Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.

வகைகள் : கட்டுரைகள்/ ஆன்மீகம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கட்டுரைகள்

ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.

ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.

முன்னுரை 

அகவும் மயிலும், கூவும் சேவலும், கூரான வேலும், பொங்கும் கடலும், பொதிகை மலையும், ஒதும் தமிழும் சிந்தையுள் நிறைந்த சித்தர்கள் வழிபடும் சிவமைந்தன் பெயரை, குறை தீர்க்க குன்றம் தோறும் குடியிருக்கும் குமரனையே கூறும்.

 

அறிமுகம்

முருகனின் வரலாறு என்றால் 

  • சிவனின் நெற்றிக்கனில் உதித்த சிவகுமாரன், கங்கையில் தவழ்ந்த காங்கேயன், கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து கார்த்திகேயன் அகிலம் காக்கும் அன்னை பார்வதியால் ஒன்று சேர்ந்த ஸ்கந்தன்.
  • பிரணவ பொருளுக்கு விளக்கம் கூறா பிரமனை சிறைபிடித்து தந்தைக்கே உபதேசம் செய்த தகப்பன் சுவாமி,
  • ஒரு கனிக்காக சிவனிடம் சிற்றம் கொண்டு கயிலை விட்டு மயிலேறி ஞானப்பழமாக நின்ற ஞான பண்டிதன்.
  • தேவரும் மூவரும் அழிக்க முடியாத அசுர குல தலைவன் சூரனை போரிலே வென்ற செந்தூரன். மனம் மாறிய சூரனை மயிலாகவும் சேவல்கொடியாகவும் சேர்த்துக்கொண்ட செந்தில்குமரன்,
  • தெய்வானையை கரம்பிடித்த தேவசேனாதிபதி, குற மகளை மணந்த வள்ளிமணாளன், கடல் போல குறையா கருணை கொண்ட கந்தசாமி.
  • யாமிருக்க பயமேன் என உரைத்து பக்கதரிகளின் குறைதீர்த்த பாலசுப்ரமணியன், குன்று தோறும் குருவாக அமர்ந்த குமரேசன், சித்தர்களுக்கெல்லாம் சித்தன், தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தயாளன் முத்தமிழும் போற்றும் முத்துக்குமரன். 

பகுத்தறிவாளர்களும் அறிவியல் சிந்தனையாளர்களும் கந்தனை கடவுளாக பார்ப்பதில்லை இருப்பினும் குறமகள் வள்ளியை மணந்த குமரனை குறிஞ்சி நில தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர் ‌அவர் முன்னர் ஒரு காலத்தில் இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்து உலகத்துக்காக போர் புரிந்து மக்களை காப்பாற்றி நல்வழி காட்டும் தலைவனாய் இருந்திருப்பார் என ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

ஷண்முகம் (ஆறுமுகம்)  

ஈஸ்வரனின் "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருமுகம்- அதோ முகம் சேர்ந்து நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த அருட்பெரும் ஜோதி ஆறுமுகங்களாக மாறியது.

 

ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்)

ஓகம் என்ற தமிழ் கலையே வடமொழியில் யோகம் என பெயர் பெற்றது. இரண்டாக உள்ள பொருளை ஒன்று சேர்ப்பது ஓகம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும் விஞ்ஞானமே ஆகும். ஓகக் கலையின் நாயகன் முருகனே, மூலாதாரம்-ஓங்காரம், நிராகுலம் (சுவாதிஷ்டானம்)-நிலம், மணிப்பூரகம்-நீர், அனாகதம்-நெருப்பு, விசுத்தி-வளி(காற்று), ஆக்கினேயம்- வான்(ஆகாயம்) ஒரே நேர்கோட்டில் நிற்க வெளிப்படும் பேராற்றல் முருகன் என்ற அறியப்படுகிறது, 

 

தமிழ் ஆயுதம் -வேல்

அரிதான யோக முறையால் புருவ மத்தியில் சக்தியாக திரண்டு சுழலும் உன்னத நிலையே முருகனின் அவதாரமாகும். கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள் ஃ இந்த மூன்று புள்ளிகளுக்கு இடையே தமிழின் ஆயுத எழுத்தான ஃ வடிவில் விரிவடையும் இந்தப் புள்ளிகளையும் 6 மையங்களையும் ஒன்று சேர்த்தால் வேல் வடிவில் உருவம் தோன்றும், யோகத்தில் இந்த உயர்ந்த நிலை அடையும்போது அவரது உடம்பு சூரியனைப் போல பிரகாசிக்கும் அனைத்து வித சித்திகளும் கைகூடும்

