Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு வாழ்விக்க வந்தவள்

வகைகள் : சிறுகதைகள்/ இரா. சிதம்பரம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

வாழ்விக்க வந்தவள்

வாழ்விக்க வந்தவள்

 

ஆழ்ந்த நித்திரையிலிருந்து கண் விழித்துப் பார்த்தேன். படுக்கையில் பாஸ்கரனை காணவில்லை. இந்த நள்ளிரவில் தனிமையில் சொல்லாமல் கூட எங்கே எதற்காக போயிருப்பான் என்று என் சிந்தனை என்னென்னவோ கோடி ஆரம்பித்தது விடியதற்கு சற்று முன் திரும்பி வந்தான்.

“எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டேன் ஏதோ சொல்லி மழுப்பிவிட்டான்.

இப்படி அன்று மட்டுமல்ல, அடிக்கடி அவன் வெளியே போய் வந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்தைப் புதிதாக, பொருத்தம் இல்லாததாக, கற்பனை செய்து சொல்லி வந்தான். அவனுடைய இதய அந்தரங்கத்தில் எதையோ அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் நான் அறிந்து கொள்ளாமல் இல்லை. கடைசியில் அவற்றையும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நான் சந்தேகித்து கொண்டிருந்தபடி அந்த பங்கஜாவின் வீட்டிற்குப் போய் வந்து கொண்டிருக்கிறான் என்பதும் தெரிந்து விட்டது.

இந்தப் பங்கஜா என்பவள் அந்தக் காலத்தில் பெங்களூருவில் பிரபலமாய் விளங்கிய மோகனா என்ற தாசியின் மகள். ஆனால், இந்த பங்கஜா படித்தவள், கண்ணியமாய், ஒழுங்காய் வாழ்க்கை நடத்துகிறவள். என்றெல்லாம் யாரோ சொல்ல கேள்விப்பட்டிருந்தேன். கடைசியில் அவள் தாசி குணத்தை காட்டி விட்டாள் பாஸ்கரனை மயக்கி இழுத்துக்கொண்டு விட்டாள்.

பாஸ்கரனுக்குச் சொந்த ஊர் மானாமதுரை தான். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடு. பாஸ்கரனைப் பார்த்த யாரும் இவன் யோக்கியவன் அறிவாளி என்ற முடிவுக்கு தான் வர முடியும். அப்படியே நினைத்து தான் நீலமேகம் பிள்ளையும் தனது மகள் கல்யாணிக்குத் தகுந்த கணவன் பாஸ்கரனே என்று தெரிந்தெடுத்தார். தங்கள் அருமை மகளையும், பெரிய செல்வத்தையும், பாஸ்கரன் கையில் ஒப்படைத்து விட்டு, நீலமேகம் பிள்ளையும், அவர் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக நிம்மதியாக் கண்ணை மூடினார்கள்.

பாஸ்கரன் கல்யாணி தாம்பத்ய வாழ்க்கை முதலில் ஆனந்தமாகவும், அமைதியாகவும் அமைந்திருந்தது. காலப்போக்கில் கல்யாணி தன்னைச் சற்று அலட்சியமாகக் கருதுகிறாள் என்று பாஸ்கரன் மனதில் பட்டது. தானும் சம்பாதிக்க வேண்டும் மனைவியின் கையை எதிர்பார்த்து வாழக் கூடாது என்று நினைத்தான். இந்த நிலைமையில் ஏற்பட்ட ஏதோ ஒரு சிறு பூசல் காரணமாக பாஸ்கரன் அங்கிருந்து கோபமாய் கிளம்பி விட்டான்.

நான் அப்பொழுது பெங்களூரில் இருந்ததால் அங்கே வந்து சேர்ந்தான். நானே சொல்லித்தான் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தேன். அதிலிருந்து இருவரும் ஒரே அறையில் வசித்து வந்தோம், தன் திறமையாலும் கண்ணியமான நடத்தையாலும், பாஸ்கரன் சீக்கிரமே நல்ல பதவிக்கு வந்து விட்டான். அவனுக்கு சம்பள உயர்வு உத்தியோக உயர்வும் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்தன. ஆனால் அவனுடைய இந்த நடத்தை?

