நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
முருகனின் திருநீறை நெற்றியில் நேசத்துடன் பூசிக்கொள்ளும் போது பாசவினைகள் ஆசைகள் அனைத்தும் நீங்கப்பெற்று முருகனின் திருப்பாதத்தில் நீங்காமல் இருக்க முருகனின் திருவருளே துணைபுரியும். வேலை ஆயுதமாக உடைய முருகப்பெருமானே! என்னை அன்போடு காத்து, எனக்கான உணவையும் பொருளையும் மிக மிக சௌகர்யமாக பெருக்கி தருவாயாக!
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எதையும் சாதிக்கவல்ல ஆற்றல்களை (சித்திகள்) அடியவர்களாகிய நாம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும். மயிலோடு இருக்கும் முருகன் வாழ்க. அழகிய வேலொடு இருக்கும் முருகன் வாழ்க எங்களுக்கு ஞானம் அளிப்பதற்காக மலைமீது குருவாக இருக்கும் முருகன் வாழ்க குறமகள் வள்ளியோடு வாழ்க வெற்றிமுழக்கத்தோடு பறந்து முருகன் புகழை பறைசாற்றும் சேவற்கொடி வாழ்க உன் புகழை பாடும் என் வறுமைகள் என்னை விட்டு நீங்க வேண்டும.
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
என்னிடம் பல குறைகள் இருந்தாலும், பல தவறுகளை செய்து இருந்தாலும், என்னை பாதுகாக்கும் தாய் - தந்தை முருகப்பெருமான் மட்டுமே குருவாக வந்து வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது ஆகும். முருகப்பெருமானின் அன்பை பெற்றவளான குறமகள் வள்ளி பெற்று எடுத்த பிள்ளை போல அடியேனை அன்புகாட்டி பிரியத்துடன் பாதுகாக்க வேண்டும். உன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டு மனமகிழிச்சியுடன் உனது அருளை தரவேண்டும். முருகப்பெருமான் மீது நம்பிக்கையுடன் வரும் அடியவர்கள்/ பக்கதர்கள் பாதுகாத்து மென்மேலும் வளம் பெற்று வாழும் படி அருள் செய்ய வேண்டும்.
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
முருக பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்பி பால தேவராயன் ஸ்வாமிகள் உருவாக்கி அனைவரும் அறியும் வகையில் எல்லோருக்கும் கொடுத்த கந்த சஷ்டி கவசம் என்னும் இந்த பாடலை நமது உடலை முறைப்படி தூய்மை படுத்தி மனதில் வேறு சிந்திக்காமல் முருகப்பெருமான் சிந்தனையுடன் காலைபொழுதிலும், மலைப்பொழுதிலும் மற்றும் எப்போதும் மனதில் உணரும் படி படிக்கலாம்.
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
இந்த கந்த சஷ்டி கவசத்தை வேறு சிந்தனைகள் கவனம் சிதறாமல் மனதில் உணர்வோடு சிந்தித்து 'ச ர வ ண ப வ' எனும்அட்சரத்தை தொடர்ந்து மனதில் ஓதிக்கொண்டே (சொல்லிக்கொண்டே) இருக்கும் பொது
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ரவ
ப வ ச ரவ ண
வ ச ரவ ண ப
36 அட்சரமாக உரு மாறும் விருப்பத்துடன் திருநீறு (விபூதி) பூசி, அவ்வாறு முருகனை வேண்டி வந்தால் நாம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் ஆளும் மன்னர்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். நமக்கு வசப்பட்டு நாம் நினைப்பதை செயல்படுத்துவார்கள்.
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
நாம் அறியாத நபர்கள் அனைவரும் நம்மை மதித்து வணங்குவார்கள். ஒன்பது கோள்களும் மகிழ்ச்சியோடு நன்மை அளிக்கும். புதிய பொலிவுடன் மன்மதன் போல அழகான பிரகாசமான ஒளி பெற்ற உடம்பு பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் பதினாறு செல்வங்கள் அதாவது
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2. குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
பெற்று வாழ்வார்கள் முருக பெருமான் கையில் எப்போதும் உள்ள வேல் போல எப்போதும் பதினாறு செல்வங்கள் நம்கைவசமாகும்.
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
இந்த கந்த சஷ்டி கவச வரிகளை வீடுபேறு அடைய வழி என நினைத்து துதித்தால் மெய்ப்பொருளாக விளங்கும். முருகப்பெருமானின் அருள் பொங்கும் விழிகளால் நம்மை பார்க்கும் பொது நம்மிடம் இருக்கும் அகப்பேய்கள் அவையாவன
1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை
4) மோகம் – மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை
போன்ற துர்குணங்கள் பயந்து வெருண்டு ஓடும், பொல்லாதவற்றை பொடி பொடியாக்கும், நல்லவர்களாக நம்மை மாற்றி நம் உணர்வில் மெய் எழுச்சி பெற்று நடனம் புரியும்.
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
அனைத்து எதிரிகளையும் வென்று தீய எண்ணங்களை அழித்து நல்லவர்களாக மாற்றும் முருகப்பெருமானை அறிந்தகொண்டது நம் உள்ளம் , சூரபதுமனை வதைத்து அஷ்ட லட்சுமிகளில் (ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி , தனலட்சுமி) ஒருவரான வீரலட்சமி விருந்து படைத்தது முருகப்பெருமானின் திருக்கரம் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பதவிகளை மீட்டு அளித்தார். லட்சுமி மற்றும் தேவர்களுக்கு குருவாக திருஆவினன்குடி அருள்பாலிக்கிறார் பழனி மலையில் குழந்தையாக சிவந்த காலடி போற்றி வணங்குவோம்.
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
நாம் தவறான பாதைக்கு செல்லாதபடி தடுத்து நம் மனதில் குடிகொண்டு நம்மில் முழுவதும் பரவி அழகிய வேலனை வணங்கி புகழுவோம்.
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
தேவர்களின் சேனை தலைவராக போர்புரிந்து சேனாதிபதியை போற்றுவோம், குறத்தி மகளான வள்ளி மனம் மகிழ்ந்து அரசனைப் போற்றுவோம், வல்லமை பொருத்திய அழகான உடம்பை பெற்றவரைப் போற்றுவோம், துன்பத்தை தீர்க்கும் இடும்பா உனைப் போற்றுவோம், கடம்ப மலர்களை சூடும் கடம்பா போற்றுவோம், போரில் வெற்றி பெற்று வெட்சி பூவை சூடும் (தமிழர் மரபு) வேல் ஏந்தியவரை போற்றுவோம்.
