வருவதாகச் சொன்ன மழை
வரவில்லை
தொகுப்பூதியத் தொந்தரவால்
அல்லலுறும் தொழிலாளி போல
தூவானமும் மண்ணைத் தொட்டுக்
கூடப் பார்க்கவில்லை
மாதக் கணக்காகிவிட்ட
அழுக்குடை வாகனங்கள்
கழுவித் தீர்த்துக்கொள்ள
வானத்தினைப் பிளந்து ஒரு
வழி பிறக்குமென
பார்த்துப் பார்த்து
விழி வீங்கியது தான் மிச்சம்
பள்ளிக்கூடம் போகும் வழக்கம்
பழக்கமாகிக் கொண்டிருந்தாலும்
மழைநாள் லீவுக்குப்
பிள்ளைகள் ஏங்குவது
முன்னெப்போதைப் போன்றே
இப்போதும் இருக்கிறது
எத்தனை முறை மூழ்கித் திளைத்தாலும் மீண்டும்
வாராத போது வருத்தம்
மேலிடத்தான் செய்கிறது
வந்தால் வேண்டாமென்பதும்
வராவிட்டால் வேண்டுவதும்
அரிதிற் காதல்
செயல்களாக இல்லாமல்
தவறாத முழுநேரப்
பணியென்றே ஆகிவிட்டது
மழை வரலாம் தான்
ஏற்கனவே நின்ற வழிகளை
நேர்செய்யாமல் மண்மூடி
மறைக்கிற வகையில்
தப்பிக்கப் பார்க்கிறக்
கற்பிதங்கள் மாந்தருள்
குறையாமல் இருப்பதினால்
பொழிவது பிழையாகினும்
அதன் நிலை ஒன்றுதானே
இத்தனை அங்கிங்கெனாத
இடையூறுகளைக் கண்டும்
சளித்துக் கொள்ளாமல்
பெய்யும் மழையினைப்
பேரன்பு என்றல்லாமல்
வேறெப்படிப் போற்றுவது