாசம் புள்ளை பெத்துக்கனும்னு சொன்ன." என்றான்.
"வீரூஜி, அதுவும் வாய் வார்த்தை தான். அப்பத்தா சொல்றதை அப்படியே சொல்லுவேன்." எனப் போட்டு உடைத்தாள் ஜானகி.
"இப்ப என்கிட்ட விளையாடுறியா. அன்னைக்கு வந்து ஹக் பண்ண?" என்றான்.
"போங்க நான் சொன்னா நம்ப மாட்டிக்கிறீங்க." என நொந்துக் கொண்டாள்.
"இப்படி ட்ரெஸ் பண்ணிட்டு வந்திருக்க?" என்றான். "அப்பத்தா சொன்னதால் செஞ்சேன்." என்றாள்.
"ஜானும்மா எனக்குத் தலையே சுத்துதுடி. இரு நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். எது உண்மை , எது ஃப்ராங்குனு பார்ப்போம்." என்றான். ஜானகி ஒரு சிரிப்பு சிரித்தாள்.
"வீரூஜி, உங்க டிரஸ்." என நீட்டினாள். "அந்த வேட்டி கொடு அதே பழகிடுச்சு." என வாங்கிக் கொண்டான். அவன் மாற்றச் சென்றான். இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. பால்கனியில் லைட்டும் ஃபேனும் இருந்தது. விடி விளக்கைப் போட்டு விட்டு ட்யுப் லைட்டை அணைத்தாள் ஜானகி.
கண்ணாடிக் குடுவைக்குள் இருந்த வாசனை மெழுகுதிரிகளை ஒவ்வொன்றாக ஏற்றினாள். ரகுவீர் பார்க்கும் போது, கையில் ஒரு மெழுகு திரியோடு, வரிசையாக ஒளி ஏற்றி வந்த ஜானகியின் முகத்தில் ஒளிச் சுடர் பட்டு மிளிர்ந்தாள். முகத்தில் மென்னகை இருந்தது. கை விளக்கு ஏந்திய காரிகையாய், சிறந்த ஒரு ஓவியன் தூரிகை கொண்டு வரைந்த நிழல் ஓவியமாக ரகுவீரின் மனதை மயக்கினாள் .
ரகுவீர் காந்தம் இழுத்த இரும்பு போல் அவளருகே சென்றான், மெழுகு ஏற்றுவதில் முனைப்பாக இருந்த ஜானகி, அவன் வந்ததைக் கவனிக்காமல் அடுத்த மெழுகு ஏற்ற செல்லும் போது, முந்தி அவன் காலில் மிதிப் பட்டு, சேப்டி பின் எடுத்துக் கொண்டது. முந்தானை சரிய அவளும்
பின்னே சாய்ந்தாள், அவளைப் பின்னிருந்து அணைத்துத் தாங்கினான் ரகுவீர். அவன் கை வளைவில் அவன் தோளில் அவள் சாய்ந்திருக்க, கை இடையைச் சுற்றி இருந்தது. முதலில் விழுந்து விடுவோமோ என நினைத்தவள், அவன் கைகளில் பாதுகாப்பாய் இருக்க, அவன் முகம் குனிந்து இவள் கழுத்து வளைவில் மயங்கி நின்றான்.
அவளும் அவன் ஸ்பரிசத்தில் மயங்கியவள், "அத்தான், மீதி இரண்டு மெழுகையும் ஏற்றிட்டு வந்துடுறேன்." என அவன் காதில் கிசுகிசுத்தாள்.
"ம்ம்." என்றவன் அவளை விடுவித்த பாடு இல்லை. மஞ்சள் மணமும் அவள் மணமும் அவளைக் கிறங்கடிக்க, அவனின் ஃபெர்வ்யூம் அவளை மயக்கியது.