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
உயர்த்த மலையான கந்தகிரி பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு மாமன்னராக மயில் போல மனதை கவரும் நடனம் ஆடும், உன் மலர் போன்ற மென்மையான பாதங்களை கதி என சரணம்/ தஞ்சம் அடைகின்றோம். முருகப்பெருமானின் அட்சரமான சரவணபவ சரணம் அடைகின்றோம். ஆறு திரு முகம் ஒளி வீசும் முருகப்பெருமானின் சரணம் அடைகின்றோம்.
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! எனது வார்த்தையானது நாக்கு அசைய வெளிப்படும் போது பொன்னாலான வேலானது விரைந்து வந்து காக்க வேண்டும். இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காக்க வேண்டும்! பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காக்க வேண்டும். முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவில் சிறந்த வேலானதுகாக்க வேண்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பொன்னாலான வேலானது காக்க வேண்டும்! தாமதமின்றி ஒரு நொடியில் நோக்கி அருள வேண்டும். தடைகள் (இடைஞ்சல்கள்) அடித்து விலக்க வேண்டும். முருகனின் அருள் பார்வையால் நம் செய்த பாவங்கள் அனைத்தும் பொடி பொடி தூளாகி ஒழிய வேண்டும்
பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும் என்னை நெருங்கிவராமல் விலக வேண்டும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும்
கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் கொள்ளிவாய் பேய்களும் குறளை எனும் குட்டி பேய்களும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்.
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட
பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு, காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் பல்லக்கில் வரும் பூதங்களும் கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் முருகனின் பக்தரான என் பெயர் கேட்டாலே இடி விழுவதை போல பயந்து ஓடவேண்டும்.
ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
வெறும் கண்ணால் காண முடியாத பதுமைகளும், பூனையினுடைய முடி பிள்ளைகள் எலும்பும், நகங்களும், மயிரும் நீண்ட முடியை உடைய தலையும், மரத்தினால் செய்த பொம்மைகள், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், வீட்டில் தீங்கு விளைவிக்கும் பொருட்டு புதைத்து வைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த பகைவர்களின் கர்வமும் மந்திரித்துச் செய்த மரத்தினால் செய்த பொம்மைகள்.
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
தீய சக்திகளுக்குத் கொடுக்கும் காசும் பணமும், ஆடு கோழி காவு கொடுத்து அதன் ரத்தத்தில் புரட்டிய சோறும், மாந்திரீகம் சொல்லுகின்ற அஞ்சன வித்தையும், சிந்தை கவர்ந்து பித்துப்பிடித்து போகச் செய்யும் மாய மந்திரமும், இந்த மேற்குறிய துஷ்ட செயலை செய்வோர்கள் முருகன் பக்தரான அடியேனை பார்த்தவுடனே நேராக பார்க்கமுடியாமல் இங்கும் அங்கும் அலைந்து எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் பயந்து குலைந்து பேசவேண்டும். பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும் எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும்.
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்
பயந்து நடுநடுங்கவும் அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும், வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும், படியினில் முட்டிக்கொள்ளவும், பாசக்கயிற்றினாலே கட்டி உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! காலும் கையும் ஒடியவும் படி அவர்கள் கதறும் படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
கண்விழிகள் வெளியே பிதுங்கி வருபடியாக மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அனைவரையும் கவரும் அழகனே சூரர் பகை அழித்த அழகனே! கூரிய வேலால் குத்தி அழிப்பாய்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக
முருகனை நன்றாக பிடித்து கொண்டவர்களுக்கு பிரகாசமாக எரியும் சூரியன் வெப்பம் கூட தணிந்து குறைந்து இதமாக இருக்கும்.
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட
புலியும், நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பயந்து ஓடும் படி வேலை விடுவாயாக!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
தேள்களும் பாம்பும் செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஒளிப்பும், நரம்பு சுளுக்குதலும்,ஒரு பக்கத்தலைவலியும், வாதம்(வாயு சம்பந்தமான வியாதி) வலிப்பு, குளிர்நோயும் இழுப்பு நோயும், பித்தநோயும், சூலைநோயும், சயம், குன்மநோயும் சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்,பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்,கடுவன், படுவன் என்னும் சிலந்தியும் கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் பார்த்தவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஓட அருள் புரிவீராக!
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
பதினான்கு உலகமும் என்னுடன் நட்புடன் இருக்க வேண்டும், ஆண்களும், பெண்களும், எல்லோரும், ஆள்கின்ற மன்னர்களும் என்னோடு மகிழ்ச்சியுடன் நல்ல நட்போடு உறவாக இருக்க அருள் புரிய வேண்டும்.
உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
உன்னை போற்றி வணங்க கூடிய "சரவணபவ" எனும் திருநாமம் உடைய சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! எல்லா திசையிலும் புகழ்பெற்று ஒளிரும் ஒளியினை உடையவனே!, பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவி துயரான பாவத்தை போக்கும் சக்தியை உடையவனே!
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!
திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகனே! தேவலோகத்தை காத்து! தேவர்களுடைய கடுமையான சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! கந்தக் கடவுளே! மனித மனம் எனும் குகையில் குடியிருக்கும் குகனே! கதிர் ஒளிபொருந்திய வேல் ஏந்தியவனே! கார்த்திகை பெண்களின் மகனாக வளர்த்தவனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் போரில் வென்று அருள் புரிந்தவனே! இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் மகனே!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற கதிர் ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! குழந்தை வடிவில் பழனி எனும் தலத்தில் தலைவனாக வாழ்கின்ற பால குமாரா! திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்க்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மா மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே! சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு ஆள்பவனே!
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
கரிய மேகங்களை போல கூந்தலை உடைய கலைமகளான சரஸ்வதி தேவி ஞானம் சிறக்குமாறு எனது நாவில் இருந்து, அடியேன் உன் புகழைப் பாட வேண்டும். என்னோடு எப்போதும் இருந்து வரும் என் தந்தை போல வழிநடத்தும் முருகனை நினைத்து நெஞ்சம் நெகிழ பாடினேன் ஆடினேன். எல்லையற்ற அனந்த நிலை ஆடிக்கொண்டே திருஆவினன் குடியை (பழனி) அடைவேன்.