மறுநாள் பாஸ்கரன் இடத்தில் பலமாகச் சண்டை போட்டேன். மௌனமாக தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான். அன்று அப்படி இருந்தானே தவிர மாசுபடுந்துவிட்ட அவன் நடவடிக்கையை மாற்றிக் கொண்டதாக இல்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. என் முணுமுணுப்பும் அதிகமாகிக் கொண்டே வந்தது. என்னுடைய தொல்லை சகிக்க முடியாமலோ என்னவோ என் அறையைக் காலி செய்து கொண்டே போய் விட்டான் ஒருநாள். எங்கே போனான்? அங்கே தான் அவளுடைய வீட்டிலே போய் நிரந்தரமாக ஐக்கியமாகி விட்டான்.

இதற்கு மேலும் பிறர் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று நானும் ஒதுங்கி விட்டேன். எங்கேயாவது சந்திக்க நேர்ந்தாலும் பாஸ்கரன் என்னைப் பார்க்காதது போல் போய் விடுவான், நானும் நமக்கென வந்தது என்று நிறுவி விடுவேன்.

நாம் நினைக்கிற படி என்ன நடக்கிறது? லீவில் எங்கள் சொந்த ஊர் போயிருந்தேன். அப்பொழுது அந்தப் பெண் கல்யாணி என்னிடத்தில் வந்து முறையிட்டால் நான் தாய் தந்தை இழந்துவிட்டால் அனாதை அண்ணன் தம்பிகளுடன் பிறந்து அறியாத அபாகியவதி உங்களையே என் உடன்பிறப்பாக கருதி சொல்லுகிறேன் எப்படியாவது அவரைக் கொண்டு வந்து சேருங்கள்.

அவர் சம்பாதிக்க வேண்டும் என்பது என்ன இருப்பதை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனையோ தலைமுறை நிம்மதியாக வாழலாமே அவரை அந்த மோகினி பிசாசின் இரும்பு பிடியிலிருந்து விடுவித்துக் கொடுங்கள் என்று கெஞ்சினாள் முறையிட்டாள் அழுதழுது கண்ணீரை சிந்தினாள்.

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது என்றிருந்த என் மனோதிடம் எல்லாம் அந்த பெண்ணின் கண்ணீர் முன் கரைந்து விட்டது எப்படியும் பாஸ்கரனை கொண்டு வந்து சேர்ப்பிக்கிறேன் என்று கல்யாணியிடம் வாக்குறுதி அளித்துவிட்டு நான் பெங்களூரு வந்தேன்.

பாஸ்கரனை சந்தித்து தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவனுடன் பேசிப் பார்த்தேன் நீயே சதம் என்று நம்பி வந்த ஒரு பேதைப் பெண் நற்கறியாய் நிற்கிறாள் கவலையே உருவாக கண்ணீர் வடிக்கிறாள் நீயோ உன்னையும் உன் நிலைமையையும் உன் கடமையை மறந்து இந்த மோகினி மாயாஜாலத்தில் மனதை பறிகொடுத்து நினைத்தபடி தெரிகிறார் கல்யாணியை இப்படி புறக்கணித்து விட்டது பெரிய தவறு என்று ஏன் உன் புத்தியில் படவில்லை என்று சற்று கோபமாகவே கேட்டேன்.

பாஸ்கரன் அமைதியாகவே பதில் சொன்னான், ”மனைவி என்பவள் உற்றார் உறவினர்களால் இவள்தான் உன் கணவன் என்று சுட்டிக்காட்டிய பிறகு சந்தர்ப்பத்தினாலோ நிர்பந்தத்தினாலோ அன்பு செலுத்துகிறாள். நேசிக்கிறாள் ஆனால் அவள் என்னை முன் பின் அறியாதவள் இந்த மாபெரும் மனித வெள்ளத்தின் மத்தியில் என்னை தேடிப்பிடித்து என் காலடியில் தன்னையும் தன் திரண்ட சொத்தையும் அர்ப்பணித்திருக்கிறாள். என்னை தெய்வமாக போதிக்கிறாள் இவளை பொய் என்று எப்படி நான் புறக்கணிக்க முடியும், மாயை என்று எப்படி நான் மறக்க முடியும்” என்று கேட்டான்.

அவனுக்கு சரியான பதில் என்னால் அந்த சமயம் சொல்ல முடியவில்லை கோபம் தான் வந்தது. மாதம் ஒன்று சென்றிருக்கும் பாஸ்கரன் நோய் வாய்ப்பட்டு படுத்து இருக்கிறான் என்ற தகவல் வந்தது பார்க்கப் போயிருந்தேன் வாடிய முகத்துடன் வரவேற்றான் பாஸ்கரன். ஆஸ்பத்திரிக்கு கூட அனுப்பாமல் தன் வீட்டிலேயே வைத்து கவனித்து வந்தாள் பங்கஜம். அது மட்டுமல்ல வேலைக்காரர்கள் இருந்தும் கூட பாஸ்கரனுக்கு படுக்கை தட்டி போடுவது வேளா வேளைக்கு மருந்து கொடுப்பது முதலிய வேலைகளையும் பங்கஜமே கவனித்து வந்தாள். 

