நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
முருகனின் திருநீறை நெற்றியில் நேசத்துடன் பூசிக்கொள்ளும் போது பாசவினைகள் ஆசைகள் அனைத்தும் நீங்கப்பெற்று முருகனின் திருப்பாதத்தில் நீங்காமல் இருக்க முருகனின் திருவருளே துணைபுரியும். வேலை ஆயுதமாக உடைய முருகப்பெருமானே! என்னை அன்போடு காத்து, எனக்கான உணவையும் பொருளையும் மிக மிக சௌகர்யமாக பெருக்கி தருவாயாக!
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எதையும் சாதிக்கவல்ல ஆற்றல்களை (சித்திகள்) அடியவர்களாகிய நாம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும். மயிலோடு இருக்கும் முருகன் வாழ்க. அழகிய வேலொடு இருக்கும் முருகன் வாழ்க எங்களுக்கு ஞானம் அளிப்பதற்காக மலைமீது குருவாக இருக்கும் முருகன் வாழ்க குறமகள் வள்ளியோடு வாழ்க வெற்றிமுழக்கத்தோடு பறந்து முருகன் புகழை பறைசாற்றும் சேவற்கொடி வாழ்க உன் புகழை பாடும் என் வறுமைகள் என்னை விட்டு நீங்க வேண்டும.
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
என்னிடம் பல குறைகள் இருந்தாலும், பல தவறுகளை செய்து இருந்தாலும், என்னை பாதுகாக்கும் தாய் - தந்தை முருகப்பெருமான் மட்டுமே குருவாக வந்து வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது ஆகும். முருகப்பெருமானின் அன்பை பெற்றவளான குறமகள் வள்ளி பெற்று எடுத்த பிள்ளை போல அடியேனை அன்புகாட்டி பிரியத்துடன் பாதுகாக்க வேண்டும். உன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டு மனமகிழிச்சியுடன் உனது அருளை தரவேண்டும். முருகப்பெருமான் மீது நம்பிக்கையுடன் வரும் அடியவர்கள்/ பக்கதர்கள் பாதுகாத்து மென்மேலும் வளம் பெற்று வாழும் படி அருள் செய்ய வேண்டும்.
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
முருக பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்பி பால தேவராயன் ஸ்வாமிகள் உருவாக்கி அனைவரும் அறியும் வகையில் எல்லோருக்கும் கொடுத்த கந்த சஷ்டி கவசம் என்னும் இந்த பாடலை நமது உடலை முறைப்படி தூய்மை படுத்தி மனதில் வேறு சிந்திக்காமல் முருகப்பெருமான் சிந்தனையுடன் காலைபொழுதிலும், மலைப்பொழுதிலும் மற்றும் எப்போதும் மனதில் உணரும் படி படிக்கலாம்.
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
இந்த கந்த சஷ்டி கவசத்தை வேறு சிந்தனைகள் கவனம் சிதறாமல் மனதில் உணர்வோடு சிந்தித்து 'ச ர வ ண ப வ' எனும்அட்சரத்தை தொடர்ந்து மனதில் ஓதிக்கொண்டே (சொல்லிக்கொண்டே) இருக்கும் பொது
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ரவ
ப வ ச ரவ ண
வ ச ரவ ண ப
36 அட்சரமாக உரு மாறும் விருப்பத்துடன் திருநீறு (விபூதி) பூசி, அவ்வாறு முருகனை வேண்டி வந்தால் நாம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் ஆளும் மன்னர்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். நமக்கு வசப்பட்டு நாம் நினைப்பதை செயல்படுத்துவார்கள்.
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
நாம் அறியாத நபர்கள் அனைவரும் நம்மை மதித்து வணங்குவார்கள். ஒன்பது கோள்களும் மகிழ்ச்சியோடு நன்மை அளிக்கும். புதிய பொலிவுடன் மன்மதன் போல அழகான பிரகாசமான ஒளி பெற்ற உடம்பு பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் பதினாறு செல்வங்கள் அதாவது
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2. குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
பெற்று வாழ்வார்கள் முருக பெருமான் கையில் எப்போதும் உள்ள வேல் போல எப்போதும் பதினாறு செல்வங்கள் நம்கைவசமாகும்.
