Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மரு. திரு. நடராஜன் பெருமாள்

எழுத்தாளரும் கவிஞருமான மரு. திரு. நடராஜன் பெருமாள் அவர்கள், ஒரு மனநல சிறப்பு மருத்துவர். தற்போது தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழக மருத்துவக் கல்லூரி கேகே நகர் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமது அரசுப் பணி மற்றும் மனநல மருத்துவப் பணியுடன்  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதோடு நலிந்தோர்க்கு உதவும் சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 'மனித நேயம் மலர்வதே இனி உலகம் உய்ய வழி' என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருபவர் நமது கவிஞர் மரு. நடராஜன் பெருமாள் அவர்கள் என்பது கூடுதல் பெருமைமிகு தகவல்.

பொது
கடவுளைப் புரிந்தவர் வாழ்வது சுலபமா..!?

கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்வது சுலபமா !?


உயிரைக் காப்பாற்றுகிற மருத்துவரே தன்னால் முடிந்தவரை முயற்சி செய்த பிறகு நம் கையில் ஆவது ஒன்றுமில்லை இனி எல்லாம் அவன் செயல் என்று மேலே கையுயர்த்தி காண்பித்து விட்டு செல்லும் சூழலை நம்மில் பலர் சந்தித்திருக்கிறோம். அதன் பின்னர் நல்லது நடந்து விடுகையில் அது மனித செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாக பார்ப்பதையும் ஓரிரு நிகழ்வுகள் நினைவுறுத்துகின்றன. இதனைப் பொதுமைப்படுத்தி நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதனைத் தொழுதால் முடியாத விசயங்களும் முடித்துக் காட்டப்படும் என்றும் ஒரு செய்தி ஆழமாக மக்கள் மனதில் வேரூன்றச் செய்யப்பட்டு விட்டது. நிகழ்தகவில் அரிதான விசயங்களை இவ்வாறு பொதுமைப்படுத்தி விடுவதால் உண்டாகும் நம்பிக்கை பெரும்பாலான சமையங்களில் பொய்த்துப் போகும்போது மக்களுக்கு தங்களது புரிதலில் மாற்றம் தேவை என்பதை விட தம் மீதே காழ்ப்பும் வாழ்வின் மேல் அவநம்பிக்கையும் தோன்றி விடுகிறது. இதற்கு காரணம், நடைமுறை வாழ்வு குறித்தான புரிதலை மக்கள் அடையாமல் அல்லது அது மக்களை அடைய விடாமல் வெறும் நம்பிக்கையின் பேரில் வாழ்க்கையை நகர்த்த வைப்பதின் விளைவாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்படியானால் நம்பிக்கையே கூடாது என்கிறீர்களா என்ற கேள்வி உடனே எழுகிறது. நாம் வாழும் இந்த வாழ்வு அறிவியல் முறைப்படி சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறுகிற எந்தவொரு மனித செயல்பாடும் அறிவியலுக்கு புறம்பானதாகவோ அல்லது அறிவியலுக்கு சம்பந்தமில்லாததாகவோ இருப்பதில்லை. மேலும் சமீப கால மனித வளர்ச்சி யாவும் அறிவியல் தந்த கொடையே (தீமைகளும் உண்டென்று மறுக்க முடியாத போதும்). இதில் புதிதாக ஏற்படுகிற அதீத நம்பிக்கை என்று எது வந்து சேர்ந்து கொண்டாலும் அதையும் ஆராய்ச்சி செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து முயற்சிகளும் இங்கே முன்பை விடத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதெல்லாம் புரிகிறது சரி ஆனால் மிகச் சரியாக எங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது என்பதுதான் புரியவில்லை என்கிறீர்களா. அப்படியானால் மீண்டும் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விளக்கம் சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

