அருமை
க்ருஷ்ணா ' Saysகாலை 6.40 மணிக்கு விக்ரமின் செல்போன் துடித்தது. அரை தூக்கத்தில் கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவன் அலைப்பேசி திரையில் சுகுமார் மாமா என்று வந்திட சட்டென்று எடுத்தான்.
"ஹலோ மாமா! சொல்லுங்க மாமா... இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தான்.
"தம்பி எப்பவும் அப்பா வந்து 5.30க்கு எழுப்பி வாக்கிங் கூட்டிட்டு போவாரு. இன்னைக்கு இன்னும் வர காணோம்னு வீட்டுக்கு வந்து பார்த்தேன்" என சுகுமார் சொல்லி முடிக்கும் முன்பே விக்ரம் முகம் வெளிரியது.
சுகுமார், "கதவ தட்டி பார்த்தேன். சத்தம் ஏதுமில்ல. காலிங் பெல் அடிச்சேன். எந்திரிக்கல. போன் பண்ணியும் பார்த்தேன். எந்த பலனும் இல்ல. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. கதவ உடைச்சு பார்த்தரலாமா?" என கேட்க,
"ஐயோ மாமா. இத கேக்கணுமா? சீக்கிரம் கதவ உடைச்சு என்னன்னு பாருங்க மாமா" கட்சி கொண்டு கட்டிலை விட்டு இறங்க அவன் குரல் கேட்டு எழுந்தாள் சத்யா.
சுகுமார் அருகில் இருந்தவர்களை அழைத்து விஷயத்தை சொல்லி கதவின் தாழ்பாளை உடைத்தார்கள். அவர்கள் வேகமாக உள்ளே சென்றபோது பெட்ரூம் அறை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது உள்பக்கமாக தாழிடப்படவில்லை.
கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கொண்டு தனது மனைவியின் பட்டுப்புடவை தனது நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் எந்த அசைவும் இன்றி அமைதியாக படுத்திருந்தார் செல்வகுமார்.
குளிர்ந்து போன அவரது உடலும் மூச்சற்ற நாசியும் அசைவற்ற உடலும் இறந்து விட்டார் என்பதை உணர்த்தியது. அருகில் காலியாகிப்போன தூக்க மாத்திரை அட்டை சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்திருந்தது.
சரியாக ஏழு மணிக்கு மீண்டும் விக்ரமிற்கு போன் அழைப்பு சென்றது. அதற்கு முன் ஆறு முறை முயற்சி செய்த போதும் சுகுமார் அழைப்பை எடுக்கவில்லை. பதட்டத்தில் இருந்த அவனோ சட்டென்று அழைப்பை எடுக்க "மாப்ள அப்பா நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருடா" என அழுது கொண்டே சொல்ல அப்படியே சரிந்து அமர்ந்தான்.
அவன் உடல் மொழியை பார்த்த சத்யாவிற்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.
"மாமா..." துவண்டுபோன குரலில் திக்கி திக்கி பேசினான்.
"சீக்கிரம் கிளம்பி வாடா. இங்க நாங்க மத்த வேலையை ஆரம்பிக்கிறோம். ஆனா அப்பா தானா சாகலடா. தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கார்னு நினைக்கிறேன். என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் புரியலடா. நம்ம எஸ்ஐ சக்திவேல் கிட்ட சொல்லி இருக்கேன்" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.
"அப்பா.... அப்பா.... " என்று அவன் அழுது கொண்டே கத்தியதில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்தான். சத்யாவும் அழுது கொண்டே சீக்கிரம் கிளம்புங்க போலாம் என்றாள்.
செல்வகுமாரின் உடல் பெட்ரூமில் இருந்து எடுத்து வந்து ஹாலில் தரையில் வைத்தார்கள். தலைமாட்டு அருகில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு செய்ய வேண்டிய முறை செய்தார்கள். சிறிது நேரத்தில் ஊர் முழுக்க அந்த செய்தி பரவியது.
சிறிது நேரத்தில் அங்கு வந்து இறங்கிய ஐஸ்பெட்டிக்குள் உடல் புகுந்தது. உயிரோடு இருந்தவரை செல்வகுமார் என்ற பெயரோடு வாழ்ந்தவர் சில நிமிடங்கள் முன்னால் இருந்து சவம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
"ஏம்பா அவர் பையனுக்கு விஷயத்தை சொல்லிட்டீங்களா? முக்கியமான சொந்த பந்தம் எல்லாத்துக்கும் சொல்லிருங்கப்பா" கூட்டத்திலிருந்து குரல் வந்தது.
"அதெல்லாம் சொல்லியாச்சுப்பா. இந்நேரம் பையன் கிளம்பி இருப்பான். எப்படியும் வர்றதுக்கு ரெண்டு மூணு மணி ஆகும்னு நினைக்கிறேன்"
"எத்தனை மணிக்கு சவத்த எடுக்கிறதுன்னு சொன்னா தானப்பா காட்டுல எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்க முடியும். நம்ம வீரனும் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல"
"அட என்னப்பா சொல்றீங்க! அவ்வளவு தூரத்திலிருந்து பையன் வரான். ஒரே பையன். அவனுக்கு அவங்க அம்மா மூஞ்சி ஞாபகம் இருக்கோ இல்லையோ? அவங்க அப்பன் தான் அப்படி வளத்தான். அவனுக்கு கொஞ்சம் அழறதுக்காவது நேரம் தர வேண்டாமா?" முதியவர் ஒருவர் சொல்ல,
"பெருசு நீ சொல்லிட்டு போயிருவ. எழவ முடிச்சுட்டு மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போக வேண்டாமா? இங்கேயே டோரா போட்டுக்கலாமா? கொஞ்சம் சும்மா இருங்க"
"ஏன்டா உங்கப்பன் செத்தா இப்படித்தான் எடுப்பேன்னு துள்ளுவியா? வந்தோமா எழவு கண்டோமா? விருப்பம் இருந்தா எடுக்கிற வரைக்கும் இரு. இல்லையா நீ பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இரு. அவன் பெத்த பையன் வந்துட்டு இருக்கான்ல. அவன் வந்து எப்ப எடுக்கிறதுனு சொல்லுவான்" என்று அந்த முதியவர் சொன்னவுடன் அவருக்கு சுருக்கென்று இருந்தது.
"விடுங்கப்பா. ஆளாளுக்கு பேசிக்கிட்டு. விக்ரமுக்கு போன் பண்ணி என்ன பண்றதுன்னு கேட்டா சொல்ல போறான். அத விட்டுட்டு நாமளே ஒன்னு பேசிட்டு இருந்தா என்ன பிரயோஜனம்?" என ஒருவர் சொன்னவுடன்,
சுகுமார், "அவனுக்கு யாரும் போன் பண்ண வேண்டாம். அவன் இப்போ என்ன மனநிலையில் இருப்பான்னு நமக்கு தெரியாது. இங்கே என்ன நடந்திருக்குன்னு அவனுக்கு தெரியாது. அவன் வந்த அப்புறம் நாம பேசிக்கலாம். இப்போதைக்கு ஒருத்தர் போய் ஜோசியர் கிட்ட எடுக்குறதுக்கு எது நல்ல நேரம்னு குறிச்சிட்டு வாங்க. இன்னைக்கு சாயந்திரம் இல்லைனாலும் நாளைக்கும் சேர்த்து எழுதி வாங்கிட்டு வாங்க" என்றார்.
செல்வகுமார் இறந்த செய்தி கேட்டு பல உறவினர்கள் விக்ரமிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார்கள் அவர் இறந்த செய்தி உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள.
கண்ணீர் நிறைந்த முகத்துடன் வார்த்தைகள் தொண்டைக்குள்ளியில் சிக்கிக் கொண்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிற பதில் சொல்லி கொண்டிருந்தான். ஹலோ விக்ரம். அப்பா இறந்துட்டாரா?" என்ற கேள்விக்கு, "ஆமா. அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு" என்று சொன்னான்.
அப்பா இறந்துவிட்டார் என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. அவன் மனதில் இருந்த வலியிலும் துக்கத்திலும் அவனிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கேள்வி அப்பா என் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது தான்.
"ஏங்க.. உங்க வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல மாமா தவறிட்டாருனு வச்சிருங்க. நிறைய பேரு உங்களுக்கு போன் பண்றாங்க. யார் யாருக்கு சொன்னாங்கன்னு தெரியல. சொந்தக்காரங்க எல்லோருக்கும் தெரியனுமில்ல" என்றாள் சத்யா.
அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டு தனது செல்போனின் இன்டர்நெட் வசதியை ஆன் செய்தான்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் குழுவில், " எனது அப்பா எங்களை விட்டுவிட்டு அம்மாவிடம் சென்றுவிட்டார். ஊரில் உள்ள அவரது வீட்டில் அவர் உடல் இருக்கிறது" என பதிவு செய்தான்.
இரவில் இன்டர்நெட்டை ஆப் செய்து வைக்கும் பழக்கம் உள்ளதால் காலையில் குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. அதில் தனது தந்தை எப்பொழுதும் காலை அனுப்பும் காலை வணக்கம் குறுஞ்செய்தி இன்று அவனுக்கு வரவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி நள்ளிரவில் வந்திருந்தது.
அதை படித்தவனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. கண்ணீர் வேகமாக கன்னங்களில் விழுந்து ஓடியது. அவன் படித்த அந்த செய்தியை தன் மனைவியிடம் கூட கூறவில்லை.
அவனுக்கு எப்போது வீட்டுக்கு சென்று அப்பாவை பார்ப்போம் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் இப்போது யாரிடமும் பேசக்கூட முடியவில்லை.
தனது செல்போனை தன் மனைவி சத்யாவிடம் கொடுத்துவிட்டு அமைதியாக கண்களை மூடி சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் வழிந்து ஓடிய கண்ணீர் அவன் வலிகளை சொல்லிக் கொண்டே இருந்தது.
அதே நேரத்தில்,
"அவருக்கு என்னதான் பிரச்சனை? இத்தனை நாள் சந்தோசமா தான் இருந்தாரு. காடு தோட்டம் வீடு போய் வருவதற்கு காரு அதை ஓட்டுறதுக்கு டிரைவர்னு காசு பணத்துக்கு குறை இல்லாம நல்லா தானே இருந்தாரு. அப்புறம் ஏப்பா இப்படி மாத்திரை சாப்டாரு?" கூட்டத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
"யாருக்குப்பா தெரியும்? பையன் கூட ஏதாவது சொல்லி இருக்கலாம்?" மற்றொருவர் கூறினார்.
"இத்தனை சொத்தும் அவர் பெயரில தான் இருக்கு. எழுதி வைக்க சொல்லி பையன் கேட்டிருக்கலாம் இல்ல"
''அட சும்மா இருங்கப்பா. இத்தனை சொத்துக்கும் அவன் ஒருத்தன் தானே வாரிசு. என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு தானே எல்லாம். அது காரணமா இருந்திருக்காது"
"அப்ப பையன் ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு காட்ட வித்து காசு குடுக்க சொல்லி இருக்கலாம்... இல்ல"
"அட ஆமாப்பா... பையன் போன தடவை வந்தப்பவே தொழில்ல நட்டமாயிருச்சு. அங்கிருந்தா பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அதான் இங்கு வந்து ஒரு நாலு நாள் இருக்கலாம்னு அன்னைக்கே சொன்னான். அப்ப கூட அப்பாவை ஊருக்கு வாங்கன்னு கூப்பிட்டான். ஒருவேளை அந்த வீட்டை விக்கிறதுக்கு தான் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். பெருசு எப்படியும் முடியாதுன்னு சொல்லி இருக்கும். நேத்து போன் பேசும்போது ஏதாவது சொல்லி இருப்பான். அவசரப்பட்டு மாத்திரை சாப்பிட்டுருச்சு" என்றார் உறவினர் ஒருவர்.
"இல்லன்னா பெரியவர் ஏதாவது அவனை சொல்ல.... அவர ஏன் இன்னும் இருந்து தொல்லை பண்றீங்கன்னு கேட்டு இருக்கலாமில்ல" என ஒருவர் மாற்றி ஒருவர் செல்வகுமார் தற்கொலை செய்து கொள்ள விக்ரம் தான் காரணம் என்று முடிவு செய்து விட்டார்கள். அந்தப் பேச்சுக்களும் துக்க அழுகைக்கு நடுவே காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
மதியம் சரியாக 2.30க்கு விக்ரம் வந்த கார் வீட்டிற்கு வந்தது. ஏற்கனவே பல கார்கள் நின்றதால் ஆனால் வாசல் வரை வர முடியவில்லை. காரை விட்டு இறங்க அவனுக்கு பயம் பற்றியது. கார் கதவை திறக்க கைகள் நடுங்கியது. அவனைப் பற்றி சத்யா அறிவாள். சற்றென்று கார் கதவைத் திறக்க இருவரும் இறங்கினார்கள்.
மொத்த கூட்டமும் இவர்களை தான் பார்த்தது. அருகில் நின்ற சிலர் அவனது தோளை தட்டி முன்னை நகரச் சொல்ல வீட்டில் இருந்து சிலர் வேகமாக ஓடி வந்து அணைத்து அழுதார்கள்.
சத்யாவின் அப்பா குழந்தையை வந்து வாங்கிக் கொள்ள, அவளின் அம்மா அழுது கொண்டு அவளை வேகமாக உள்ளே அழைத்துச் சென்றார்.
அழுது தேங்கி நின்ற விக்ரமை சுகுமார் கைபிடித்து இழுக்க வரமாட்டேன் என தலையாட்டிபடி அங்கேயே அமர்ந்தான்.
"வாடா..."
"எதுக்கு மாமா வரச்சொல்றீங்க. நான் வரமாட்ட"
"எந்திரிடா மாப்ள. வந்து அப்பாவ பாரு"
"இனிமேல் பார்க்க முடியாதுன்னு இப்ப வந்து பாத்துக்க சொல்றீங்களா மாமா. என்ன இப்படி விட்டுட்டு ஏன் மாமா போனாரு" என கண்ணீர் விட்டு கதறினான்.
"டேய் மரியாதையா எந்திருச்சு வாடா. எல்லாரும் உனக்காக தான் காத்திருக்காங்க" என அண்ணன் குமரேசன் சொல்ல,
விக்ரம், "நாங்க இருக்கும். சித்தப்பாவை பாத்துக்குறோம். நீ தைரியமா போயிட்டு வான்னு சொன்னீங்களேடா. அடுத்த தடவை ஊருக்கு வரும்போது அவர் இருக்க மாட்டார்டா" என சொல்லிவிட்டு எழுந்து ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அனைவரும் அவனை பிடித்து இழுக்க, "விடுங்க என்ன. எனக்கு அவரை பார்க்க புடிக்கல. நாம இல்லாம நம்ம பையன் என்ன பண்ணுவான்னு யோசிச்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பாரா? என்ன பத்தி யோசிக்காதவர நான் எதுக்கு பாக்கணும்? விடுங்க... விடுங்க..." என்று கத்த அவனை இழுத்து வந்து வீட்டின் கதவு அருகில் நிறுத்தினார்கள்.
அவனின் கதறல் கேட்டு எந்த அசைவும் இன்றி அமைதியாக கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தார் செல்வக்குமார். அவரின் உடலை பார்த்தவுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அங்கே நின்றான் விக்ரம்.
உள்ளே இருந்து ஓடி வந்த அவனது அத்தை, "விக்ரமு எங்க அண்ணனை இந்த கோலத்துல பார்க்கவா நீ வந்த. இனி எங்க அண்ண கூட எப்படிடா நான் பேசுவேன்" என கதறி அழுதாள். அவனது அக்கா அவனை கைபிடித்து இழுத்து செல்ல குழந்தையை போல் உள்ளே சென்றான்.
செல்வகுமார் தலை அருகில் அவன் நிற்க, சத்யாவை மற்ற பெண்கள் அணைத்து அழுதுகொண்டு இருந்தனர்.
ஐஸ் பாக்ஸ் கண்ணாடி பெட்டியை குமரேசன் எடுத்து கீழே வைக்க சிரித்த முகத்தோடு இறந்து கிடக்கும் தன் தந்தையை பார்த்தவன் சட்டென்று அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
"எப்பவும் அப்பா இருக்கேன்... அப்பா இருக்கேன்னு சொல்லுவீங்களேப்பா. இப்ப மட்டும் எப்ப விட்டு போனீங்க. நான் என்னப்பா தப்பா செஞ்சேன். சொல்லுங்கப்பா.... சொல்லுங்கப்பா... "
"நீ என்ன வேணா பண்ணு. உனக்கு பின்னாடி தான் இருக்கேன். சரி எது தப்பு எதுன்னு சொல்றேன். திருத்திக்கோன்னு சொல்வீங்களே. இனி எனக்கு யாருப்பா அதெல்லாம் சொல்லுவா?"
"அப்பா உயிரோடு இருக்கிறதே உனக்காகத்தானே சொல்லுவீங்களே. இப்ப என்னாச்சுனு தற்கொலை பண்ணிட்டீங்க. பையன் கடைசி காலத்துல பார்க்க மாட்டானு நினைச்சிட்டீங்களா?"
"அம்மா செத்தப்போ எனக்கு இந்த அளவுக்கு வலிக்கல. எனக்கு அப்போ அந்த அளவுக்கு வயசு இல்ல. ஆனா இனி எப்படி இருக்க போறேன்னு தெரியல. ரொம்ப பயமா இருக்குப்பா. எந்திரிங்கபா... சும்மா தூங்கிட்டு தான் இருக்கேன் எந்திரிச்சு சொல்லுங்கப்பா" என கதறினான்.
"போன தடவை ஊருக்கு வந்தப்போ எங்களோடு வாங்க வாங்கன்னு கூப்பிட்டேனே. வர முடியாதுன்னு பிடிவாதமா சொன்னீங்களே. இதுக்குத்தானா? வந்திருந்தா இப்படி ஆகி இருக்காது இல்ல. என் மேல என்னப்பா கோபம். சொல்லுங்கப்பா...." அவன் சத்தம் ரோடு வரை கேட்டது.
அவன் அழுகையும் கேள்வியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு கொண்டிருந்தது. அவரின் இறப்பில் அவனுக்குத் தான் வலி அதிகம் என்பதால் யாரும் அவனை தேற்ற கூட தயாராக இல்லை. இன்னும் சற்று நேரம் அவன் அழட்டும் அமைதியாக இருந்தார்கள்.
சற்றென்று ஒருவர், "தம்பி விக்ரமு அப்பாவை எப்ப எடுக்குறதுன்னு சொல்லுப்பா. காட்டுக்கு சொல்லி அனுப்பணும்" என்றதும் அவர் மேலே படுத்துக்கொண்டான்.