"அத்தான்!" என்றவளை, அப்படியே நடத்தி ஊஞ்சலில் அமர்த்திக் கொண்டான். அவள் சேலை ஒற்றைத் தலைப்பாகச் சரிந்திருக்க, தூக்கிப் போட்ட கொண்டையின் கிளிப்பை ரகுவீர் உருவி எடுத்து விடவும், தலை முடி முதுகில் புரண்டது. அவனோடு இயைந்து முகத்தால் முகத்தைத் தேய்த்தாள் ஜானகி.
ரகுவீர் நிலை மாறாமல் மயக்கத்தில் அமர்ந்திருக்க. "தூங்கிட்டிங்களா?" என்றாள். பதிலை அவள் இடையில் தன் கைகளில் பதிலாகக் காண்பித்தான் அவள் கணவன். சலங்கை குலுக்கி விட்ட சிரிப்பு சிரித்த ஜானகி, "இதென்ன மௌன விரதமா, இல்லை என் வீரூஜிக்கு பேச்சு வராமல் போச்சா?" என்றாள் ஜானகி.
"கைக்கும், வாய்க்கும் வேறு வேலை இருக்கும் போது பேச்சு எதுக்குடி மேரிஜான்." என்றான். "இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு தான் பார்ப்போம்னு பிகு பண்ணீங்களா?" எனத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்து கேட்டாள்.
"ஏண்டி கொஞ்சம் முன்னாடி பேசினது ப்ராங்கா?" என்றான். இல்லை, ஆமாம் என மாற்றி, மாற்றித் தலை அசைத்தவள்"ஆனால் நான் குட் கேர்ள்." என்றாள்.
"ஓகோ குட் கேர்ள் மேரிஜான், பழைய ஜானுவாக நீ முழுதா கிடைத்தை எப்படி நம்புறது, மயக்கம் போட்டேனா? நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்." என்றான்.
"என்ன ரிஸ்க், மயக்கம் போட்டால் தண்ணீர் தெளிச்சு எழுப்பி விடுங்க. பழைய ஜானுன்னு எப்படி உங்களுக்கு ஃப்ரூவ் பண்றது" எனக் கேட்டாள் ஜானகி.
"அதுக்குன்னு சில டெஸ்ட் வச்சிருக்கேன், நீ பாஸ் பண்ணிட்டேன்னா ஓகே!" எனச் சிரித்தபடி சொன்னான்.
"போய்யா, நீயும் உன் டெஸ்ட்டும்." எனக் கையை உதறிவிட்டு வேறு பக்கம் போய் நின்றாள் ஜானகி. ரகுவீர் பலமாகச் சிரித்தான். "மிர்ச்சி டெஸ்ட்ன்னா பயமாடி?" என்றான்.
"பயமெல்லாம் ஒண்ணும் கிடையாது, எதுவா இருந்தாலும் நான் தான் ஜெயிப்பேன். சும்மா ரீல் சுத்தாதீங்க. உங்களுக்கு என் கூட உறவு வச்சுக்கப் பயமா இருந்தால் என்னை விட்டுட்டு மும்பைக்குப் போங்க. நான் மனநல காப்பகத்துக்குப் போறேன்." எனக் கோபப் பட்டாள் ஜானகி.
அவளை இழுத்து அணைத்த ரகுவீர், அவள் தலையில் முத்தமிட்டு, "இந்த வார்த்தையைச் சொல்லாதடி. நீ என்னைக் காயப் படுத்தினால் என்ன, உயிர் எடுத்தாலும் சந்தோஷமாத் தருவேன். ஆனால் உனக்கு ஒண்ணும் ஆகக் கூடாது." என்றவன், "காரில் இருந்த திங்க்ஸ் எல்லாம் வந்திடுச்சா?" எனக் கேட்டான்.
"உங்க திங்க்ஸ் ரூமில் இருக்கு." எனத் திரும்பி நின்றாள். அவளருகில் வந்தவன், அவள் கை பிடித்து அழைத்து வந்து ஷோபாவில் அமர்த்தி ஒரு கவரில் இருந்து, தாதிஷா வளையல், RV எனப் பதிக்கப்பட்ட ப்ளாட்டினம் செயின் இரண்டையும் எடுத்துக் காட்டினான்.
