தொடர் : 7
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
சமீபத்தில் சென்னையில் நடந்த புஷ்பக் கண்காட்சி பார்க்க சென்றிருந்தேன் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக பல நிறங்களில் பரப்பி வைக்கப்பட்டிருந்த அவ்வழகிய பூக்கள், வர்ணஜால ஒளி வீசும் வைரம் வைடூரியம் முதலிய நவரத்தினங்களை குவித்து வைத்திருப்பது போன்ற தோற்றமளித்தனர்.
அதில் என்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த நான் யார் மீதோ பலமாக மோதி விட்டேன். மோதிக்கொண்டவரிடத்தில் மன்னிப்புக் கோருவதற்காக அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஆனால் அவர் நான் மோதி விட்டதையும் கூட பொருட்படுத்தாது எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி அவருடைய கவனத்தைக் கவர்ந்தது என்ன என்று நானும் கவனித்தேன். ஒரு புஷ்ப மேடையின் எதிரில் ஒரு இளம் பெண்ணும் ஒரு பெரியவரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் மிகச்சிறந்த அழகியாக விளங்கினாள். அவள் அணிந்திருந்த கச்சிதமான உடை அவளுடைய நிர்மலமான அழகை துலாம்பரமாக வடித்து எடுத்துக் கொடுத்தது. அங்குள்ள மலர் குவியல்களில் தேங்கியிருந்த வனப்பை எல்லாம் ஒன்று திரட்டினாலும் அந்த அதிரூபவதியிடத்தில் பொங்கி வழிந்து கொண்டிருந்த சாதாரண சௌந்தரியத்திற்கு ஈடாக கூற முடியாது.
“சரி என்னதான் அழகா இருந்தாலும் பிறர் பெண்ணை இப்படி விழுங்கி விடுவது போல் பார்க்கிறானே இவன் என்ன மனிதன் இங்கிதம் தெரியாதவன்” என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து விட்டது.
பார்த்துக்கொண்டே இருந்த அவன் முகத்தில் அளவிட முடியாத ஆச்சரியக்குறி படர்ந்தது மறுகணம் வெறிகொண்டவன் போல் பாய்ந்து சென்று அப்பெண்ணின் கையை பற்றினான். கையை பலமாக பிடித்துக்கொண்டு “நீ நீ.. என்..என்” என்று ஏதோ கத்தினான். அப்பெண் பயந்து அலறி “அப்பா” என்று அருகில் நின்று தன் தந்தையை பிடித்துக் கொண்டாள்.
அப்பெரியவர் அளவிட முடியாத கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியை சுழற்றி அம்மனிதனை ஓங்கி அடித்தார். இதற்கிடையில் அந்த மனிதனின் பிடியிலிருந்து விடுபட்டுக் கொண்ட அப்பெண் பெரியவருக்கும் அவனுக்கும் இடையிலே அகப்பட்டதால் அந்த பெரியவர் அடித்த அடி அந்த பெண்ணின் தலை மேல் பலமாக விழுந்துவிட்டது. இரத்தம் பீறிட்டு வெளிவர அவள் அடிபட்ட மான்போல் சுருண்டு கீழே விழுந்ததால் கூட்டம் கூடிவிட்டது மேலும் அம்மனிதன் மீது பாய்ந்து கொண்டிருந்த பெரியவரை வந்தவர்கள் பிடித்து நிறுத்தினார்கள். கடைசியில் போலீசும் வந்து விட்டது.
இதில் இன்னும் ஒரு சங்கடம் அந்தப் பெரியவரும் அவர் பெண்ணும் ஹிந்துவாகவும் அந்த மனிதன் ஒரு முஸ்லிமாகவும் இருந்ததால் இந்த விவகாரத்தை இங்கே பேசக்கூடாது என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அந்தப் பெரியவர் பெயர் ஹரிலால் என்றும் அந்தப் பெண் அவர் மகள் என்றும் வகுப்பு கலவரத்திற்கு பயந்து வடநாட்டில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்த முஸ்லிமைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆவலினால் நானும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் எனது நண்பராக இருந்ததால் உள்ளே போய் தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது.
இதற்கிடையில் அப்பெண்
காயத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கொண்டு போகப்பட்டாள். அந்த முஸ்லீமை இன்ஸ்பெக்டர் விசாரித்தார் அவன் தன் பெயர் அப்துல் என்றும் கல்கத்தாவில் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் சென்னையில் உள்ள அதன் கிளை ஆபீசுக்கு ஒரு அலுவலாக வந்திருப்பதாகவும் கூறினான்.அதற்கு மேல் அந்த அப்துல் சொல்லிய தகவல் தான் ஆச்சரியமாய் இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன் வடநாட்டில் நடந்த வகுப்பு கலவரத்தில் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் அந்த பெண் தான் தன் மனைவி என்றும் கூறினான். மேலும் அவள் தனக்கு கிடைக்கும்படி செய்ய இன்ஸ்பெக்டர் உதவி செய்ய வேண்டும் என்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டான்.
