Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு சதி

வகைகள் : சிறுகதைகள்/ இரா. சிதம்பரம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

சதி

சதி

மகத நாட்டு மன்னன் சந்திரகுப்தனின் மாபெரும் சயினத்திற்கும், செலியூக சிகரட்டரின் கிரேக்க சேனைக்கும் இடையில் வெற்றி தோல்வியின்றி நீண்டு கொண்டிருந்த யுத்தம், நிலை மாற ஆரம்பித்த சந்திரகுப்தனை, யுத்த களத்தில் வீரர்களுக்கு இடையில் நின்று உற்சாகமூட்டி யுத்தத்தை நடத்தியதால் மகதநாட்டு வீரர்களின் மூத்தன்யமான தாக்குதலை கிரேக்க வீரர்கள் சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். சமாதானத்திற்கு வந்தான்.

சமாதான பேச்சின் போது தன்னிடம் இருந்த ஏராளமான செல்வங்களையும் ரத்தின குவியல்களையும் கொடுத்து ஹிந்துஷ் மலை வரையில் உள்ள நாட்டையுமே விட்டுக் கொடுக்க முன்வந்த போதும் கூட சந்திரகுப்தன் சமாதானத்திற்கு இணங்கி விடவில்லை ஆனால் தன்னுடைய விலைமதிப்பில்லாத மாணிக்கமாக கருதி காத்து வந்த அழகு மகள் ஹெலனை சந்திரகுப்தன் முன் நிறுத்தி இவளையும் எடுத்துக்கொள் என்று சொன்ன பொழுதுதான் மகத நாட்டு மன்னன் அவள் பேரழகை கண்டு பிரமித்து போனார். மறுமொழி ஏதுமின்றி சமாதானத்திற்கு சம்மதித்து விட்டான் ஹெலனையும் தன் மனைவியாக்கிக்கொண்டான்.

சமாதானமாகி சில நாட்கள் தெளிவாக சந்திரகுப்தனின் தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தில் தங்கி இருந்தான் பிறகு தன் நாடு திரும்பும் பொழுது தன் மகள் ஹெலனை பார்த்து அந்தரங்கமாக சில வார்த்தைகள் பேசினார்.

“அருமை மகளே!, நான் ஏற்கனவே நமது திட்டத்தை உன்னிடம் கூறிவிட்டேன் என்றாலும் மீண்டும் உன் மனதில் நன்றாக பதிய வைக்கவே இப்பொழுது சொல்கிறேன். நான் இப்படியே நம் நாடு திரும்பி போய் அங்கு இயன்ற அளவு இன்னும் பெரிதாக ஒரு சைனியத்தை திரட்டி கொண்டு வந்து மறுபடியும் இந்த மகத நாட்டை தாக்குவதாக நினைத்திருக்கிறேன். அப்படி நம் சைன்யம் வரும் பொழுது இங்கு நமக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கவே உன்னை இங்கு இப்படி விட்டுப் போகிறேன்.

அந்த சமயத்தில் அவசியம் ஏற்பட்டால் இந்த சந்திரகுப்தனையே வஞ்சமாக கொலை செய்து விடக்கூட நீ தயாராக இருக்க வேண்டும். நம் திட்டத்தை சந்திரகுப்தன் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவனிடம் சிநேகம் கொண்டு விட்டது போல் நடித்து, உன்னையும் அவனுக்கு மனைவியாக ஆக்கி வைத்திருக்கிறேன்.

இதற்கிடையில், உன் சாகசத்தால் இந்த சந்திரகுப்தனை மயக்கி, உன் வசப்படுத்திட வேண்டும். இயன்ற அளவு அதிகாரங்களை எல்லாம் உன் கைக்கு கொண்டு வந்து விட வேண்டும். அதில் வெற்றி பெற்று விடுவாயா? ஜாக்கிரதையாக நடந்து கொள்வாயா?” என்று சிரத்தையுடன் பேசினான் செல்யூகஸ்.