அவள் முகத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள மனைவிக்கு இருக்க வேண்டிய அத்தனை அக்கறையும் பொறுப்பும் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். பாஸ்கரன் என்னை பார்த்தான் அந்தப் பார்வையில் ‘இத்தகைய அன்புடன் என்னை கவனித்துக் கொள்ளும் இவளை பொய் வேஷம் போடுகிறாள் என்றெல்லாம் சொன்னாயே’ என்ற கேள்வி இருந்தது.

அங்கிருந்த சூழ்நிலையில் உடம்பை கவனித்துக் கொள் என்று சொல்வதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை இத்தகைய அன்பும் அன்யோன்யமாக இருக்கும் இவர்களை பிரித்து விட நாம் முற்படுவது பெரிய தவறு என்று நினைத்துக் கொண்டேன். அதைவிட பெரிய தவறு கல்யாணி இடம் பாஸ்கரனை கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்குறுதி அளித்தது! என்று என்னையே கடிந்து கொண்டேன்.

திடீரென்று பாஸ்கரன் ஒருநாள் என் அறைக்கு வந்தான் அவன் முகம் பார்ப்பதற்கே பயமாய் இருந்தது நான் என்ன விஷயம் என்று கேட்பதற்குள் அவனே சொல்லிவிட்டான் “பங்கஜா எனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு யாருடனோ ஓடிவிட்டாள்” என்றான். பாஸ்கரன் இல்லாத பொழுது அடிக்கடி ஒரு வடநாட்டுக்காரன் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் அவனுடனே பங்கஜாவும் வடநாட்டுக்கு போய் விட்டதாகவும் தெரிய வந்தது. இந்த விஷயங்களை எல்லாம் அங்குள்ள வேலைக்காரர்களை விசாரித்து தெரிந்து கொண்டு வந்திருந்தான் பாஸ்கரன்.

எனக்கு உண்மையிலேயே இந்த தகவல் மகிழ்ச்சி அளித்தது. “இன்று உன்னை பிடித்த சனியன் நீங்கிட்ரு கிளம்பு” என்று பாஸ்கரனையும் அழைத்துக் கொண்டு மானாமதுரை வந்து சேர்ந்தேன். கல்யாணி இடத்தில் “அம்மா உனக்கு வாக்குறுதி அளித்தபடி உன் கணவனை கொண்டு வந்து சேர்த்து விட்டேன், இனிமேல் அவனை அந்த தூணிலே கட்டிப் போட்டு வை”.என்றேன்.

கல்யாணியின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் சிரிப்பை பார்த்தேன். அந்த சிரிப்பிலே நன்றியறிதல் நிறைந்திருந்தது சிறிது நேரம் கழித்து கல்யாணி நான் தனிமையில் இருக்கும்போது என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்தாள். அக்கடிதம் பங்கஜவால் கல்யாணிக்கு எழுதப்பட்டிருந்தது.

“சகோதரி கல்யாணிக்கு,

உன் இன்ப வாழ்விலே எங்கிருந்தோ வந்து துன்ப நிழல் படிய வைத்து துயரம் கொடுத்த ஒரு பாவி என்று என்னை நீ நினைத்திருக்கும் பொழுது உனக்கே நான் கடிதம் எழுத துணிந்தது குறித்து நீ ஆச்சரியமும் அடையலாம், ஆனாலும் அப்படி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே எழுதுகிறேன்.

நான் பலருடனே வாழ்ந்து பழக்கம் பெற்றுவிட்ட பரதையர் குலத்தின் வழி வந்தவள் தான் எனினும் கருத்தொருமித்த ஒரு கணவனை கைபிடித்து கண்ணியமாக வாழவே எண்ணி இருந்தேன். மணமாகாதவர் என்று உரைத்த உன் கணவரின் வார்த்தையை நம்பினேன். மனமார காதலித்தேன் நாட்கள் பல சென்ற பிறகே நான் மற்றொரு சகோதரிக்கு உரிய ஸ்தானத்தை அபகரித்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிய முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் எங்களில் ஒருவரை ஒருவர் என்றுமே விட்டுப் பிரிய முடியாதபடி அன்பும் பாசமும் எங்களில் வேரூன்றி வளர்ந்து விட்டன. உரிமையுள்ள மனைவியைப் போல் என் மீது உயிரையே வைத்திருந்தார் உன் கணவர். ஆனாலும் என்றோ தம்பதியை தெய்வம் பிணைந்து வைத்துவிட்ட உங்களை நான் கூட வந்து பிரித்து வைப்பது பெரிய தவறு என்பதை அடிக்கடி என் முழு உணர்வு உணர்த்தியது, உறுத்திக் கொண்டும் இருந்தது.