"இது, அன்னைக்கு நான் போட்டிருந்தது, நீங்க போட்ட செயின், தாதிஷா தந்த வளையல்." எனச் சமாதானம் ஆகி நினைவுக் கூர்ந்தாள் ஜானகி
"இந்த வளையல் அகமதாபாத் டெலிபோன் பூத்காரனிடம் நீ கொடுத்தது. இது நீ வந்த ரயில் பெட்டியில் மறைத்து வைத்தது. இந்தச் செயின் நம்ம ரிஸ்தா உறுதி பண்ணும் போது மாஷா கொடுத்து நான் உனக்குப் போட்டது.
அந்தத் தீவில் உன்னை மீட்ட போது ருத்ரநாத் இதைக் கொடுத்துட்டு , 'நீ இதைத் திருப்பி என் கையால் போட்டுக்குவியா, இல்லையான்னு தெரியாதுன்னு சொன்னான். அவன் சொன்ன அர்த்தம் அடுத்த நாள் புரிஞ்சது." என அந்த நாள் நினைவில் கலங்கியவன். ஜானகி நெற்றியில் முத்தமிட்டு, இதைப் போட்டுக்குவியா மேரிஜான்?" எனக் கைகளில் வைத்து நீட்டினான்.
"வீரூஜி, இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பா, நான் என்னவோ, ஏதோன்னு பயந்திட்டேன்." என்றவள் , அவன் கன்னத்தில் முத்தமிட்டுத் திரும்பி, முடியை ஒதுக்கி, "போட்டு விடுங்க!" என்றாள். இது அவர்களின் உறவுக்கான மூன்றாவது தாலி. அவன் கழுத்தில் அணிவித்து, "தாங்க்ஸ்டி லுகாயி!!!" என்றபடி வளையலையும் போட்டுவிட்டான்.
"எதுக்குடி அப்படிக் கோபப்பட்ட. உன்னோடு சேருவதை விடப் பெரிய சந்தோஷம் எனக்கு என்ன இருக்கப் போகுது. நீ சொன்ன மாதிரி தலைமுடி நரைக்கிற வரைக்கும் உனக்காகத் தானே காத்திருந்தேன். இனிமே இப்படிப் பேசக் கூடாது." என மார்பில் தன் மனைவியைச் சாய்த்துக் கொண்டான் ரகுவீர். அவள் சரி எனத் தலையை ஆட்டியவள், ஒரு சந்தேகம் என, ரகுவீரிடம் கேட்டாள்.
"வீரூஜி, இந்தச் சினிமால எல்லாம், இந்தச் சீனில் போட்டிருக்கிற நகை எல்லாம் ஒன்னு ஒன்னா கழட்டுற மாதிரி காட்டுவாங்க. நீங்க வரிசையா போடுறீங்க. டிஸ்டபன்ஸ்ஸா இருக்காதா?" எனக் கண் சிமிட்டிக் கேட்டாள் ஜானகி.
ரகுவீர் ஹா,ஹா வெனச் சிரித்தவன், "அதுக்கு என்னடி பண்றது . இதெல்லாம் செண்டிமெண்ட். இது எதுவுமே இல்லாமலும் தான் லிவ்விங் டுகெதர்னு குடும்பம் நடத்துறாங்க. ஆனால் நீ மஞ்சள் தாலி கேட்ட. நான் முதன் முதலில் என் லுகாயிக்குப் போட்டதேன்னு நினைச்சேன்." என்றான்.
"ஏதோ டெஸ்ட்ன்னு சொன்னீங்க. என்னவாம்?" எனக் கேட்டாள். “இது ப்ரிலிமினரி, ஃபைனல் அப்புறம் சொல்றேன். இப்ப சேலஞ்ச். யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்க சொல்வதை அடுத்த ஆள் கேட்கனும்." என்றபடி, ஐஸ் பாக்சில் இருந்து, ஒரு பெரிய பட்டர்ஸ்காட் கோனை எடுத்தான்.