“அப்பா தாங்கள் சொல்கிறபடி இந்த மகத நாட்டு மன்னனை என் இஷ்டத்திற்கு இழுத்துக் கொள்ள என்னால் இயலாது போய் விடுமோ என்று சந்தேகிக்கிறீர்களா?” என்று நிதானமாக கேட்டாள் ஹெலன்.

ஒரு கேலி சிரிப்புடன் பேசினான் செல்யூகஸ், “என் அருமை மகளே! என் அழகு செல்வமே! உன் போன்ற இளமையும், எழில் மிகுந்த பெண்களின் வேல் விழிகளுக்கு எத்தனையோ மகத்தான சக்தி உண்டு என்பதை அறியாதவன் அல்ல நான். உன் அழகுக்கு இந்த சந்திரகுப்தன் அடிமையாகத்தான் போகிறான். ஆனாலும்…”

“ஆனாலும், என்னப்பா?” என்று ஒரு புன்முறுவலுடன் கேட்டாள் ஹெலன்.

செல்யூகஸ், மேலும் பேசினான், “சந்திரகுப்தனும் நல்ல கட்டமைந்த வாலிபப் பருவத்தினன். ஒப்பற்ற சுத்த வீரன். அவனுடைய வீர சௌந்தரியமும் கம்பீரமும் உன்னை கவரும்படி விட்டுவிடாதே. அவன் உனக்கு அடிமையாக வேண்டுமே தவிர, நீ அவனுக்கு அடிமையாகி விடலாகாது! நாட்டிற்காக நீ இந்த தியாகத்தை செய்ய வேண்டும், கண்ணே!” என்றான்.

“நீங்கள் அதிகம் சொல்ல வேண்டாம் அப்பா! நானே மனமுவந்து இதைச் செய்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு விட்டேனே!” என்று உறுதிப்பாட்டுடன் பேசினாள்.

செல்யூகஸ் பெருமை கலந்த குரலில் பேசினான், ”ஆம் ஹெலன், வீர கிரேக்க மரபிலே வந்த உனக்கு இத்தகைய தியாக புத்தியும் துணிவும் திடீரென்று ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இனி என் கனவு நனவாகி விடும் என்றே கருதுகிறேன்” என்று கூறிவிட்டு சந்தோஷ மிகுதியில் தன் மகளை அப்படியே கட்டித் தழுவி கொண்டான்.

அவளை அன்பு கனிய பார்த்தபடியே பேசினான், “என் செல்ல குழந்தையே கடைசியாக உன்னிடத்தில் இன்னும் சொல்ல வேண்டிய அதி முக்கியமான விஷயம் ஒன்று இருக்கின்றது. அதையும் சொல்லி விடுகிறேன்.இந்த சந்திரகுப்தனுக்கு சாணக்கியன் என்ற ஒரு மந்திரி இருக்கிறான். அந்தப் பரதேசி பையலுக்கு தெரியாத விஷயம் உலகத்திலே எதுவும் இருக்காது போலிருக்கிறது. உன் முகத்தை பார்த்தே நீ என்ன நினைக்கிறாய், இனிமேல் என்ன நினைக்க போகிறாய், என்பதையும் கூட அவன் கண்டு கொள்வான். மிக மிக ஜாக்கிரதை நடந்து கொள்ள வேண்டும். இயன்ற அளவு அவன் எதிரிலே நீ வராமல் பார்த்துக்கொள் நிச்சயமாக அவனுடன் எதுவும் பேச்சு வைத்துக் கொள்ளாதே“ என்று எச்சரித்தான்.

அதற்கு “ஆகட்டும் அப்பா! ஜாக்கிரதையாகவே நடந்து கொள்கிறேன்” என்று சுருக்கமாக பதிலளித்தாள் ஹெலன் பிறகு இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.