என் மீது உன் கணவருக்கு ஏற்பட்டிருந்த மாறாத அன்பை எல்லாம் தீராத தேசமாக மாற்றி விடுவது இதற்கு சரியான வழி என்று கண்டு கண்டேன் அதற்காகவே நான் யாரோ ஒரு வடநாட்டுகாரனோடு ஓடி விட்டதாக என் வேலைக்காரர்கள் மூலம் நானே ஒரு கதையை கட்டி விட்டேன். உன் கணவர் மீண்டும் என்னை தேடியும் காண முடியாத தூரத்தில் வடநாட்டுக்கு எங்காவது போய் ஓர் அனாதை ஆசிரமத்தில் என் சொத்து அத்தனையும் ஒப்படைத்துவிட்டு அங்குள்ள அனாதைகளுடன் வாழவே எண்ணி உள்ளேன். என் வாழ்வு இனியது அற்ற நிலை குலைந்ததாலே இந்த நிர்ணயமற்ற பயணத்தை தொடங்குகின்றேன்.

உன் கணவர் என்னை ஒழுக்கம் கெட்டவள் என்று எண்ணிக் கொள்ளட்டும் உண்மை தெரிய வேண்டும் என்பதில்லை. உலகம் என்னை எப்படி நினைத்தாலும் அதை நான் பொருட்படுத்த போவதில்லை நீ மட்டும் என்னை எத்தகவியவள் என்பதை தெரிந்து கொண்டால் அதுவே போதும்.

கல்யாணி! கடந்து போனவற்றை கணவனை கருதி என்னை மன்னித்துவிடு மீண்டும் நீ என்னை என்றென்றும் நினைக்காமல் மறந்து விடு -.பங்கஜா.“

இந்த கடிதத்தை பாஸ்கரிடம் என்றும் காட்ட.வேண்டாம் என்று கல்யாணியை எச்சரித்து விட்டு வந்தேன்.

வருஷம் ஒன்று சென்று மீண்டும் லீவில் ஊர் போயிருந்த போது பாஸ்கரன் வீட்டிற்கு போய் இருந்தேன். கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து என்னை உபசரித்தார்கள். “என்ன உன்னை வெளியே பார்க்க முடியவில்லை” என்று பாஸ்கரனை கேட்டேன். “அது தான் கல்யாணி என்னை கட்டிப் போட்டு விட்டாலே” என்றான் பாஸ்கரன், சிரித்துக்கொண்டேன். கல்யாணியின் முகத்தில் பெருமை பிடிபடவில்லை கையில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.

“என்ன பெயர் வைத்திருக்கிறாய்?” என்றேன்.

“அதைக் கேள், கல்யாணியின் முட்டாள்தனத்தை! அந்த ஒழுக்கம் கெட்டு எங்கோ ஓடிப் போனவள் பெயரை வைத்து பங்கஜா என்று கூப்பிடுகிறாள் என்ன சொல்லியும் கேட்கவில்லை” என்று கத்தினான்.

‘ஐயோ அந்த உத்தமியை ஒழுக்கம் கெட்டவள் என்று சொல்லலாமா’ என்பதே போல் ஒரு அனுதாபம் கலந்த வேதனைக்குறி கல்யாணியின் முகத்தில் படர்ந்து மறைந்தது.

தன் வாழ்க்கை பாதையிலே வந்து கவிழ்ந்து கொண்ட பயங்கர இருளை நீக்கி தன்னை வாழ்விக்க வந்தவள் பங்கஜா என்பதனாலேயே தன் அருமை மகளுக்கு அவள் பெயரை வைத்திருக்கிறாள் என்று மனதில் பட்டது.

“என்ன மௌனமாய் இருக்கிறாய்? வேறு ஏதாவது பெயர் வைத்து விட்டு போ!” என்று பாஸ்கரன் என்னை மீண்டும் தூண்டினான்.

“இல்லை அந்த பெயரே இருக்கட்டும்!” என்று சொல்லி விட்டு வந்தேன்.

 

link- வாழ்விக்க வந்தவள்- ஆடியோ வடிவில்  

செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம் 

 

next post

சதி

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!