தர்க்கம் தத்துவத்தின் படி இந்த மனித வாழ்வென்பது பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிற கேள்விகளால் ஆனது. ஆன்மீக விளக்கங்களின் படி வாழ்க்கை என்பது ஒரு மாயை. அறிவியலின் படி இந்த வாழ்வென்பது உடலில் உயிர் உள்ளவரை என்பதாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளைத் தாண்டிய விளக்கங்களும் சாத்தியமானது தான் என்றாலும் இப்போதைக்கு பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டவை என்ற வகையில் இந்த விளக்கங்கள் உண்மைக்கு அருகில் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் இங்கு முக்கியமாக நமது நாட்டில் ஆன்மீகப் புரிதல் என்பது மதநம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால் தான் கடவுள் இருக்கிறார் இல்லை என்ற தர்க்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த நம்பிக்கை வழியாக செய்யப்படுகிற அனைத்து வித மோசடிகளையும் அறிவுடையோர் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதே சற்றே ஆறுதலான விசயம். சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம். ஆக தன்னை உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதான ஆன்மீகப் புரிதல் தான் தர்க்க அறிவு சார்ந்த உயர்ந்த சிந்தனையாக இங்கே பார்க்கப்படுகிறது. ஏன் அப்படி என்றால், ஆன்மீக விளக்கங்களின் படி எதுவுமில்லாததிலிருந்தே இங்கு அனைத்தும் தோன்றுவதாலும் தன்னை உணரும் அந்த நிலை அப்படியான எதுவுமற்ற நிலையே என்பதாலும் அந்த நிலையில் இருந்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் இந்த உலகம் முழுமை பெற்று உண்டானதைப் போல முழுமையானதாகவே இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்பப்படுகிறது. அதனால் தான் உலகம் முழுக்க மேன்மையான அறிவு பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அனைவரும் இந்த நிலையை அடைவதையே வாழ்வின் இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள். இதை சிந்தனையை மேம்படுத்த அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல். சரி சரி இன்னும் விசயத்திற்கு வரவில்லை என்று தானே சொல்கிறீர்கள். இதோ அதையும் சொல்லி விடுவோம். 

ஆக தன்னை உணர்ந்து கொண்ட நிலையாக சொல்லப்படுகிற அந்த கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் என்ன நன்மை ஏற்பட்டு விடும் !?. ஏன் அதனை இத்தனை சிலாகிக்கிறார்கள் !?. உண்மையில் அதை அடைவது தான் வாழ்வின் சிறந்த செயலா அப்படியான அந்த நிலையை சுலபமாக அடைந்து விட முடியுமா எல்லோருக்கும் அது சாத்தியமா போன்ற கேள்விகள் பல இருக்கின்றன. இவைகளையெல்லாம் கடந்து தான் நமது கேள்விக்கு நாம் விடை காண வேண்டும். காலங்காலமாக தொடர்ந்து கடுமையான முயற்சி செய்து தியானம் செய்து அடையக் கூடிய ஒரு விசயமாகவே இதைப் பார்ப்பதும் அது இந்த மானுடத்திற்கு ஒரு எட்டாக்கனி என்பது போல் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது உண்மையே. காரணம், பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு அறிவு சென்று சேர்ந்திராத நிலையில் அப்போது வளர்ச்சியடைந்திருந்த அந்த அறிவுக்கு எட்டியதைச் சொன்னவர்கள் சொன்னதையே, அவர்களை விட பலமடங்கு பொதுவெளியில் பெரும்பாலான மக்கள் தமது அறிவில் வளர்ந்தவர்களாக இருக்கிற இந்த காலத்திலும் சொல்வதால், அது ஏதோ பெரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை என்ற தேவையில்லாத கருத்தாக்கம் ஏற்பட்டு நிலைபெற்று விட்டது. உண்மையில் அன்று பேசப்பட்ட அந்த நிலையை விட இன்றைய மனிதர்களின் புரிதல் வெகுவாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் சொன்ன அந்த அறிவு தான் மிகச் சிறந்த அறிவு என்று புரிந்து கொண்டிருக்கிற இன்றைய மக்களுக்கு, அவர்களை விட பல மடங்கு உயரத்தில் இருக்கிற தமது இந்த அறிவு தான் அன்று அவர்கள் சொன்ன தன்னை அறிந்து கொள்ளும் ஆன்மீக நிலை அல்லது கடவுள் தன்மை என்பது புரியவில்லை அல்லது புரிந்து கொள்வதிலிருந்து ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம். அறிவியலின் கூற்றுப்படி ஆழ்ந்த நுண்ணிய அறிவுதான் ஞானம் கைவரப்பெற்ற கவனம் நிறைந்த அந்த நிலை. ஆகவே இன்றைய கால மனிதன் ஏற்கனவே அந்த கவனம் குவிந்த ஞான நிலையில் தான் இருக்கிறான். அது ஏதோ அடைய முடியாத நிலை என்று சொல்லப்பட்டதால் அது இது தான் என்று அறிந்து கொள்ள முடியாத குழப்ப நிலையில் இருந்தான். இப்போது அது என்னவென்றத் தெளிவு கிடைத்து விட்டபடியால் நுண்ணிய அறிவாக இருக்கிற அந்த ஞான நிலை அல்லது கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இன்னும் சுலபமாகும் தானே நண்பர்களே.

