Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு பரிசு

வகைகள் : சிறுகதைகள்/ இரா. சிதம்பரம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

பரிசு

பரிசு

பிருதிவிராஜாவின் அரண்மனைக் கோபுரங்கள் முன்னைவிடப் பெருமையுடன் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றன. அதற்குக் காரணம் இருந்தது, உலகத்திலே சிறந்த அழகு ராணி என்று போற்றி புகழப்பட்ட சம்யுக்தை தங்கள் சொந்த ராணியாக நிரந்தரமாக அங்கே வந்து விட்டதில் அவைகளுக்கு பெருமை ஏற்படுத்தானே செய்யும்.

புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல், பிருதிவிராஜன் சம்யுக்தையை சாகசமாகக் கைப்பற்றிக் கொண்டு வந்த வீரச் செய்கையை ஒட்டி நடந்த விறுவிறுப்பான சம்பவங்களுக்குப் பிறகு இப்பொழுது தலைநகரிலும் அரண்மனையிலும் எங்கும் அமைதி நிலவியது.

அரண்மனை அந்தப்புரத்தில் பயந்து பயந்து நடந்த பணிப் பெண்களின் பாதச் சிலம்பின் ஒலி அங்கு நிலவி இருந்த நிசப்தத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டியது. மனம் கமழும் மல்லிகை மலரை அள்ளிப் பரப்பி அலங்கரித்து இருந்த அழகிய தந்தக்கட்டிலின் அருகே விளக்கு ஒன்று ஏந்தி நின்ற வெண்கலச் சிலையின் முன்பாகத் தங்கச் சிலை ஒன்று தலை குனிந்து நின்றது.

“சம்யுக்தை” என்று அழைத்த குரல் கேட்டுத் தங்கச் சிலை தலை நிமிர்ந்தது.

“தேவியின் கருணைக்காக இத்தனை நேரம் காத்து நிற்கும் இந்தப் பக்தனைப் பார்க்க ஒட்டாது அப்படி தங்கள் கவனத்தைக் கவர்ந்தது எதுவோ” என்று பிருதிவி ராஜாவின் வார்த்தைகள் கொவ்வை இதழ்களில் ஒரு சிறு நகையைக் கொண்டு வந்தது.

அவள் பேசினாள், “சுவாமி மன்னிக்க வேண்டும் இதோ நிற்கும் இந்த வெண்கல சிலையின் அற்புத சிற்ப வேலைப்பாடு என்னை அப்படிக் கவர்ந்து விட்டது. தாங்கள் வந்து என் பின்னால் நின்றதைக் கூட கவனிக்காமல் இருந்து விட்டேன்.”

பிருதிவிராஜன் “ஆம் சம்யுக்தா, நீ அப்படி நின்றது ஒன்றும் ஆச்சரியம் இல்லை நானும் எத்தனையோ தடவைகளில் இச்சிலையின் கலை அழகில் ஈடுபட்டு என்னை மறைந்து நின்றிருக்கிறேன். மதுரையிலிருந்து வந்த மிகக் கைதேர்ந்த சிற்பி ஒருவனால் வார்த்தெடுக்கப்பட்டது இது.”

சம்யுக்தா “ஆனால் சுவாமி, நான் அந்தச் சிற்பியின் திறமையை அப்படியே ஒப்புக் கொள்ள முடியவில்லை!”

பிருத்விராஜன் “ஏன்? இந்தச் சிலை அழகாகத் தோன்றவில்லை உனக்கு.”

சம்யுக்தா “அழகு இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அழகும் ஒரு அளவு கடந்து விட்டது. சிற்பியின் கற்பனையிலே உதித்த இந்தப் பெண்ணை போல் சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு சௌந்தர்யவதி இதுவரை இந்த உலகத்திலேயே தோன்றியிருக்க முடியாது. இனிமேலும் தோன்றப் போவதில்லை. இல்லாத ஒன்றை கனவு கண்டு நிர்மாணித்துள்ள சிற்பியின் மிகையான கற்பனை என்றுதான் இதைச் சொல்லுவேன்.”

பிருதிவிராஜன் “சம்யுக்தா! உன் தந்தையின் அரண்மனையில் பெரிய கண்ணாடி எதுவும் இல்லையா! அல்லது நீதான் உன் உருவத்தைக் கண்ணாடியில் சரியாகப் பார்த்துக் கொண்டதே இல்லையா?”

சம்யுக்தா “அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!”