 

துரியம் (Crown or உச்சிமண்டை )

மனித உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன. இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாகவும் சுழுமுனை முருகனாகவும் உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள். மனித உடம்பு இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர இணையும்போது அங்கே ஏழாவது சக்கரமான துரியம் (சகஸ்ரநாமத்தில்) நிலைக்குச் செல்லும்.அப்போது ஓரு மனிதன் இறை தன்மை எனும் தெய்விக நிலையை அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது மருத்துவர்கள் பயன்படுத்தும் முதுகு தண்டில் இரண்டு பாம்புகள் பின்படுவது போல் உள்ள அடையாள குறிகளும் முருக தத்துவமே.

 

ஆறுமுகம்(நதி)

ஆறுமுகம் என்பது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் ஆறு சக்கரங்களை குறிப்பதாக கூறலாம். எண்ணிக்கை அடிப்படையில் ஆறு என்றும் மற்றும் ஓடும் நதிகளை ஆறு என்று கூறுவோம். இவை அனைத்தும் முருகனுக்கு உவமையாக இருக்கலாம். மலைகளிலே மழையாய் பொழிந்து, சுனையாய் ஒன்றிணைந்து, அருவியாய் கொட்டி, நதியாய் பெருகி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்த்து, பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகி. பெருங்கடலில் கலக்கும் ஆறு போல முருகனும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவ சக்திக்கு மைந்தனாக அவதரித்து குறிஞ்சி நிலத்தில் தவழ்ந்து ஆறுமுகமாக ஒன்றிணைந்து சூரனை அழிக்க வீறு கொண்டு எழுந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருளை வாரி வாரி கொடுத்து பிறப்பு இளமை முதுமை நோய் இறப்பு என்கின்ற கர்ம வினை கொண்டு அவதியுறும் பக்தர்களை குருவாய் அமர்ந்து ஞானம் கொடுத்து பரமாத்மா எனும் பெருங்கடலில் சங்கமிக்க ஞான வழிகாட்டியாக இருக்கிறார்.

 

ஆற்றுப்படுத்தல்

ஆறு என்ற சொல்லுக்கு ஆறுதல், ஆற்றுப்படுத்தல் என்ற பொருளும் உண்டு.  சூடான தேநீர் சற்று ஆறிய பின் குடிக்க இதமாக இருக்கும். வேகமாக ஒருவர் ஓடிய வந்த பின்பு அவருடைய மூச்சு வேகமெடுக்கும், (இளைப்பு) அப்போது ஓய்வெடுக்கும் நேரம் மூச்சுக்காற்று சீராகும். (இளைப்பாறு). சாப்பிட்டு விட்டீர்களா என கேட்பதற்கு பதிலாக பசியாறியாச்சா (பசியாற்று) எனவும் கேட்பது உண்டு. ஏதோ ஒரு விஷயத்திற்கு நம்முடைய நெஞ்சம் அஞ்சும் போது மனம் பதைக்கும் போது யாமிருக்க பயமேன் என ஒருவர் நம்மை தேற்றும் போது நம் மனம் ஆறுதல் அடையும்.  

 

ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்

இங்கே மேற்கண்ட பதத்தில் ஆறு என்பது தணிப்பு/ தணிக்கை எனப் பொருள் கொள்ளலாம். தணிகை என்ற சொல்லும் (திருத்தணிகை தணிகாசலம் தணிகை வேல்) முருகனுக்கே உரியது,

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன்

என்ற திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஆறு என்ற சொல் ஆறுதல் console என்ற பொருளிலே கையாண்டுள்ளார். 

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை

அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை

முருகனை குறித்த பாடலில் கவியரசு கண்ணதாசன் கையாண்டுள்ளார்

அபாயத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கு அபய கரம் நீட்டும் முருகனின் ஆறுதல் அளிக்கும் முகமே ஆறுமுகம் ஆகும்.