நன்றியுடன் 

உங்கள் நண்பன் 
நடராஜன் பெருமாள்

பிற கவிதைகள்
வரமாகும் மழை

வரவாகும் மழை

வருவதாகச் சொன்ன மழை 
வரவில்லை
தொகுப்பூதியத் தொந்தரவால்
அல்லலுறும் தொழிலாளி போல
தூவானமும் மண்ணைத் தொட்டுக் 
கூடப் பார்க்கவில்லை
மாதக் கணக்காகிவிட்ட
அழுக்குடை வாகனங்கள்
கழுவித் தீர்த்துக்கொள்ள
வானத்தினைப் பிளந்து ஒரு
வழி பிறக்குமென
பார்த்துப் பார்த்து
விழி வீங்கியது தான் மிச்சம்
பள்ளிக்கூடம் போகும் வழக்கம்
பழக்கமாகிக் கொண்டிருந்தாலும்
மழைநாள் லீவுக்குப்
பிள்ளைகள் ஏங்குவது 
முன்னெப்போதைப் போன்றே
இப்போதும் இருக்கிறது
எத்தனை முறை மூழ்கித் திளைத்தாலும் மீண்டும்
வாராத போது வருத்தம்
மேலிடத்தான் செய்கிறது
வந்தால் வேண்டாமென்பதும்
வராவிட்டால் வேண்டுவதும்
அரிதிற் காதல்
செயல்களாக இல்லாமல்
தவறாத முழுநேரப்
பணியென்றே ஆகிவிட்டது 
மழை வரலாம் தான்
ஏற்கனவே நின்ற வழிகளை
நேர்செய்யாமல் மண்மூடி
மறைக்கிற வகையில்
தப்பிக்கப் பார்க்கிறக்
கற்பிதங்கள் மாந்தருள்
குறையாமல் இருப்பதினால்
பொழிவது பிழையாகினும்
அதன் நிலை ஒன்றுதானே
இத்தனை அங்கிங்கெனாத
இடையூறுகளைக் கண்டும்
சளித்துக் கொள்ளாமல்
பெய்யும் மழையினைப்
பேரன்பு என்றல்லாமல்
வேறெப்படிப் போற்றுவது