பிருதிவிராஜன் “சம்பந்தம் இருக்கிறது சம்யுக்தா. சம்பந்தம் இருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் இச்சிலையை பொதுத்து பிரம்மசிருஷ்டி வென்றுவிட்டதே என்று நான் நினைத்து ஆச்சரியப்படுவேன். ஆனால் அவ்விரண்டையும் அருகருகே வைத்து பரிசீலனை செய்யும் பாக்கியம் இதுவரையில் கிடைக்கவில்லை. அது சற்று முன்புதான் எனக்குக் கிடைத்தது. இப்பொழுது பிரம்மசிருஷ்டியே வென்று விட்டது. என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை.”

தன்னுடைய பேரழகையே குறிப்பிட்டு பேசுகிறான். பிருதிவிராஜன். என்பதை உணர்ந்து கொண்ட சம்யுக்தையின் முழுவெண் திங்களை ஒத்த முகராவிந்தத்தில் மகிழ்ச்சியும் நாணமும் கலந்த மோகனப்புன்னகை ஒன்று அரும்பி நின்ற அவளுடைய கடைத்தெடுத்த அழகிய கரங்கள் பிருதிவியின் அகன்ற கைக்குள்ளே அகப்பட்டிருந்தன. அருகில் இருந்த கட்டிலின் மீது அமர்ந்தான் அவன். அவளையும் பக்கத்தில் அமர்த்தினான்.

திடீரென்று எதையும் ஞாபகப்படுத்திக் கொண்ட சம்யுக்தை “தேவகுமார் என்ற சிற்பி தங்களிடத்தில் இருந்ததுண்டா என்று கேட்டாள்.”

“ஆம் இருந்ததுண்டு. அவனை உனக்கு எப்படித்தெரியும்” என்று கேட்டான் பிருதிவிராஜன்.”

சம்யுக்தையின் மனக்கண்ணில் அன்று நடந்த சம்பவம் தென்படலாயிற்று.

கண்னோசி நாட்டு மன்னன் ஜயச்சந்திரன் தன் மகள் சம்யுக்தையின் சுயம்வரத்திற்கு நாள் குறிப்பிட்டான். மன்னர்களுக்கெல்லாம் ஓலை அனுப்பப்பட்டன. பிருத்விராஜனுக்கு அத்தகைய அழைப்பு எதுவும் அனுப்பாததோடு சுயம்வர மண்டபத்தின் வாசலில் காப்பாளனாக பிருதிவியின் சிலையை வைத்து அவனை அவமானப்படுத்த எண்ணினான். பிருத்வி ராஜனை தான் நேரில் பார்த்திருப்பதாகக் கூறிய தேவகுமார் என்ற சிற்பியை அந்தச் சிலையை செய்து முடிக்கும் படி கட்டளையிட்டான் ஜயச்சந்திரன். காரியங்கள் துரிதமாய் நடந்தன.

இவ்விஷயங்கள் சம்யுக்தையின் காதுக்கும் எட்டின. அவள் இதய அந்தரங்கத்தை வாழ் கொண்டு அறுத்தது. எவனுடைய வீர சௌந்தர்யத்தைக் கேள்விப்பட்டு தன் மனத்தைப் பறிகொடுத்தாளோ அவனை அடைய முடியாதோ என்று ஏங்கினாள். யாரிடமும் சொல்ல முடியாது தனிமையில் கண்ணீர் வடித்தாள்.

ஒருநாள் சுயம்வர மண்டபத்தின் அலங்காரத்தைப் பார்க்க ஆசைப்படுவதாகத் தன் தோழியர் இருவருடன் அங்கு வந்தாள். ஆனால் அவள் உள்ளத்தின் ஆழமான பகுதியில் அங்கு அமைக்கப்பட்டு வரும் பிருதிவிராஜனின் சிலையையும் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததோ என்னவோ, நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. மண்டபத்தின் அலங்காரத்தைப் பார்த்து முடித்துவிட்டு வாயில் புறத்தே இருந்த பிருதிவிராஜனின் சிலை அருகிலே வந்தாள் சம்யுக்தை.

சிலை அமைப்பதிலே தன் சிந்தனையைச் செலுத்திக்கொண்டிருந்த சிற்பி பெண்களின் மெட்டி குலுங்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான். அங்கு வந்து நின்றவள் அரசகுமாரி என்பதை அறிந்து கொண்டு அவசரமாக எழுந்து, வணங்கி ஒதுங்கி மரியாதையாக நின்றான்.