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம் போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும், பன்னிரண்டு செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும் அழகுபொருந்திய திருமார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
பலவகையான ஆபரணங்களும் மார்புப் பதக்கமும் நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும் அணிந்து மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க அழகுடைய மேன்மையான வயிறும், கொப்பூழும் அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும்
நவ ரத்தினங்கள் பதித்த பார்ப்பதற்கு வரிசையாக அழகுற அமர்ந்துள்ளது
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
இரண்டு தொடைகளின் அழகும் இரண்டு முழங்கால்களும் ஓசை எழுப்ப அழகிய திருவடிகளில் சிலம்பு ஒலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
அகரமுதலென தொடங்கும் திருப்புகழில் இதே ஓசைகளை அமைத்திருப்பார் அருணகிரிநாதர் ஸ்வாமிகள். பிரபஞ்சம் உருவான பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் என அருணகிரிநாதர் ஸ்வாமிகள் கூறியுள்ளார். உதாரணமாக தடதட வென ரயில் வந்தது, சடசட என மழை பொழிந்தது என்ற ஒலிகளை விவரிக்கும் (இரட்டைக்கிளவி) சொற்கள் ஆகும். அது போல செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை முருகனின் சிலம்பொலி ஓசை போல மறைபொருளாக பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இவை தாள ஜதிகளுடன் முருகனை அழைக்கும் மந்திர வார்த்தைகள் ஆகும். இந்த அரிய மந்திரங்களை முருகனின் சிலம்பொலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளனர்.
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! உயிர் சக்தியை உள்ளடக்கிய மூலாதார பரம்பொருளே, மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! மயில் என்பது ஓம்கார வடிவாகும், என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன், முன்னதாகப் புறப்பட்டு முந்தி வரும் முருகனின் வேல். உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கின்ற லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க லீலா லீலா லீலா என்னும் பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து என்னைக் காத்து அருள் செய்வாயாக! என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன். அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை புனித வேல் காக்க வேண்டும். ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும்.
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! காக்க வேண்டும்! இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காக்கவேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்! என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்தியவேல் காக்க வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லி நாக்கை செம்மை கொண்ட வேலானது காக்க வேண்டும். கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காக்க வேண்டும். எனது இளமையான கழுத்தை இனிமையான வேல் காக்க வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகியவேலானது காத்தருள வேண்டும்.
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காக்க வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காக்க வேண்டும். முதுகுப் புறத்தினை அழகுடன் முதுகை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காக்க விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காக்க வேண்டும்.
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காக்க வேண்டும்! சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காக்க வேண்டும்! நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காக்க வேண்டும்! ஆண்குறி இரண்டும் கூர்மையாகிய வேலானது காக்க வேண்டும்! இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காக்க வேண்டும்! இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேல் காக்க வேண்டும்! ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காக்க வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காக்க வேண்டும்!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்! நாக்கில் சரஸ்வதி நல்ல துணை ஆக இருக்க வேண்டும்! (நாபி) உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காக்க வேண்டும்! மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காக்க வேண்டும்!
கந்த சஷ்டி கவசம்
“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை”.
கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை (துதிப்போர்க்கு) படிபவர்களுக்குக் வலிமை வாய்ந்த கொடிய வினை (வல்வினை போகும்) இடர்ப்பாடுகள் துயரங்கள் போகும் (துன்பம் போகும்) நெஞ்சில் பதியும் படி. உணர்ந்து முழுமனதோடு ஓதுபவர்களுக்குக் (பதிப்போர்க்கு) செல்வம் சேரும் மேலும் வந்த செல்வம் குறையாமல் பெருகும் (கதித்து ஓங்கும்) ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்கள் இல்லாத தூயவன் (நிமலன்) அருளால் ஆழ்ந்து தியானம் மூலம் இறைவனை உணரும் நிலை (நிஷ்டை) கைகூடும்.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
அமர்களாகிய தேவர்களின் துயரை போக்க போர் புரிந்த குமரன் காலடி நோக்கியே நம் மனம் வணங்கி நிற்கட்டும்.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
சூரசம்காரம் எனும் சஷ்டி பொழுதில் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை மனதிற்குள்ளே கூறிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு உதவும் செங்கதிர் (சிவப்பு நிறம் கொண்ட) வேலோன்.
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட கிண்கிணி என்னும் மணிகள் அசைந்து ஆட
எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு கையில் வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் வந்தருள்வாராக! வேல் ஆயுதம் கொண்டவரே வருக!!மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்வந்து அருளுக!
இந்திரன் முதலாக இந்திரன் (கிழக்கு) – தேவர்களின் அரசன்.,அக்னி (தென் கிழக்கு) – நெருப்பு கடவுள்,எமன் (தெற்கு) – இறப்பு கடவுள், நிருத்தி (தென் மேற்கு) – அழிவு மற்றும் அழியாத தன்மையுடைய தெய்வம்,வருணன் (மேற்கு) – கடல் மற்றும் நீரின் கடவுள், வாயு (வட மேற்கு) – காற்று மற்றும் வாயுக்களின் கடவுள், குபேரன் (வடக்கு) –செல்வத்தின் கடவுள்,ஈசானன் (வட கிழக்கு) – ஈசனின் (இறைவனின்) ஒரு வடிவம்.எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து வந்து அருளுக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
தேவேந்திரனின் மருமகனே! வந்து அருள்க அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் கந்தக்கடவுள் வந்து அருள்க! ஆறு திருமுகங்களைக் கொண்ட தலைவனே வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக! சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! விரைவாக வருக சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
ரவண, பவச, ரரா. ரிவண பவச ரி ரி "சரவணபவ' என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ''போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப் பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும்.
விணபவ சரவண வீரா நமோ நம-சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர மூர்த்தியாக விளங்கும் வீரரே உம்மை நான் வணங்குகிறேன். நிபவ சரஹண நிற, நிற நிறென-ஆறெழுத்து மந்திரத்தின் ஒளிவடிவமாய் பிரகாசிக்கின்ற. சரவணப் பொய்கையின் வீராதி வீரன் இறைவன், தனது வாகனமான மயிலின் மீது வந்தடையும் அவனை வணங்குகிறோம். அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்களின் வீரத் தலைவனாக இருப்பவரை வணங்குகிறோம்.