ஐந்து ஆண்டுகள் சென்று மறைந்து விட்டன.செல்யூகேஸ் நிகேடரின் புதல்வனும் ஹெலனின் சகோதரனுமான ஃபிலிப்ஸ் மகத நாட்டிற்கு விருந்தினராக வந்தான். அரசாங்க மரியாதைகளுடன் ஆடம்பரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பும் விருந்து உபச்சாரங்களின் தடபுடலும் சற்று குறைந்த பிறகு ஃபிலிப்ஸ், தனது சகோதரியிடம் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருந்தான்.

“ஹெலன்!, நான் உன் அரண்மனையில் இப்பொழுது விருந்து சாப்பிடுவதற்காக இங்கு வரவில்லை. நான் என்ன நோக்கத்தோடு இப்போது வந்திருக்கிறேன் என்பதை நீயே யூகித்திருப்பாய் என்று கருதுகிறேன்” என்றான்.

“நீ எதைப் பற்றி சொல்ல விரும்புகிறாய்? தயவு செய்து கொஞ்சம் விளக்கமாக சொல்! அண்ணா” என்றாள் ஹெலன். முகத்தில் ஒருவித கலவர கூறி தென்பட்டது.

“ஐந்து வருடங்களுக்கு முன் நமக்கும் இந்த சந்திரகுப்தனுக்கும் ஒப்பந்தமாகி உன்னையும் அவனுக்கு மனம் முடித்துவிட்டு நாங்கள் நாடு திரும்பும் பொழுது நமது தந்தை உன்னிடம் பேசியது ஞாபகம் இருக்கத்தான் வேண்டும். அன்று பேசிக்கொண்ட திட்டத்தின் படி இன்று ஒரு பெரிய படையை தயார் செய்து கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் படை யாருக்கும் தெரியாமல் ஹிந்துஷ் மலையின் பள்ளத்தாக்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இங்கு ஏதாவது குழப்பத்தை எப்படியும் நாம் உண்டு பண்ணிவிட்டு நம் ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பினால் நம் சைன்யம் உடனே புறப்பட்டு வந்து இந்த பாடலிபுத்திரத்தையே கைப்பற்றிக் கொள்ளும். நமது புனிதமான கிரக்க நாட்டு பட்டுக்கொடி பாடலிபுத்திரத்திர அரண்மனை கோபுரத்தை அலங்கரிக்கும். இதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும், நீ என்ன ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறாய்? சொல் ஹெலன்!” என்று படபடப்பாக பேசினான் ஃபிலிப்ஸ்.

ஹெலன் சற்று நேரம் எதுவுமே பேசவில்லை, அவள் பார்வை தொலைவில் பதிந்து இருந்தது. பிறகு தொண்டை கம்மியாகிய குரலில் “அண்ணா உனக்கு நான் என்ன பதில், எப்படி சொல்வது என்றே தெரியவில்லை உன்னுடைய ஆர்வத்தையும் அவசரத்தையும் பார்க்கும்போது அச்சமாய் இருக்கிறது. நான் உங்கள் சதி திட்டத்திற்கு இணங்க மறுப்பதோடு மட்டுமல்ல அத்தகைய சதி எதுவும் நிறைவேற விடாமல் தடுக்கவும் நான் இப்போது தயாராகி விட்டேன் என்பதை நீ அறிந்து கொள்ளும் பொழுது உன் உணர்ச்சி எத்தகைய நிலைமை அடையுமோ நான் அறியவில்லை” என்றாள்.

“ஹெலன், நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று ஆத்திரமாக கேட்டான் ஃபிலிப்ஸ்.

ஹெலன் அமைதியை தருவித்துக் கொண்டு பேசினாள், “அண்ணா அன்று நம் தந்தை போட்ட திட்டத்திற்கு நானும் இசைந்தது உண்மை தான். நான் வாக்குறுதி அளித்ததையும் மறந்து விடவில்லை. ஆனால் இப்பொழுது என் மனம் மாறிவிட்டது. அமைதியும் ஆனந்தமும் மிகுந்த எங்கள் தாம்பத்திய வாழ்வை எக்காரணத்தை கொண்டும் பாழ்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. எங்கள் அன்னியோன்ய உறவிலே கிட்டும் இந்த இன்பத்தை விட எத்தகைய பதவியும் எனக்கு பெரிதாக தோன்றவில்லை. அண்ணா! என் அருமை சகோதரன் என்ற முறையிலே கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் உன் தங்கையின் வாழ்வை சிதைத்து விட நினைக்காதே. உன் தங்கை வாழ விரும்புகிறாள். இவளை வாழ்வதற்கு விட்டுவிடு. சதி, குழப்பம், யுத்தம் என்ற வார்த்தைகளை கேட்க கூட எனக்கு பிடிக்கவில்லை.”