சம்யுக்தை பிருதிவிராஜனின் சிலையைப் பார்த்தாள். எந்த மகாவீரனை மானசீகமாக வடித்து, தன் உள்ளக் கோவிலில் அவன் உருவத்தை பிரதிஷ்டை செய்து பூசித்து வருகிறாளோ, அவனுடைய உருவச் சிலையை இப்படி கேவலப்படுத்தி வாயில் காப்பானாக நிறுத்தி மற்ற அரசர்கள் முன்னிலையில் அவமானப்படுத்த எண்ணி இருக்கும் தன் தந்தையின் செயலைக் கண்டு அவள் இருதயம் வேதனையால் வெம்பியது. வெடித்து விடும் போல் இருந்தது ஆனால் அவள் மன வேதனையை எல்லாம் இத்தகைய சிலை செய்ய சம்மதித்து வந்துள்ள சிற்பியின் மீது கடுங்கோபமாக மாறியது.

சிலையின் மீது கண் பார்வையைச் செலுத்தியபடியே, “சிற்பியாரே, நீர் இதற்கு முன் பிருதிவிராஜனைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டாள் சம்யுக்தையின் குரலில் கடுமை கலந்திருந்தது.

சிற்பி “ஆம் தேவி! பார்த்திருக்கிறேன்! இன்னும் அவருடைய அரசாங்க சிற்பியாகக் கூட சிறிது காலம் இருந்திருக்கிறேன்.”

சம்யுக்தா “அப்படியானால் பிருதிவிராஜன் கலாரசனையற்றவரா?”

சிற்பி “ஆம் தேவி! கலை என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடியவர்; அது மட்டுமல்ல, அவரைப் பெரிய வீரர் என்று எல்லோரும் புகழ்வது கூட பொய்ப் பிரச்சாரத்தினால்தான் உண்மையைச் சொல்லப்போனால் பிருத்விராஜனைப் போன்ற ஒரு கோழை இருப்பது வீர ரஜபுத்திர குலத்துக்கே பெருத்த அவமானம் ஆகும்.”

“நிறுத்து உன் பேச்சை” என்ற ஆங்காரம் கலந்த குரல் சம்யுக்தையிடமிருந்து வெளிப்பட்டது. மறுகணம் அவள் ஆடையிலே சொருகி இருந்த கட்டாரி சிற்பியை நோக்கிப் பாய்ந்தது. சிற்பி தன் மார்பிலே பாயவிருந்த அந்தக் கத்தியை தன் கையாலே தடுத்துவிட்டான். அப்படியும் சிற்பியின் கையிலே ஆழமாக கத்தி பாய்ந்து, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இன்னும் அடிபட்ட பெண் புலி போல் சீறிக்கொண்டு நின்ற சம்யுக்தையைத் தோழிகள் பிடித்து நிறுத்தி சமாதானப்படுத்தினார்கள்.

இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்காத சிற்பி, கதிகலங்கிப் போனான். நடுநடுங்கிக் கொண்டே பேசினான். “தேவி மன்னிக்க வேண்டும், பிருதிவி ராஜனிடத்தில் தாங்கள் தந்தை காட்டும் துவேஷத்தை நினைத்து தங்களுடைய மனநிலையும் அத்தகையதாய் இருக்கக்கூடும் என்று கருதியே சில வார்த்தைகளைப் பேசி விட்டேன். மேலும் தங்களுடைய உள்ளக் கிடக்கையை ஒருவாறு உணர்ந்து கொண்ட பிறகும் தங்களுக்கு மனக்கசப்பு உண்டாக்கக்கூடிய காரியத்தை இன்னமும் செய்ய விரும்பவில்லை. எனக்கு விடை கொடுங்கள் போய்விடுகிறேன்” என்றான்.

“ஆம், இப்பொழுது இங்கிருந்து கிளம்பி உன் உயிரைக் காப்பாற்றிக் கொள். யாருக்கும் இங்கு நடந்தது தெரியக்கூடாது. இந்தக் கண்னோசி நாட்டிலே நீ மீண்டும் காலடி வைக்காதே, ஜாக்கிரதை!” என்று சம்யுத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போதே தன் மூட்டையைக் கட்டிக்கொண்டு பெரிய கும்பிடாய்ப் போட்டுவிட்டு கிளம்பினான் சிற்பி.

இந்தச் சம்பவத்தைத் தன் தந்தைக்குத் தெரியவிடாதபடி தன் தோழிகளை எச்சரித்து மறைத்து விட்டாள் சம்யுக்தை.

ஜயச்சந்திரனுக்கு மறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சரித்திரத்தின் ஏடுகளில் எழுதப்படாமல் இது என்றென்றைக்கும் மறைத்து மறந்து போகப்பட்டது.

என்ன காரணத்தினாலோ சிற்பி சிலையை முடிக்காமல் போய்விட்டான், என்று ஜயச்சந்திரன் வேறு ஒரு சிற்பியைக் கொண்டு அச்சிலையைப் பூர்த்தி செய்து வைத்தான்.