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
என்னை ஆட்கொண்டு அருளும் சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் கையில் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும் பரந்து விரிந்த பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க என்னைக் காக்க வேகமாக வந்தருள்க!
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள் இது 'ஈம்,' 'கிள்ம்,' 'சௌம்' என்ற பீஜ மந்திரங்கள் குறிக்கிறது. 'பீஜ' அல்லது 'விதை' என பொருள் சொற்களின் தொடராக இருந்து, அதற்கு ஒரு தனிப்பட்ட 'சக்தி'யையும் அளிக்கிறது.
பீஜ மந்திரங்களில் நுண்மையான மற்றும் மர்மமான உள் அர்த்தம் உள்ளது.
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்: விழிகளும், கரங்களும் தெய்வீக அடையாளங்களுடன் இணைந்து, படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தெய்வீக பண்புகளை குறிப்பிடுகின்றன. உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்: உய்யும் ஒளியாகவும் (தெய்வீக பிரகாசம்-அருட்பெரும் ஜோதி), உயிரின் ஆதியாகவும், செழிப்பும் காத்திடும் ஆற்றலாகும். கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்: கரங்களிலும் ஒளி, இந்த ஒளி தெய்வீக காந்தம் மற்றும் சண்முகனின் பிரகாசமான உருவம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. நிலைத்து நிற்குமாறு எனக்கு முன் நாள் தோறும் ஒளிவீசுகின்ற ஆறுமுகனாகவும் நீயும் உன்னதமான, தனித்துவமான ஒரு ஒளி “அருட்பெரும் ஜோதி” அல்லது சிறப்பு ஆறுமுகனின் மகிமையுடன் பொருந்தி, மிக உயர்ந்ததாக இருக்கும், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சிவ அருளை பெற்று ஒவ்வொரு நாளும் மேலோங்க நம் மனத்தில் குடியிருக்கும் முருகன் (குகன்) வந்து அருள்க
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்
கந்த சஷ்டி கவசம் என்றல் என்ன?
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌணர்னமிக்கும் அடுத்து வரக்கூடிய ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். செவ்வாய் அதிபதி முருகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி,
சஷ்டி என்பது சூரனோடு முருகன் போர் புரிந்த காலம் ஆகும். போரிலே மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் தன்னோடு வைத்துக் கொண்டார். இதனை சங்கரன் மகன் சட்டியில் மாவரத்தான் என்று வட்டார மொழிச் சொற்களில் கூறுவது உண்டு. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை நோக்கி தொழுவது சஷ்டி விரதம் ஆகும்.
சஷ்டி பொழுதில் கணவன் மனைவி இருவரும் இணைந்து விரதம் இருந்தால் மக்கட் பேரு கிடைக்கும். இதனை “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவது உண்டு. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்றும் கூறுவார்கள்
சஷ்டி என்றால் ஆறு, ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். மனக்கவலை நீங்க ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன். முருகனை வணங்க எல்லா தீய வினைகளும் ஒழியும் வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். பழனியில் கிரிவலப் பாதையில் பலரும் நோயினால் அவதிப்படுவதை பார்த்து மனம் வருந்தி அதனை தீர்க்க முருகனை வேண்டி இயற்றப்பட்ட பாடல் ஆகும்.
கந்த சஷ்டி கவசம் என்ன பயன்?
இந்த கவசத்தை படிப்பதால் அல்லது பாடுவதால் நமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். இதில் உள்ள 240 வரிகளை தொடர்ந்து வாய் திறந்து படுவதால் நாளமில்லா சுரப்பிகள் சீராக வேலை செய்யும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் குணமடையும், மனஅமைதி கிடைக்கும், புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். உணர்ந்து முழுமனதோடு பாட வேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் மனதார நினைத்து சரி படுத்துவது யோகக் கலையில் ஒருவித முறையாகும். இதனை மறைப்பொருளாக சஷ்டியில் கொண்டுள்ளது.
கொடிய விஷமும் கண்களுக்கு, தெரியாத பில்லி சூனியங்களும், சஷ்டியை படிக்க படிக்க நம்மை விட்டு விலகும். இதனை எந்த நேரத்திலும் படிக்கலாம். தீராத பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் முருகன் தீர்த்து வைப்பார் அல்லது தீர்க்க வழி காட்டுவர்.
ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.
முன்னுரை
அகவும் மயிலும், கூவும் சேவலும், கூரான வேலும், பொங்கும் கடலும், பொதிகை மலையும், ஒதும் தமிழும் சிந்தையுள் நிறைந்த சித்தர்கள் வழிபடும் சிவமைந்தன் பெயரை, குறை தீர்க்க குன்றம் தோறும் குடியிருக்கும் குமரனையே கூறும்.
அறிமுகம்
முருகனின் வரலாறு என்றால்
பகுத்தறிவாளர்களும் அறிவியல் சிந்தனையாளர்களும் கந்தனை கடவுளாக பார்ப்பதில்லை இருப்பினும் குறமகள் வள்ளியை மணந்த குமரனை குறிஞ்சி நில தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர் அவர் முன்னர் ஒரு காலத்தில் இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்து உலகத்துக்காக போர் புரிந்து மக்களை காப்பாற்றி நல்வழி காட்டும் தலைவனாய் இருந்திருப்பார் என ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஷண்முகம் (ஆறுமுகம்)
ஈஸ்வரனின் "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருமுகம்- அதோ முகம் சேர்ந்து நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த அருட்பெரும் ஜோதி ஆறுமுகங்களாக மாறியது.
ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்)
ஓகம் என்ற தமிழ் கலையே வடமொழியில் யோகம் என பெயர் பெற்றது. இரண்டாக உள்ள பொருளை ஒன்று சேர்ப்பது ஓகம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும் விஞ்ஞானமே ஆகும். ஓகக் கலையின் நாயகன் முருகனே, மூலாதாரம்-ஓங்காரம், நிராகுலம் (சுவாதிஷ்டானம்)-நிலம், மணிப்பூரகம்-நீர், அனாகதம்-நெருப்பு, விசுத்தி-வளி(காற்று), ஆக்கினேயம்- வான்(ஆகாயம்) ஒரே நேர்கோட்டில் நிற்க வெளிப்படும் பேராற்றல் முருகன் என்ற அறியப்படுகிறது,
தமிழ் ஆயுதம் -வேல்
அரிதான யோக முறையால் புருவ மத்தியில் சக்தியாக திரண்டு சுழலும் உன்னத நிலையே முருகனின் அவதாரமாகும். கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள் ஃ இந்த மூன்று புள்ளிகளுக்கு இடையே தமிழின் ஆயுத எழுத்தான ஃ வடிவில் விரிவடையும் இந்தப் புள்ளிகளையும் 6 மையங்களையும் ஒன்று சேர்த்தால் வேல் வடிவில் உருவம் தோன்றும், யோகத்தில் இந்த உயர்ந்த நிலை அடையும்போது அவரது உடம்பு சூரியனைப் போல பிரகாசிக்கும் அனைத்து வித சித்திகளும் கைகூடும்
துரியம் (Crown or உச்சிமண்டை )
மனித உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன. இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாகவும் சுழுமுனை முருகனாகவும் உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள். மனித உடம்பு இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர இணையும்போது அங்கே ஏழாவது சக்கரமான துரியம் (சகஸ்ரநாமத்தில்) நிலைக்குச் செல்லும்.அப்போது ஓரு மனிதன் இறை தன்மை எனும் தெய்விக நிலையை அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது மருத்துவர்கள் பயன்படுத்தும் முதுகு தண்டில் இரண்டு பாம்புகள் பின்படுவது போல் உள்ள அடையாள குறிகளும் முருக தத்துவமே.
ஆறுமுகம்(நதி)
ஆறுமுகம் என்பது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் ஆறு சக்கரங்களை குறிப்பதாக கூறலாம். எண்ணிக்கை அடிப்படையில் ஆறு என்றும் மற்றும் ஓடும் நதிகளை ஆறு என்று கூறுவோம். இவை அனைத்தும் முருகனுக்கு உவமையாக இருக்கலாம். மலைகளிலே மழையாய் பொழிந்து, சுனையாய் ஒன்றிணைந்து, அருவியாய் கொட்டி, நதியாய் பெருகி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்த்து, பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகி. பெருங்கடலில் கலக்கும் ஆறு போல முருகனும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவ சக்திக்கு மைந்தனாக அவதரித்து குறிஞ்சி நிலத்தில் தவழ்ந்து ஆறுமுகமாக ஒன்றிணைந்து சூரனை அழிக்க வீறு கொண்டு எழுந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருளை வாரி வாரி கொடுத்து பிறப்பு இளமை முதுமை நோய் இறப்பு என்கின்ற கர்ம வினை கொண்டு அவதியுறும் பக்தர்களை குருவாய் அமர்ந்து ஞானம் கொடுத்து பரமாத்மா எனும் பெருங்கடலில் சங்கமிக்க ஞான வழிகாட்டியாக இருக்கிறார்.
ஆற்றுப்படுத்தல்
ஆறு என்ற சொல்லுக்கு ஆறுதல், ஆற்றுப்படுத்தல் என்ற பொருளும் உண்டு. சூடான தேநீர் சற்று ஆறிய பின் குடிக்க இதமாக இருக்கும். வேகமாக ஒருவர் ஓடிய வந்த பின்பு அவருடைய மூச்சு வேகமெடுக்கும், (இளைப்பு) அப்போது ஓய்வெடுக்கும் நேரம் மூச்சுக்காற்று சீராகும். (இளைப்பாறு). சாப்பிட்டு விட்டீர்களா என கேட்பதற்கு பதிலாக பசியாறியாச்சா (பசியாற்று) எனவும் கேட்பது உண்டு. ஏதோ ஒரு விஷயத்திற்கு நம்முடைய நெஞ்சம் அஞ்சும் போது மனம் பதைக்கும் போது யாமிருக்க பயமேன் என ஒருவர் நம்மை தேற்றும் போது நம் மனம் ஆறுதல் அடையும்.
ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்
இங்கே மேற்கண்ட பதத்தில் ஆறு என்பது தணிப்பு/ தணிக்கை எனப் பொருள் கொள்ளலாம். தணிகை என்ற சொல்லும் (திருத்தணிகை தணிகாசலம் தணிகை வேல்) முருகனுக்கே உரியது,
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
என்ற திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஆறு என்ற சொல் ஆறுதல் console என்ற பொருளிலே கையாண்டுள்ளார்.
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை
முருகனை குறித்த பாடலில் கவியரசு கண்ணதாசன் கையாண்டுள்ளார்
அபாயத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கு அபய கரம் நீட்டும் முருகனின் ஆறுதல் அளிக்கும் முகமே ஆறுமுகம் ஆகும்.
ஆறு எழுத்து மந்திரம்
சிவனை வழிபடுவோர் நமசிவாய என் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் அதுபோல முருக பக்தர்களுக்கு சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரம் ஆகும் சரவணபவன்-நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் சரவணபவ - என்பது ச–செல்வம், ர-கல்வி, வ-முக்தி, ண-பகை வெல்லல், ப-கால ஜெயம், வ–ஆரோக்கியம் குறிக்கும் அல்லது ச(கரம்)-உண்மை, ர(கரம்)-விஷயநீக்கம், அ(வ)(கரம்)-நித்யதிருப்தி, ண(கரம்)-நிர்விடயமம், ப(கரம்)-பாவநீக்கம், வ(கரம்)-ஆன்ம இயற்கை குணம் என விளக்கங்களை அளிக்கின்றனர்
காலங்களும் கார்த்திகை நட்சத்திரமும்
வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டமைப்புகளுக்கு கார்த்திகை நட்சத்திரம் என பெயர் வைத்தனர்.கார் என்றால் குளிரைக் குறிக்கும் சொல் தீ என்றால் வெப்பத்தை குறிக்கும் சொல் இவ்விரண்டையும் இணைத்து கார்த்திகை என அழைத்தனர். இந்த கால மாறுபாட்டை கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணித்தனர்.
ஆறு சிறுபொழுது
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நாள் எடுக்கும் இதனை ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர் 1.வைகறை( 2 am to 6 am) 2.விடியல்(6 am to 10 am). 3.நண்பகல்(10 am to 2 pm), 4.எற்பாடு(2 pm to 6pm), 5.மாலை (6 pm to 10 pm), 6.யாமம்(10 pm to 2am) ஆகும்.