நடராஜன் பெருமாள்

பிற கவிதைகள்
புரியாத விலகல்

புரியாத விலகல்

ஈரம் காயாத முடிந்த 
கூந்தலில் மல்லிகைப் பூச்சரத்துடன் எனக்குப் பிடித்தப்
புடவையில் வலம் வருவதோடு
சொட்டும் நீரில் நனைந்தப்
புறமுதுகிட்டுப்
போக்குக் காட்டுதல் வேறு
சிலிர்ப்பைக் கூட்டுகிறது
பிணக்குகள் அவளுக்குப்
பிடிக்காதென்று தெரியும்
ஆனாலும்
காலையிலிருந்து
அவள் இன்னும்
என்னிடம் பேசவில்லை
கண் விழித்துப்
புன்னகைத்தேன் கண்டுகொள்ளவேயில்லை
தட்டுப்பட சிக்குவாளென
ஒதுங்காமல் நின்றேன்
விலகி நடக்கிறாள்
எட்டி எடுப்பது போல
அவள்மீது மோத வந்தேன்
லாவகமாக நழுவுகிறாள்
நாக்கு ருசி காபி விரல்பட
கிடைக்குமென எதிர்பார்த்தேன்
தூர வைத்துத் தொடுதல்
தவிர்க்கப்பட்டு விட்டது
சிந்தனை நரம்பு செல்கள்
சூடாகிக் காரணம் தேடியது
எளிதில் பிடிபடவில்லை
கையலம்பும் சாக்கில்
கையோடு கை 
பட்டுவிடாதா பரபரத்தால்
அவளது கை சட்டென வாய்துடைத்துப் பின்
கைத்துடைக்கிற சாக்கில்
முந்தானைக்குள்
முழுகிவிட்டது
குளித்து முடித்தும் 
தொடுதல் குறையெனும்
தோசம் நீங்கவில்லை
ஏனிப்படி இவள் மனமின்று
கல்லாய் சமைந்து விட்டது
யாதொன்றும் புரியாமல்
ஏக்கப் பெருமூச்சுடன் 
திரும்புகையில்
கன்னத்தில் முழுதாக 
முத்தமிட்டு வாயில்
இனிப்பூட்டி நெற்றியில்
முத்தமிட்டுச் சொல்கிறாள்
" இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ".