ஃபிலிப்ஸ், பல்லைக் கடித்துக் கொண்டான் “ஹெலன்! அன்று உன்னை தந்தை எச்சரித்தது சரியாகி விட்டது சந்திரகுப்தனை மயக்குவதற்கு பதிலாக இன்று நீயல்லவா மதி மயங்கி அவனிடம் அடிமையாகி கிடக்கின்றாய்.“ என்றான்

“ஆம் அண்ணா! அப்படி அடிமையாகி விட்டதில் நான் பெருமை அடைகிறேன்” என்று கம்பீரமாக பதில் கொடுத்தாள் ஹெலன். “கிரேக்க நாட்டைச் சேர்ந்த செல்யூகஸின் மகள் என்பதை நீ மறந்து விடாதே ஹெலன்” என்றான் ஃபிலிப்ஸ்.

“அதே சமயத்தில் நான் மகத நாட்டு மன்னன், மௌரிய சந்திரகுப்தனின் அருமை மனைவி என்பதையும் மறந்துவிட முடியுமா சொல் அண்ணா” என்று ஆணித்தரமாக கேட்டாள் ஹெலன்.

கோபம் கொண்ட ஃபிலிப்ஸ் சற்று அடங்கியே பேசினான், “உன்னை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை எங்களுடைய குற்றம். பெண்கள் சபல புத்தி படைத்தவர்கள் என்பது யாவரும் அறிந்த விஷயம். அதில் நீ மட்டும் விதிவிலக்காக இருந்து விடுவாய் என்று நானும் தந்தையும் எதிர்பார்த்தது எங்களுடைய முட்டாள்தனம் என்று தான் சொல்ல வேண்டும். இங்கு உனக்கு கிடைத்துள்ள அரண்மனை வாழ்வும் சுகபோகமும் உன்னை எளிதில் கவர்ந்து உன் மனதை மாற்றி விட்டன.“

ஃபிலிப்ஸ் பேச்சை முடிப்பதற்குள் ஹெலன் குறிக்கிட்டு பேசினாள். “அண்ணா நீ நினைப்பதை போல் இங்கு குவிந்து கிடக்கும் இந்த செல்வம் கிட்டி விட்டதற்காக நான் பெருமைப் படவில்லை அதை காட்டிலும் விலைமதிக்க முடியாதது அன்பு என்னும் செல்வம். எனது அருமை கணவரிடம் இருந்து கிடைத்திருக்கிறது. அதை நான் எக்காரணத்தை கொண்டும் யாருக்காகவும் இழக்கச் சம்மதியேன்”

“ஹெலன் நீ என்னவெல்லாமோ கனவு காண்கிறாய். இந்த மகத ராஜ்ஜியமும் இந்த சந்திரகுப்தனும் என்றும் நிரந்தரமா நிலைத்து விடும் என்று நினைக்கின்றாயா? எத்தனையோ பெரிய சாம்ராஜ்யங்களும் இன்று இருந்த இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்து விட்டன உலகத்தையே கட்டி ஆள போகிறேன் என்று மார் தட்டிய மன்னாதி மன்னர்களும் மண்ணோடு மண்ணாய் போய்விடவில்லையா ஆகவே எதையும் சாஸ்வதம் என எண்ணி மனப்பால் குடிக்காதே” என்றான் ஃபிலிப்ஸ் குரோதம் நிறைந்த குரலில்.