"நான் அப்பாவை எடுக்க விட மாட்டேன். எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க முதல்ல. யாரும் எங்கப்பா தொடக்கூடாது" என்றதும்,
"ஏங்க எல்லாருக்கும் அப்பா இருந்தா இப்படித்தான் இருக்கும். அவன யாராவது முதல்ல வெளிய கொண்டு வாங்க. எல்லாரும் துக்கம் கேட்கணும் இல்ல. எத்தனை மணிக்கு இறந்தாருன்னு தெரியல. சீக்கிரம் எடுத்தரலாம்" என்றார்.
அவர் சொன்னது சரி என்று பட அவனை உள்ளே இருந்து எடுத்து வந்து வெளியே நிற்க வைத்தார்கள்.
எஸ்ஐ சக்திவேல் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். "தம்பி உங்க அப்பா இறந்துட்டாரு. அது தற்கொலையா இல்ல கொலையான்னு பாக்கனும். அதே மாதிரி ஒரு வேளை அவர் தற்கொலை பண்ணி இருந்தாருன்னா என்ன காரணம்னு தெரியனும். போஸ்ட்மார்ட்டம் பண்ணலாமா?" என்று சாதாரணமாக கேட்டார்.
அழுது கொண்டிருந்த விக்ரம், "இது கொலை இல்ல சார். அப்பா சூசைட் தான் பண்ணிட்டாரு"
"ஏன்னு தெரியுமா? இல்ல போஸ்ட்மார்ட்டம் பண்ண கூடாதுன்னு சொல்றீங்களா?" சக்திவேல் கேட்க
தனது செல்போனை எடுத்து நேற்று இரவு சரியாக 12.43 க்கு "அப்பா சந்தோஷமா போய்டு வரேன். நீ பத்திரமா இரு. உனக்காக பீரோல சில பேப்பர்ஸ் வெச்சிருக்கேன். என்ன எடுக்கிறதுக்கு முன்னாடி அதை எடுத்து எல்லோரும் முன்னாடியும் படிச்சுரு. அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும். துக்கத்துல மறந்துடாத" என்று செல்வகுமார் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை காண்பித்தான்.
"இதை எத்தனை மணிக்கு பார்த்தீங்க?"
"காலையில ஒரு 8.30க்கு பார்த்தேன்"
"ஏன் அவ்வளவு நேரம்? உங்களுக்கு மிட்நைட்ல அனுப்பிட்டாரு"
"நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி எப்பவும் நெட் ஆப் பண்ணி வச்சுருவேன். காலையில சுகுமார் மாமா கூப்பிட்டு விசயத்த சொன்னார். அப்பா எங்கள விட்டுட்டு போன தகவல ஸ்டேட்டஸ் வைக்கும் போது தான் பார்த்தேன்" என்றான்.
"போய் அந்த பேப்பர்ஸ் எடுத்துட்டு வாங்க"
"வேண்டாம் சார். எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். நீங்க போயிட்டு வாங்க. எல்லாம் முடிஞ்சா அப்புறம் நானே ஸ்டேஷன் வரேன்" விக்ரம் சொல்ல,
"அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும் மாப்ள. போய் எடுத்துட்டு வா. அவர் பத்தி எனக்கு நல்லா தெரியும். போ" சுகுமார் சொன்னவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். சக்திவேல் வந்த பிறகு அந்த வீட்டில் ஒரு துளியும் அழுகை சத்தம் இல்லை.
பீரோவை திருந்தவுடன் தனது மனைவியின் சேலைக்குள் ஒரு பை ஒன்றை வைத்திருந்தார் செல்வகுமார். அதை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் திறக்க பல சின்ன சின்ன கவர்கள் இருந்தது.
அதில் தனது சொத்துக்கள் ஒவ்வொன்றையும் தன் இறப்பிற்குப் பிறகு மகனுக்கு சேர வேண்டும் என்று எழுதி பதிவு செய்து வைத்திருந்தார்.
ஒவ்வொரு கவராக எடுக்க ஒரு கவரில் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்து பிரித்தான்.
" அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்..." என்ற வரியை படித்தவுடன் அந்த கடிதத்தை அப்படியே போட்டுவிட்டு கைகளால் முகத்தை மூடி "அப்பா..." என்று கத்திக்கொண்டே அமர்ந்தான். அந்த அழுகை அங்கு நிலவிய அமைதியை குலைத்தது.
சக்திவேல் அந்த கடிதத்தை எடுத்து பார்த்தார். "விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும்" என அடுத்ததாக எழுதி இருந்தது.
"எல்லாரும் இங்க வாங்க. இந்த லெட்டர எல்லாரும் கேக்குற மாதிரி சத்தமா படிக்க சொல்லி எழுதி வச்சிருக்காரு. நான் இந்த லெட்டரை படிக்கிறேன். கேளுங்க " என்றார் எஸ்ஐ சக்திவேல்.
"அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்...
விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும்.
உன்னால படிக்க முடிஞ்சா படி. இல்லன்னா வேற யாராவது படிக்கச் சொல்லிடு. ஆனா இந்த லெட்டர் படிக்காம என்னோட உடம்ப எடுத்துவிடாதே.
முதல்ல நீ அப்பாவ மன்னிக்கணும். ஏன்னா நான் உனக்கு பண்ண துரோகம் இது. நம்ம அப்பா நம்மள விட்டுட்டு இப்படி செத்துப் போவார்னு நீ கனவுல கூட நினைச்சு இருக்கமாட்ட. உன்ன இப்படி தனியா விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா எப்படியும் ஒரு நாள் நான் சாக தானே போறேன். அதான் இப்ப கிளம்பிட்டேன்.
விக்ரம் நான் தற்கொலை பண்ணிக்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். எப்ப இருந்துனா உன்னோட 13 வயசுல இருந்து. என்னைக்கு உங்க அம்மா என்னை விட்டு போனாலோ அன்னைக்கு சாகணும்னு நினைச்சேன். ஆனா நானும் போய்ட்டா நீ என்ன செய்வ. உங்க அம்மா இறந்தது விதி. அன்னைக்கு நான் தற்கொலை பண்ணி இருந்தா நீயும் என்னை வெறுத்திருப்ப. ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்ப. அதனால தான் அப்பா சொல்லுவேன் உனக்காக தான் உசுரு வாழ்றேன்னு.
நான் உன்கிட்ட உன் அம்மாவ பத்தி பேசினதே கிடையாது. நீயும் அம்மாவ கேட்டது கிடையாது. எங்கே அம்மாவ பத்தி பேசி உனக்கு ஏக்கம் வந்திருவோம்னு பயந்தே பேச மறுத்துட்டேன்.
ஆனா அவளை பத்தி நினைக்காத நாள் கிடையாது. அவள நினைச்சு கண்ணீர் சிந்திக்காத நாள் கிடையாது. இன்னைக்கு நீ எப்படி என்னை இழந்துட்டு அழுகிறயோ அதே மாதிரி தான் தினமும் அழுதுகிட்டு வாழ்ந்தேன்.
என்னோட உசுரு உங்க அம்மா தமிழ்செல்வி. உங்க அம்மாவ நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரும்போது எங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியாது. கல்யாணம்னா நம்ம உடல் சுகத்திற்கும் புள்ள பெத்துக்கறதுக்கும் வீட்டு வேலை செய்யறதுக்கும் தான்னு நினைச்சுட்டு இருந்த காலம்.
கல்யாணமான கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் நைட் எனக்கும் உங்க அம்மாவுக்கும் சரியான சண்டை. அன்னைக்கு உங்க அம்மாவை ஓங்கி அடிச்சிட்டேன். ஆம்பள திமிரு. உன் அப்பன் வீட்டுக்கு கிளம்பு அப்படின்னு சொன்னேன்.
"என் அப்பா வீட்டிலிருந்து நான் எப்படி வந்தனோ அதே மாதிரி கன்னிப்பொண்ணா என்னை திருப்பி அனுப்புங்க நான் போறேன்" அப்படின்னு சொன்னா. நான் ஆடிப் போயிட்டேன். அவ்வளவு போல்டு என் தமிழ்செல்வி.
அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் நான் பேசவே இல்லை. சமைச்சு வச்சா திங்க மாட்டேன். அவ மூஞ்சிய பாத்தாலே திரும்பி போயிடுவேன். அன்னைக்கு காலையில எழுப்பினா. கண்ணு முழிக்கும்போது உன் அம்மா பக்கத்துல நின்னுட்டு இருந்தா. அவ்வளவு அழகா இருந்த அன்னைக்கு. நான் அவள பாத்துட்டு இருக்குறத பாத்து என் காது பக்கத்துல வந்து ஐ லவ் யூ அப்படின்னு சொல்லிட்டு நெத்தில ஒரு முத்தம் கொடுத்தா. அதுக்கு அப்புறம் அவ மேல இருந்த மொத்த கோபமும் போயிருச்சு.
அவ என் மேல வச்சு அன்பு அவள எப்பவும் மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு நினைக்க வச்சுது. அதுக்கப்புறம் உன் அம்மா இல்லாம எங்கேயும் நான் போகவே மாட்டேன். வாழ்க்கையில கஷ்டம் வரத்தான் செய்யும். மேல இருக்கிறவங்க கீழ போவாங்க. அப்படி நான் போனப்ப எல்லாம் செல்வி தான் என்னோட ஒரே ஆறுதல்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ மடியில் படுத்துட்டு அவகிட்ட சொல்லுவேன். சில தடவை சொல்லவும் முடியாது. ஆனா அவ புரிஞ்சுக்குவா. அவ தந்த அந்த முத்தமும் ஐ லவ் யூவும் என்ன ஓட வெச்சது. அதுக்கப்புறம் நீ பொறந்த. உன் அம்மா எனக்கு மட்டும் தந்த அந்த முத்தத்துல நீயும் பங்கு கேட்ட" என்று சொல்லிவிட்டு சக்திவேல் விக்ரமை பார்த்தார். அவன் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் மட்டும் பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான்.
சக்திவேல் மேலும் படிக்க ஆரம்பித்தார்.
"நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே உனக்கு முத்தம் கொடுப்போம். நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில புயல் அடிச்ச மாதிரி அந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாத்திடுச்சு.
தினமும் உங்க அம்மா எனக்கும் நான் அவளுக்கும் ஐ லவ் யூ சொல்லிட்டு நெத்தில முத்தம் கொடுத்துட்டு தூங்குறது வழக்கம். அன்னைக்கு முதல் நாள் நைட்டும் அப்படித்தான் போச்சு. அந்த நாள் தான் நான் கடைசியா சந்தோஷமா இருந்த நாள்.
என்னோட வாழ்க்கையில நான் அந்த மாதிரி என்னைக்கும் அழுததே இல்ல. எவ்வளவு கஷ்டம் வந்தப்ப கூட நான் சாக நினைக்கல. ஆனா அன்னைக்கு அவ கூடவே செத்துப் போயிடனுமுனு தோணுச்சு. ஆனா நான் சாகாம இருக்க ஒரே காரணம் நீ மட்டும் தான்"
"அப்பா....." விக்ரம் சத்தம் சக்திவேலை ஒரு நிமிடம் அமைதி ஆக்கியது.
"விக்ரம் நீ அப்போ அம்மா அம்மான்னு அழுத. உனக்கு ஆறுதல் சொல்றதா இல்ல நான் அழற தானே தெரியல. என்னோட செல்விய கட்ட மேல அப்படியே படுக்க வச்சிருந்தாங்க. என் ஈரக் குலையே நடுங்கிருச்சு. ஆனா அந்த நிமிஷம் மாறாது. அவளை கட்டி புடிச்சிட்டு அழுதேன். அந்த இடத்துல நான் அவளுக்கு கடைசியா ஒரு ஐ லவ் யூவும் முத்தமும் கொடுத்தேன். அதுக்கப்புறம் என்னால கொடுக்க முடியாம போயிடுச்சு.
அப்பதான் புரிஞ்சுகிட்டேன். ஒரு ஐ லவ் யூ ஒரு மனிதனை எந்த அளவுக்கு சந்தோஷமா வாழ வைக்கிறது அதே அளவுக்கு அழ வைக்கவும் செய்யும்.
அதனால் தான் உன் மனசு கஷ்டத்தில் இருக்கும் போது மட்டும் நான் உன்னை அணைத்து ஆறுதல் சொல்லி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொல்வேன். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லுவ. இப்ப ஆறுதல் சொல்ல நான் இருக்க மாட்டேன் என்பது கஷ்டமாக தான் இருக்கிறது.
என்னோட உலகம் நீ மட்டும் தான். உன்ன நல்லா படிக்க வச்சு, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டேன்.
ஆனா நான் நரகத்தில் தான் வாழ்ந்தேன் விக்ரம். உன் அம்மா இல்லாத இரவுகளை என்னால கடக்கவே முடியல. நான் அழுதா நீ உடைஞ்சு போய்டுவ. அதுக்காக நீ தூங்குன அப்புறம் சத்தம் வராமல் வாயை பொத்திகிட்டு அழுகிற வாழ்க்கை ரொம்ப கொடுமைடா. ஒரு ஆம்பள அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அவனும் மனுஷன் தானே. வலிக்கும்ல.
எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு. அதனாலதான் உன்னை சென்னைக்கு அனுப்பி வெச்சேன். நீ அடிக்கடி கேட்பயே, "ஏன்பா இன்னமும் அம்மாவோட புடவை எல்லாம் வீட்ல வச்சு இருக்கீங்க. தூக்கி போட்டுடலாம்லனு". எப்பவும் நான் உன் அம்மாவோட சேலையை கட்டிப்பிடிச்சிட்டு போத்திகிட்டு தான் தூங்குவேன். அதுல அப்படி ஒரு ஆறுதல் கிடைக்கும். அவ என் கூடவே இருக்க மாதிரி இருக்கும்.
அதனாலதான் நீ மருமகளுக்கு அவ சேலை எடுத்து தரும்போது சண்டை போட்டேன். அவ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் அவகிட்ட உண்மையை சொல்லிட்டேன். உனக்கு தெரிய கூடாதுன்னு சொல்லி இருந்தேன்.
அது உனக்கு சொன்னா புரியாது. அத புரிஞ்சுக்க கூடிய வயசும் அனுபவமும் உனக்கு வரல. இந்த வீட்லதான் நானும் அவளும் வாழ்ந்தோம். இந்த செவரு கூட நான் பேசுவேன். அந்த மரத்தோட நான் பேசுவேன். இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். அவ கூட வாழ்ந்துட்டே இருக்குற மாதிரி தோணும்.
ஆனா பகல்ல இருக்கிற அந்த காதல் அந்த சுகம் நைட் இருக்காது. அப்ப வலி மட்டும் தான் இருக்கும். கண்ணீர் இத்தனை வருஷம் ஆகியும் குறையல. எனக்கு சாகலாம்னு தோணும்போதெல்லாம் நீ என்ன பண்ணுவ அப்படிங்கிற பயம் மட்டும் தான் இருந்துச்சு.
ஆனா இப்ப நான் சந்தோஷமா சாகப் போறேன். உன்ன நீ தனியா பாத்துக்குற அளவுக்கு வந்துட்ட. அப்பா இல்லாமல் பிரச்சனைகளை தனியா முயற்சி பண்ணி முடிக்கணும்னு முடிவுக்கு வந்துட்ட. இனி அப்பா உனக்கு பாசத்துக்கு தவிர வேற எதுவும் தேவைப்பட மாட்டேன். அந்த தைரியம் தான் என்ன தற்கொலை பண்ணிக்க சொல்லுச்சு.
அப்பா மேல கோவப்படாதே. இது பல வருச ஏக்கம். அதுவும் இல்லாம அப்பாவுக்கு வயசு ஆகுது இல்ல. பேரனை நல்லா பாத்துக்க.
எப்பவும் பொண்டாட்டி கூட சண்டை போடாத. போட்டாலும் சமாதானமாக உனக்கு அப்பா பலமுறை வழி சொல்லி இருக்கேன். அது எப்பவும் பிடிச்சுக்க.
அப்பாவுக்காக ஒரே ஒரு விசயம் பண்ணுடா. அப்பாவை இந்த தோட்டத்துல புதைச்சுடு. அப்போ அம்மாவோட சேலையும் சேர்த்து புதைச்சிடுங்க. மக்கி போக போற இந்த உடம்போட கொஞ்ச நாள் அது கூட வாழ்ந்துட்டு போகட்டும்.
அப்பா எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன். ஐ லவ் யூ இப்படிக்கு உன் அப்பா" என்று சக்திவேல் வாசித்து முடித்தவுடன் வேகமாக உள்ளே சென்று அவரை அணைத்துக் கொண்டு "அப்பா..." என்று கதறி அழுதான்.
"என்ன மன்னிச்சிடுங்கப்பா. நீங்க அம்மா மேல வச்சிருக்கிற காதல தெரிஞ்சுக்காம போயிட்டேன்பா... ஆனா என்ன இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே. எனக்கு கெட்ட பேரு வந்துர கூடாதுன்னு இப்படி லெட்டர் எழுதுன உங்கள புரிஞ்சுக்காம போயிட்டேன் பா..." அடுத்த ஒரு மணி நேரம் அவன் அழுகை சத்தம் தவிர வேறு எதுவும் எதுவும் அங்கு கேட்கவில்லை.
சக்திவேல் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
சில நிமிடங்களில் செல்வகுமார் உடலை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் ஆசைப்படி அனைத்தும் நிறைவேறியது.
உறவினர்களும் சுற்றத்தார்களும் செல்வகுமாரின் இருப்பின் ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர் விக்ரமின் யாரும் குறை சொல்லவில்லை. அதைத்தான் அவரும் எதிர்பார்த்தார். பதினாறாம் நாள் காரியத்திற்கு அவரின் புகைப்படம் ஒன்றை பிரேம் போடச் சொல்லி கொடுத்தான் விக்ரம்.
அதை பிரேம் போட்டுக் கொண்டு வந்த பின்னர் பார்த்த விக்ரமின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.
காரணம் புரியாமல் சத்யா அதை கையில் வாங்கி பார்க்க, "ஐ லவ் யூ வும் அன்பு முத்தங்களும்" என்று எழுதி இருந்தது.
அந்த வார்த்தை அவன் வாழ்வோடு இணைந்து விட்டது.
- சேதுபதி விசுவநாதன்
(உங்கள் பின்னூட்டங்களை yaazhistories@gmail.com என்பதிலும்
குனிந்த தலை நிமிராமல் தான் எழுதிக்கொண்டிருந்தான் வள்ளுவன், ஏடுகளில் கூரான எழுத்தாணி உரசும் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தன.