 

ஆறு எழுத்து மந்திரம்

சிவனை வழிபடுவோர் நமசிவாய என் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் அதுபோல முருக பக்தர்களுக்கு சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரம் ஆகும் சரவணபவன்-நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் சரவணபவ - என்பது ச–செல்வம், ர-கல்வி, வ-முக்தி, ண-பகை வெல்லல், ப-கால ஜெயம், வ–ஆரோக்கியம் குறிக்கும் அல்லது ச(கரம்)-உண்மை, ர(கரம்)-விஷயநீக்கம், அ(வ)(கரம்)-நித்யதிருப்தி, ண(கரம்)-நிர்விடயமம், ப(கரம்)-பாவநீக்கம், வ(கரம்)-ஆன்ம இயற்கை குணம் என விளக்கங்களை அளிக்கின்றனர்

 

காலங்களும் கார்த்திகை நட்சத்திரமும்

வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டமைப்புகளுக்கு கார்த்திகை நட்சத்திரம் என பெயர் வைத்தனர்.கார் என்றால் குளிரைக் குறிக்கும் சொல் தீ என்றால் வெப்பத்தை குறிக்கும் சொல் இவ்விரண்டையும் இணைத்து கார்த்திகை என அழைத்தனர். இந்த கால மாறுபாட்டை கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணித்தனர்.

 

ஆறு சிறுபொழுது

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நாள் எடுக்கும் இதனை ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர் 1.வைகறை( 2 am to 6 am)  2.விடியல்(6 am to 10 am). 3.நண்பகல்(10 am to 2 pm), 4.எற்பாடு(2 pm to 6pm), 5.மாலை (6 pm to 10 pm), 6.யாமம்(10 pm to 2am) ஆகும்.

 

ஆறு பெரும்பொழுது 

சூரியனை பூமி சுற்றிவர ஒரு வருட காலமாகும் இதனையும் தமிழர்கள் ஆறு காலங்களாக பிரித்தனர் இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி), கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக் காலம் (மார்கழி, தை), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி) ஆறுமுகனை வழிபடும் தமிழர் காலத்தையும் நேரத்தையும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணக்கிட்டுஆறு பிரிவுகளாகவே பிரித்தனர் இதன் மூலம் காலநிலை அறிந்து அதற்கு ஏற்ப வேளாண்மை செய்தனர்.


 

சூரசம்காரம்

முருகனை குறிஞ்சி நிலத்தலைவன் என்பது மட்டும் உண்மையானால் சூரசம்ஹார போர் மனிதர்களுக்கும் மனிதர் அல்லாத விலங்குகளுக்கும் நடந்திருக்கும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனை மற்றும் சூரனை தோளில் சுமந்து போரிட்டு காட்சிப்படுத்தினர் எனவே சக்கரம் மற்றும் ரதம் கண்டறியாத காலமாக இருக்கும் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலமாக இருக்கும். சூரசம்கார விழாவில் சுரன் யானை முக வடிவிலும் சிங்க முக வடிவிலும் அசுரமுக வடிவிலும் முருகனோடு போர் புரிகின்றான். சூரனின் தங்கை அஜமுகி (ஆடு முகம்) என்றும் போருக்கான முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பெரிய கோள்களில் காணப்படும் யாழி முக்கிய வகையாக மூன்று வகையாக பிரிக்கலாம் ஆட்டுத்தலை கொண்ட மகர யாளி, யானை தலை கொண்ட கஜ யாளி, சிங்க தலை கொண்ட சிம்ம யாளி. யானை குதிரை சிங்கம் புலி மயில் குரங்கு ஆகிய விலங்குகளை தெய்வ வாகனமாகவும் வணங்கும் இந்து சமயம் யாளியை வணங்குவதில்லை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துள்ளது. அரண்மனைகளில் மன்னர் வேட்டையாடிய பொருளை காட்சி பொருளாக வைப்பது வீரத்தை வெளிக்காட்டும் தமிழ் மரபு அதுபோலத்தான் முருகனின் வீரத்தையும் வெளிகாட்ட யாளியை காட்சிப்படுத்திருக்கக்கூடும் ஆனால் பூஜை செய்வது இல்லை.