ஜானகிக்கு, பட்டர்ஸ்காட்ச் வாசனையோடு, அவர்கள் முதல் மோதல் சந்திப்பும் நினைவில் வந்தது. "வீரூஜி, இந்தத் தடவை உங்கள் முகத்தில் வலிந்தால், ட்ஸ்யூ பேப்பர் எல்லாம் தேட வேண்டாம். நானே துடைச்சிடுவேன்." என நாக்கை நீட்டி, கண் சிமிட்டினாள்.
"நீ கொட்டவும் வேண்டாம் துடைக்கவும் வேண்டாம். டாஸ்க் இதுதான், ஒரே கோன், இதிலிருந்த பெரும் பகுதி யார் சாப்பிடுறாங்களோ, அவுங்க சொல்ற மாதிரி அடுத்த ஆள் கேட்டுக்கனும்." என்றான்.
"ஓகே டன்." என்றவள், கவரைப் பிரித்து, ஒரு வாய் நக்கி எடுக்க, ரகுவீர் அடுத்ததைச் சுவைத்தான், மாற்றி மாற்றி ஏய்க்காமல் கவனமாகச் சமமாக ஐஸ்கிரீமை, ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம், ரசனையோடு ருசித்துச் சாப்பிட்டனர். குளுகுளுவென உள்ளே இறங்கிய ஐஸ்கிரீமும், ஜில்ஜிலு வென வீசிய தென்றல் காற்றையும் அனுபவித்தனர்.
சுவாரஸ்யமாகப் போன கேமின் கடைசிப் பைட் ஜானகி வாயில் சென்றது, அவள் ஆனந்தமாக டாஸ்க் ஜெயித்த குஷியில் இருக்கும் போதே, அவள் வாயை முற்றுகையிட்டு, அந்த ஐஸ்கிரீமை தனதாக்கிக் கொண்டான் ரகுவீர். ஜானகிக்கு மூச்சு முட்டியது. அதே இடத்தில் வைத்துச் சுவைத்த பின்னே அவளை விடுவித்தான்.
"நான் தான் ஜெயிச்சேன். நான் சொல்றபடிதான், இந்தக் குட்டி பிசாசு கேட்கனும்." என்றான்.
"அதெல்லாம் கிடையாது இது சீட்டிங்." என்றவள். சரி நான் அடுத்த டாஸக் சொல்றேன், எனப் பீடாவைக் கொண்டு வந்தவள், "இதைக் கையில் தொடாமல் போடனும். இதுவும் ஒன்னு தான் இருக்குப் பார்ப்போம்." எனச் சவால் விட்டாள்.
"வேணாம்டி, முரட்டுத்தனமாக ஏதாவது ஆனால், அப்புறம் எதுவும் சொல்லக் கூடாது." என்றான் ரகுவீர்.
"உங்களுக்கு இந்த வாய்க்கு மட்டும் குறைச்சல் கிடையாது . செயலில் காட்டுங்க." என இருவருக்கும் பொதுவாகத் தட்டில் வைத்தாள்.
ஜானகி வாயால் எடுக்கட்டும் என ரகுவீர் பொறுமையாக இருந்தான், அவன் முந்தைய செயலை தொடருவான் என எதிர் பார்த்த ஜானகி, வாயில் எடுத்த வேகத்தில் தவற விட்டது போல், தனது சேலைக்குள் விழ வைத்தாள். " இப்ப இரண்டு பேரும் எடுக்க முடியாது." என்றவள் கண்கள் ரகுவீரை சவால் விட்டு அழைத்தன.
அவளை அள்ளித் தூக்கியவன், திரைச்சீலை கொசுவலையைக் கடந்து பஞ்சு மெத்தையில் போட்டான். துடுக்காகப் பேசும் வாய்க்குத் தண்டனைக் கொடுத்து அடக்கிவிட்டு, டாஸ்க்கையும் நிறைவேற்றினான்.