அறத்துப்பால், பொருட்பால் இரண்டும் சேர்த்து 1080 குறள்கள் எழுதி விட்டான், இத்துடன் 'திருக்குறள்'நிறைவு பெற்றதாக கூறி எழுத்தாணியிலிருந்து பிடி தளர்ந்தது வள்ளுவனிடம்...
அப்போதுதான் ஏறிட்டு பார்க்கிறான் தன் மனைவி வாசுகியை..
அங்கே அவள்....
கூர் மழுங்கிய எழுத்தாணி கொண்டு தன் கண்களில் மை தீட்டி கொண்டிருக்கிறாள்,
அப்போது வள்ளுவன் அவளை பார்க்க, மை தீட்டிய கண்களுடன் வாசுகியும் வள்ளுவனை பார்க்க..
அப்போதுதான் 'இன்பத்துப்பால்'பிறக்கிறது, அதன் பின்னர் 250 குறள்கள் எழுதி 1330 குறள்களாக நிறைவு பெற்றது..
இன்பத்துப்பாலில் முதல் குறளே இதுதான்...
"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து"
விளக்கம் : இவள் பார்க்க நான் பார்க்க இவள் மை தீட்டிய கண்களின் எதிர் பார்வை சேனை போல் தாக்குகிறது./Ram(ஒரு கற்பனை தான்)
'கூவம் ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணம்'
நாறிகொண்டிருந்தது.. கூவ ஆற்று நாற்றத்தையும் மீறி வந்தது...
போலீஸ்க்கு தகவல் பறக்க, போலீஸ் கூவத்தில் குதித்தது இல்லை களத்தில் குதித்தது,
போலீஸ் மூக்கை பொத்திக்கொண்டு மூட்டையை புரட்டி போட... அவ்வளவுதான் சோளிமுடிந்தது, அந்த சாக்கு மூட்டையில் பச்சை நிற மசியில்..'இசக்கி முத்து, தந்தை பெயர் நடேசன்.. பிறகு வீட்டு முகவரி..
பிறகு என்ன போலீஸ் வேர்க்கடலையை வாங்கி கொறித்து கொண்டே ஜீப்பில் ஏறி பக்கத்தில் உள்ள தண்டையார்பேட்டை சென்று..
வீட்டில் டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த இசக்கிமுத்து வை அள்ளி கொண்டு சென்றார்கள்..
அவனும் அவன் கூட்டாளிகளும் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்..
அவனை ஜெயிலில் தள்ளும் போது போலீஸ் ஒருவர் சொன்னது..'நீ ரொம்ப நல்லவன் டா! எங்களுக்கு எந்த சிரமும் வைக்காமல் அட்ரஸ் சோடு போட்ட பாரு அதை நினைத்து ரொம்ப பெருமை படுகிறேன் 'என்று பாராட்டியுள்ளார்
வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு, அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குடமுழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி.
ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில், அவன் வீற்றிருக்க, மரங்கள் இரண்டும், இலைகளாலும், பூ, கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை, கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே, "துடியான தெய்வம்." எனப் பயபக்தியோடு கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்துப் பேச்சிக்கு, ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீடு போல், கருப்பன் கோவிலும் ஒரு வீடு தான் தாத்தா, முத்துச்சாமி போல், கருப்பண்ணச்சாமியும் அவளுக்குப் பூட்டன் முறை. அப்படிப் பாவித்துத் தான், அந்தத் தெய்வங்களிடம், உரிமை பாரட்டுவாள்.
"கூறு கெட்ட மனுசன், தலைபிரட்டு புடிச்சு அலையுது. யாருகிட்ட, என்ன பேசுறோமுன்னு, மட்டு மருவாதை இருக்கா. நாலு எழுத்து படிச்சு, கூட்டத்தில பேசிட்டா பெரிய ஆளாக்கும். இவுகளுக்குச் சப்போர்ட்டு பண்றதுக்கும், கை தட்டி துண்டு போர்த்தறதுக்கும் நாலு அல்லக்கை வேற. ஐயா, கருப்பா நீ தான் அவுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்." என வேலையைப் பார்த்துக் கொண்டே, தன் புலம்பலையே வேண்டுதலாக்கி கருப்பனிடம் முறையிட்டாள் முத்துப்பேச்சி.
ஆனால் கருப்பண்ணசாமி அவள் வேண்டுதல் கேட்டும் ஆனந்தமாகவே, அவளது தாத்தா முத்துசாமியைப் போல் சிரித்துக் கொண்டிருக்க, “யார், ஏசினாலும், பேசினாலும் நீயும், உன்னை சாமியாடுற என் தாத்தாவும், ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டு அப்படியே நில்லுங்க.” என்றாள். கருப்பன், தன்னோடு சேர்த்து அவர் பக்தனுக்கும் பேத்தியிடம், பேச்சு வாங்கிக் கொடுத்தார்.
“ஏண்டி நீ மட்டும், கருப்பனை வையலாமாக்கும்.” எனச் சாப்பாடு கூடையோடு வந்த, அவளது அம்மாச்சி பவளாயி கேட்க,
“நான் பேசுறதும்,அவுக பேசறதும் ஒண்ணா. அந்தாளு புத்தியில்லாத பேசுது, நான் அதுக்குப் புத்தியைக் கொடுக்கச் சொல்லி கருப்பனை வேண்டுறேன்.” என அவள் வார்த்தையாட, “ஏசினாலும், பேசினாலும் அப்படியே நிக்கிறாகன்னு, யாரைச் சொன்ன!” எனக் கிழவி கிடுக்கி பிடி போட,
“அது இவரையும், இவரைத் தாங்கி ஆடுற உன் புருஷனையும் தான். பூசை வச்சு, மணி அடிச்சுக் கூப்பிடையில் மட்டும், ஆக்ரோஷமா இறங்குறது. மத்த நேரம், ஒண்ணும் நடக்காத மாதிரி தான நிக்கிறாரு. ஒருக்கா, இவர் சுய ரூபத்தைக் காட்டினா, பேசறவனுங்க நாக்கு மேலன்னத்தில ஓட்டிக்காது, அப்புறம் எப்படிச் சாமி, இருக்கு இல்லைனு பேசுவாங்க.” என அவள் விடாமல் யாரையோ வறுத்தெடுத்துக்க, பொங்கல் வைக்கும் கட்டாந் தரையில் சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு, பேத்தியைப் பார்த்த பவளாயி,
“இப்ப யாருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி வேண்டிக்கிட்டு இருக்கவ!” என்றார்.
“எல்லாம் நீ வளர்த்து விட்ட, கோயில் காளை ஒன்னு, யாருக்கும் அடங்காமத் திரியுதே, உன் கொழுந்தன் மகன், அதுக்குத்தான்.“ என அவள் நொடிக்க,
“உனக்குப் பரிசம் போட்ட, என் மவன் ராசப்பாவ சொல்றீயாக்கும், அவனைத்தான், ஜில்லாவுலையே, பெரிய அறிவாளி, புரட்சி புயல்னு, கருப்புச் சட்டை, சிவப்புச் சட்டையெல்லாம் புகழுது, நீ என்னண்டா, அவனுக்கே புத்தி கொடுக்கச் சொல்லி வேண்டுறவ. ஒரு வேளை , நீ வேண்டிக்கிறதால தான், அவனுக்கு அம்புட்டு அறிவோ என்னமோ?“ எனப் பவளாயி நக்கலாகச் சிரித்தார்.
அவரை முறைத்து விட்டு , “நம்ம சாமி, அவருக்கு அறிவை கொடுத்திருந்தா, அதைத் தூக்கி ஆடுற, என் தாத்தனையே, எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்குமா. அகராதி திண்ட, அந்த மனுஷனைப் பத்தி, இனிமே நாம பேச வேண்டாம் அம்மாச்சி, இத்தோட, அவுக சம்பந்தப் பட்ட விஷயத்தை எல்லாம் முடிச்சுக்குவோம், அவுக சங்காதமே வேண்டாம்.“ என அவள் வேலையைத் தொடர்ந்தாள்.
“அதென்னடி, அப்படிச் சொல்லிபுட்ட, ஊரோட வந்து உனக்குப் பரிசம் போட்டுப் போயிருக்கான், ஐப்பசி பொறக்கவும் கல்யாணம் கட்ட போறவனோட, சங்காதம் வச்சுக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தமுன்னேன்.”
“அந்த நினைப்பு இருந்தா, சாமியாடியான என் தாத்தாகிட்டையே, ஊருக்கு நடுவுல வச்சு, சாமியுமில்லை, பூதமும்மில்லைனு தர்க்கம் பண்ணியிருக்குமா, அவுக சம்மதம் நமக்கு ஒத்து வராது.” என அவள் பேச்சை வெட்ட,
“அவன் நல்லவன், உன்னை வச்சு நல்லா பொழைப்பான்னு, உன் தாத்தனே, இந்தக் கருப்பன் கிட்ட உத்தரவு வாங்கிப் பேசி முடிச்சாரு, எனக்குத் தெரியாதுத்தா, நீயாச்சு உன் தாத்தாவாச்சு, இந்தக் கருப்பனாச்சு, நீங்களே பேசி முடிவுக்கு வாங்க.” எனப் பவளாயி கணவன் வரும் வழியைப் பார்த்தார்.
வயல் வேலையை முடித்து, முத்து சாமி பம்ப்செட்டில் கைகால்களைக் கழுவி கொண்டு, “கருப்பா, எல்லாரையும் நல்லா வை.“ என வேண்டியபடி, சன்னதியில் விழுந்து, விபூதியைப் பட்டையாய் அடித்துக் கொண்டு மனைவியும், பேத்தியும் இருக்குமிடம் வந்தமர்ந்தார்.
கோவிலைச் சுற்றியுள்ள வயல்கள், முத்துசாமியின் பொறுப்பு, அதில் இரண்டு ஏக்கர் இவர் பங்கு எனில் மீதமுள்ள, பத்து ஏக்கர் பங்காளிகளுடையது, மற்றவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து விட்டு, பாட்டாளிகளுக்குக் கூலி கொடுத்து, கருப்பனுக்குப் போக, மீதியில் இவர் குடும்பம் வயிற்றை நிறைத்துக் கொள்ளும்.
“என்னா விஷயம், அம்மாச்சியும் பேத்தியும் கருப்பனையும், பேச்சிலே இழுத்து பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க?” என முத்துசாமி கேள்வி எழுப்ப, ஒரு தூக்கு போணியை அவர் புறம் நகர்த்திய, பவளாயி, பேத்தி நறுக்கி வைத்திருந்த வாழை இலையில் வெஞ்சனத்தை வைத்து நீட்டி விட்டு, பேத்தியின் அங்கலாய்ப்பையும் சொன்னார்.
அதைக் கேட்டு ஹாஹாவெனச் சிரித்தவர், “ஏத்தா சின்னப் பயலுக, அறியாமைல பேசுறதுக்கெல்லாம், மனுஷ கழுதையாட்டம், கருப்பனும், அருவாளை தூக்கணும்னா எப்படி? நிண்டு நம்மையே ஆள்றது தான் சாமி. அதது, அவரவர் பக்குவதில தான் உணர முடியும்.” என்றவர், “கோபமில்லாத, கருப்பன் படியளந்ததைச் சாப்பிடு, வயித்தோட மனசும் குளிர்ந்து போகும்.” எனத் தேற்றியவருக்குப் பேத்தியின் கோபத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றாமை புரியாமல் இல்லை.
முத்துச்சாமிக்கு, விவசாயம் முதல், நாட்டு நடப்பு வரை அத்தனையும் அத்துப்படி. ஊருக்கே யோசனை சொல்லும் சிறந்த மனிதன். அவர் ஒரு வாக்குச் சொன்னால், அது கருப்பன் வாக்கு என்றே, ஊர் மக்கள் சிரம் தாழ்ந்து கேட்பார்கள். அவர் தெய்வ சன்னிதியில் சந்ததம் வந்து, கருப்பனைத் தாங்கி ஆடும் போது, ஊர் சனமே அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கும். அந்த நேரம், வழங்கப்படும் திருநீற்றை, கருப்பனே வந்து தருவதாகவும், வருடம் ஒரு முறை அவன் ஆசி பெற்றாலும் போதும், எந்த நோய் நொடியும், தீவினைகளும் தங்களை அண்டாது என்பது கிராம மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
தெய்வ நம்பிக்கை மிகுந்த அவரது குடும்பத்தில் தான், நாத்திகம் பேசும் மூன்றாம் பங்காளியின் வாரிசு ராசப்பாவும் இருந்தான். பெரியப்பாவோடு, மற்ற விசயங்களில் ஒத்துப் போகும் ராசப்பா, இந்த விசயத்தில் மட்டும் தர்க்கம் செய்து எதிர்த்துத் தான் நிற்பான். ஆனால் தன்னைப் போலவே, உடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, அம்மாவையும் பேணும் அவன் குணத்திலும், அவன் உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, பேத்தியை அவனுக்குக் கட்டித் தர சம்மததித்திருந்தார் முத்துச்சாமி.
ஊரின் நடுவிலிருக்கும் டிக்கடையில் தான், காரசாரமான எல்லா விவாதங்களும் ஓடும். மூன்று நாட்களுக்கு முன், "ராசப்பா, பௌர்ணமி பூசை வருது. கோவில்ல இரண்டு நாளைக்கு, குழாயைக் கட்டி விடு. ஊர் பூரா கருப்பன் பாட்டு கேக்கட்டும்." என அவர், முன்பணத்தை நீட்ட, அதை வாங்க மறுத்தவன்,
"கருப்பனுக்கு, கருப்பனுக்குனு, உழைச்ச காசை எல்லாம் அங்கயே கொண்டு போய்க் கொட்டுங்க. விளைச்சலையும் பங்காளிகளுக்குப் பங்கு வச்சிடுறீங்க. எவன்கிட்டையும் கோயில் வரி வாங்கிறதும் கிடையாது, கருப்பன் உங்களைக் காப்பாத்துறானா, இல்லை நீங்க கருப்பனை காப்பாத்துறீங்களான்னு தெரியலை." என பேச்சை ஆரம்பிக்க,
"எல்லாருக்கும் படியளக்கிறதே, அவன் தான். அவனுக்கு நாம படியளக்க முடியுமா. இதையெல்லாம் புரிஞ்சுகிற பக்குவம் உனக்குக் கிடையாது. விடுய்யா!" என்றார் பெரியவர்.
"புரிஞ்சுக்கிற மாதிரி, எடுத்துச் சொல்லுங்க. நீங்களும் உங்க வயசுக்கு, எழுபது வருசமா, உங்க சாமிக்குச் சேவகம் பண்றீங்க. கஷ்டத்தைத் தவிர அந்தச் சாமி என்ன கொடுத்துச்சு? கைகாலை முடக்கி போட்ட ஒரு மகனை கொடுத்துச்சு, காலம் பூரா, உங்க மகன் சின்ன கருப்பனை தூக்கி சுமந்திங்க, அவனும் அல்ப ஆய்ஸ்ல போயிட்டான். சரி ராக்கம்மா அக்களாவது நல்லா வாழ்ந்துச்சா, முதல்பிரசவத்துலையே அதுவும் போய் சேர்த்துடுச்சு, வயசான காலத்துல பேத்தியை காவல் காத்துகிட்டு திரியிறீங்க." என அவர், வாழ்வை வரிசையாய் பட்டியலிட்டு, சாமியே இல்லை என விதண்டாவாதம் பேசினான்.
“ராசப்பா, எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையில தான் இருக்கு, என் மகன் ஊனமா தான் பொறந்தான், நான் இல்லைங்கல, ஆனால் அவனை சுமக்க உடம்புலையும், மனசுலையும் வலுவ கொடுத்தது என் கருப்பன் தான். அவன் என் வினைப்பயனை முடிக்க, எனக்கு வரமா வந்தவன். மகளும் அதே தான். ஆனால் போக கூடாத வயசில போனாலும், எங்க பிடிமானத்துக்கு பேத்தியை கொடுத்துட்டு போயிருக்கா, அவளை கட்டிக்க நல்ல மனசுக்காரன் நீ வந்துட்ட, நீ என்னை தூக்கி போடாதையா போயிடுவ?” என அதே விஷயத்தை தன் பார்வையில் சொன்னார்.
ஆனால், அதை அப்படியே ஒத்துக் கொண்டால், அவனெப்படி புரட்சியாளன், ஊர், நாட்டு நடப்பை இழுத்துப் பேசி, கடவுள் மறுப்பை அவன் ஆணித்தனமாக எடுத்து வைக்க, முத்துச்சாமி அமைதியானார். ஆனால் அவர் சார்பாகக் கிராம மக்கள், தங்கள் அறிவுக்கு எட்டிய தூரம், கடவுளைத் தாங்கிப் பேசினர். ராசப்பா பக்கமும், இளவட்டங்கள் பேசினர்.
இந்த விசயம், ஊருக்குள், சாமியாடியை, அவர் தம்பி மகன் எதிர்த்திட்டான் என அவரவர் புனைவு, பிறசேர்க்கை எல்லாம் சேர்த்துச் சொல்ல, விசயம் ஊருக்குள் பரவி முத்துபேச்சி காதுக்கும் சென்றது.
ராசப்பா, நல்ல உழைப்பாளி. கொட்டகை, பாத்திரங்கள் முதல், விசேசங்களுக்குத் தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்திருக்கிறான், நல்ல வருமானம். முத்துச்சாமியை காட்டிலும், அதிகம் அடிபட்டதாலும், சுயமரியாதை கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்க் என மைக் செட் அமைக்கும் வேலைக்கு போனவன், அவர்கள் பேச்சைச் செவி மடுத்து, இரண்டுக்கும் பொதுவாக, தனக்கென ஓர் கொள்கையை உருவாக்கிக் கொண்டான்.
போன மாதம் தான் முத்து பேச்சிக்குப் பரிசம் போட்டுச் சென்றான். அது முதல், அங்கங்கே அவளைப் பார்க்கும் நேரமெல்லாம், ஜாடையாய் பேசி, தன் பிரியத்தை அவன் உணர்த்த, அவளுக்குள்ளும் பூ மலர்ந்தது. ஆனால் இயல்பாகவே அவன் பேச்சில் வரும், இறை மறுப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் தன் தாத்தாவிடம் தர்க்கம் செய்ததில் ஏகத்துக்கும் கடுப்பு.