ஆறு பெரும்பொழுது
சூரியனை பூமி சுற்றிவர ஒரு வருட காலமாகும் இதனையும் தமிழர்கள் ஆறு காலங்களாக பிரித்தனர் இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி), கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக் காலம் (மார்கழி, தை), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி) ஆறுமுகனை வழிபடும் தமிழர் காலத்தையும் நேரத்தையும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணக்கிட்டுஆறு பிரிவுகளாகவே பிரித்தனர் இதன் மூலம் காலநிலை அறிந்து அதற்கு ஏற்ப வேளாண்மை செய்தனர்.
சூரசம்காரம்
முருகனை குறிஞ்சி நிலத்தலைவன் என்பது மட்டும் உண்மையானால் சூரசம்ஹார போர் மனிதர்களுக்கும் மனிதர் அல்லாத விலங்குகளுக்கும் நடந்திருக்கும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனை மற்றும் சூரனை தோளில் சுமந்து போரிட்டு காட்சிப்படுத்தினர் எனவே சக்கரம் மற்றும் ரதம் கண்டறியாத காலமாக இருக்கும் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலமாக இருக்கும். சூரசம்கார விழாவில் சுரன் யானை முக வடிவிலும் சிங்க முக வடிவிலும் அசுரமுக வடிவிலும் முருகனோடு போர் புரிகின்றான். சூரனின் தங்கை அஜமுகி (ஆடு முகம்) என்றும் போருக்கான முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பெரிய கோள்களில் காணப்படும் யாழி முக்கிய வகையாக மூன்று வகையாக பிரிக்கலாம் ஆட்டுத்தலை கொண்ட மகர யாளி, யானை தலை கொண்ட கஜ யாளி, சிங்க தலை கொண்ட சிம்ம யாளி. யானை குதிரை சிங்கம் புலி மயில் குரங்கு ஆகிய விலங்குகளை தெய்வ வாகனமாகவும் வணங்கும் இந்து சமயம் யாளியை வணங்குவதில்லை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துள்ளது. அரண்மனைகளில் மன்னர் வேட்டையாடிய பொருளை காட்சி பொருளாக வைப்பது வீரத்தை வெளிக்காட்டும் தமிழ் மரபு அதுபோலத்தான் முருகனின் வீரத்தையும் வெளிகாட்ட யாளியை காட்சிப்படுத்திருக்கக்கூடும் ஆனால் பூஜை செய்வது இல்லை.
வேலுண்டு வினையில்லை!
மலைகளிலும் காடுகளிலும் வாழ்வோர்கள் கையில் உயர்ந்த கம்பு/தடி எப்போதும் வைத்திருப்பார்கள் விஷச் செடிகள் பூச்சிகள் விலங்குகள் இவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் மேலும் மலையற்றத்தின் போது கீழே விழாமல் இருக்க கையில் கம்பு இருப்பது மிக அவசியம் இன்றும் பெரிய மலைகளில் ஏறுபவர்கள் கையில் குச்சியில் பிடித்துக் கொண்டு ஏறுவது நடைமுறையில் உள்ளது. மலைகளில் வாழ்ந்த முருகன் கையில் வேல் வைத்திருப்பது இயல்புதான். சூரன் படை மிருக கூட்டம் எனில் போர் என்பது எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலாகதான் இருக்கும் எனவே கூர்மையான வேல் எப்போதும் கையில் இருப்பது தன்னையும் தன் குடிமக்களையும் காப்பதற்காகவே.
மயிலுண்டு பயமில்லை
மயில் தொலைதூரம் பறக்கின்ற பறவை கிடையாது சிறிய தூரம் மட்டுமே பறக்கும் யானை குதிரை ஒட்டகம் போன்ற விலங்கு போல் மனிதனை சுமந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் கிடையாது. அதேசமயம் முருகன் மயில்லோடு தான் இருக்கிறான் காரணம் என்னவெனில் மயில் முருகனைப் போன்றே அழகான ஆண் இனம் மேலும் மழை வருவதை முன்னரே உணர்த்தும் அறிவு படைத்தது. கொடிய விலங்குகள் தாக்குதலை முன்னரே உணர்ந்து பிற உயிரினங்களுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மேலும் தன் இருப்பை எப்பொழுதும் தன் குரலால் ஒலித்துக் கொண்டே இருக்கும் (ஆகவும்). சூரன் ஒரு விலங்கினமாக இருந்தால் போர் என்பது எதிர்பாராத தாக்குதல் அச்சமயத்தில் அபாய ஒலியை எழுப்பவும் முருகன் இருக்கும் இடத்திற்கு அறிந்து கொள்ளவும் செய்தி அனுப்ப முருகனின் மயில் உதவி செய்திருக்கும். மயில் மற்ற எல்லா வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் வித்தியாசமானது பழகிய மனிதரை தவிர வேறு யாரிடத்திலும் நெருங்கி பழகாது குறிப்பிட்டு நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகும். சேவலுக்கும் ஏறக்குறைய இதே குணாதிசயம் உண்டு.
கந்தன்உண்டு கவலை இல்லை
மறைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் ஈட்டு வீரனை அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு முருகன் நினைவாக எழுப்பப்பட்ட தூண் கந்து என்று அழைக்கப்படும். முருகன் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல சித்தர்கள் வணங்கும் சித்தராக தலைசிறந்த ஞானியாக இருந்தார் பிறப்பு இளமை முதுமை கர்மவினை நோய் இறப்பு என்னும் இயற்கை விதிகளை அறிந்து அதனை மாற்றும் வல்லமையும் பெற்று இருப்பார். முருக அடியார்களான அகத்தியர், ஔவையார், போகர் புலிப்பாணி அருணகிரிநாதர் வள்ளலார் இவர்களுக்கும் இயற்கை விதியை மாற்றியமைக்கும் வல்லமையோடு இருக்கிறார்!. பேசாத குழந்தையான குமரகுருபரரை பாட வைத்தது முருகன் அருளே! பாம்பன் சுவாமிகள் முறிந்த எலும்பை சரி செய்ததும் கந்தனின் கருணையே! ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 14/02/1984, 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என திருவள்ளுவரின் வாக்கின்படி முருகன் போர் வீரனாக, தலைவனாக மட்டுமல்ல கருணையே வடிவான இறைவனாக மாறியவன். அபாயத்தில் அஞ்சி இருப்பவருக்கு அபய கரம் நீட்டும் ஆறுதல் அளிக்கும் முருகனின் திருவருள் என்றென்றும் தொடரும்
நூறு சதவீத வாக்கு-அதுவே நமது இலக்கு
கட்டாய வாக்குப் பதிவு மீறினால் அபராதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு குடியரசு ஆட்சி முறை என்ற கொள்கையின் அடிப்படையில் தன்னை கட்டமைத்துக் கொண்டது முதல் தேர்தல் 1951 முதல் இன்று வரை 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளித்து வருகிறது. படித்தவர்- படிக்காதவர், ஆண்- பெண், செல்வந்தர்- ஏழை, ஜாதி, மதம், இனம், மொழி என எந்தவித வேறுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமையை அளித்தது போற்றுதலுக்குரிய விஷயமாகும்
மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நாடான இந்தியா இன்று வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மற்றும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உலகத்தின் அனைத்து நாடுகளும் வியந்தும், பாராட்டியும், பின்பற்றியும் வருகிறது
இந்திய ஜனநாயகத்தின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை முறையாகும்.