ஹரிலால் என்ற அந்த பெரியவரின் மகள் இந்த முஸ்லீமின் மனைவியாக எப்படி இருக்க முடியும் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் அந்தப் பெண் எப்படியும் மயக்கம் தீர்ந்து வந்து விட்டால் எது உண்மை என்று தெரிந்து விடும் ஆதலால் மறுநாளைக்கு அந்த அப்துலையும் மேற்கொண்டு விசாரணை செய்வதற்காக வரச் சொல்லி அனுப்பினார்.
இன்ஸ்பெக்டர் அந்தப் பெண் மயக்கம் தெளிந்து நன்றாக பேசக்கூடிய நிலைமை ஏற்பட மூன்று தினங்களாகி விட்டன அதற்கு மறுநாள் அப்துல் அந்த பெரியவர் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த அப்துல் சொன்ன தகவல் இன்னும் வினோதமா இருந்தது அன்று தான் தவறு செய்து விட்டதாகவும் அந்தப் பெண் தன் மனைவியின் சாயலாக இருப்பதைக் கொண்டு அப்படி நினைத்து விட்டதாகவும் ஆஸ்பத்திரியில் போய் அருகில் பார்த்ததில் உண்மை விளங்கியது என்றும் அவன் சொன்னான் ஹரிலாலை கூப்பிட்டு இன்ஸ்பெக்டர் விசாரித்தார் இது சம்பந்தமாக அப்துல் மீது வழக்கு எதுவும் தொடர்ந்தால் தமது மகள் கோர்ட்க்கோ போலீஸ் ஸ்டேஷனுக்கோ போக நேரிடும் என்ற காரணத்தினால் அவனை மன்னித்து அனுப்பிவிட அவர் இசைந்தார். வாரம் ஒன்று சென்று இருக்கும் ஏதோ அலுவலாக அந்தப் பக்கம் போன நான் போலீஸ் ஸ்டேஷனை எனது இன்ஸ்பெக்டர் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
கடிதம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்ததால் என்னுடைய உதவியை நாடினார் இன்ஸ்பெக்டர் நான் படித்து விளக்கி கூறினேன்.
“அன்புமிக்க அருமை தந்தையே, தங்கள் மகள் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட அருகதை அற்றுப் போன இந்த பாவி எழுதிக் கொள்கிறேன் எழுதுவதற்கு என் கை நடுங்குகிறது கண்களில் நீர் நிறைந்து நின்று என்னை எழுத ஒட்டாமல் தடை செய்கிறது.
என் அருமை தந்தையே! தாயே! உங்களையெல்லாம் விட்டு பிரிந்து விடுவதென்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த புஷ்ப கண்காட்சியில் என்னை கையை பற்றி இழுத்த அதே முஸ்லீம் இளைஞருடன் நானும் போய் விடுவதென்று முடிவுக்கு வந்து விட்டேன் ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீமுடன் ஓடிவிட துணிந்து விட்டாளா என்று வைதீகத்தில் ஊறிப்போன உங்கள் இந்து ரத்தம் கொதிப்பதை அறிவேன் இனி மேலும் உங்கள் இடத்தில் என்னைப் பற்றிய உண்மையை மறைப்பது கூடாது நானும் முஸ்லீம் தான்” மேலே படியுங்கள் தெரியும் என்று சுருக்கமாக பதிலளித்தார்.
ஹிரிலால் கடிதத்தை தொடர்ந்து படித்தேன். “வடநாட்டில் வகுப்பு கலவரம் தலைவிரித்தாட ஆரம்பித்தது ஒரு நாள் என் கணவர் வெளியூருக்கு சென்று இருந்தவர் திரும்பி வர முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாகி விட்டன நாங்கள் இருந்த ஊரில் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருந்ததால் இனி மேலும் நான் அங்கு தனிமையில் இருப்பது ஆபத்து என்று கருதி முஸ்லீம்கள் அதிகமாய் உள்ள பக்கத்து ஊருக்கு போய்விட ரயில் நிலையத்திற்கு வந்தேன்.
அந்த ஊரில் முஸ்லீம் பெண் தனிமையில் வெளிவருவது ஆபத்து என்பதனால் ஒரு ஹிந்து பெண் போலவே உடை அணிந்து ரயில் நிலையம் வந்தேன் ரயில் நிலையம் வந்து விசாரித்ததில் கலவரம் மிகுதியாகிவிட்டதால் எல்லா போக்குவரத்தும் நின்று விட்டதாகவும் சென்னைக்கு மட்டும் ரயில் போகக்கூடும் என்றும் தெரிந்தது.