நடராஜன் பெருமாள்

பிற கவிதைகள்
வாடா தம்பி வீட்டுக்குப் போலாம்

வாடா தம்பி வீட்டுக்குப் போலாம் 

என்ன குழம்பாம்
சிக்கனாம்
நாட்டுக்கோழி
இல்லையே

பிரச்சனை
என்னன்னு
தெரியலை
ஊரைவிட்டு
கிளம்பணுமாம்

பாத்துக்
காலை வை
முள்ளு
இருக்கப்
போகுது

ஒன்னுக்கு
வந்தா சொல்லு
சட்டையை
ஈரமாக்காதே

பொடிப்பயல்ன்னு
சொல்றாங்களே
அப்டின்னா என்ன 

காலைலேர்ந்து 
பசி ஒருத்தனும்
ஒருவாய்ச்சோறு
தரமாட்றான்

என்ன 
அப்பனுக்கும்
ஆத்தாளுக்கும்
மறுபடியும்
சண்டையா

ஒழுகாதக்
கூரை
நமக்கு
எப்போ 
வாய்க்கும்

வழுக்கி
விழுந்தான்
சிரிச்சேன்
கன்னத்துல
அடிக்கிறான்

பக்கத்துல 
பாப்பாவுக்கு
துணியேயில்ல
சோறு கொடுத்தேன்

என்னமோ
காசுன்றாங்க
வாழ்க்கைன்றாங்க
மிருகமாட்டம்
நடந்துக்குறாங்க

குறும்பில
குறும்பாப் 
போட்டி
நீயும் வா

துண்டைக்
காணோம்
துணியக்
காணோம்
நாமளா

உலகம்
உருண்டையாமே
நாம எப்படி
நடக்கிறதாம்

பள்ளிக்கூடத்திற்குக்
கூப்பிடாத படிச்சு
காந்தியே
செத்துட்டாராமே

ஒரே ஏக்கமா
இருக்குப்பா
அம்மாவ
எப்போ
பார்ப்போம்

மீன்குழம்பு
வாசனை
நம்மள்தா
பக்கத்து வீடா

தோடா
பெரிய மனுஷி
வந்துட்டா
சோதரான்னுட்டு

பகல்ல
நட்சத்திரம்
எல்லாம்
எங்கே
தங்கும்

பூவும் 
பொன்னும்
ஒன்னு 
கேட்காம
பறிக்கக்கூடாது

காலையில
குடிச்ச காடி
பைப்புத்தண்ணி
கிடைக்குமா

பசிக்குத் 
தின்னா
அதுக்குப் பேர்
திருட்டாக்கா

இளமையில்
வறுமை கொடிது
பிஞ்சு வயதில்

நாமெல்லாம்
தேவையில்லைன்னா
இந்தப் பூமியேன்
பொறந்துச்சு

ஆடுமாடு
ஒன்னாயிருக்கு
மனுசன் மட்டும்
ஏனிவ்வாறு

பயப்படாதக்கா
நண்பன்
அரை பிஸ்கோத்து
கொடுத்தான்

ரொம்ப 
தூரமாம்
கையப்
பிடிச்சுக்கோ
போய்டலாம்

-

நடராஜன் பெருமாள்

பிற கவிதைகள்
பேசும் நகரம்

பேசும் நாடு நகரங்கள்


நாடு நகரங்கள் பேசுமா
கேள்வியை விடுத்து
அவை மனம்விட்டுப்
பேசுவதற்கு ஒரு
வாய்ப்பளிக்க வேண்டும்
நட்டாற்றில் விட்டு விட்டீரேயென
அவற்றைப் புலம்ப விடுதல் 
அத்தனை உத்தமம் ஆகாது
அவற்றின் விசும்பல்களைக்
கேட்பதற்கு சமையத்தில்
சிறப்பு காதுகள் தேவைப்படுகிறது
என்னதான் ஆச்சு இந்த 
மக்களுக்கு ஏன் இத்தனைக்
கத்தியும் இவர்கள் செவியில்
ஏறவேயில்லை என்று 
அவை பொருமுகின்றன
அதன் விளைவாகவே
அவ்வப்போது
மண்ணில்
சூடுபறக்கிறது
இவற்றினை வெற்றுப் பூலோக
மாற்றங்களாக மட்டும்
எடுத்துக்கொண்டு
அனைத்திற்கும் காரணம்
உலகமயமாக்கல் தானென
மக்கள் பொத்தாம் பொதுவாகப்
பேசி தம் உண்டுறைதல்
கடமையாற்றிப்
போய்க்கொண்டேயிருக்கின்றனர்
நாடு பேசுகிறதென்றால்
மக்கள் பேசுகின்றனர்
என்றதோர் அர்த்தம்
இப்போது எடுபடுவதில்லை
மக்கள் மக்களாக இருப்பது
அரிதாகிவிட்டபடியால்
வேறு வழியின்றி நாடே
வித விதமாகப் பேசிப் பார்க்கிறது
சூறாவளியை சுழற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது
கொதிக்கும் சூரியனைக்
கொஞ்சி அனுப்பிப் பார்க்கிறது
வயல் வரப்புகளைக்
காயப்போட்டுப் பார்க்கிறது
அதற்கும் மசியவில்லையென்றால்
வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி
தள்ளாட்டம் கொள்ளச் செய்கிறது
நாலே நாலு நாட்கள் அமைதியாக 
இருந்துவிட்டு எனக்கென்ன 
வந்ததென்று மக்கள் எங்கோ
வேக வேகமாகப்
போய்க்கொண்டிருக்கிறார்கள்
காற்றை மாசாக்கும் கடுஞ்செயல்
ஒன்றினையும் ஏவிப் பார்த்தது
மிக மிகத் தாமதமாகத்தான்
நாடு நகரங்களுக்கு 
ஒன்று புரிந்தது
மக்களின் மனப்போக்கினைக்
கண்டுகொண்ட பின்பு
நாடும் நகரங்களும் ஒரு
உறுதிமொழியை 
எடுத்துக் கொண்டன
எது நடந்தாலும் அது
தனக்கானதில்லை என்ற 
உறுதிமொழியே அது
பின்னர் நடந்தவை நடப்பவை
எவற்றிற்கும் புலம்புவது
பேசுவது விடுத்து
நாடும் நகரங்களும்
தற்காலங்களில் மிகுந்த அமைதியில் திளைக்கின்றன.

-

நடராஜன் பெருமாள்

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!