“என்ன சம்யுக்தா மௌனமாக இருக்கின்றாயே. தேவகுமார் என்ற சிற்பியைப் பற்றிக் கேட்டாயே அவன் இன்னும் இங்கேதான் இருக்கிறான்.” என்ற பிரிதிவிராஜனின் வார்த்தைகள் சம்யுத்தையை, அவள் சிந்தனை ஓட்டத்தை தடைபடுத்தி திடுக்கிட வைத்தது.

சம்யுக்தா “என்ன ஆச்சரியம்! அந்தச் சிற்பி மீண்டும் இங்கே வந்து விட்டானா?”

பிருவிராஜன் “வேறு எங்கு போவான் அவனை கன்னோசி நாட்டிற்கு நானே தான் அனுப்பி வைத்தேன். போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறான்”

சம்யுக்தா “அவனை எதற்காக அங்கே அனுப்பினீர்கள்?”

பிருதிவிராஜன் “உருவச்சிலை செய்வது மட்டுமல்ல, மற்றவர்களின் உள்ளத்தின் நிலையையும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவன் அந்தச் சிற்பி. அதற்காகவே அவனை அங்கு அனுப்பி இருந்தேன்.”

சம்யுக்தா “யாருடைய உள்ளத்தை அறிந்து வந்து உங்களிடம் என்ன சொன்னான்.”

பிருதிவிராஜன் “அவன் என்னவோ சொன்னான். அவன் சொல்லாமலா இவ்வளவும் நடந்தது. இந்த ஆஜ்மீர் நாட்டு அரண்மனையில் மூளையில் எங்கேயோ கிடந்த கட்டிலுக்கு உலகத்தில் சிறந்த அழகியாகிய சம்யுக்தா தேவியை தாங்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.”

சம்யுக்தா “நீங்கள் அனுப்பிய சிற்பியாயிருந்தும் அவன் ஏன் என்னிடத்தில் தங்களைப் பற்றி இழிவாகப் பேசினான். உங்களைக் கலை ரசனை அற்றவர் என்றும், வீரமற்ற கோழை என்றும் ஏன் தூசித்தான்?”

பிருதிவிராஜன் “சம்யுக்தா தேவியின் முன்பு பிருத்திவிராஜனைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்பதை அவன் அறிந்து இருக்க மாட்டான் அப்பொழுது.”

சம்யுக்தா “ஆஹா! என்ன எஜமான விசுவாசம். காரியம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய விதமாக நடந்து கொண்டானா அந்தச் சிற்பி. அவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சுவாமி. நான் ஒன்று செய்ய விரும்புகிறேன், அதற்குத் தங்கள் அனுமதி கோருகிறேன்.”

பிருதிவிராஜன் “அது என்ன என்பதைச் சொன்னால் அனுமதி கொடுக்கலாமா என்பதைப் பார்க்கலாம்.”

சம்யுக்தா “நான் இன்று வாழும் இன்ப வாழ்வில் நம்மை இணைத்து வைப்பதற்குப் பெரிதும் காரணமாய் இருந்த அந்தச் சிற்பிக்கு தகுந்த பரிசளிக்க விரும்புகிறேன்.”

பிருதிவிராஜன் “நீ பரிசளிப்பதைப் பற்றி எனக்கு சந்தோசம் தான். ஆனால் ஒரு நிபந்தனை அந்த பரிசை முதலில் நீ என்னிடம் கொடுக்க வேண்டும்.”

சம்யுக்தா “ஏன்? நீங்கள் தானே அவனை என்னிடத்தில் அனுப்பினீர்கள் என்பதற்காகவா?”

பிருத்விராஜன் “அது மட்டுமல்ல. எந்தக் கை அந்தக் கத்தி வீச்சை ஏற்றுக்கொண்டதோ அதே கை தானே இன்று இந்த பரிசையும் ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையது.”

இதைச் சொல்லிக் கொண்டே தனது இடது கரத்தை சம்யுக்தை எதிரில் நீட்டினான் பிருத்விராஜன். அவன் உள்ளங்கையிலே கத்தி பாய்ந்திருந்த ஆழமான புண் இப்பொழுது ஆறியிருந்தது. ஆனால் தழும்பு இன்னும் மாறவில்லை. சம்யுத்தை ஆச்சரியமும் காதலும் நிறைந்த பார்வையோடு பிருத்விராஜனின் முகத்தை நிமிர்ந்து நோக்கினாள்

பரிசு -ஆடியோ வடிவில் செண்பக சோலையின் ஓசை சித்திரம். செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம் 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!