ஆயிரக்கணக்கான அகதிகளை சுமந்து கொண்டு சென்னை செல்வதற்கு ஒரு ரயில் தயாராய் நின்றது அப்பொழுது என் மானத்தை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி தான் தோன்றியது அதுதான் தற்கொலை அந்த திக்கற்ற நிலைமையிலே என் அருகில் வந்து குழந்தாய் என்று அழைத்தீர்கள் அன்னையும் நீங்களும். அன்பொழுக பேசினீர்கள், ஆறுதல் கூறினீர்கள், நான் அப்பொழுது அணிந்திருந்த உடைக்கு ஏற்ப என்னை ஒரு இந்துப் பெண் என்றே சொல்லிக் கொண்டேன். தாங்களும் கலவரத்துக்கு பயந்தே இன்னும் வடக்கே இருந்து வருவதாகவும் தங்களுடன் வருவதாக இருந்தால் சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினீர்கள். இன்னும் சிறிது காலம் உயிரை வைத்திருக்க ஆசை கொண்டு உடனே உங்களுடன் சென்னை வந்து சேர்ந்தேன் என் மீது தாங்கள் அன்பு செலுத்துவதற்கு வேறு காரணம் இருந்ததையும் தெரிந்து கொண்டேன். தங்களுக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் என் உருவச் சாயலாகவே இருந்தாள் என்பதையும் தங்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.
இந்த நாலு வருஷ காலமாக தங்கள் அன்பிலே வளர்ந்தேன். செல்வத்திலே பிறந்தேன் இறந்துவிட்ட தங்கள் அருமை மகள் பெயரிலேயே பத்மா என்று என்னையும் அழைத்து மகிழ்ந்தீர்கள் தங்களை அறியாமல் என் கணவரின் பழைய விலாசத்திற்கு நான் பல கடிதங்கள் எழுதியும் பதில் வராததால் என் கணவரின் கதி என்ன ஆயிற்று என்று ஏக்கம் என் உள்ளத்தின் ஆழத்தில் அமைதியை இழக்க செய்து இருந்தது.
ஆனால் பெற்றோரை சிறுபிள்ளை பருவத்திலே இழந்து விட்டு அவர்கள் அன்பிற்காக துடித்த நான், தங்களிடத்திலே அத்தகைய பாசமும் பற்றுதலும் ஏற்பட்டு விட்டதை உணர்ந்து ஆறுதல் கொண்டேன். என்றாவது ஒரு நாள் நான் ஒரு முஸ்லீம் பெண் என்று தெரிந்தால் நீங்கள் எப்படி என்னை வெறுப்பீர்களோ என்று பயந்தேன். இத்தகைய உத்தமர்கள் ஆகிய தங்களுடைய அன்பை நான் தவறுதலாக பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு நாள் உங்கள் காலடியில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி, அப்பா நான் உங்கள் மகள் அல்ல நீங்கள் பாலூட்டி வளர்த்த விஷப்பாம்பு. உங்கள் மகளை கொன்று விட்டார்கள் என்பதற்காக எந்த வகுப்பறை நீங்கள் வெறுக்கிறீர்களோ அதே இனத்தைச் சேர்ந்தவள் தான் நான் என்று சொல்லி விடுவதாக இருந்தேன்.
அதற்குள் புஷ்ப கண்காட்சியில் அன்று அந்த சம்பவம் நடந்துவிட்டது. முதலில் யாரோ வேற்றுவாழ் என் கையைப் பிடித்து விட்டானே என்று பயந்து கத்தி விட்டேன். மறுகணம் அவர்தான் என் கணவர் என்னை பற்றிய அக்கை தான் எனக்கு மனமார்ந்த மாலையிட்ட கை என்பதை அறிந்து கொண்டேன். தெரிந்து கொண்டுதான் தாங்கள் தடியால் அடித்த அடி அவர் மீது விழுந்து விடக்கூடாது என்று என் தலையை கொடுத்து அந்த அடியை தாங்கிக் கொண்டேன் பிறகு ஆஸ்பத்திரியில் படுக்கையில் படுத்து கண்ணை மூடிக்கொண்டே யோசித்தேன்.
பலபேர் முன்னிலையில் போலீஸ் ஸ்டேஷனில் நான் தாங்கள் மகள் அல்ல என்பதை என் கணவர் வாதாடி வழக்கிட்டு நிரூபிக்கும் பொழுது தங்களுக்கு ஏற்படும் அவமானத்தை நான் நேரில் பார்க்க விரும்பவில்லை அதற்காகவே திட்டமிட்டு என் கணவருக்கு செய்தி அனுப்பினேன். அதன்படியே தான் தவறு செய்து விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் என் கணவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் நீங்களும் வழக்கு எதுவும் தொடராமல் விட்டீர்கள் இன்று அவருடன் நான் வடநாடு போகிறேன் தங்களிடம் நேரில் விடைபெற்று தங்கள் ஆசியுடன் செல்வதற்கு பாக்கியமற்றவள் ஆகிவிட்டேன்.
மரணத்தின் அதிபயங்கர வாயிலே அனாதையாய் நின்ற என்னை அபயம் அளித்து ஆதரவு தந்த தங்கள் பொன்னான உள்ளத்தை புண்ணாக செய்துவிட்டு போகிறேன். தவறுதான் என்றாலும் தவிர்க்க முடியாதது. தந்தையே தாயே என்னை மன்னித்து விடுங்கள் இப்படிக்கு உங்கள் அருமை மகள் என்றும் பத்மா என்றும் அழைக்கப்பட்ட கதீஜா”