பீடா ரகுவீர் வாயிலிருந்தது. அவனின், ஐஸ்கிரீம் விளையாட்டைத் தனதாக்கிய ஜானகி ஸ்பெஷல் பீடாவின் பாதியைத் தான் சுவைத்தாள். பீடாவெனச் சுவைத்தவர்களுக்கு, சுரப்பிகளும் விழித்து எழுந்தன.தாத்தா அப்பத்தாவின் மூலிகை கைங்கரியம் நன்றாகவே வேலை செய்தது.
பைனல் டெஸ்ட் என ஜானகியின் காதில் ரகுவீர் காற்றுக்கும் கேட்கக் கூடாது என ரகசியமாய் முணுமுணுக்க, செம்பாவையாய் குழைந்த ஜானகி, "ச்சீ!!!" என முகத்தை மூடி அவன் மார்பில் குத்தினாள். "உனக்கு விவஸ்தையே கிடையாது. போடா அத்தான்." என்றவள், மஞ்சத்தை நிறைத்து, தானும் விவஸ்தை கெட்டவளாகி செயலில் காட்டி, மன்னவன் மனதை ஜெயித்தாள். (இதன் விளக்கம் யாரும் கேட்கக் கூடாது. திரைச்சீலை, கொசுவலைத் தாண்டி எனக்கும் கேட்கவில்லை. அது ரகுவீர், ஜானகியின் ப்ரைவசி. ஆசிரியருக்கும் தடா போட்டு விட்டார் ராத்தோட்ஷா).
ஜானகியின் குழந்தைப் பருவத்திலிருந்து பால கோபாலனாகக் கூடவே வளர்ந்த ரகுவீர், ராதையின் காதலனாக மாறி, சீதையின் ராமனாக ஜானகியின் ரகுவீராக முழுதாக ஆட்கொண்டான்.
ஜானகி எந்தக் காதலுக்காகப் பிச்சியாக ஏங்கினாளோ அது முழுமை பெற்றது. ஜானகியின் மனநிலை எதனால் பாதித்ததோ அதை ரகுவீர் தனது காதலால் சரி செய்தான். ரகுவீரின் அன்பு அவளை மென்மையாகக் கையாண்டு, சம்சாரச் சாகரத்தில் திளைக்க வைத்தது. இருவரும், ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட காதலால் தங்களை மற்றவருக்கு ஒப்புக் கொடுத்து பூரணமாகினர்.
உடலின் வக்கிரமான இணைப்பை பாலியல் வன்முறையை, திடமான மனம் படைத்த ஜானகி போன்றவரின் மேலும், வக்கிரம் பிடித்த மனிதக் கூட்டம் கட்டவிழ்த்து விடுகிறது. ஜானகிக்கு ஒரு ரகுவீரும், அவள் குடும்பமும் துணை நிற்க, அவள் அதனைக் கடந்து பக்குவம் அடைந்தாள். இவளின் இந்த மாற்றம் பல பெண்களுக்குக் கலங்கரை விளக்காக நின்று வழி நடத்தும் என்பதில் ஐயமில்லை.
காலையில் பட்சிகளின் கொஞ்சு மொழி, பூபாளம் இசைக்க. ஆதவன், அவன் பணியைத் துவக்க ரதம் ஏறி வந்துவிட்டான். உயர்ந்து வளர்ந்த மரங்கள் அவனை ரகுவீர், ஜானகி வரை அண்டவிடாமல் தடுத்து நிற்க, சுற்றுச்சூழலைப் பகலாக மாற்றி மேற்கு திசை நோக்கிப் பயணித்தான்.