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
இந்த கந்த சஷ்டி கவச வரிகளை வீடுபேறு அடைய வழி என நினைத்து துதித்தால் மெய்ப்பொருளாக விளங்கும். முருகப்பெருமானின் அருள் பொங்கும் விழிகளால் நம்மை பார்க்கும் பொது நம்மிடம் இருக்கும் அகப்பேய்கள் அவையாவன
1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை
4) மோகம் – மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை
போன்ற துர்குணங்கள் பயந்து வெருண்டு ஓடும், பொல்லாதவற்றை பொடி பொடியாக்கும், நல்லவர்களாக நம்மை மாற்றி நம் உணர்வில் மெய் எழுச்சி பெற்று நடனம் புரியும்.
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
அனைத்து எதிரிகளையும் வென்று தீய எண்ணங்களை அழித்து நல்லவர்களாக மாற்றும் முருகப்பெருமானை அறிந்தகொண்டது நம் உள்ளம் , சூரபதுமனை வதைத்து அஷ்ட லட்சுமிகளில் (ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி , தனலட்சுமி) ஒருவரான வீரலட்சமி விருந்து படைத்தது முருகப்பெருமானின் திருக்கரம் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பதவிகளை மீட்டு அளித்தார். லட்சுமி மற்றும் தேவர்களுக்கு குருவாக திருஆவினன்குடி அருள்பாலிக்கிறார் பழனி மலையில் குழந்தையாக சிவந்த காலடி போற்றி வணங்குவோம்.
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
நாம் தவறான பாதைக்கு செல்லாதபடி தடுத்து நம் மனதில் குடிகொண்டு நம்மில் முழுவதும் பரவி அழகிய வேலனை வணங்கி புகழுவோம்.
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
தேவர்களின் சேனை தலைவராக போர்புரிந்து சேனாதிபதியை போற்றுவோம், குறத்தி மகளான வள்ளி மனம் மகிழ்ந்து அரசனைப் போற்றுவோம், வல்லமை பொருத்திய அழகான உடம்பை பெற்றவரைப் போற்றுவோம், துன்பத்தை தீர்க்கும் இடும்பா உனைப் போற்றுவோம், கடம்ப மலர்களை சூடும் கடம்பா போற்றுவோம், போரில் வெற்றி பெற்று வெட்சி பூவை சூடும் (தமிழர் மரபு) வேல் ஏந்தியவரை போற்றுவோம்.
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
உயர்த்த மலையான கந்தகிரி பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு மாமன்னராக மயில் போல மனதை கவரும் நடனம் ஆடும், உன் மலர் போன்ற மென்மையான பாதங்களை கதி என சரணம்/ தஞ்சம் அடைகின்றோம். முருகப்பெருமானின் அட்சரமான சரவணபவ சரணம் அடைகின்றோம். ஆறு திரு முகம் ஒளி வீசும் முருகப்பெருமானின் சரணம் அடைகின்றோம்.
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! எனது வார்த்தையானது நாக்கு அசைய வெளிப்படும் போது பொன்னாலான வேலானது விரைந்து வந்து காக்க வேண்டும். இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காக்க வேண்டும்! பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காக்க வேண்டும். முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவில் சிறந்த வேலானதுகாக்க வேண்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பொன்னாலான வேலானது காக்க வேண்டும்! தாமதமின்றி ஒரு நொடியில் நோக்கி அருள வேண்டும். தடைகள் (இடைஞ்சல்கள்) அடித்து விலக்க வேண்டும். முருகனின் அருள் பார்வையால் நம் செய்த பாவங்கள் அனைத்தும் பொடி பொடி தூளாகி ஒழிய வேண்டும்
பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும் என்னை நெருங்கிவராமல் விலக வேண்டும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும்
கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் கொள்ளிவாய் பேய்களும் குறளை எனும் குட்டி பேய்களும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்.