நாளை பௌர்ணமி பூஜை, எல்லாருக்கும் வழி காட்டும் இந்தத் தெய்வம், தனக்கும் நல்ல வழியைக் காட்டட்டும் என மனதில் மருகி நிற்க,
"ஆத்தா பேச்சியம்மா, ராசப்பா, ஆளுங்க, குழா கட்ட வருவானுங்க. இந்தத் தரம் கொஞ்சம், உச்சக்க ஏத்திக் கட்டச் சொல்லு. நாளைக்குப் பூசைக்கு அன்னதானம் யாரோ கொடுக்குறோமுன்னு சொன்னாகளாம், யார் என்னனு ப்ரசிடெண்டை விசாரிச்சிட்டு வந்துடுறேன்.” என அவர் கிளம்ப,
"அந்தாள விட்டா, உங்களுக்கு வேற மைக் செட்டே கிடைக்கலையாக்கும்." என நொடித்த பேத்தியைப் பார்த்து, ஓர் சிரிப்பை மட்டும் உதிர்த்துச் சென்றார்.
பௌர்ணமி அன்று, காலையிலிருந்தே ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, சாமியை வணங்கிச் சென்றனர். இன்று கோவிலில், முத்துசாமி குடும்பம் மட்டுமின்றி, மற்ற பூசாரி, பங்காளி குடும்பங்களும், கருப்பனுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருந்தனர்.
உச்சி காலப் பூஜையில், ஆலய மணி முழங்க, தூப தீபம், பூக்களின் நறுமணம் அவ்விடத்தை நிறைக்க, எழில் கொஞ்சும் பசுமையோடு பூலோக கைலாயம் போல் கோவிலே தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தது. ஆனந்தரூபனாய், அருள் பாலிக்கும் கருப்பன், கோவில் மணியடித்து, பக்தர்கள் சரணங்களை முழங்க ஆக்ரோஷமாய் முத்துசாமி மேல் இறங்கினான். நாக்கை துருத்தி, கண்ணை மலர்த்தி, செவ்வெறி ஓடிய சிலிர்ப்புடன், அருவாளை ஏந்தி சன்னதி முன் ஆட்டம் ஆடியவன், தன் முன் மண்டியிட்டு விழும் பக்தருக்கெல்லாம், அருளாசி வழங்கினான். கண்ணீர் மல்க கதறியவர்களுக்கு, நல்வாக்குத் தந்தான்.
முத்துப்பேச்சி, கருப்பனாகிய தாத்தன் முன் மனக்குறையோடு மண்டியிட, பவளாயி, “அவள் மனச் சஞ்சலத்தைத் தீர்த்து வைங்க.” எனவும், ஓர் அட்டகாசமான சிரிப்போடு, “உன் மனசு குளிர,மனை அமையும்.” என ஆசிர்வதித்தார்.
ஊர் ப்ரசிடெண்ட்டிலிருந்து, காவிசட்டையிலிருந்த வெளியூர்காரர்கள் வரை பயபக்தியோடு வணங்கி நின்றனர். கருப்பன், அனைவருக்கும் அருளாசி வழங்கி மலை ஏறினார். சூட தீபாராதனை காட்டப்பட்டது.
அன்று முழுவதும், ஊர் மக்கள் அங்குத் தான் குடியிருந்தனர், பெரும் புள்ளி ஒருவர், அன்னதானம் வழங்கினார், மற்றொருவர் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தார். சிலர் புதிதாகக் கோரிக்கை வைக்க வர, சிலர் நிறைவேறிய கோரிக்கைக்காகக் காணிக்கை செலுத்த வந்தனர்.
மதியத்துக்கு மேல் கூட்டம் குறையவும், பிரசிடெண்ட் அழைத்து வந்த காவி சட்டை, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ,தான் இருக்கும் அமைப்பைப் பற்றியும், இந்தக் கோவிகளைப் பாதுகாத்து, கருப்பனின் அருளை வெளியுலகுக்கு பிரபலப்படுத்தும் யோசனையும் சொன்னார். அதன் மூலம் பக்தியையும், மதத்தையும் வளர்க்கலாம் என்றார். தங்கள் அமைப்பை, கட்சியின் செல்வாக்கைப் பற்றி அடுக்கியவர் கடைசியில் முத்துசாமியை தங்கள் அரசியல் கட்சியில் சேரச்சொல்லி வலியுறுத்தினார்.
“நம்ம கட்சியில் சேர்ந்துட்டீங்கன்னா, மத்த மதத்துக்காரங்க உங்களை எதிர்க்கத் துணிய மாட்டாங்க. நம்ம மதத்திலிருந்து, மதம் மாறுவதைத் தடுக்கலாம். நாத்திக கூட்டம், உங்களை ஒரு வார்த்தை பேசும் முன்ன யோசிப்பாக. நீங்க தனி ஆளா இருக்கப் போய்த் தானே, உங்க சொந்தக்காரன், ஊர் மத்தியில் உங்களை அசிங்க படுத்தியிருக்கான். இனிமே அதெல்லாம் நடக்காது, நாங்க உங்களுக்குத் துணையா இருப்போம், பேசுறவனுக்கு, நம்ம சாமி, அங்கேயே தண்டனை தருவார், அவன் பல் உடையும்.” என முத்துசாமியை மூளைச் சலவை செய்து கொண்டிருக்க, அம்மாச்சியும், பேத்தியும் தூரத்திலிருந்த பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மைக் செட்டை அவிழ்க்க, ராசப்பவே வந்தான், நேற்றே அவன் எடுபிடி சீனி, குழாய் கட்ட வந்தவன் முத்து பேச்சியின் வாயை பிடுங்கி , அவளது மனத்தாங்கலை, கேட்டு அறிந்து, “நயன்டிஸ் கிட்ஸ்சுக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது அண்ணன், உனக்கு மேடையில் பேசுற அளவுக்கு, வீடு விவகாரத்தில் விவரம் பாத்ததுன்னேன், மதனிகிட்ட அடங்கிப் போ, அப்பத்தான், அது உன்னைக் கட்டும். அதை விட்டு, அவுக தாத்தா, சாமியாடிகிட்டையே போய் ஒரண்டை இழுத்துகிட்டு இருக்க!” என அறிவுரை வழங்க,
“பொடிப்பய, நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்ட!” என முறைத்தவன், 'காவி கூட்டமெல்லாம், உள்ள வர்றது இந்த ஊருக்கு நல்லதில்லை, அதுக்காகவாவது, நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்.' என வந்து சேர்ந்தான்.
பவளாயி, அவனை வரவேற்றுச் சாப்பிடச் சொல்ல, முத்துப் பேச்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு அம்மன் பீடத்துக்கு அருகில் சென்று நின்று கொண்டாள், அவன் தான் அங்கு வரமாட்டானே!
ராசப்பாவை பார்க்கவும், காவி சட்டை கொஞ்சம் ஸ்ருதியைக் குறைத்து, “சரிங்க ஐயா, நாளைக்குப் பார்ப்போம், இப்ப நீங்களும், கருப்பனும் எனக்கு உத்தரவு கொடுங்க.” எனக் கையைக் கூப்ப.
“இருங்க தம்பி, கருப்பனை கும்பிட வந்துட்டு, சும்மா போகலாமா.” என்றவர், ராசப்பாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கருப்பன் சன்னதிக்குச் சென்று, நறநறவென இருந்த சாம்பல் விபூதியை, தன் நெற்றியிலும், உடலிலும் பட்டையாக அடித்துக் கொண்டு வந்து தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றார்.
“இது, எங்க ஊரு, எங்க சாமி. நாங்க பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து, இந்த வயல் வெளியில் வச்சு, அவனைக் கும்பிட்டு வரோம். காவி சட்டைக்காரன் சொல்லித் தான், நாங்க எங்க சாமியை கும்புடணுங்கிறதும் இல்லை, கருப்பு சட்டைக்காரன் சொல்லி, அவனை மறுக்கணும்கிறதும் இல்லை. எவன் வந்தாலும், போனாலும், சொன்னாலும் சொல்லைனாலும், எங்க அப்பனை ஆத்தாளை, நாங்க கும்பிடத் தான் செய்வோம்.
நாட்டில் நடுக்கிற அக்கிரமத்தையெல்லாம் பட்டியல் போட்டு, உங்க சாமி இருக்கா, இருந்தா இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு கருப்பு சட்டைகாரன் கேட்கிறான். அவனுங்களுக்குப் பதில் சொல்ல, காவி சட்டைக்காரன் கச்சை கட்டிட்டு இறங்குறீங்க.
'தீதும், நன்றும் பிறர் தர வாரா' நம்ம செஞ்ச தப்பு தான், நமக்குத் தண்டனையா வரும், அந்தத் தப்பு எப்போ செஞ்சேன்னு கேட்காத, அப்பாவியா இருக்கச் சின்னப் பிள்ளைகளைக் கூடச் சீரழியுதுங்களேன்னு கேட்டுத் தர்க்கம் பண்ணாதே. எந்தச் ஜென்மத்துல, எந்த உசிரு என்ன பாவம் செஞ்சது, இப்ப பாவம் செய்யிறவன் என்ன கதி ஆவான், என்ன கணக்குன்னு நமக்குத் தெரியாது, ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் கணக்கு தப்பவும் தப்பாது.
ஒருத்தன் சீரழிச்ச புள்ளைக்கு, அது சீரழிவு இல்லைனு புரிய வை. மனசு சுத்தம் தான் கடவுள். நல்லதோ கெட்டதோ சமநிலையில் பார்க்கிற பக்குவம் தான் அவன் அருள் கொடை. உன் பக்குவத்துக்கு ஏத்த மாதிரி அவன் காட்சி கொடுப்பான். இது அவனவனா உணர்ந்து தெளிய வேண்டிய விஷயம்.
இது சரி, இது தப்பு, நீ கும்பிடு, கும்புடாதேன்னு அடுத்தவனுக்குச் சொல்லித் தராதே. எங்க பிள்ளைகளுக்கு நாங்க சொல்லி கொடுத்துவுக்கோம்.” என முத்து சாமி, ஆக்ரோசம், ஆவேசமின்றி அமர்த்தலாகச் சொன்னார்.
“அப்ப மதம் மாறி போறவங்களுக்கு என்ன சொல்றிங்க?“ எனக் காவி சட்டைகேட்க. “எல்லாச் சாமியும் ஒன்னு தான், அவனுக்குக் கடவுள் எந்த விதத்தில் காட்சி கொடுத்தாரோ, அதை பிடிச்சுக்குறான். ஆனால், நீ இதைச் செய், நான் உன்னைக் கும்புடுறேன்னு போறவன், எந்த மதத்துக்கும், ஏன் அவனுக்கு அவனே உண்மையானவனா இருக்க மாட்டான்.” என்றார்.
“சாமி கும்பிபுடுங்கிற மாதிரி, சாமி இல்லைங்கிறதும் ஒரு கொள்கை தானே, அதைச் சொன்ன எதுக்கு ஒதுக்கி வைக்கிறிங்க?” என் ராசப்பா கேள்வி எழுப்ப, முத்துப்பேச்சி மறுபடியும் ஆரம்பிக்கிறியா என முறைத்தாள்.
“உன்னை எப்ப நான் ஒதுக்கி வச்சேன், அப்படி ஒதுக்கி வச்சா என் பேத்தியை உனக்குக் கட்டி கொடுக்கச் சம்மதிச்சு இருப்பேனா. உன்னைக் கேள்வி கேட்க கூடாதுன்னும் சொல்லலை, ஆனால் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனா, பிடிவாதமா கேட்காத, உனக்குள்ள கேள்வியைக் கேளு.
சங்கடம் வரும் போது, தானே சாமியே இல்லைனு வசனம் பேசுறீங்க, அந்தச் சங்கடம் தான், உன்னை வலுவான மனுசனா மாத்தும், மனுச சித்தம், நாளுக்கு நாள் மாறக் கூடியது. உன் கையும், காலுக்கு ஓயும் போது, உன் மேலையே உனக்கு நம்பிக்கை குறையும். நம்பிக்கை குறைஞ்ச மனுஷன் ரொம்ப ஆபத்தானவன். அவனையும் காத்து, சமுதாயத்தையும் காத்து நிக்கிறது இறை நம்பிக்கை, அங்க துணை நிக்கிறவன் தான் கடவுள்.“ என முத்துசாமி பேச,ராசய்யா சிந்திக்க ஆரம்பித்தான்.
அவன் யோசித்து நிற்கும் நேரமே, 'கருப்பா, இந்த விபூதியை, மாமன் பூசிக்கிச்சுன்னா, நான் அதைக் கட்டிக்குவேன், இல்லையினா உனக்குச் சேவகம் பார்த்துகிட்டு இருந்துக்குறேன், முடிவு உன்னது தான்.‘ என முத்துப்பேச்சி, விபூதியை ராசப்பாவின் நெற்றியில் பூச வர, ஒரு நிமிடம் தயங்கியவன், அவள் முகம் சுருங்கவும், “உன் நம்பிக்கைக்காகப் பூசிக்கிறேன்.” என நெற்றியை நீட்டினான். “கருப்பா, என் மாமனுக்கு நல்ல புத்தியைக் கொடு." என்ற வேண்டுதலோடு பூசி விட, பவளாயி சிரித்தார்.
“அய்யா, கடவுள் இருக்கார்னு ஒத்துக்குறிங்க, நம்ம மதத்து கடவுளைத் தான் கும்புடுறீங்க, நம்ம கட்சியில் சேரலாமே!” எனக் காவி சட்டை கருத்து தெரிவிக்க,
மீண்டும் கலகலவெனச் சிரித்த, முத்துசாமி, “நீங்க, உங்க கட்சியை வளர்க்க மதத்துக்குக் காவலன் வேஷம் கட்டுறீங்க, அவுங்க சாமி எது, பிற்பாடு வந்த சம்பிரதாயம் எதுன்னே தெரியாமல் எதிர்த்து நிக்கிறாங்க. உங்க இரண்டு கட்சியும் ஆரம்பிக்கும் முன்னையும், நாங்க சாமி கும்பிட்டோம், உங்களுக்கு அப்புறமும் நாங்க சாமி கும்பிடுவோம்.
எங்க நம்பிக்களுக்குள்ள, உங்க கட்சியை வளர்க்க பார்க்காதீங்க, அவுங்க அப்படி தான் கத்துவாங்கன்னு, உங்களை கடந்து போயிகிட்டே இருப்போம். நீங்க சட்டையில், அடையாளத்தில் காட்டுறிங்க, நாங்க வேட்டியில் பக்தியை காட்டுறவுங்க. எங்க ஊர், எங்க சாமி, நீங்க உள்ள வராதீங்க!“ என முடித்தார் சாமியாடி முத்துசாமி.
எங்க ஊரு எங்க சாமி! நீ உள்ள வராதே!
நடப்பு
"தேவி இந்த வருஷம் மே லீவுக்கு ராமசாமி மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோம். மாமா ரிடையர் ஆகிட்டா அப்பறம் அங்கே போக முடியாது."
"சரி போவோம் நானும் வரேன்." .
அந்த நாளும் வந்திடாதோ, என ஏங்கி பல நாட்கள் 'வடிவேல்' பாணியில் 'ப்ளான்' பண்ணி எங்கள் திட்டத்தை செயல் படுத்தினோம். ஆளுக்கு ஒரு ஊரில் குடியேறி இருந்தவர்கள், காவிரி அகன்று ஓடும் அந்தச் சிராப்பள்ளி நகருக்கு, அக்கா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
பல வருடங்களுக்கு பிறகு, எங்கள் குழந்தை பருவம் கழிந்த, நாங்கள் பிறந்து வளர்ந்த குவாட்டர்ஸ் வீடுகளை காணும் ஆவலில், எனது மகன், மகளை மட்டும் அழைத்துக் கொண்டு நானும் என் தங்கை தேவியும் காட்டூர் பஸ் ஏறினோம். அந்த பேருந்தே ஏதோ ஓர் விட்ட குறை, தொட்ட குறை சொந்தம் போல், எங்களை நலம் விசாரிப்பது போல் தோன்றியது.
இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், எங்கள் பிறந்த இடத்தின் சொர்கத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் முன் அவ்விடத்தின் இனிமை நினைவுகளை அக்காளும், தங்கையுமாய் அசைப் போட்டபடி பயணித்தோம்.
அது ஒரு சர்க்கரை ஆலை, அதனுள் அமைந்த குடியிருப்பு பகுதியில் தான் எங்களின் பாலபருவ சொர்க்கம் இருந்தது. வளரும் போதே பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒரு வேலி உணர வைத்தது, ஆம் குடியிருப்பை, அதிகாரிகள், தொழிலாளர்கள் என்ற பாகுபாடு செய்வித்து இரண்டாக பிரித்திருந்தார்கள். இன்று நினைக்கும் போது ஆபீஸர்களின் குடியிருப்பு ஒற்றை படுக்கையறை, அல்லது இரண்டு படுக்கையறைக் கொண்டாத இருந்திருக்கும் அவ்வளவே. ஆனால் அன்றை தினத்தில் அங்கு வசிக்கும் மக்களை, ஏதோ பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் போல் எண்ண வைத்தது.
காலணி பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி, காய்கறிக்கடை, ஒரு கிளினிக் இவை வரிசையாகவும், இதைத் தாண்டிய பெரிய மைதானம், என நான் சிறு பிள்ளையில் நினைத்த ஓர் மைதானம், குடியிருப்பு வீடுகள்,
கிளப், ஒரு ஸ்கூல், பேக்டரி, சர்க்கரை விநாயகர் கோவில் எல்லாம் உள்ள ஒரு சிறிய (சிறு பிள்ளையில் நான் பெரியதாக நினைத்த) உலகம்.
பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் ஒரு பெரிய கேட் இருக்கும், பல்குனி ஆறு என காவியத்தில் வர்ணிக்கப்படும் புண்ணிய நதி, தற்போது அது பங்குனி வாய்க்கால் என்ற பெயரோடு சிறு ஓடையாக இருபது அடி அகலத்தில் அந்த கேட்டுக்கு முன்னே ஓடுகிறது. எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை, அங்கு வரை வந்து பேருந்தில் வழியனுப்பி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த நேரம் இந்த வாய்க்காலுக்கு மேலே பாவிய பாலத்தின் தடுப்புச் சுவர் கட்டையில் அமர்ந்து அதன் நீரோட்டத்தை வேடிக்கை பார்ப்பது எங்கள் தனியாத ஆசையில் ஒன்று.
அந்த பிரசித்தப் பெற்ற வாய்க்காலைத் தாண்டிய கேட்டில் நேபாளி கூர்க்காக்கள் காவல் காக்க அமர்ந்திருப்பார்கள். நல்ல சிவந்த நிறமும் ஈடுதாடான உடல் வாகும், காக்கிச் சட்டையில் போலீஸ்காரர்களுக்கு சவால் விடும் மிடுக்கோடு நின்றிருப்பர். அவர்களைப் பார்க்கும் போதே ஒரு பயம் வரும். புதிதாக வரும் யாரையும், யார் எவர் யார் வீட்டுக்கு என விசாரித்த பின்பே உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும். எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் முன் எங்கள் அப்பாவுக்கு போனில் தகவல் சென்று விடும்.
ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா, சித்தப்பா வரும் போது, வாட்ச்மேன் அவர்களை கேள்வி கேட்காமல் உள்ளே விடுவார், "தெரியும் சார் பாலு சார் அண்ணன்." என சரியாக அடையாளம் கண்டு கேட்காமல் அனுப்புவர், "எப்படி டா அவன் கரரெக்டா சொல்லிடறான்?" என ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா ஆச்சரியமாய் கேட்பார். இதில் சிறப்பு என்னவென்றால், ஆறு மாதக் குழந்தை கூட அசப்பில் ஒரே மாதிரி இருக்கும் இவர்களை ஒருவரோ என குழப்பம் கொண்டு ஏமாறும். இவர்கள் உருவப் பொருத்தம் அப்படி. அந்தப் பெருமையைத் தான் பெரியப்பா அப்படி சிலாகித்துக் கொள்வார்.
அந்த மரபுப்படி, எங்களுக்கே ஓர் அறிமுகம் தேவைப் படுகிறதே என மனது கனத்தாலும், இருபது வருடம் சும்மாவா என மனதை தேற்றிக் கொண்டு, நாங்களும் மாமாவின் பெயர் சொல்லி உள்ளே சென்றோம் .
குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் வழியின் இரு புறமும் பண்ணீர், புங்கை குல்மோஹர் மரங்கள் நிறைந்த நிழல் பாதை. வலது புறம் பாக்டரியின் கழிவு நீர் சுத்திகரித்து செல்லும் நீர் பீச்சிகள் வெதுவெதுப்பான நீரை பீச்சிக்கொண்டு இருக்கும், இடது புறம் வாய்க்காலை ஒட்டிய பகுதி மரங்கள் நிறைந்து இருக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப் பட்டு வாய்காலில் பாயும்.
அந்தப் பாதையில் சென்றால் நேரே ஒரு பாதையும், வலது புறம் ஓர் பாதை பிரியும். வலது பிரியும் பாதையில் பத்தடி தூரத்தில் ஒரு மைதானம் வரும் அதன் பிறகு செடிக்கு பாத்திக் கட்டியதுபோல் வரிசைக்கு பத்து என 40 வீடுகளும், பக்கவாட்டில் 2வரிசை 20 வீடுகளும் இருக்கும். இந்த வீடுகள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வரிசை வீடுகள்.
நினைவுகள்
மனம் இருந்தால் குருவிக்கூட்டில் மான்கள் வாழலாம், என்பது போல் இருக்கும் அங்கு எங்கள் வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் 3,4 பிள்ளைகள், ஒரு தாத்தா, பாட்டி என குடும்பங்கள் நிறைந்து வாழ்ந்தன அங்கே. வரிசையாய் உள்ள எல்லா வீடுகளிலும் உள்ளவர் அனைவரும், அத்தை,மாமா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என முறை வைத்தே அழைக்கப்பட்டனர் .
80 களில் வாழ்ந்த அந்த 100 குடும்பங்களை கொண்ட காலணி, குதூகலம் நிறைந்த உயிரோட்டமுள்ள ஒரு கூட்டுமுறை வாழ்வு போல் இருந்தது. அந்த குடியிருப்புகளை தாண்டி ஒரு சிறு பள்ளிக்கூடம், ஒரு க்ளப் இவை உண்டு.
இந்த ஆரம்பப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி அந்த சிறுவனோ, சிறுமியோ கையை தலையை சுற்றி அடுத்த காதைத் தொட வேண்டும் என்பதே.
சிறுமியாக இருக்கும் போது, என் தாத்தா என்னை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வார். எதிரே வரும் பெரிய டீச்சரிடம், "என் பேத்தியை உங்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்." என்பார், பெரிய டீச்சர் என் கையை தலை சுற்றி காதை தொடச் சொல்வார். கொஞ்சம் எட்டாமல் இருக்கும் என் கை, "கொஞ்சம் நாள் ஆகட்டும் ஐயா!" என பதில் சொல்லி எங்களை கடப்பார்கள். "என்ன ஐயா பேத்தியோடு வாக்கிங்கா?" என எதிர் வருவோர் எல்லாம் தக்கபடி விசாரித்தே நகர்வர்.
வீட்டில் இருக்கும் என் அப்பாயியிடம் பள்ளிக்கு கிளம்பும் முன் தலை வார, எனக்கும் பக்கத்து வீட்டு ராஜி அக்காவுக்கும் எப்போதும் போட்டி நடக்கும், பூனைக்குட்டி போல் குடுமி வைத்துள்ள உள்ள நான், ஜடையை மடித்துக் கட்டினாலே இடுப்பு வரை தொங்கும் அந்த அக்காவிடம் போட்டி போடுவேன். காய் நறுக்கிக் கொண்டோ, மோர் கடைந்துக் கொண்டோ உட்கார்ந்திருக்கும் என் அப்பாயியிடம், "அம்மா என்ன செயகிறீர்கள்?" என்கிற விசாரிப்போடு உரையாடல் நடந்து கொண்டிருக்கும். பார்ப்பவர் பாசமாய் விசாரிக்கும் இந்த விசாரிப்புக்குத் தான் இன்றைய பெரியவர்கள் ஏங்குகின்றனர் என்பது இப்போது புரிகிறது.
"ஒரு டம்ளர் சீனி, வேணி அம்மா கிட்ட வாங்கியது. திருப்பி குடுத்துட்டு வா." என அம்மா ஓசி வாங்கியதை திருப்பித்தரச் சொல்லி அனுப்புவதும், சாப்பிடும் போது வெஞ்ஞனமாக வைத்தக் காய் பிடிக்க வில்லை எனில், குமாரத்தை வீட்டு ஊறுகாய் தேடி ஓடுவதும் எங்கள் வழக்கம். அம்மா பிழிந்து வடகத்தை காக்கா கொத்தாமல் பாதுகாப்பது எங்கள் பொழுதுபோக்கில் சேர்த்தி. காக்கைக்கு பதில் நாங்கள் கொத்துவோம் அது வேற கதை.
மாலை 5 மணி சங்கு ஊதும் போது சரியாக எங்கிருந்தாலும் எங்கள் அப்பா வரும் நேரம் வீட்டில் ஆஜராகி விடுவோம் நாங்கள். மதியம் சாப்பாடு, அப்பா, தாத்தாவுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தே சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தவுடன் என் அப்பா 20 நிமிட ஓய்வில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள். அப்போது அப்பா கால் மிதித்து விடுவது என்னுடைய தலையாய கடமை.
மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்பது போல், வெயில் வீணாக போகாமல் காலணி முழுவதும் சுற்றித் தீருவோம். பம்பரம், குண்டு, கிளித்தாண்டு, புளியம் முத்து செதுக்கல், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், கல் விளையாட்டு, உப்பு, நாடு பிடித்தல், மரம் ஏறுதல், கண்ணாம் மூச்சி என நேரத்திற்கு தகுந்தாற் போல் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடுவோம்.
பள்ளிக்கூடம் ஆண்டு விழா எனில் நடனம், நாடகம் ஏதாவது ஒன்றில் பங்கேற்று கட்டாயம் மேடை ஏறுவோம். விளையாட்டு போட்டியில் பரிசு வருமோ, இல்லையோ ரன்னிங் ரேஸில் கடைசி வந்தாலும், ஸ்கிப்பிங்கில் முதலில் தடுக்கி விழுந்தாலும், பாட்டிலில் தண்ணீர் நிரப்பு வதில், கையிலேயே தண்ணீர் எல்லாம் வழிந்தோடினாலும், அதைப்பற்றி கவலை இல்லாமல் கலந்து கொள்வோம். அந்த மகிழ்வை இன்று எங்குத் தேடினாலும் கிடைக்காது.
பள்ளிக்கூடத்தை அடுத்து ஒரு கிளப் இருக்கும், பகல் பொழுதில் ஒன்று, இரண்டாவது பள்ளி வகுப்புகள் அதில் நடை பெறும். மாலையில் அதே இடம் பொழுது போக்கு இடமாக மாறி விடும். ஒரு வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டி அங்கே இருக்கும், அதில் தான் dd யில், 13 வார நாடகங்கள், ஒளியும் ஒலியும், திரைப்படம் எல்லாம் பார்ப்போம். ஒரே டிவியில் மொத்த காலணியும் சேர்ந்து வெள்ளிக்கிழமை இரவில் டெக்கில் புது படம் எடுத்துப் போடுவார்கள், போர்வை சகிதம் இடம் பிடித்து முந்திச் சென்று பார்ப்போம். இப்போது 24 மணி நேரமும் ஏதாவது ஒரு படம் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடினாலும் அன்று பார்த்த சுவரசியத்திற்கு ஈடாகாது.
பள்ளிக்கூடம் தாண்டி ஒரு கருவேல மரம் நிறைந்த பகுதி இருக்கும், அதில் மரத்துக்கு அடியில் கூட்டி சுத்தப் படுத்தி ரகசிய இடம் எல்லாம் வைத்திருப்போம்.
பக்கத்து வீட்டு புளியமரம் இருக்கும் அதில் பிஞ்சு விடும் நேரம் எங்களுக்கு வேட்டைதான். எங்கள் வீட்டு மாடிக்கு படி எல்லாம் கிடையாது, கான்க்ரீட் ஓடு நடுவில் குவிந்து, இரு புறம் சரிந்த ஒட்டு வீடு போல் தான் இருக்கும். அதில் வீட்டுக்கு பின்புறம் போடப்பட்ட கொட்டகையின் தென்னம் தட்டியில் காலை வைத்து லாவகமாக ஏறி விடுவோம், ஓட்டு மேலே ஏறி, புளியம் பூ, பிஞ்சுகளை சாப்பிடுவோம், அந்த ஓட்டு மேலே ஏறுவது எந்த ஒரு சாகசத்திற்கும் குறைந்தது இல்லை தட்டியில் உள்ள சிலாம்பு குத்தும், சுளுக்கி எறும்பு கடிக்கும். இந்த சோதனைகளுக்கு நடுவே தான் சாதனையாக ஓட்டு மேல் ஏறுவோம்.
இந்த வேலை எல்லாம் அம்மா மதியம் தூங்கும் போது தான் அரங்கேற்றுவோம். ஒருமுறை எங்கள் தம்பி சிறுவனாக இருந்தவன் எங்களை தொடர்ந்து எப்படியோ, எங்கள் முயற்சியும் சேர்ந்து மேலே ஏறிவிட்டான், ஏற்றிவிட்டோம். பின்னர் சிறிது நேரம் சென்று இறங்கும் போது இருந்தது வேடிக்கை, அவனுக்கு உயரத்தைப் பார்த்து பயம் வந்து விட்டது. பின்னர் பலர் கூடி, நெட்டை குமார் அண்ணன் உதவியுடன் பல கலவரங்களுக்கு பின் கீழே இறங்கினோம்.
இப்படியான எங்களுடைய பல வருட மலரும் நினைவுகளை நினைத்தபடி காலணிக்குள் சென்ற எங்களுக்கு அங்கே இருந்த மாற்றங்கள் தந்தது பேரதிர்ச்சி .
இப்போது உள்ளது போல் ஆண்ட்ராய்டு போன்கள் அந்த சமயம் புழக்கத்தில் இல்லை, எனவே ஒரு டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு எங்கள் நினைவுகளை பதிவு செய்து கொள்ள சென்றோம்.
நான் சொன்ன அந்த மைதானம் இப்போது உரு மாறி யூகலிப்டஸ் காடாக இருந்தது. பாக்டரியில் இருந்து வரும் காற்று மாசுபாடை தவிர்க்க யுக்கலிப்டஸ் வளர்த்திருக்கிறார்கள் .
அதனை கடந்து எங்கள் மாமா வீட்டிற்கு செல்ல, எங்கள் தோழிகளும் எங்களைப்போலவே உரு மாற்றம் பெற்று சுட்டி பசங்களுக்கு தாயாகவும் ஆகி இருந்தார்கள் . ஒவ்வொரு விடுமுறைக்கும் இவர்கள் இங்கே வந்து விடுவது வழக்கமாம். ஒருவருக்கு ஒருவர் மகிழ்ந்து கூடி விசாரித்து மனம் நிறைந்தோம். எல்லாமே மாறிடுச்சுடி என என் தோழி சொல்ல, அதன் பின் உண்டு முடித்து எங்கள் பழைய பெரும் உலகத்தை வலம் வர ஆரம்பித்தோம்.
கடந்த கால எச்சங்கள்.
உயிர்ப்புள்ள ஓவியமாக திகழ்ந்த எங்கள் காலணி எலும்பு கூடு போல் இருந்தது. எங்கே வீட்டுக்கு வீடு குழந்தைகளும், கும்மாளமும் நிறைந்து இருந்ததோ அவை வெறுமைப் பட்டு வெறிச்சோடி இருந்தன. நாங்கள் சுதந்திரமாய் சுற்றிய இடங்கள் பல கம்பி வேலிக்குள் அபாயகரமான கட்டுமானம் ஆகி சிறை இருந்தன.
ஆட்கள் நிறைந்த வசிப்பிடம், ஆள் அரவமற்ற இடமாக இருந்தது. சில வீடுகளில் வேற்று மொழி காண்ட்ராக்ட் வேலையாட்கள் முரட்டு சிங்கிள் ஆக தங்கி இருந்தனர்.
எது வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்ற நடுத்தர வர்க்க சுற்றம் இல்லை, மேல் தட்டு படாடோபம் நிறைந்த ஆஃபீஸ்ர் குடும்பங்கள் இல்லை, ஊரையே சுற்றி காவல் செய்த, நேபாளி கூர்காக்கள் இல்லை, எங்கிருந்தோ குறைந்த பட்ச கூலிக்கு ஆட்களை கொணர்ந்து ஆலையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு 20 வருட இடைவெளியில் இப்படி இங்கே வசித்த குடும்பங்கள் இதனில் இருந்து பணி ஓய்வு, வேலை இழப்பு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை என ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்விடம் விட்டு குடி பெயர்ந்து இருக்க, எஞ்சிய ஓரிரு குடும்பங்கள் மட்டுமே அங்கிருந்தன.
நாங்கள் வசித்த வீடு, எங்கள் பள்ளி, இந்த மரம், அந்த செடி என ஏதோ சிலவற்றோடு டிஜிட்டல் கேமராவில் பதிவு செய்து கொண்டு, மாற்றங்களுடன் உருக்குலைந்த எங்கள் காலனியை பிரிந்து அடுத்த நாள் கனத்த மனதோடு கிளம்பினோம்.
கேமராவில் பதிந்த பிம்பங்களை, கணினியில் மாற்றி சேமிக்கும் நேரம் ஏதோ பிழை காரணமாக நாங்கள் எடுத்த நிழற்படங்கள் அழிந்து போயின. கடந்த காலத்தின் இந்த எச்சங்கள் எங்கள் மலரும் நினைவுகளான குழந்தைப் பருவ உயிரோவியத்தை சிதைக்காமல் இருக்கவே கணினி பிழை செய்தது போலும்.
காலமும் காலனும் யாருக்காகவும் இரக்கப்பட்டுவதில்லை.காலச் சக்கரம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.
காலை 8 மணி
" என்னங்க குளிச்சாச்சா? ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் ரெடியா இருக்கு.சீக்கிரம் சாப்பிட வாங்க.ஆஃபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குன்னீங்களே!".
" இதோ வந்துட்டேன்மா",
என்று வந்து அவசர அவசரமாகக் காலை உணவை முடித்து விட்டுக்
கிளம்பினான் அநிரன்.அன்பு மனைவி மாளவிகாவின் இதழில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு அந்த இனிமையுடன் கிளம்பினான்.ஆறு மாத கர்ப்பிணியான அவளின் மேடிட்டிருந்த வயிற்றில் அடுத்த முத்தத்தைப் பதித்து
விட்டு வேகமாகக் கிளம்பினான்.
பகல் 11 மணி
ஸெல்ஃபோன் விடாமல் அடிக்க வேலைகளை முடித்து விட்டு அப்போது தான் உட்கார்ந்த மாளவிகா
ஃபோனை எடுத்தாள்.
" ஹலோ மிஸஸ்.மாளவிகா தானே பேசறது? உங்கள் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கிறார்.சீக்கிரமாகக் கிளம்பி வாங்க",
என்று மற்ற விவரங்கள் எதுவுமே சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டார் அந்த முகம் தெரியாத மனிதர்.
காதல் திருமணம் என்பதால். இரண்டு பக்கப் பெற்றோரும் இன்னமும் முறைப்பிலேயே இருக்கிறார்கள்.உதவிக்காக ஆஃபிஸ் நண்பருக்கு ஃபோன் செய்து விட்டுக் கையில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பினாள் மாளவிகா.
பகல் 3 மணி
ஜி.ஹெச்.சில் தலைமை மருத்துவரின் அறை.மாளவிகா கவலையுடன் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.ஆஃபிஸ் நண்பர் மாளவிகாவின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
" மேடம்.வெரி ஸாரி.உங்களுடைய கணவருக்குத் தலையில் பலத்த அடி.அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தோம்.ஒன்றும் பலனளிக்கவில்லை.இப்போது அவருக்கு மூளைச்சாவு ஆகி விட்டது.இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.நீங்கள் ஓகே சொன்னால் உங்களுடைய கணவரின் ஆர்கன்களை தானம் செய்யலாம்.ஆர்கன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஐந்து நோயாளிகள் பயனடைவார்கள்.நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்",
தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மாளவிகா நிமிர்ந்து பார்த்தார்.
" இதில் யோசிக்க டயம் தேவையில்லை டாக்டர்.நான் முழு சம்மதம் தருகிறேன்.
எந்த பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லுங்கள்",
கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய மாளவிகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த டாக்டர்.
இரவு 8 மணி
கணவனின் உடலோடு வீட்டுக்கு வந்தாள் மாளவிகா.அடுத்த நாள் காலையில் அநிரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அலுவலக நண்பர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
அவளைப் பார்க்கப் புதிதாக ஐந்து பேர் வந்து கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் நன்றி கூறினார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்குத் தான் அநிரனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப் பட்டிருந்தன.
" அம்மா நீ தான் எங்களுக்கு இனி தெய்வம்.எங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறாய்.
உனக்கு எவ்வளவு பண உதவி வேணுமோ தயங்காமல் கேளும்மா",
என்ற அவர்களைக் கை கூப்பித் தடுத்து நிறுத்தினாள் மாளவிகா..