ஹெலன் அமைதியாகவே பதில் சொன்னாள், “அண்ணா நீ என்னை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இன்று என் கணவரின் ராஜ்ஜியம் அவரிடம் இருந்து அபகரிக்கப்பட்டு அவர் காட்டிலோ குடிசையிலோ வாழ நேர்ந்தால், அவரை பின்தொடர்ந்து போய் அவருடன் வாழ்ந்து அவருக்கு தர்ம பத்தினியாக பணிவிடை செய்ய உன் தங்கை தயங்கமாட்டாள் அண்ணா. அல்லது நீ நினைப்பதை போல் யுத்தம் மூண்டு அவர் அதிலே வீர மரணம் எய்தினால், நானும் அவர் உடலை தழுவி கொண்டே என் உயிரை விடுவதை தான் நான் பாக்கியமாக கருதுவேன் அண்ணா!”

ஃபிலிப்ஸ் வேறு தந்திரத்தை கையாண்டு பார்த்தான். ஹெலனை உற்சாகப்படுத்தி பேசினான், “ஹெலன்! நீ மட்டும் எங்களுடைய திட்டத்திற்கு சம்மதித்து நடந்தாயானால் சரித்திரத்திலே உன் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். மன்னர் மன்னன் மகா அலெக்சாண்டராலும் சாதிக்க முடியாமல் விட்டுப் போன காரியத்தை ஒரு மங்கை தன் சாகசத்தால் செய்து முடித்தாள், என்ற பெயரும் பெருமையும் உனக்கு கிடைக்கும். அத்தகைய புகழை எல்லாம் இழந்து விடாதே!”

“அண்ணா! அப்படி சரித்திரம் எழுதப்படும் பொழுது, அந்த மங்கை அவள் மீது அன்பை சொரிந்து உயிரையே வைத்திருந்த, அவள் அருமை கணவனுக்கு துரோகம் செய்துவிட்டாள், என்றும் தானே எழுதப்படும்?”

இதற்கு பதில் எதுவும் உடனே சொல்ல இயலாமல் ஃபிலிப்ஸ் மௌனமானான். பிறகு, “ஹெலன்! நானும் என் தந்தையும் எப்படியில்லாமோ போட்டிருந்த திட்டத்தை, கட்டியிருந்த மனக்கோட்டையை உன் பிடிவாதம் என்ற ஒரே ஆயுதத்தால் தகர்த்து எறிந்து விட்டாய்!” என்று மனமுடைந்து பேசினான்.

ஹெலன்,”அப்படி நீ, நிராசை அடைந்துவிட வேண்டாம் அண்ணா. உனக்கு இந்த ராஜ்ஜியம் தானே வேண்டும்? நான் என் கணவரிடம் போய் நாட்டை என் சகோதரனுக்காக விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்று கேட்பேனாகில், அப்போதே என் அருமை கணவர் இந்த மகத நாட்டை என் காலடியில் வைக்க தயங்க மாட்டார். அவருடைய தயாள குணத்தையும் வீரத்தையும் நான் அறியாதவள் அல்ல. என் மீது வைத்திருக்கும் அன்பிற்காக அவர் எதையும் செய்வார். பின்வாங்க மாட்டார்.”

“நீ அதிகப் பிரசங்கி ஆகிவிட்டாய் ஹெலன். நான் யாசிக்கவா வந்திருக்கிறேன்?” என்று ஆத்திரமாக பேசிய ஃபிலிப்ஸ், உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தான். சற்று நேரம் கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல் உலாவி கொண்டிருந்தான். அங்கு அமைதி நிலவியது.