இரவின் இனிமையில் குளிர் தெரியவில்லை, இவர்கள் உள்ளிருந்த தகிக்கும் வெப்பம், கனப்பு இல்லாமல் கை கொடுத்தது. கூடல் முடிந்து, பயம் தெளிந்து, மறுபடியும் பழகி என இரவின் மடியில் தங்கள் தேடலை முடித்துக் கொண்ட தம்பதியினர். இன்னும் துயில் களைந்தபாடு இல்லை. மார்புவரை குளிருக்குப் போர்த்திய க்வில்ட் பெட்சீட் மூடியிருக்க, கண் விழித்த ரகுவீர், வெளிச்சம் பரவியதைக் கண்டு எழ முயன்றான். அவன் வெற்று மார்பில், ஜானகி கன்னம் பதித்தபடி, அவனை அணைத்த வண்ணம், சுகமான நித்திரையில் க்வில்ட்டுக்குள் முழுவதும் மறைந்திருந்தாள்.
அவன் கைவளைவில் அவளிருக்க, முந்தைய இரவின் சுகத்தில் ரகுவீர் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. அவள் நெற்றியில் முத்தமிட்டவன், "ஜானும்மா, ஓய் மேரிஜான், எந்திரிடி குட் மார்னிங்!!!" என்றான்.
அவள் இன்னும் வசதியாகப் படுத்துக் கொண்டு, "அத்தான், இன்றைக்குக் கோட்டா ஓவர். தூங்க விடுங்க." என்றாள். ரகுவீர் அவசரமாக அவள் வாயை அடைத்தவன். காதில் "எந்திரிடி, ரெஸ்ட் ரூம் போகனும்." என்றான். சிரமப்பட்டுக் கண் விழித்தவள், "குட் மார்னிங்" என அவன் கழுத்தில், மார்பில் முத்தமிட்டு எழ முயன்ற போது தன் நிலை உணர்ந்தவளாக, விலகி பெட்சீட்டால் முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.
ரகுவீர் உரக்கச் சிரித்தவன், "இப்ப யாரிடம் இருந்து என் லுகாயி மறையிறாங்க?" என அவள் போர்வைக்குள் சென்று சில்மிஷம் செய்து வம்பிலுத்து சிரித்து. "இருடி வரேன்." எனக் கட்டிலிலிருந்து இறங்கிப் போனான்.
ஒரு நைட்டியை கொண்டு வந்து அவளருகே போட்டவன். "இதைப் போடு நான் குளிக்கப் போறேன்." எனத் திரைச் சீலைகளை நன்றாக இழுத்து விட்டுப் போனான்.
ரகுவீர், ஜானகி குளித்து முடித்துக் கீழே வந்த போது, தாத்தா, அப்பத்தா சிவமாளிகைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தனர். பேத்தியின் முகத்தில் மாற்றம் கண்டவர். சொல்லாமல் தேவையானதை அறிந்தார், சந்தோஷமாகத் திருஷ்டி கழித்தார்.
காலை உணவை ஷண்முகம் கொண்டு வந்திருந்தார். தோட்டத்தைப் பார்த்து விட்டு அவரும் வந்து சேர காலை உணவு உண்டப் பின்னர், "ஆத்தா ஜானகி நாங்க முன்னே போறோம். நீயும் பேராண்டியும் இருந்துட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க." என்றார்.
"ஏன் அப்பத்தா இன்னும் ஒரு நாள் இருந்துட்டு போகலாமே?" என்றாள் ஜானகி. "உங்க அப்பா வரச் சொல்லிட்டான். மதியம் வந்திடுங்க." என்றார்.
"ஷண்முகப்பா இருந்துட்டு வரவா?" என்றாள். "இல்லடாம்மா, அப்பாவும், அம்மாவும் பயப்படறாங்க. நீங்க வந்திடுங்க!" என்றார் ஷண்முகம்.
ரகுவீர் தான் சமாதானம் செய்தான், "ஜானும்மா, நம்ம மும்பை வேற கிளம்பனுமே போகலாம்." என்றான் .