" பணத்தாசை காண்பித்து என் கணவரின் உடல் உறுப்புகளை விற்ற
பாவத்தை என் மேல் போட வேண்டாம். முடிந்தால் நீங்கள் யாராவது எனது தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தர முடியுமா? எனது குழந்தைக்காக நான் உயிர் வாழ வேண்டும்",
என்று சொன்ன அந்த வீரப் பெண்ணை பிரமிப்புடன் பார்த்தார்கள்.
" கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறோம்மா",
என்று சொல்லி நகர்ந்தார்கள்.
காலத்தை வென்ற அந்தப் பெண்
மனித நேயத்தில் உயர்ந்து நின்றாள்.
புவனா சந்திரசேகரன்.
பகலெல்லாம் வேண்டுதலை
காதில் வாங்கிய நந்தி...
இரவெல்லாம் அசை போட்டது..
'மனிதர்களுக்குத்தான் இவ்வளவு ஆசைகளா'என்று!!
தன்னை காப்பாற்றுபவனை..
கடவுள் என்கிறது இந்து மதம்,
ஆண்டவர் என்கிறது கிருஸ்த்துவ மதம்,
இறைவன் என்கிறது இஸ்லாம்...
குழந்தைகள் மட்டுமே சரியாக சொல்கிறது,
அழகாக சொல்கிறது "அம்மா"என்று
மூங்கில் இலை மேலே, மூங்கில் இலைமேலே,
தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரே...
தூங்கும் பனி நீரை
தலாட்டும் வெண்ணிலவே
'கள்ளமில்லாத சிரிப்பு'தான்
ஆனாலும்
கொள்ளை கொண்டு தானே
போகிறது மனதை.
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
முருகனின் திருநீறை நெற்றியில் நேசத்துடன் பூசிக்கொள்ளும் போது பாசவினைகள் ஆசைகள் அனைத்தும் நீங்கப்பெற்று முருகனின் திருப்பாதத்தில் நீங்காமல் இருக்க முருகனின் திருவருளே துணைபுரியும். வேலை ஆயுதமாக உடைய முருகப்பெருமானே! என்னை அன்போடு காத்து, எனக்கான உணவையும் பொருளையும் மிக மிக சௌகர்யமாக பெருக்கி தருவாயாக!
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எதையும் சாதிக்கவல்ல ஆற்றல்களை (சித்திகள்) அடியவர்களாகிய நாம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும். மயிலோடு இருக்கும் முருகன் வாழ்க. அழகிய வேலொடு இருக்கும் முருகன் வாழ்க எங்களுக்கு ஞானம் அளிப்பதற்காக மலைமீது குருவாக இருக்கும் முருகன் வாழ்க குறமகள் வள்ளியோடு வாழ்க வெற்றிமுழக்கத்தோடு பறந்து முருகன் புகழை பறைசாற்றும் சேவற்கொடி வாழ்க உன் புகழை பாடும் என் வறுமைகள் என்னை விட்டு நீங்க வேண்டும.
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
என்னிடம் பல குறைகள் இருந்தாலும், பல தவறுகளை செய்து இருந்தாலும், என்னை பாதுகாக்கும் தாய் - தந்தை முருகப்பெருமான் மட்டுமே குருவாக வந்து வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது ஆகும். முருகப்பெருமானின் அன்பை பெற்றவளான குறமகள் வள்ளி பெற்று எடுத்த பிள்ளை போல அடியேனை அன்புகாட்டி பிரியத்துடன் பாதுகாக்க வேண்டும். உன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டு மனமகிழிச்சியுடன் உனது அருளை தரவேண்டும். முருகப்பெருமான் மீது நம்பிக்கையுடன் வரும் அடியவர்கள்/ பக்கதர்கள் பாதுகாத்து மென்மேலும் வளம் பெற்று வாழும் படி அருள் செய்ய வேண்டும்.
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
முருக பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்பி பால தேவராயன் ஸ்வாமிகள் உருவாக்கி அனைவரும் அறியும் வகையில் எல்லோருக்கும் கொடுத்த கந்த சஷ்டி கவசம் என்னும் இந்த பாடலை நமது உடலை முறைப்படி தூய்மை படுத்தி மனதில் வேறு சிந்திக்காமல் முருகப்பெருமான் சிந்தனையுடன் காலைபொழுதிலும், மலைப்பொழுதிலும் மற்றும் எப்போதும் மனதில் உணரும் படி படிக்கலாம்.
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
இந்த கந்த சஷ்டி கவசத்தை வேறு சிந்தனைகள் கவனம் சிதறாமல் மனதில் உணர்வோடு சிந்தித்து 'ச ர வ ண ப வ' எனும்அட்சரத்தை தொடர்ந்து மனதில் ஓதிக்கொண்டே (சொல்லிக்கொண்டே) இருக்கும் பொது
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ரவ
ப வ ச ரவ ண
வ ச ரவ ண ப
36 அட்சரமாக உரு மாறும் விருப்பத்துடன் திருநீறு (விபூதி) பூசி, அவ்வாறு முருகனை வேண்டி வந்தால் நாம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் ஆளும் மன்னர்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். நமக்கு வசப்பட்டு நாம் நினைப்பதை செயல்படுத்துவார்கள்.
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
நாம் அறியாத நபர்கள் அனைவரும் நம்மை மதித்து வணங்குவார்கள். ஒன்பது கோள்களும் மகிழ்ச்சியோடு நன்மை அளிக்கும். புதிய பொலிவுடன் மன்மதன் போல அழகான பிரகாசமான ஒளி பெற்ற உடம்பு பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் பதினாறு செல்வங்கள் அதாவது
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2. குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
பெற்று வாழ்வார்கள் முருக பெருமான் கையில் எப்போதும் உள்ள வேல் போல எப்போதும் பதினாறு செல்வங்கள் நம்கைவசமாகும்.
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
இந்த கந்த சஷ்டி கவச வரிகளை வீடுபேறு அடைய வழி என நினைத்து துதித்தால் மெய்ப்பொருளாக விளங்கும். முருகப்பெருமானின் அருள் பொங்கும் விழிகளால் நம்மை பார்க்கும் பொது நம்மிடம் இருக்கும் அகப்பேய்கள் அவையாவன
1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை
4) மோகம் – மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை
போன்ற துர்குணங்கள் பயந்து வெருண்டு ஓடும், பொல்லாதவற்றை பொடி பொடியாக்கும், நல்லவர்களாக நம்மை மாற்றி நம் உணர்வில் மெய் எழுச்சி பெற்று நடனம் புரியும்.
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
அனைத்து எதிரிகளையும் வென்று தீய எண்ணங்களை அழித்து நல்லவர்களாக மாற்றும் முருகப்பெருமானை அறிந்தகொண்டது நம் உள்ளம் , சூரபதுமனை வதைத்து அஷ்ட லட்சுமிகளில் (ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி , தனலட்சுமி) ஒருவரான வீரலட்சமி விருந்து படைத்தது முருகப்பெருமானின் திருக்கரம் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பதவிகளை மீட்டு அளித்தார். லட்சுமி மற்றும் தேவர்களுக்கு குருவாக திருஆவினன்குடி அருள்பாலிக்கிறார் பழனி மலையில் குழந்தையாக சிவந்த காலடி போற்றி வணங்குவோம்.
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
நாம் தவறான பாதைக்கு செல்லாதபடி தடுத்து நம் மனதில் குடிகொண்டு நம்மில் முழுவதும் பரவி அழகிய வேலனை வணங்கி புகழுவோம்.
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
தேவர்களின் சேனை தலைவராக போர்புரிந்து சேனாதிபதியை போற்றுவோம், குறத்தி மகளான வள்ளி மனம் மகிழ்ந்து அரசனைப் போற்றுவோம், வல்லமை பொருத்திய அழகான உடம்பை பெற்றவரைப் போற்றுவோம், துன்பத்தை தீர்க்கும் இடும்பா உனைப் போற்றுவோம், கடம்ப மலர்களை சூடும் கடம்பா போற்றுவோம், போரில் வெற்றி பெற்று வெட்சி பூவை சூடும் (தமிழர் மரபு) வேல் ஏந்தியவரை போற்றுவோம்.
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
உயர்த்த மலையான கந்தகிரி பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு மாமன்னராக மயில் போல மனதை கவரும் நடனம் ஆடும், உன் மலர் போன்ற மென்மையான பாதங்களை கதி என சரணம்/ தஞ்சம் அடைகின்றோம். முருகப்பெருமானின் அட்சரமான சரவணபவ சரணம் அடைகின்றோம். ஆறு திரு முகம் ஒளி வீசும் முருகப்பெருமானின் சரணம் அடைகின்றோம்.
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! எனது வார்த்தையானது நாக்கு அசைய வெளிப்படும் போது பொன்னாலான வேலானது விரைந்து வந்து காக்க வேண்டும். இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காக்க வேண்டும்! பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காக்க வேண்டும். முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவில் சிறந்த வேலானதுகாக்க வேண்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பொன்னாலான வேலானது காக்க வேண்டும்! தாமதமின்றி ஒரு நொடியில் நோக்கி அருள வேண்டும். தடைகள் (இடைஞ்சல்கள்) அடித்து விலக்க வேண்டும். முருகனின் அருள் பார்வையால் நம் செய்த பாவங்கள் அனைத்தும் பொடி பொடி தூளாகி ஒழிய வேண்டும்
பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும் என்னை நெருங்கிவராமல் விலக வேண்டும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும்
கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் கொள்ளிவாய் பேய்களும் குறளை எனும் குட்டி பேய்களும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்.
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட
பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு, காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் பல்லக்கில் வரும் பூதங்களும் கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் முருகனின் பக்தரான என் பெயர் கேட்டாலே இடி விழுவதை போல பயந்து ஓடவேண்டும்.
ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
வெறும் கண்ணால் காண முடியாத பதுமைகளும், பூனையினுடைய முடி பிள்ளைகள் எலும்பும், நகங்களும், மயிரும் நீண்ட முடியை உடைய தலையும், மரத்தினால் செய்த பொம்மைகள், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், வீட்டில் தீங்கு விளைவிக்கும் பொருட்டு புதைத்து வைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த பகைவர்களின் கர்வமும் மந்திரித்துச் செய்த மரத்தினால் செய்த பொம்மைகள்.
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
தீய சக்திகளுக்குத் கொடுக்கும் காசும் பணமும், ஆடு கோழி காவு கொடுத்து அதன் ரத்தத்தில் புரட்டிய சோறும், மாந்திரீகம் சொல்லுகின்ற அஞ்சன வித்தையும், சிந்தை கவர்ந்து பித்துப்பிடித்து போகச் செய்யும் மாய மந்திரமும், இந்த மேற்குறிய துஷ்ட செயலை செய்வோர்கள் முருகன் பக்தரான அடியேனை பார்த்தவுடனே நேராக பார்க்கமுடியாமல் இங்கும் அங்கும் அலைந்து எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் பயந்து குலைந்து பேசவேண்டும். பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும் எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும்.
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்
பயந்து நடுநடுங்கவும் அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும், வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும், படியினில் முட்டிக்கொள்ளவும், பாசக்கயிற்றினாலே கட்டி உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! காலும் கையும் ஒடியவும் படி அவர்கள் கதறும் படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
கண்விழிகள் வெளியே பிதுங்கி வருபடியாக மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அனைவரையும் கவரும் அழகனே சூரர் பகை அழித்த அழகனே! கூரிய வேலால் குத்தி அழிப்பாய்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக
முருகனை நன்றாக பிடித்து கொண்டவர்களுக்கு பிரகாசமாக எரியும் சூரியன் வெப்பம் கூட தணிந்து குறைந்து இதமாக இருக்கும்.
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட
புலியும், நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பயந்து ஓடும் படி வேலை விடுவாயாக!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
தேள்களும் பாம்பும் செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஒளிப்பும், நரம்பு சுளுக்குதலும்,ஒரு பக்கத்தலைவலியும், வாதம்(வாயு சம்பந்தமான வியாதி) வலிப்பு, குளிர்நோயும் இழுப்பு நோயும், பித்தநோயும், சூலைநோயும், சயம், குன்மநோயும் சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்,பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்,கடுவன், படுவன் என்னும் சிலந்தியும் கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் பார்த்தவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஓட அருள் புரிவீராக!
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
பதினான்கு உலகமும் என்னுடன் நட்புடன் இருக்க வேண்டும், ஆண்களும், பெண்களும், எல்லோரும், ஆள்கின்ற மன்னர்களும் என்னோடு மகிழ்ச்சியுடன் நல்ல நட்போடு உறவாக இருக்க அருள் புரிய வேண்டும்.
உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
உன்னை போற்றி வணங்க கூடிய "சரவணபவ" எனும் திருநாமம் உடைய சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! எல்லா திசையிலும் புகழ்பெற்று ஒளிரும் ஒளியினை உடையவனே!, பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவி துயரான பாவத்தை போக்கும் சக்தியை உடையவனே!
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!
திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகனே! தேவலோகத்தை காத்து! தேவர்களுடைய கடுமையான சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! கந்தக் கடவுளே! மனித மனம் எனும் குகையில் குடியிருக்கும் குகனே! கதிர் ஒளிபொருந்திய வேல் ஏந்தியவனே! கார்த்திகை பெண்களின் மகனாக வளர்த்தவனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் போரில் வென்று அருள் புரிந்தவனே! இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் மகனே!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற கதிர் ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! குழந்தை வடிவில் பழனி எனும் தலத்தில் தலைவனாக வாழ்கின்ற பால குமாரா! திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்க்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மா மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே! சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு ஆள்பவனே!
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
கரிய மேகங்களை போல கூந்தலை உடைய கலைமகளான சரஸ்வதி தேவி ஞானம் சிறக்குமாறு எனது நாவில் இருந்து, அடியேன் உன் புகழைப் பாட வேண்டும். என்னோடு எப்போதும் இருந்து வரும் என் தந்தை போல வழிநடத்தும் முருகனை நினைத்து நெஞ்சம் நெகிழ பாடினேன் ஆடினேன். எல்லையற்ற அனந்த நிலை ஆடிக்கொண்டே திருஆவினன் குடியை (பழனி) அடைவேன்.
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம் போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும், பன்னிரண்டு செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும் அழகுபொருந்திய திருமார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
பலவகையான ஆபரணங்களும் மார்புப் பதக்கமும் நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும் அணிந்து மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க அழகுடைய மேன்மையான வயிறும், கொப்பூழும் அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும்
நவ ரத்தினங்கள் பதித்த பார்ப்பதற்கு வரிசையாக அழகுற அமர்ந்துள்ளது
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
இரண்டு தொடைகளின் அழகும் இரண்டு முழங்கால்களும் ஓசை எழுப்ப அழகிய திருவடிகளில் சிலம்பு ஒலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
அகரமுதலென தொடங்கும் திருப்புகழில் இதே ஓசைகளை அமைத்திருப்பார் அருணகிரிநாதர் ஸ்வாமிகள். பிரபஞ்சம் உருவான பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் என அருணகிரிநாதர் ஸ்வாமிகள் கூறியுள்ளார். உதாரணமாக தடதட வென ரயில் வந்தது, சடசட என மழை பொழிந்தது என்ற ஒலிகளை விவரிக்கும் (இரட்டைக்கிளவி) சொற்கள் ஆகும். அது போல செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை முருகனின் சிலம்பொலி ஓசை போல மறைபொருளாக பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இவை தாள ஜதிகளுடன் முருகனை அழைக்கும் மந்திர வார்த்தைகள் ஆகும். இந்த அரிய மந்திரங்களை முருகனின் சிலம்பொலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளனர்.
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! உயிர் சக்தியை உள்ளடக்கிய மூலாதார பரம்பொருளே, மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! மயில் என்பது ஓம்கார வடிவாகும், என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன், முன்னதாகப் புறப்பட்டு முந்தி வரும் முருகனின் வேல். உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கின்ற லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க லீலா லீலா லீலா என்னும் பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து என்னைக் காத்து அருள் செய்வாயாக! என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன். அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை புனித வேல் காக்க வேண்டும். ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும்.
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! காக்க வேண்டும்! இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காக்கவேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்! என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்தியவேல் காக்க வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லி நாக்கை செம்மை கொண்ட வேலானது காக்க வேண்டும். கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காக்க வேண்டும். எனது இளமையான கழுத்தை இனிமையான வேல் காக்க வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகியவேலானது காத்தருள வேண்டும்.
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காக்க வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காக்க வேண்டும். முதுகுப் புறத்தினை அழகுடன் முதுகை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காக்க விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காக்க வேண்டும்.
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காக்க வேண்டும்! சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காக்க வேண்டும்! நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காக்க வேண்டும்! ஆண்குறி இரண்டும் கூர்மையாகிய வேலானது காக்க வேண்டும்! இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காக்க வேண்டும்! இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேல் காக்க வேண்டும்! ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காக்க வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காக்க வேண்டும்!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்! நாக்கில் சரஸ்வதி நல்ல துணை ஆக இருக்க வேண்டும்! (நாபி) உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காக்க வேண்டும்! மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காக்க வேண்டும்!
கந்த சஷ்டி கவசம்
“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை”.
கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை (துதிப்போர்க்கு) படிபவர்களுக்குக் வலிமை வாய்ந்த கொடிய வினை (வல்வினை போகும்) இடர்ப்பாடுகள் துயரங்கள் போகும் (துன்பம் போகும்) நெஞ்சில் பதியும் படி. உணர்ந்து முழுமனதோடு ஓதுபவர்களுக்குக் (பதிப்போர்க்கு) செல்வம் சேரும் மேலும் வந்த செல்வம் குறையாமல் பெருகும் (கதித்து ஓங்கும்) ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்கள் இல்லாத தூயவன் (நிமலன்) அருளால் ஆழ்ந்து தியானம் மூலம் இறைவனை உணரும் நிலை (நிஷ்டை) கைகூடும்.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
அமர்களாகிய தேவர்களின் துயரை போக்க போர் புரிந்த குமரன் காலடி நோக்கியே நம் மனம் வணங்கி நிற்கட்டும்.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
சூரசம்காரம் எனும் சஷ்டி பொழுதில் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை மனதிற்குள்ளே கூறிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு உதவும் செங்கதிர் (சிவப்பு நிறம் கொண்ட) வேலோன்.
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட கிண்கிணி என்னும் மணிகள் அசைந்து ஆட
எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு கையில் வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் வந்தருள்வாராக! வேல் ஆயுதம் கொண்டவரே வருக!!மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்வந்து அருளுக!