பிறகு, தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தான். இப்பொழுது ஏதோ திட்டமான முடிவுக்கு வந்துவிட்டவன் போல் அவன் முகக்குறி காட்டியது. “என் அருமை தங்கையே! உன் தூய்மையான அன்பிற்கு முன் என் துரோக சிந்தனை மறைந்து விட்டது. என்னை மன்னித்துவிடு ஹெலன். உன் வாழ்வை சீர்குலைக்க நான் சதி செய்தேன் என்று நினைக்கும் போதே நாணத்தால் என் உடல் கூசுகிறது. உனக்கும் உன் கணவருக்கும் ஏற்பட்டுள்ள புனிதமான அன்பு பிணைப்பை எக்காரணத்தை கொண்டும் அறுத்துவிடுதல் யாராலும் முடியாது என்பதை இப்பொழுதுதான் உணருகிறேன்.”

“மேலும் அப்படி ஒரு சதி திட்டத்துடன் நான் வந்திருக்கிறேன் என்பதே யாருக்கும் தெரிய வேண்டாம். நான் இத்துடன் அதை பற்றியே மறந்து விடுகிறேன். நீயும் மறந்து விடு. ஏதோ விருந்தினராக நான் வந்ததை போல் இன்னும் சில நாட்கள் இங்கு தங்கி இருந்துவிட்டு போய்விடுகிறேன். உன் மனதில் ஒரு சலனத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தி விட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

ஹெலன் ஆனந்த மிகுதியால், “அண்ணா…” என்ற ஒரு வார்த்தைக்கு மேல் எதுவும் பேச முடியாமல் தத்தளித்தாள்.

பாடலிபுத்திரத்து அரண்மனையில் பாரா மாறியது. நள்ளிரவு என்பதை அறிவிக்க எங்கிருந்தோ சங்கு ஒன்று அலறி ஓய்ந்தது.

வானவெளியின் மேற்கு விளிம்பில் அரைவட்ட சந்திரன் ஒளி இழந்து வதங்கிக் கொண்டிருந்தது.

அரண்மனை உப்பரிகையின் ஒரு பக்கத்தில், விசாலமான ஒரு பெரிய அறை. கீழே வர்ண விசித்திரமான மலர்களைத்தான் கொட்டிப் பரப்பி இருக்கின்றதோ என்று ஐயுறும்படியாக அத்தனை அழகான கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன. முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டு விதானத்தின் கீழ் அமைந்த தங்க கட்டில் ஒன்றில் சந்திரகுப்தன் நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.

பக்கத்திலே கிடந்த மற்றொரு கட்டிலின் மேல், ஹெலன் என்ற அத்தங்கநிறக் கொடி துவண்டு கிடந்தது. ஹெலன் நன்றாக உறங்கியதாக தெரியவில்லை, அடிக்கடி புரண்டு படுத்தாள். அப்படி அவள் புரளும் பொழுதெல்லாம், அங்கு தொங்கிய தூண்டாமணி விளக்கின் ஒளி பட்டு அவள் மார்பில் இருந்த இரத்தின ஹாரம் பளபளத்தது.

இப்பொழுது எங்கும் இருள் கவிழ்ந்து விட்டது. இருளிலே மறைந்து, மறைந்து ஒரு உருவம் அந்த அறையில் நுழைந்தது. அதன் கையிலே நீண்ட கூர்மையான வாள் இருந்தது. சற்று நிதானித்து தெரிந்து கொண்டு சந்திரகுப்தனின் படுக்கைக்கு சமீபம் வந்து நின்றது.

மறுகணம் தன் பலத்தை எல்லாம் திரட்டி அந்த நீண்ட வாளை சந்திரகுப்தனின் மார்பிலே ஆழமாக பாய்ச்சியது.

அதே சமயத்தில், “ஆ” என்ற அலறலுடன் ஹெலன் விழித்துக் கொண்டாள். தன் கணவன் குத்திக் கொல்லப்பட்டு விட்டான் என்பதையும், அந்த துரோக செயலை செய்தவன் தன் சகோதரனே தான் என்பதையும் கண்டு கொண்டாள்.