"சரி அப்பத்தா, மதியம் வரோம்." என்றாள். பெரியவர்கள் கிளம்பிவிட, ஜானகி ரகுவீரோடு ஒட்டித் திரிந்தாள். சுனையில் நீராடி, ஊஞ்சல் ஆடி, ஓடியாடி, கண்ணாமூச்சியாட்டம் காட்டி மகிழ்ந்தாள். ஒவ்வொரு சந்தோஷத்தையும் தன் கணவனோடு பகிர்ந்து, பிறந்தகத்தைத் தன்னுள் நிறைத்துக் கொண்டாள் ஜானகி.
ரகுவீர், ஜானகியின் ஆசைகளுக்கு இணங்கி, அவனும் அவளும் தங்கள் மும்பை வாழ்க்கையின் முற்றிலும் மாறுபட்ட வாழ்வின் இனிமையை அனுபவித்தனர். மதியம் இரண்டு மணியளவில் சிவ மாளிகை வந்து சேர்ந்தனர் தம்பதியர்.
சிவகுரு, ராகினி, தெய்வாவிற்கு ஜானகியின் குங்குமமெனச் சிவந்த முகம் விசயத்தைச் சொல்லியது. இருவரும் இணைந்து ருசியான விருந்து செய்து வைத்திருந்தனர்.
ஜானகி, ரகுவீர் நாளை மதியம் மும்பை கிளம்புகின்றனர். காரில் மும்பை வரை பயணம் என்பதை மாற்றி, பெங்களூரு வரை கார் வழிப் பயணமும் மீதி வான்வழிப் பயணம். காரை அவர்கள் கம்பெனி டிரைவர் மும்பை எடுத்துச் செல்வதாக ஏற்பாடு செய்தனர். ஜானகிக்கு மறுவீடு பலகாரம் எனச் சிவகாமி, தெய்வா, சுந்தரவள்ளி தங்கள் கைப்படச் செய்தனர்.
அன்றைய மாலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் எம்பிஏ ப்ராஜெக்ட் மூன்று மாதம் நிறைவடைந்தது. ப்ராஜெக்ட் ரிப்போர்ட், சர்டிவிகேட் எல்லாம் ரெடி.
அமிர்தா, இரண்டு ஃபைல்களைக் கொண்டு வந்து ரகுவீரிடம் நீட்டினாள். அது ராத்தோட் க்ரூப்பில் ஜானகி, அமிர்தா ட்ரைனியாக வேலைப் பார்த்ததற்கான சர்டிவிகேட். ரகுவீர், திருப்பிப் பார்த்துவிட்டு, கையெழுத்துப் போட்டான்.
"இதைச் சம்மிட் பண்ண ஜானு வரனுமா?" எனக் கேட்டான் ரகுவீர்.
"இல்லை அண்ணா, நான் பார்த்துக்கிறேன். ஒரு நாள் மட்டும் வர மாதிரி இருக்கும். நீங்க யூரோ போய்ட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்." என்றாள் அமிர்தா.
"ஸ்வரூ, உன் பிளான் என்னடா, நாளைக்குக் கிளம்பலாமா?" என்றான் ரகுவீர். "பையா! இன்னும் ரிப்போர்ட் வேலை இருக்கு." என்றாள் மயூரி.
"சரிடா ஒன் வீக்கில் முடிச்சு கிளம்புங்க. மஞ்சரிக்கும், உனக்கும் அடுத்தடுத்து ஷாதி வைக்கனும். அவரவர் பிறந்த வீட்டில் சீராடுங்க. அதுக்கப்புறம் எப்பவும் சசூரால் தானே. சாசா, சாசிக்கு உன்னை வச்சுப் பார்க்க ஆசை இருக்குமே." என்றான்.
"மாப்பிள்ளை சொல்றது சரிதான், அமுதன் இரண்டு பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடு." என்றார் சிவகுரு.
"சோ ஸ்வீட் மாஷூ, ஒரு வழியாக என் படிப்பு முடியுது." என்றாள் மஞ்சரி.