இந்திரன் முதலாக இந்திரன் (கிழக்கு) – தேவர்களின் அரசன்.,அக்னி (தென் கிழக்கு) – நெருப்பு கடவுள்,எமன் (தெற்கு) – இறப்பு கடவுள், நிருத்தி (தென் மேற்கு) – அழிவு மற்றும் அழியாத தன்மையுடைய தெய்வம்,வருணன் (மேற்கு) – கடல் மற்றும் நீரின் கடவுள், வாயு (வட மேற்கு) – காற்று மற்றும் வாயுக்களின் கடவுள், குபேரன் (வடக்கு) –செல்வத்தின் கடவுள்,ஈசானன் (வட கிழக்கு) – ஈசனின் (இறைவனின்) ஒரு வடிவம்.எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து வந்து அருளுக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
தேவேந்திரனின் மருமகனே! வந்து அருள்க அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் கந்தக்கடவுள் வந்து அருள்க! ஆறு திருமுகங்களைக் கொண்ட தலைவனே வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக! சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! விரைவாக வருக சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
ரவண, பவச, ரரா. ரிவண பவச ரி ரி "சரவணபவ' என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ''போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப் பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும்.
விணபவ சரவண வீரா நமோ நம-சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர மூர்த்தியாக விளங்கும் வீரரே உம்மை நான் வணங்குகிறேன். நிபவ சரஹண நிற, நிற நிறென-ஆறெழுத்து மந்திரத்தின் ஒளிவடிவமாய் பிரகாசிக்கின்ற. சரவணப் பொய்கையின் வீராதி வீரன் இறைவன், தனது வாகனமான மயிலின் மீது வந்தடையும் அவனை வணங்குகிறோம். அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்களின் வீரத் தலைவனாக இருப்பவரை வணங்குகிறோம்.
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
என்னை ஆட்கொண்டு அருளும் சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் கையில் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும் பரந்து விரிந்த பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க என்னைக் காக்க வேகமாக வந்தருள்க!
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள் இது 'ஈம்,' 'கிள்ம்,' 'சௌம்' என்ற பீஜ மந்திரங்கள் குறிக்கிறது. 'பீஜ' அல்லது 'விதை' என பொருள் சொற்களின் தொடராக இருந்து, அதற்கு ஒரு தனிப்பட்ட 'சக்தி'யையும் அளிக்கிறது.
பீஜ மந்திரங்களில் நுண்மையான மற்றும் மர்மமான உள் அர்த்தம் உள்ளது.
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்: விழிகளும், கரங்களும் தெய்வீக அடையாளங்களுடன் இணைந்து, படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தெய்வீக பண்புகளை குறிப்பிடுகின்றன. உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்: உய்யும் ஒளியாகவும் (தெய்வீக பிரகாசம்-அருட்பெரும் ஜோதி), உயிரின் ஆதியாகவும், செழிப்பும் காத்திடும் ஆற்றலாகும். கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்: கரங்களிலும் ஒளி, இந்த ஒளி தெய்வீக காந்தம் மற்றும் சண்முகனின் பிரகாசமான உருவம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. நிலைத்து நிற்குமாறு எனக்கு முன் நாள் தோறும் ஒளிவீசுகின்ற ஆறுமுகனாகவும் நீயும் உன்னதமான, தனித்துவமான ஒரு ஒளி “அருட்பெரும் ஜோதி” அல்லது சிறப்பு ஆறுமுகனின் மகிமையுடன் பொருந்தி, மிக உயர்ந்ததாக இருக்கும், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சிவ அருளை பெற்று ஒவ்வொரு நாளும் மேலோங்க நம் மனத்தில் குடியிருக்கும் முருகன் (குகன்) வந்து அருள்க
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்
கந்த சஷ்டி கவசம் என்றல் என்ன?
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌணர்னமிக்கும் அடுத்து வரக்கூடிய ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். செவ்வாய் அதிபதி முருகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி,
சஷ்டி என்பது சூரனோடு முருகன் போர் புரிந்த காலம் ஆகும். போரிலே மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் தன்னோடு வைத்துக் கொண்டார். இதனை சங்கரன் மகன் சட்டியில் மாவரத்தான் என்று வட்டார மொழிச் சொற்களில் கூறுவது உண்டு. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை நோக்கி தொழுவது சஷ்டி விரதம் ஆகும்.
சஷ்டி பொழுதில் கணவன் மனைவி இருவரும் இணைந்து விரதம் இருந்தால் மக்கட் பேரு கிடைக்கும். இதனை “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவது உண்டு. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்றும் கூறுவார்கள்
சஷ்டி என்றால் ஆறு, ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். மனக்கவலை நீங்க ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன். முருகனை வணங்க எல்லா தீய வினைகளும் ஒழியும் வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். பழனியில் கிரிவலப் பாதையில் பலரும் நோயினால் அவதிப்படுவதை பார்த்து மனம் வருந்தி அதனை தீர்க்க முருகனை வேண்டி இயற்றப்பட்ட பாடல் ஆகும்.
கந்த சஷ்டி கவசம் என்ன பயன்?
இந்த கவசத்தை படிப்பதால் அல்லது பாடுவதால் நமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். இதில் உள்ள 240 வரிகளை தொடர்ந்து வாய் திறந்து படுவதால் நாளமில்லா சுரப்பிகள் சீராக வேலை செய்யும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் குணமடையும், மனஅமைதி கிடைக்கும், புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். உணர்ந்து முழுமனதோடு பாட வேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் மனதார நினைத்து சரி படுத்துவது யோகக் கலையில் ஒருவித முறையாகும். இதனை மறைப்பொருளாக சஷ்டியில் கொண்டுள்ளது.
கொடிய விஷமும் கண்களுக்கு, தெரியாத பில்லி சூனியங்களும், சஷ்டியை படிக்க படிக்க நம்மை விட்டு விலகும். இதனை எந்த நேரத்திலும் படிக்கலாம். தீராத பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் முருகன் தீர்த்து வைப்பார் அல்லது தீர்க்க வழி காட்டுவர்.
ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.
முன்னுரை
அகவும் மயிலும், கூவும் சேவலும், கூரான வேலும், பொங்கும் கடலும், பொதிகை மலையும், ஒதும் தமிழும் சிந்தையுள் நிறைந்த சித்தர்கள் வழிபடும் சிவமைந்தன் பெயரை, குறை தீர்க்க குன்றம் தோறும் குடியிருக்கும் குமரனையே கூறும்.
அறிமுகம்
முருகனின் வரலாறு என்றால்
பகுத்தறிவாளர்களும் அறிவியல் சிந்தனையாளர்களும் கந்தனை கடவுளாக பார்ப்பதில்லை இருப்பினும் குறமகள் வள்ளியை மணந்த குமரனை குறிஞ்சி நில தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர் அவர் முன்னர் ஒரு காலத்தில் இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்து உலகத்துக்காக போர் புரிந்து மக்களை காப்பாற்றி நல்வழி காட்டும் தலைவனாய் இருந்திருப்பார் என ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஷண்முகம் (ஆறுமுகம்)
ஈஸ்வரனின் "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருமுகம்- அதோ முகம் சேர்ந்து நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த அருட்பெரும் ஜோதி ஆறுமுகங்களாக மாறியது.
ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்)
ஓகம் என்ற தமிழ் கலையே வடமொழியில் யோகம் என பெயர் பெற்றது. இரண்டாக உள்ள பொருளை ஒன்று சேர்ப்பது ஓகம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும் விஞ்ஞானமே ஆகும். ஓகக் கலையின் நாயகன் முருகனே, மூலாதாரம்-ஓங்காரம், நிராகுலம் (சுவாதிஷ்டானம்)-நிலம், மணிப்பூரகம்-நீர், அனாகதம்-நெருப்பு, விசுத்தி-வளி(காற்று), ஆக்கினேயம்- வான்(ஆகாயம்) ஒரே நேர்கோட்டில் நிற்க வெளிப்படும் பேராற்றல் முருகன் என்ற அறியப்படுகிறது,
தமிழ் ஆயுதம் -வேல்
அரிதான யோக முறையால் புருவ மத்தியில் சக்தியாக திரண்டு சுழலும் உன்னத நிலையே முருகனின் அவதாரமாகும். கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள் ஃ இந்த மூன்று புள்ளிகளுக்கு இடையே தமிழின் ஆயுத எழுத்தான ஃ வடிவில் விரிவடையும் இந்தப் புள்ளிகளையும் 6 மையங்களையும் ஒன்று சேர்த்தால் வேல் வடிவில் உருவம் தோன்றும், யோகத்தில் இந்த உயர்ந்த நிலை அடையும்போது அவரது உடம்பு சூரியனைப் போல பிரகாசிக்கும் அனைத்து வித சித்திகளும் கைகூடும்
துரியம் (Crown or உச்சிமண்டை )
மனித உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன. இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாகவும் சுழுமுனை முருகனாகவும் உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள். மனித உடம்பு இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர இணையும்போது அங்கே ஏழாவது சக்கரமான துரியம் (சகஸ்ரநாமத்தில்) நிலைக்குச் செல்லும்.அப்போது ஓரு மனிதன் இறை தன்மை எனும் தெய்விக நிலையை அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது மருத்துவர்கள் பயன்படுத்தும் முதுகு தண்டில் இரண்டு பாம்புகள் பின்படுவது போல் உள்ள அடையாள குறிகளும் முருக தத்துவமே.
ஆறுமுகம்(நதி)
ஆறுமுகம் என்பது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் ஆறு சக்கரங்களை குறிப்பதாக கூறலாம். எண்ணிக்கை அடிப்படையில் ஆறு என்றும் மற்றும் ஓடும் நதிகளை ஆறு என்று கூறுவோம். இவை அனைத்தும் முருகனுக்கு உவமையாக இருக்கலாம். மலைகளிலே மழையாய் பொழிந்து, சுனையாய் ஒன்றிணைந்து, அருவியாய் கொட்டி, நதியாய் பெருகி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்த்து, பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகி. பெருங்கடலில் கலக்கும் ஆறு போல முருகனும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவ சக்திக்கு மைந்தனாக அவதரித்து குறிஞ்சி நிலத்தில் தவழ்ந்து ஆறுமுகமாக ஒன்றிணைந்து சூரனை அழிக்க வீறு கொண்டு எழுந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருளை வாரி வாரி கொடுத்து பிறப்பு இளமை முதுமை நோய் இறப்பு என்கின்ற கர்ம வினை கொண்டு அவதியுறும் பக்தர்களை குருவாய் அமர்ந்து ஞானம் கொடுத்து பரமாத்மா எனும் பெருங்கடலில் சங்கமிக்க ஞான வழிகாட்டியாக இருக்கிறார்.
ஆற்றுப்படுத்தல்
ஆறு என்ற சொல்லுக்கு ஆறுதல், ஆற்றுப்படுத்தல் என்ற பொருளும் உண்டு. சூடான தேநீர் சற்று ஆறிய பின் குடிக்க இதமாக இருக்கும். வேகமாக ஒருவர் ஓடிய வந்த பின்பு அவருடைய மூச்சு வேகமெடுக்கும், (இளைப்பு) அப்போது ஓய்வெடுக்கும் நேரம் மூச்சுக்காற்று சீராகும். (இளைப்பாறு). சாப்பிட்டு விட்டீர்களா என கேட்பதற்கு பதிலாக பசியாறியாச்சா (பசியாற்று) எனவும் கேட்பது உண்டு. ஏதோ ஒரு விஷயத்திற்கு நம்முடைய நெஞ்சம் அஞ்சும் போது மனம் பதைக்கும் போது யாமிருக்க பயமேன் என ஒருவர் நம்மை தேற்றும் போது நம் மனம் ஆறுதல் அடையும்.
ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்
இங்கே மேற்கண்ட பதத்தில் ஆறு என்பது தணிப்பு/ தணிக்கை எனப் பொருள் கொள்ளலாம். தணிகை என்ற சொல்லும் (திருத்தணிகை தணிகாசலம் தணிகை வேல்) முருகனுக்கே உரியது,
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
என்ற திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஆறு என்ற சொல் ஆறுதல் console என்ற பொருளிலே கையாண்டுள்ளார்.
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை
முருகனை குறித்த பாடலில் கவியரசு கண்ணதாசன் கையாண்டுள்ளார்
அபாயத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கு அபய கரம் நீட்டும் முருகனின் ஆறுதல் அளிக்கும் முகமே ஆறுமுகம் ஆகும்.
ஆறு எழுத்து மந்திரம்
சிவனை வழிபடுவோர் நமசிவாய என் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் அதுபோல முருக பக்தர்களுக்கு சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரம் ஆகும் சரவணபவன்-நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் சரவணபவ - என்பது ச–செல்வம், ர-கல்வி, வ-முக்தி, ண-பகை வெல்லல், ப-கால ஜெயம், வ–ஆரோக்கியம் குறிக்கும் அல்லது ச(கரம்)-உண்மை, ர(கரம்)-விஷயநீக்கம், அ(வ)(கரம்)-நித்யதிருப்தி, ண(கரம்)-நிர்விடயமம், ப(கரம்)-பாவநீக்கம், வ(கரம்)-ஆன்ம இயற்கை குணம் என விளக்கங்களை அளிக்கின்றனர்
காலங்களும் கார்த்திகை நட்சத்திரமும்
வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டமைப்புகளுக்கு கார்த்திகை நட்சத்திரம் என பெயர் வைத்தனர்.கார் என்றால் குளிரைக் குறிக்கும் சொல் தீ என்றால் வெப்பத்தை குறிக்கும் சொல் இவ்விரண்டையும் இணைத்து கார்த்திகை என அழைத்தனர். இந்த கால மாறுபாட்டை கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணித்தனர்.
ஆறு சிறுபொழுது
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நாள் எடுக்கும் இதனை ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர் 1.வைகறை( 2 am to 6 am) 2.விடியல்(6 am to 10 am). 3.நண்பகல்(10 am to 2 pm), 4.எற்பாடு(2 pm to 6pm), 5.மாலை (6 pm to 10 pm), 6.யாமம்(10 pm to 2am) ஆகும்.
ஆறு பெரும்பொழுது
சூரியனை பூமி சுற்றிவர ஒரு வருட காலமாகும் இதனையும் தமிழர்கள் ஆறு காலங்களாக பிரித்தனர் இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி), கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக் காலம் (மார்கழி, தை), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி) ஆறுமுகனை வழிபடும் தமிழர் காலத்தையும் நேரத்தையும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணக்கிட்டுஆறு பிரிவுகளாகவே பிரித்தனர் இதன் மூலம் காலநிலை அறிந்து அதற்கு ஏற்ப வேளாண்மை செய்தனர்.
சூரசம்காரம்
முருகனை குறிஞ்சி நிலத்தலைவன் என்பது மட்டும் உண்மையானால் சூரசம்ஹார போர் மனிதர்களுக்கும் மனிதர் அல்லாத விலங்குகளுக்கும் நடந்திருக்கும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனை மற்றும் சூரனை தோளில் சுமந்து போரிட்டு காட்சிப்படுத்தினர் எனவே சக்கரம் மற்றும் ரதம் கண்டறியாத காலமாக இருக்கும் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலமாக இருக்கும். சூரசம்கார விழாவில் சுரன் யானை முக வடிவிலும் சிங்க முக வடிவிலும் அசுரமுக வடிவிலும் முருகனோடு போர் புரிகின்றான். சூரனின் தங்கை அஜமுகி (ஆடு முகம்) என்றும் போருக்கான முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பெரிய கோள்களில் காணப்படும் யாழி முக்கிய வகையாக மூன்று வகையாக பிரிக்கலாம் ஆட்டுத்தலை கொண்ட மகர யாளி, யானை தலை கொண்ட கஜ யாளி, சிங்க தலை கொண்ட சிம்ம யாளி. யானை குதிரை சிங்கம் புலி மயில் குரங்கு ஆகிய விலங்குகளை தெய்வ வாகனமாகவும் வணங்கும் இந்து சமயம் யாளியை வணங்குவதில்லை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துள்ளது. அரண்மனைகளில் மன்னர் வேட்டையாடிய பொருளை காட்சி பொருளாக வைப்பது வீரத்தை வெளிக்காட்டும் தமிழ் மரபு அதுபோலத்தான் முருகனின் வீரத்தையும் வெளிகாட்ட யாளியை காட்சிப்படுத்திருக்கக்கூடும் ஆனால் பூஜை செய்வது இல்லை.
வேலுண்டு வினையில்லை!
மலைகளிலும் காடுகளிலும் வாழ்வோர்கள் கையில் உயர்ந்த கம்பு/தடி எப்போதும் வைத்திருப்பார்கள் விஷச் செடிகள் பூச்சிகள் விலங்குகள் இவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் மேலும் மலையற்றத்தின் போது கீழே விழாமல் இருக்க கையில் கம்பு இருப்பது மிக அவசியம் இன்றும் பெரிய மலைகளில் ஏறுபவர்கள் கையில் குச்சியில் பிடித்துக் கொண்டு ஏறுவது நடைமுறையில் உள்ளது. மலைகளில் வாழ்ந்த முருகன் கையில் வேல் வைத்திருப்பது இயல்புதான். சூரன் படை மிருக கூட்டம் எனில் போர் என்பது எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலாகதான் இருக்கும் எனவே கூர்மையான வேல் எப்போதும் கையில் இருப்பது தன்னையும் தன் குடிமக்களையும் காப்பதற்காகவே.
மயிலுண்டு பயமில்லை
மயில் தொலைதூரம் பறக்கின்ற பறவை கிடையாது சிறிய தூரம் மட்டுமே பறக்கும் யானை குதிரை ஒட்டகம் போன்ற விலங்கு போல் மனிதனை சுமந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் கிடையாது. அதேசமயம் முருகன் மயில்லோடு தான் இருக்கிறான் காரணம் என்னவெனில் மயில் முருகனைப் போன்றே அழகான ஆண் இனம் மேலும் மழை வருவதை முன்னரே உணர்த்தும் அறிவு படைத்தது. கொடிய விலங்குகள் தாக்குதலை முன்னரே உணர்ந்து பிற உயிரினங்களுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மேலும் தன் இருப்பை எப்பொழுதும் தன் குரலால் ஒலித்துக் கொண்டே இருக்கும் (ஆகவும்). சூரன் ஒரு விலங்கினமாக இருந்தால் போர் என்பது எதிர்பாராத தாக்குதல் அச்சமயத்தில் அபாய ஒலியை எழுப்பவும் முருகன் இருக்கும் இடத்திற்கு அறிந்து கொள்ளவும் செய்தி அனுப்ப முருகனின் மயில் உதவி செய்திருக்கும். மயில் மற்ற எல்லா வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் வித்தியாசமானது பழகிய மனிதரை தவிர வேறு யாரிடத்திலும் நெருங்கி பழகாது குறிப்பிட்டு நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகும். சேவலுக்கும் ஏறக்குறைய இதே குணாதிசயம் உண்டு.