பாகிஸ்தான் வங்காளதேசம் சில ஆசிய நாடுகளில் மற்றும் உலகின் பல நாடுகளில் ஆங்காங்கே ராணுவ புரட்சிகளும் சர்வாதிகாரமும் தலை தூக்கினாலும் இன்று வரை மக்களைச் சத்தியத்தின் வழியிலும், அறவழியிலும் தொடர்ந்து நடத்தி வருவது இந்திய ஜனநாயகத்தின் வாக்குரிமை தான் முக்கிய காரணமாக உள்ளது
கொடுங்கோல் ஆட்சியாக இருந்தாலும் , கோமாளி ஆட்சியாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு சொட்டு ரத்தம் போடச் சிந்தாமல் மக்கள் நினைத்தால் தூக்கி எறியும்.. வாய்ப்பு தானாகவே இந்திய மக்களுக்கு வாக்குரிமையினால் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு ஈடு இணையற்ற சக்தியாகும்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை தான் தவிர அது கடமை அல்ல . வாக்கு அளிப்பது ஒரு தனி மனித உரிமை எனில் வாக்களிக்க மறுப்பதும் சுய விருப்பத்தைச் சார்ந்ததாக உள்ளது
ஒரு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் சுமார் 3,800 கோடிக்கு மேல் செலவு செய்கிறது இது தவிர அரசு ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும் துணை இராணுவத்தினர் என்று பலரது உழைப்பும் சேர்ந்துள்ளது
ஒரு வாக்குச்சாவடிக்குக் குறைந்தபட்சம் நான்கு முதல் பத்து நபர்கள் தேவைப்படுகிறது மேலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் ஒரு வாக்குச் சாவடிக்கு 5 முதல் 50 காவலர்கள் தேவைப்படுகின்றனர் பதட்டமான வாக்குச்சாவடி என்றால் துணை ராணுவத்தின் பங்களிப்பும் அதிகம் இவ்வாறாக ஒரு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு சுமார் 12 லட்சம் வாக்குச்சாவடிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அமைக்கிறது
ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முன்னதாக தயாராகிறது வாக்காளர்களின் பட்டியல் இறுதி செய்வதற்கும்,எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும் மற்றும் எவ்வாறு வாக்கு இயந்திரத்தைக் கையாள வேண்டும் என மாவட்டம் தோறும் பலமுறை பயிற்சி வகுப்புகளும் நடக்கிறது . இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கத் தோராயமாக ஒரு கோடி நபர்களுக்கு மேல் உடல் உழைப்பினாலும், சுமார் 4000 கோடி மக்களின் வரிப்பணமும் வாக்குரிமை நிலை நாட்டச் செலவு செய்யப்படுகிறது.
இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம்
Election year - Percentage
1951–52 —- 44.87%
1957—---------- 45.44%
1962—---------55.42%
1967—----------61.04%
1971—---------55.27%
1977—----------60.49%
1980—-------56.92%
1984—--------64.01%
1989—--------61.95%
1991—-------56.73%
1996—-------57.94%
1998—------61.97%
1999—-------59.99%
2004—-------58.07%
2009—----------58.21%
2014—--------66.44%
2019—---------67.40%
முதல் தேர்தலில் இருந்தும் இன்று வரை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை பொருத்தமட்டில் 67.4 சதவீதம் தான் அதிகபட்ச வாக்கு சதவீதமாகும் சராசரியாக 58% மக்கள் மட்டுமே தன்னை யார் ஆள வேண்டும் என்பதை உறுதி செய்கின்றனர் சராசரியாக மூன்றில் ஒரு நபர் எப்போதும் வாக்களிப்பதில்லை.
இந்திய ஜனநாயகத்தை மூன்றில் ஒருவர் புறக்கணிக்கிறார் இதற்கான காரணத்தைத் தேடும் போது, மக்களுக்கு வேட்பாளர்கள் யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று காலம் காலமாகக் கூறி வந்தனர் இது குறித்து பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களின் பேசப்பட்டு இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது உச்சநீதிமன்றம் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஓட்டுப் பதிவு சதவீதத்தை உயர்த்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது 2014 ஆம் ஆண்டு நோட்டா (NOTA- None Of The Above) என்ற புதிய முறையைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியது அதன் பிறகு நடந்த இரண்டு பொதுத் தேர்தலில் சராசரியா 58 சதவீதம் வாக்கு மீதம் 66% ஆக உயர்ந்தது ஆனால் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நோட்டாவிற்கு 2% இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவானது
மேற்கூறிய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது தேர்தலில் புறக்கணிப்பதற்காகவோ, வேட்பாளர்கள் விரும்பாத காரணத்தினாலோ மக்கள் ஓட்டளிக்கத் தவறுகின்றனர் என்பது உண்மை இல்லை
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைக் கவரும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது இவ்வாறு பெரும் வெற்றியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஊழல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது
இதனால் சமுதாய அக்கறையும் நற்சிந்தனையும் தூய எண்ணம் கொண்ட நல்லவர்கள் அரசியலில் தேர்ச்சி பெற முடியவில்லை. மேலும் இந்த அவல நிலை தொடர்வதால் பொதுவாக இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் குறைந்து கொண்டே செல்வது வேதனைக்குரியது
இந்த காலத்தில் இளைஞர்கள் குறைந்தபட்சம் தன்னுடைய நாடாளுமன்றத் தொகுதி எது? சட்டமன்றத் தொகுதி எது? நாம் எந்த தேர்தலில் ஓட்டு அளிக்கிறோம், யார் வேட்பாளர்கள் என்ற அடிப்படையே அறியாமல் இருப்பது மிகப்பெரும் கவலைக்குரியதாகும்
அரசியலில் மாற்றத்தை விரும்பும் எல்லோருடைய கனவும் நிறைவேற வேண்டுமென்றால் இந்தியாவில் தேர்தலில் 100% ஓட்டளிக்கும் பங்களிப்பு வேண்டும் அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் கட்சிகள் தனது வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பார்கள். சராசரியாக 67% ஓட்டுப் பதிவு நடக்கும் பொழுது இருமுனை போட்டி என்றால் கூட 34 சதவீதம் ஓட்டு வாங்குவார் வெற்றியாளராக ஆகிறார் பலமுனை போட்டி இருந்தால் 20% குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றியாளராகக் கருதப்படுகிறார் உண்மை நிலவரம் என்னவெனில் நூற்றுக்கு 80 பேர் புறக்கணிக்கப்படும் நபர் இந்திய நாட்டின் சட்ட இயற்றும் அதிகாரத்தைப் பெறுகிறார் என்பது வேதனைக்குரியது.