"வேலையே பார்க்காமல் சர்டிவிகேட் வாங்குறது நீ ஒருத்தி தான்." என மஞ்சரியை பார்த்துச் சொன்னான் பாலன். "அதுக்கு என்ன பண்றது. என் புண்ணியத்தில் ஒரு பாபி கிடைச்சதேன்னு சந்தோஷப் படு"-என்றாள் மஞ்சரி.
ராகினி, சிவகுரு ஒரு பெரிய ஷோபாவில் அமர்ந்திருக்க, ஜானகி தன் அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். "மாதாஜி, ஷாதி முடிஞ்சிடுச்சு, வீரூ பார்த்துக்குவான், அப்படின்னு என்னைக் கழட்டி விட்டுறாதீங்க." என்றாள் ஜானகி.
ராகினி கண்கலங்கியபடி, "அடிப்போடி, நீ படிக்கப் போகும் போது, ஷாதி முடிஞ்சு விதாயி நடந்த போது கூடப் பெரிசா எதுவும் தோணலை. நாளைக்கு, பிறந்த வீட்டிலிருந்து போறேன்னு நினைக்கும் போதே, மனசு பாரமா இருக்கு. நூற்றுக் கிழவி மாதிரி, மாதாஜி யை சேர்த்து வைக்கிறேன்னு, என்னைக் கழட்டி விட்டுட்டு நீதான் அங்க போய் ஒட்டிக்கிட்ட." என்றார் ராகினி.
"அதுவும் உங்களால் தான், நீங்க தான் வீரூஜி, வீரூஜி ன்னு என் மனதில் உரு ஏத்தினது. அவரும் ஷாதி பண்ணாமல் காத்திருந்தால் நான் என்ன செய்கிறதாம்." என்றாள் ஜானகி, ரகுவீர் புன்னகையோடு பார்த்திருந்தான்.
"ஏண்டி நீ கல்யாணம் கட்டிக்கிட்டு என் மருமகளைக் குற்றம் சொல்ற." என வந்தார் சிவகாமி."போ அப்பத்தா, என்னை மும்பைக்கு அனுப்பிட்டு விட்டது தொல்லைனு சந்தோஷமா இருப்பீங்க." என்றாள் ஜானகி.
"ஜானும்மா, நீ எங்க இருந்தாலும் நினைப்பு பூரா உன் மேல் தான். நீ தான் எங்களை நினைக்கக் கூட நேரமில்லாமல் பிஸி வுமன் ஆகிடுவ." என்றார் சிவகுரு. "ஜானும்மா, அங்க பொறுப்பான மருமகளா இருக்கனும்." என்றார் தெய்வா. ஜானகிக்கு கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அமிர்தா அதற்கு மேல் அழுதாள்.
அமுதன், பாலனுக்கும் சோகமாக இருந்தது. ஜானகி இருந்தால் தான் வீடு கலகலப்பாக இருக்கும். மாலையில் மாற்றி, மாற்றி ஒவ்வொருவர் மடியாகத் தாவி அழுதாள் ஜானகி. இரவு பத்தைத் தாண்டவும், அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.
ஜானகி, ரகுவீரைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவன் சமாதானம் செய்து தட்டிக் கொடுக்கவும், சிவ மாளிகை மகளின் அழுகை நின்றது. ரகுவீரின் பத்தினியாக, அவனிடம் நேற்று கற்ற மன்மதக்கலையை, அவனோடு பயிற்சி செய்தாள் ஜானகி.
இன்னும் ஐந்து நாட்களில் ரகுவீர் ஜானகி ஹனிமூன் யூரோப் ட்ரிப் உள்ளது. அதை முடித்து வந்து கம்பெனி , குடும்பம் ஷாதிகள் என ரகுவீருக்கு வேலை வரிசை கட்டிக் காத்திருக்கிறது. காதல் மனைவியாக, நல்ல தோழியாக, மதியூக மந்திரியாக ஜானகி எல்லாவற்றிலும் கணவனுக்குக் கைக் கொடுக்கக் காத்திருக்கிறாள்.