கந்தன்உண்டு கவலை இல்லை
மறைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் ஈட்டு வீரனை அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு முருகன் நினைவாக எழுப்பப்பட்ட தூண் கந்து என்று அழைக்கப்படும். முருகன் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல சித்தர்கள் வணங்கும் சித்தராக தலைசிறந்த ஞானியாக இருந்தார் பிறப்பு இளமை முதுமை கர்மவினை நோய் இறப்பு என்னும் இயற்கை விதிகளை அறிந்து அதனை மாற்றும் வல்லமையும் பெற்று இருப்பார். முருக அடியார்களான அகத்தியர், ஔவையார், போகர் புலிப்பாணி அருணகிரிநாதர் வள்ளலார் இவர்களுக்கும் இயற்கை விதியை மாற்றியமைக்கும் வல்லமையோடு இருக்கிறார்!. பேசாத குழந்தையான குமரகுருபரரை பாட வைத்தது முருகன் அருளே! பாம்பன் சுவாமிகள் முறிந்த எலும்பை சரி செய்ததும் கந்தனின் கருணையே! ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 14/02/1984, 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என திருவள்ளுவரின் வாக்கின்படி முருகன் போர் வீரனாக, தலைவனாக மட்டுமல்ல கருணையே வடிவான இறைவனாக மாறியவன். அபாயத்தில் அஞ்சி இருப்பவருக்கு அபய கரம் நீட்டும் ஆறுதல் அளிக்கும் முருகனின் திருவருள் என்றென்றும் தொடரும்
கனவெல்லாம் காதற்ற ஊசி
ஒன்றை தேடித்தேடியே
இரவு கழிகிறது...
விழித்த பின்னும்
இனிக்காத கரும்பை
இனிக்கும் என்று நினைத்தே..
சுமந்து திரிந்தே பகலும் கழிகிறது..
எதையோ தேடி எதையோ சுமந்து..
இது என்னமாதிரி வாழ்க்கை?
விக்கிரமாதித்தன் தோளில் கிடந்த வேதாளம்
எள்ளி நகையாடியது...
மதி நுட்பம் நிறைந்த மன்னா! என அழைத்து
ஒரு கதையை கூறி முடித்து..
ஒரு கேள்வி கேட்டது மன்னா!
இந்த உலகத்தில் மிகவும் நகைப்புக்குறிய விசயம் எது?..
இதற்கு சரியான பதில் தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால்
உன் தலை சுக்கு நூறாக தெறித்து விடும் என்று எச்சரித்தது..
விக்கிரமாதித்தன் பதில்: இந்த உலகில், வயதானவர், நடுத்தர வாயதுடையோர், இளைஞர், பாலகன், குழந்தை, பிறந்த சிசு என, தினம் தினம் இறப்பதை பார்த்த பின்னரும், தான் மட்டும் இந்த உலகில் காலம், காலமாய் இருக்க போகிறோம் என்பது போல் அகங்காரத்துடன் திரிகிறார்களே, அந்த ஆணவம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கிறான்.
இந்த பதிலை கேட்டதும், மீண்டும் வேதாளம் புளிய மரத்திற்கு தாவியது.
ஒரு கத சொல்ட்டா..?!"
எங்கம்மா, பாட்டி, தொத்தா (சித்தி), நானுனு எல்லோரும், ரெண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்ற எங்கூரு தியேட்டர்ல, ஈவ்னிங் ஷோ பார்த்துட்டு வெளியே வந்தோம்...
அப்போ, நைட்ஷோவுக்கான 'உத்தமப் புத்திரன்' பட போஸ்டர்ல, ராகிணியை ராவா காமிச்சுட்டு, பத்மினியின் கச்சையை முக்கால்வாசி மூடியிருந்த 'இன்றே கடைசி' ன்ற அரையடி 'பிட்டு' போஸ்டரை கை காட்டி, அதை நான் பார்த்தேயாகணும்'னு அடம்புடிச்சப்போ எனக்கு வயசு ஆறு!
இந்தக் கொழந்தயோட ஆசையை நிறைவேத்த, நைட்ஷோவுக்கும் டிக்கெட் எடுத்துட்டு பால்கனியில உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்ருந்தோம்...
கொஞ்ச நேரத்துல, "யாரடீ நீ மோகினீ..." னு பாட்டு ஓடிக்கிட்ருந்தப்போ.., எல்லாரும் ஸ்டைலான சிவாஜியை ரசிச்சுக்கிட்டிருந்தாங்க...
நான் மட்டும், அது டாப் ஆங்கிள்' ஷாட்'னு கூடத் தெரியாம.., கிறுகிறுகிறு'னு சுத்திக்கிட்டிருந்த அந்த ரெண்டு நாயகிகளோட முட்டியாச்சும் தெரிஞ்சிடாதா'னு, முட்டிபோட்டு குனிஞ்சு பார்த்துக்கிட்ருந்தேன்... ஆனா.., கால் கட்டைவிரல் கூடத் தெரியாதபடி தரையைப் பெருக்குற அளவுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாங்க அவங்க! அடுத்தமுறை தரை டிக்கெட் எடுத்துவந்து பார்த்துடணும்'னு முடிவு செய்தேன்.
இந்த நேரத்துல தான்.., திடீர்னு அந்தப் பாட்டுல வர்ற சாட்டையடி மட்டும் எனக்கு பொளீர்... பொளீர்னு DTS ல கேட்குது...
என்னடா விஷயம்னு திரும்பிப் பார்த்தா.., சிவாஜிக்கு பதிலா, என் அப்பா கையில சாட்டையோட பக்கத்துல நின்னுக்கிட்ருக்காரு...
மாலைக்காட்சிக்குப் போனவங்க, இரவு பதினோரு மணியாகியும் வீடு திரும்பாததால.., எங்களைத் தேடிக்கிட்டு தியேட்டர் பால்கனிக்கே வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்த என் தகப்பர்.., எல்லாத்துக்கும் காரணமான என்னய விட்டுட்டு, அம்மா, சித்தினு என்னோட உட்கார்ந்திருந்த எல்லா பொம்பளைங்களையும் பொள.. பொள'னு பொளந்துக்கிட்ருக்காரு...
தடுக்கப் பார்த்தப் பாட்டியை, பெத்த ஆத்தானு கூடப் பாக்கலையே.., சும்மா.., வுட்ட அடியில, பாட்டிக்கு கடவாப்பல்லு பேந்துடுச்சி!!
இப்ப கூட, அந்தப் பாட்டு டிவியில ஓடும்போதெல்லாம்... சம்பவத்தை நெனச்சு பயத்தோடவே பகிர்ந்துக்குவாங்க, எங்க அம்மா.
ம்ம்.., முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்...,
அன்னிக்கி, அனுமதியின்றி "உத்தமப்புத்திர"னைப் பார்த்ததற்காக உதை வாங்கிய எங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு.., ஈவ்னிங் ஷோ பார்க்க மட்டும் முழுச் சுதந்திரம் இருந்தது... ஏனெனில், அப்படத்தின் பெயர்... "அடிமைப்பெண்!"
- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.
நந்தினி சுகுமாரனின் குலக்கதை - இணைய நூல் விமர்சனம்
குலக்கதை
இரண்டு பாகங்களாக இணையத்தில் எழுதப்பட்ட நூல்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும், பல ஓடைகளும், சிற்றாறுகளும், காட்டாறுகளும் ஒன்று சேர்ந்து வைகையாய் உருப் பெற்று , வேகவதியாய் ஓடி, கண்மாயில் கலந்து நிற்கும்.
அதுபோலத் தான்,நந்தினி சுகுமாரனின் எழுத்தும், இந்த கதையும். தமிழ் மண்ணில் வேரூன்றிக் கிடக்கும் , குலதெய்வம், இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் வீட்டுத் தெய்வம் பற்றிய கதை இந்த குலக்கதை.
முற்பகுதியில், கதை ,காட்டாற்று வெள்ளமாக மஞ்சளாடைகாரி, சித்திரகலா பூங்கோதை, ஆகியனவாக பிரவாகித்து, அங்கங்கே சில சம்பவங்கள் கோர்க்கப்பட்டு, பாலாம்பிகை,கிருஷ்ணம்மாள்,ராஜநாயகி, மரிக்கொழுந்து, செந்தில்நாதன், கரிகாலன், சங்கீதா கதாபாத்திரங்கள் வந்தபின், தெளிந்த நீரோடையாக வேகமெடுத்துப் பாய்கிறது.
குலகதையின் தெய்வங்கள் வாசகர் மனதில் குடிகொண்டு விடுகிறது. இனி மஞ்சள் உருண்டையை பார்க்கும்போதும், காமாட்சி விளக்கின் சுடரிலும் இந்த தெய்வங்கள் நம் நினைவில் வந்து போவார்கள்.
நம்மைப் போல் பிறந்த ஆன்மாக்கள், ஊருக்காக,தனது குலத்துக்காகத் தன்னையே பலி கொடுத்து , நோய்,நொடி , அடக்குமுறை ,இயற்கை பேரழிவுகளிலிருந்து நம்மைக் காத்து மேல்நிலை அடைந்திருக்கும் . அந்த ஆன்மாவை வழிபட ஆரம்பித்து இருப்பர். சில தலைமுறை தாண்டும் போது, மனிதருள் ஏற்படும் குண இயல்பு மாறுபாடுகள், வழிபாட்டிலும் பிரதிபலித்து இருக்கும்.இவை நன்மை தீமை இரண்டையும் கூட்டித் தரும்.
குழந்தையும்,தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பர். இங்குத் தெய்வமே குழந்தைதான்.கன்னிகை,கன்னியம்மாள் என்ற மஞ்சளாடைக்காரி. அவளைத் தெய்வமாய் அடைந்து, அதன் அருமை தெரியாமல் தொலைத்து, கஷ்டங்களை அனுபவித்து, எத்தை தின்றால் பித்தம்தெளியும் என விடை அறியாது நிற்கும் குலம், ஆற்றில் நீரோடு கரைந்த மஞ்சளாடைக்காரியை, அணைத்து , அரவணைத்து வழிபடும் மற்றொரு குலம். தாத்தாவாக எல்லை சாமியை உருவகப்படுத்தி, அவரை பெட்டியிலிருந்து கோவிலில் நிறுவும் குலம்.
இப்படியான மூன்று குலங்களின் தெய்வங்களையும், மனிதரையும் நிகழ்வுகளையும் ,முற்பிறப்பு, இப்பிறப்பு என அழகாக வடிவமைத்து, இதற்கு இது காரணமென அழகான பூமாலையாக, அதிரல் ,மருதம், கோர்த்துக் கொடுக்கப்பட்ட அருமையான புனைவு.
பலநூற்றாண்டுகள் கடந்து எப்படி மீண்டும் ஒன்றுகூடி வழிபடுகின்றனர், என்பதை சொல்லும் கதை.
மனித இயல்புகளை, படாடோபம் இல்லாமல், இயல்பாக எழுத்தாக்க இந்த ஆசிரியரால் மட்டுமே முடியும். நக்கல்,நய்யாண்டியோடு இயல்பான நடை.
சித்திரகலா, பூங்கோதை என முற்பிறப்பு கதை வருமிடங்களில் நற்றிணை, குறுந்தொகை என சங்க கால பாடல்கள் கதைக்கு பொருத்தமாய் அமைந்து, ஆசிரியரின் விளக்கங்களோடு கதைக்கு மெருகூட்டுகிறது.
முதல் பாகத்தையும்,இரண்டாம் பாகத்தையும் அழகாக வடிவமைத்து, சம்பவங்களில் இடைவெளி விட்டு, எதிர்பார்ப்பை தூண்டி, மீண்டும் சரியாக நிரப்பி, ஆரம்பம்,முடிவு கதையை முடித்த விதமும் அருமை.
அகமும்,புறமும் , பக்தியும்,காதலும் முற்பிறப்பு,இப்பிறப்பும் சேர்ந்த அருமையான புனைவு. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கதை.
இப்படி ஒரு கதை எழுதப்படும்போது ,அதில் உள்ள சவால்கள் எத்தனை , எல்லாம் சரியாக கொடுக்கவேண்டும் என்ற தவிப்பு எப்படியிருக்கும், என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. கதையை நிறைவாய் முடித்தமைக்கும் வாழ்த்துக்கள் நந்தினி சுகுமாரன்.
உங்கள் எழுத்து பயணத்தில் மற்றொமொரு மகுடம் சூடும் படைப்பு இந்த குலக்கதை. மேலும் நல்ல பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்.
இருவாச்சி தளத்தில், இணையத்தில் வரும் நல்ல கதைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பகுதியை வைத்துளோம். அதில் முதல் விமர்சனமாக குலக்கதை அமைந்ததில் மகிழ்ச்சி.
தீபா செண்பகம்
பாட்டும் நானே... 'பாவமும்' நானே...!!"
சினிமாப் பாடல் வரிகளை சரியா கவனிக்காம, தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு பாடித்திரிந்த அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். உண்மையான வரியை உணர்ந்த பின்பு, அப்பாடல் மீதான நம் பார்வையே மாறிப்போய், ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் நினைவலைகள் பின்னோக்கிச் செல்லும் தானே?!
அப்படியொரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு..!
'ஒரு பாதி கனவு நீயடா... மறு பாதி கனவு நானடா..' என்று ஒரு மொக்க(?!) சாங் வரும். ட்ராவல்ல அந்தப் பாட்டு வர்றப்போலாம் ஸ்கிப் பண்ணிடுவேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் பஸ்ல போறப்போ அந்தப் பாட்டைப் போட்டான் என் ஆஸ்தான டிரைவன்!
முதல் சீட்லயே உட்கார்ந்திருந்த நானு, 'Fwd' பட்டனை அழுத்தணும்ங்குற முடிவோட, என் செருப்பை மாட்டிக்கிட்டு எந்திரிக்கும் போது... பக்கத்துல(?!) உக்கார்ந்திருந்த சுடிதார், அந்தப் பாட்டை ரசிக்கும் தொணியில் 'ஹம்' பண்ண ஆரம்பிச்சா. நமக்குத்தான் வயசுப்புள்ளைங்களப் பார்த்தாலே இரக்க குணம் பீறிட்டு வந்திடுமே...
பாட்ட மாத்த எழுந்த நானு... அவ ரசிக்குறதைப் பார்த்ததும், 'வால்யூமை உயர்த்தி'.. "அருமையான பாட்டுப்பா.." ன்னுட்டு அவ பக்கத்துல இன்னும் ரெண்டு இஞ்ச் நெருக்கமா உட்கார்ந்ததை, கண்ணாடி வழியா கவனிச்சுக் கண்ணடிச்ச டிரைவரின் பின்மண்டையில தட்டி, "மச்சீ... பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கிடாதேடா.., முன்னாடிப் பார்த்து கவனமா ஓட்டு" என ஓவராக்டிங்கை அடக்கிவிட்டு அமர்ந்தேன்.
அப்புறமென்ன..., அவ பாட.. நான் வாயசைக்க... அவ தலையசைக்க நான் பாட.... நல்லபடியா போய்க்கிட்டிருந்த இந்த எடத்துல தான் ஒரு ட்விஸ்ட்டு...
எனக்கும் வரிகள் தெரியும்'னு நம்மாளுக்கு காமிக்க நினைச்சு, எட்டுக்கட்டையில கஜலைப் புடிச்சு, ஹை பிட்ச்ல குரலை உயர்த்தி, "ஒரு பாதி கனவு நானடா.." ன்னு பாடினேன்(?!).
உடனே, பட்சி புருவத்தை உயர்த்தி மொறைச்சதும் கப்புனு நிப்பாட்டிட்டு... அடுத்த வரியைக் கேட்டேன்.... அது, "..மறு பாதி 'கதவு' நீயடா..." ன்னுச்சு...
அதுக்கப்புறமும் வாயத் தொறந்திருப்பேன்னு நினைக்குறீங்க..?! ம்ஹூம்...
இப்ப என் டிரைவர் மாப்ள ஸ்டெயரிங்குலேர்ந்து ரெண்டு கையையும் எடுத்து காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டே.., "ஒரு பாதி கதவு நீயடி.., மறு பாதி கதவு நானடி..." ன்னு சத்தமா பாடினான் பாருங்க...,
எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு கொமாரூ....
அப்படியே.... எழுந்துப்போயி, கடைசி படிக்கட்டுக்கும் அப்பால இருக்குற ஆறு பேரு சீட்ல குப்புறப் படுத்து குலுங்கி குலுங்கி அழுதேன்...
இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்.., நீங்கள் உச்சரிக்க வேண்டிய சொல் "கனவு" அல்ல... "கதவு!!"
என் ஃபேவரிட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடிக்கும் அருமையான சிலேடை வரிகளை எனக்கு உணர்த்திய அந்தச் சுடிதாருக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாத ஏக்கம் இன்னமுமிருக்கு...
9th படிக்கும் போதே ராணி முத்து புத்தகத்தில் கதை எழுதியுள்ளேன்...
அந்த கால கட்டத்தில் ராணிமுத்து நல்ல பேமஸ்.. அதில் கதை போட்டி அறிவித்து 200 ரூபாய் பரிசு என்று இருந்தது.
உடனே நானும் அவனும் (அவனும் நம்ம சொந்தக்காரன்தான்)
களத்தில் குதித்தோம், பரிசு 200 ரூபாயில் ஆளுக்கு நூறு ரூபாய் பங்கு..
ரமணி சித்தியிடம் நிறைய ராணி முத்து புத்தகம் இருந்தது அதில் பழைய புத்தகம் ஒன்றை ஆட்டையை போட்டு வந்து..
ஒரு வரி விடாமல் எழுதினோம், மூன்று நாட்கள் இருவரும் சேர்ந்து எழுதி, A4 பேப்பரில்15 பேப்பர்கள்!!.. ஒரு வழியாக எழுதி ராணிமுத்து பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டோம்.
பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தது..
அதில் ஆசிரியர் பதில்.. "தூ "என்ற ஒரே எழுத்துதான்
அவன் எங்களை அப்படி துப்பியதற்கு முக்கிய காரணம் நாங்கள் இடை, இடையே வரும் விளம்பரங்களையும் விட வில்லை அதையும் எழுதி விட்டோம்..
அதிலதான் அவன் ரொம்ப கடுப்பாகி விட்டான்..
'உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது லைபாய் மட்டுமே'
'உங்கள் பற்கள் முத்து போல் பிரகாசிக்க கோபால் பல் பொடி'
போன்ற விளம்பரங்கள்..
எப்படியோ எங்கள் கதை எழுதும் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டான் அந்த படுபாவி.