 

வேலுண்டு வினையில்லை!

மலைகளிலும் காடுகளிலும் வாழ்வோர்கள் கையில் உயர்ந்த கம்பு/தடி எப்போதும் வைத்திருப்பார்கள் விஷச் செடிகள் பூச்சிகள் விலங்குகள் இவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் மேலும் மலையற்றத்தின் போது கீழே விழாமல் இருக்க கையில் கம்பு இருப்பது மிக அவசியம் இன்றும் பெரிய மலைகளில் ஏறுபவர்கள் கையில் குச்சியில் பிடித்துக் கொண்டு ஏறுவது நடைமுறையில் உள்ளது. மலைகளில் வாழ்ந்த முருகன் கையில் வேல் வைத்திருப்பது இயல்புதான். சூரன் படை மிருக கூட்டம் எனில் போர் என்பது எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலாகதான் இருக்கும் எனவே கூர்மையான வேல் எப்போதும் கையில் இருப்பது தன்னையும் தன் குடிமக்களையும் காப்பதற்காகவே.

 

மயிலுண்டு பயமில்லை

மயில் தொலைதூரம் பறக்கின்ற பறவை கிடையாது சிறிய தூரம் மட்டுமே பறக்கும் யானை குதிரை ஒட்டகம் போன்ற விலங்கு போல் மனிதனை சுமந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் கிடையாது. அதேசமயம் முருகன் மயில்லோடு தான் இருக்கிறான் காரணம் என்னவெனில் மயில் முருகனைப் போன்றே அழகான ஆண் இனம் மேலும் மழை வருவதை முன்னரே உணர்த்தும் அறிவு படைத்தது. கொடிய விலங்குகள் தாக்குதலை முன்னரே உணர்ந்து பிற உயிரினங்களுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மேலும் தன் இருப்பை எப்பொழுதும் தன் குரலால் ஒலித்துக் கொண்டே இருக்கும் (ஆகவும்). சூரன் ஒரு விலங்கினமாக இருந்தால் போர் என்பது எதிர்பாராத தாக்குதல் அச்சமயத்தில் அபாய ஒலியை எழுப்பவும் முருகன் இருக்கும் இடத்திற்கு அறிந்து கொள்ளவும் செய்தி அனுப்ப முருகனின் மயில் உதவி செய்திருக்கும். மயில் மற்ற எல்லா வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் வித்தியாசமானது பழகிய மனிதரை தவிர வேறு யாரிடத்திலும் நெருங்கி பழகாது குறிப்பிட்டு நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகும். சேவலுக்கும் ஏறக்குறைய இதே குணாதிசயம் உண்டு.

 

கந்தன்உண்டு கவலை இல்லை

மறைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் ஈட்டு வீரனை அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு முருகன் நினைவாக எழுப்பப்பட்ட தூண் கந்து என்று அழைக்கப்படும். முருகன் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல சித்தர்கள் வணங்கும் சித்தராக தலைசிறந்த ஞானியாக இருந்தார் பிறப்பு இளமை முதுமை கர்மவினை நோய் இறப்பு என்னும் இயற்கை விதிகளை அறிந்து அதனை மாற்றும் வல்லமையும் பெற்று இருப்பார். முருக அடியார்களான அகத்தியர், ஔவையார், போகர் புலிப்பாணி அருணகிரிநாதர் வள்ளலார் இவர்களுக்கும் இயற்கை விதியை மாற்றியமைக்கும் வல்லமையோடு இருக்கிறார்!. பேசாத குழந்தையான குமரகுருபரரை பாட வைத்தது முருகன் அருளே! பாம்பன் சுவாமிகள் முறிந்த எலும்பை சரி செய்ததும் கந்தனின் கருணையே! ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 14/02/1984, 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என திருவள்ளுவரின் வாக்கின்படி முருகன் போர் வீரனாக, தலைவனாக மட்டுமல்ல கருணையே வடிவான இறைவனாக மாறியவன். அபாயத்தில் அஞ்சி இருப்பவருக்கு அபய கரம் நீட்டும் ஆறுதல் அளிக்கும் முருகனின் திருவருள் என்றென்றும் தொடரும்

 

13 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!