ஃபிலிப்ஸ் அறையை விட்டு வெளியே ஓடினான். “அடே! துரோகி!, இதோ நில்!” என்று அவன் மீது பாய்ந்து ஹெலன், அவனை பிடித்து நிறுத்தினாள்.” இதோ பார்! உன்னை பழிக்கு பழி வாங்குகிறேன். சண்டாளா! சதிகாரா! இத்துடன் ஒழிந்து போ!” என்று தன் கையில் வைத்திருந்த கட்டாரியை அவன் மார்பிலே பாய்ச்சினாள்.

அதே சமயத்தில் ஹெலனின் பின்புறமாக இருந்து ஒரு வலிமையான கரம் அவள் கையை தடுத்து நிறுத்தியது. பெண் புலி போல் சீறிக்கொண்டே பின்புறமாக திரும்பிப் பார்த்தாள் ஹெலன். அங்கு நின்றது சந்திரகுப்தனே தான்.

“தேவி! உன்னுடைய அழகிய மென்மையான கரத்தை எதற்காக கறை படுத்தி கொள்ள வேண்டும்? அவன் செய்த துரோகச் செயலுக்கு அரசாங்கம் உரிய தண்டனையை வழங்கும்” என்று எவ்வித சலனமும் இல்லாமல் பேசினான் சந்திரகுப்தன்.

அதற்குள் அரண்மனை காவலர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து ஃபிலிப்ஸை பிடித்துக் கொண்டார்கள். ஃபிலிப்ஸின் மீதிருந்த பிடியை விட்டுவிட்ட ஹெலன், ஆச்சரியத்துடன் தன் கணவனை கூர்ந்து கவனித்தாள்.

“இது என்ன! நான் காண்பது கனவில்லையே! சற்றுமுன் நீங்கள் வாளால் குத்தப்பட்டு படுக்கையில் கிடந்தீர்களே!” என்று ஆச்சரியம் தாங்க மாட்டாமல் கேட்டாள் ஹெலன்.

சந்திரகுப்தன் ஹெலனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். இது என்ன பேராச்சரியம் அங்கு கட்டில் மீது சந்திரகுப்தன் நெஞ்சிலே கத்தியால் குத்தப்பட்டு இன்னமும் அப்படியே தான் கிடக்கிறான். இது என்ன இரண்டு சந்திரகுப்தர்களா! ஹெலன் ஓடி போய் கட்டில் மீது கிடந்த உருவத்தை தொட்டு அசைத்து பார்த்தாள்.

பிறகு தான் தெரிந்தது. அது மெழுகினால் செய்த ஒரு பொம்மை என்பது ஆச்சரியமும் ஆனந்தமும் அடக்க முடியாமல் ஹெலன் திகைத்து நின்ற போது சந்திரகுப்தன்,”தேவி! ராஜபாரம் என்பது இலகுவான காரியம் அல்ல. தன் நாட்டிலே ஒவ்வொரு மனிதனும் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் இதய அந்தரங்கத்திலும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான், என்பதையும் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

“சுவாமி! உங்கள் மதிநுட்பத்திற்கு ஈடாக இந்த உலகிலே யாரையும் சொல்ல முடியாது” என்று ஹெலனின் குரல் தழுதழுக்க கூறியது.

சந்திரகுப்தன், ”ஹெலன் உண்மையாக பார்க்கப் போனால் இந்த புகழுக்கு உரியவன் நான் இல்லை. எனக்கு மதி மந்திரியாகவும், குருநாதனுமாக வந்து வாய்த்திருக்கும் சாணக்கியர் என்ற அந்த மகான் தான் இந்த பெருமைக்கு எல்லாம் உரியவர். அவருடைய திறமையினால் தான் நான் இன்று இந்த மகதநாட்டு முடியை தலையில் வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. ஏன் இன்று இங்கு நான் உயிரோடு நிற்பதுமே அவர் அளித்த பிச்சை தான்” என்று பக்தி கலந்த குரலில் பேசினான்.

அந்த மேதையை  நினைத்து தலை வழங்கினாள் ஹெலன்.  அப்படியே சந்திரகுப்தனின்  அகன்ற மார்பகத்தில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள். 


link- சதி -ஆடியோ வடிவில் 

செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம் 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!