படித்த இளைஞர்களும் , உயர்மட்ட வகுப்பினரும் வாக்குரிமை மற்றும் அதன் அவசியம் குறித்துச் சிந்திக்க மறுக்கின்றனர் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் இருப்பதற்கு என்று எந்தவித சிறப்புக் காரணங்களோ காரியங்களும் இல்லை “நாம் வாக்களித்து என்ன நடக்கப் போகிறது?” என்ற ஒரு மந்த புத்தியும், சோம்பேறித்தனமும் வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணம் இந்த நிலை மாற கட்டாய ஓட்டுப் பதிவு முறையை Compulsory Voting இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் வேறு சில வசதிகளையும் செய்து முழுமையான மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் மக்கள் தொகையில் சிறிய எண்ணிக்கையில் நாடுகளின் இந்த முறை உள்ளது சிங்கப்பூர் ஆஸ்திரேலியா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறை உள்ளது இந்த நாடுகளில் சிறந்த ஆட்சி முறை இருப்பதும் கவனிக்கத்தக்கது
தினேஷ் கோஷ்சாமி ஆணையம் 1990 கட்டாய வாக்குப்பதிவு முறையை நிராகரித்தது அதனை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன என்ற காரணத்தினால் மறுத்தது. 1990 காட்டிலும் இப்போது தொழில் நுட்ப வசதிகள் மேம்பட்டு உள்ளனர்
ஓட்டளிக்க மறுப்பவர்களுக்குத் தண்டனை அளிப்பதைக் குறித்து ஆய்வு செய்ய 2001 ஆம் ஆண்டு மத்தியக் குழு ஒன்றை அமைத்தது ஓட்டளிக்காதவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் செயல்படுத்துவதிலும் பல நடைமுறை சிக்கலைச் சந்திக்க நேரிடும் எனக்கூறி நிராகரித்தது.
100 சதவீதம் வாக்கு பெற சில யோசனைகள்
தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணம் இருந்தால் அது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கும் அரசாங்கத்திற்கும் குறிப்பிட்ட காரணத்திற்காகப் புறக்கணிக்கிறேன் என்று தேர்தலுக்கு முன்னதாகவே ஆன்லைனிலோ தபால் மூலமாகவோ தெரிவித்திருக்க வேண்டும் இதற்கு உரியத் தொழில் நுட்ப வசதிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் அதன் பின் சம்பந்தப்பட்ட அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்
தேர்தல் நாள் முடிந்த பிறகு வாக்களிக்காதவர் அதற்கான சரியான காரணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்குரிய ஆவணங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும். காரணங்கள் சரியாக இருப்பின் அவருக்கு வாக்களிப்பதில் விடுப்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்
திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வெளியூரில் இறந்து விட்டால் அதன் காரணமாக ஓட்டளிக்க இயலவில்லை என்றால் ஓட்டளிப்பதில் விடுப்பு என்று ஏற்றுக் கொள்ளலாம்.
தேர்தல் புறக்கணிப்பு அல்லது தேர்தல் வாக்கு விடுப்பு இல்லாமல் காரணமின்றி வாக்கு அளிக்காமல் இருப்போருக்கு அபராதம் அளிக்க வேண்டும் குறைந்தபட்சம் ரூபாய் 50. முதல் 500 வரை அபராத தொகையாக நிர்ணயிக்கலாம்
இவ்வாறு செய்தால் பெரும்பான்மையோர் தனது வாக்கு எங்கு உள்ளது என்பதிலும் எங்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முன்னரே சரிபார்த்து வாக்களிப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும் அவ்வாறு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர் அபராத தொகையைச் செலுத்துவதால் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு பெரும் தொகை கிடைக்கும். அபராதம் என்பதன் நோக்கம் 100 சதவீதம் வாக்கு என்ற இலட்சியத்தை அடைவதற்காக மட்டுமே
தற்போதுள்ள நவீன யுகத்தில் இதனைச் செயல்படுத்துவது என்பது எளிதான காரியம் ஏற்கனவே இந்தியாவில் ஆதார் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் இணைத்துள்ளனர். அதுபோல ஆதார் அடையாள அட்டை வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டுள்ளது எனவே அபராத தொகை வசூலிப்பதில் பெரும் சிக்கல் நீடிக்காது. அபராதம் செலுத்தத் தவறினால் வரி வசூல் செய்யும் நடைமுறை போல் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இளைஞர்கள் அடிப்படை அரசியல் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கக் கட்டாய வாக்குப்பதிவு முறை சிறந்த யுத்தியாக இருக்கும்.
மேற்கூறிய யோசனைகள் நடைமுறைக்கு வந்தால் இந்தியா வல்லரசாகவும் கனவை மெய்ப்படவைக்கும் முக்கிய சக்தி சக்தியாக விளங்கும் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும்
பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் பரிதாப நிலைக்குத் தள்ளப்படக்கூடாது வல்லரசாகும் இந்தியர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். நூறு சதவீத வாக்கு அதுவே நமது இலக்கு
ஜெய்ஹிந்த்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்,
வழக்கறிஞர் சென்னை