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட
பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு, காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் பல்லக்கில் வரும் பூதங்களும் கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் முருகனின் பக்தரான என் பெயர் கேட்டாலே இடி விழுவதை போல பயந்து ஓடவேண்டும்.
ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
வெறும் கண்ணால் காண முடியாத பதுமைகளும், பூனையினுடைய முடி பிள்ளைகள் எலும்பும், நகங்களும், மயிரும் நீண்ட முடியை உடைய தலையும், மரத்தினால் செய்த பொம்மைகள், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், வீட்டில் தீங்கு விளைவிக்கும் பொருட்டு புதைத்து வைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த பகைவர்களின் கர்வமும் மந்திரித்துச் செய்த மரத்தினால் செய்த பொம்மைகள்.
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
தீய சக்திகளுக்குத் கொடுக்கும் காசும் பணமும், ஆடு கோழி காவு கொடுத்து அதன் ரத்தத்தில் புரட்டிய சோறும், மாந்திரீகம் சொல்லுகின்ற அஞ்சன வித்தையும், சிந்தை கவர்ந்து பித்துப்பிடித்து போகச் செய்யும் மாய மந்திரமும், இந்த மேற்குறிய துஷ்ட செயலை செய்வோர்கள் முருகன் பக்தரான அடியேனை பார்த்தவுடனே நேராக பார்க்கமுடியாமல் இங்கும் அங்கும் அலைந்து எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் பயந்து குலைந்து பேசவேண்டும். பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும் எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும்.
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்
பயந்து நடுநடுங்கவும் அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும், வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும், படியினில் முட்டிக்கொள்ளவும், பாசக்கயிற்றினாலே கட்டி உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! காலும் கையும் ஒடியவும் படி அவர்கள் கதறும் படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
கண்விழிகள் வெளியே பிதுங்கி வருபடியாக மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அனைவரையும் கவரும் அழகனே சூரர் பகை அழித்த அழகனே! கூரிய வேலால் குத்தி அழிப்பாய்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக
முருகனை நன்றாக பிடித்து கொண்டவர்களுக்கு பிரகாசமாக எரியும் சூரியன் வெப்பம் கூட தணிந்து குறைந்து இதமாக இருக்கும்.
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட
புலியும், நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பயந்து ஓடும் படி வேலை விடுவாயாக!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
தேள்களும் பாம்பும் செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஒளிப்பும், நரம்பு சுளுக்குதலும்,ஒரு பக்கத்தலைவலியும், வாதம்(வாயு சம்பந்தமான வியாதி) வலிப்பு, குளிர்நோயும் இழுப்பு நோயும், பித்தநோயும், சூலைநோயும், சயம், குன்மநோயும் சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்,பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்,கடுவன், படுவன் என்னும் சிலந்தியும் கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் பார்த்தவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஓட அருள் புரிவீராக!
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
பதினான்கு உலகமும் என்னுடன் நட்புடன் இருக்க வேண்டும், ஆண்களும், பெண்களும், எல்லோரும், ஆள்கின்ற மன்னர்களும் என்னோடு மகிழ்ச்சியுடன் நல்ல நட்போடு உறவாக இருக்க அருள் புரிய வேண்டும்.
உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
உன்னை போற்றி வணங்க கூடிய "சரவணபவ" எனும் திருநாமம் உடைய சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! எல்லா திசையிலும் புகழ்பெற்று ஒளிரும் ஒளியினை உடையவனே!, பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவி துயரான பாவத்தை போக்கும் சக்தியை உடையவனே!
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!
திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகனே! தேவலோகத்தை காத்து! தேவர்களுடைய கடுமையான சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! கந்தக் கடவுளே! மனித மனம் எனும் குகையில் குடியிருக்கும் குகனே! கதிர் ஒளிபொருந்திய வேல் ஏந்தியவனே! கார்த்திகை பெண்களின் மகனாக வளர்த்தவனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் போரில் வென்று அருள் புரிந்தவனே! இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் மகனே!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற கதிர் ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! குழந்தை வடிவில் பழனி எனும் தலத்தில் தலைவனாக வாழ்கின்ற பால குமாரா! திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்க்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மா மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே! சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு ஆள்பவனே!
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
கரிய மேகங்களை போல கூந்தலை உடைய கலைமகளான சரஸ்வதி தேவி ஞானம் சிறக்குமாறு எனது நாவில் இருந்து, அடியேன் உன் புகழைப் பாட வேண்டும். என்னோடு எப்போதும் இருந்து வரும் என் தந்தை போல வழிநடத்தும் முருகனை நினைத்து நெஞ்சம் நெகிழ பாடினேன் ஆடினேன். எல்லையற்ற அனந்த நிலை ஆடிக்கொண்டே திருஆவினன் குடியை (பழனி) அடைவேன்.
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம் போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும், பன்னிரண்டு செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும் அழகுபொருந்திய திருமார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
பலவகையான ஆபரணங்களும் மார்புப் பதக்கமும் நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும் அணிந்து மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க அழகுடைய மேன்மையான வயிறும், கொப்பூழும் அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும்
நவ ரத்தினங்கள் பதித்த பார்ப்பதற்கு வரிசையாக அழகுற அமர்ந்துள்ளது
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
இரண்டு தொடைகளின் அழகும் இரண்டு முழங்கால்களும் ஓசை எழுப்ப அழகிய திருவடிகளில் சிலம்பு ஒலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
அகரமுதலென தொடங்கும் திருப்புகழில் இதே ஓசைகளை அமைத்திருப்பார் அருணகிரிநாதர் ஸ்வாமிகள். பிரபஞ்சம் உருவான பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் என அருணகிரிநாதர் ஸ்வாமிகள் கூறியுள்ளார். உதாரணமாக தடதட வென ரயில் வந்தது, சடசட என மழை பொழிந்தது என்ற ஒலிகளை விவரிக்கும் (இரட்டைக்கிளவி) சொற்கள் ஆகும். அது போல செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை முருகனின் சிலம்பொலி ஓசை போல மறைபொருளாக பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இவை தாள ஜதிகளுடன் முருகனை அழைக்கும் மந்திர வார்த்தைகள் ஆகும். இந்த அரிய மந்திரங்களை முருகனின் சிலம்பொலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளனர்.
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! உயிர் சக்தியை உள்ளடக்கிய மூலாதார பரம்பொருளே, மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! மயில் என்பது ஓம்கார வடிவாகும், என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன், முன்னதாகப் புறப்பட்டு முந்தி வரும் முருகனின் வேல். உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கின்ற லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க லீலா லீலா லீலா என்னும் பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து என்னைக் காத்து அருள் செய்வாயாக! என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன். அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை புனித வேல் காக்க வேண்டும். ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும்.
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! காக்க வேண்டும்! இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காக்கவேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்! என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்தியவேல் காக்க வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லி நாக்கை செம்மை கொண்ட வேலானது காக்க வேண்டும். கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காக்க வேண்டும். எனது இளமையான கழுத்தை இனிமையான வேல் காக்க வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகியவேலானது காத்தருள வேண்டும்.
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காக்க வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காக்க வேண்டும். முதுகுப் புறத்தினை அழகுடன் முதுகை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காக்க விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காக்க வேண்டும்.
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காக்க வேண்டும்! சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காக்க வேண்டும்! நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காக்க வேண்டும்! ஆண்குறி இரண்டும் கூர்மையாகிய வேலானது காக்க வேண்டும்! இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காக்க வேண்டும்! இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேல் காக்க வேண்டும்! ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காக்க வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காக்க வேண்டும்!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்! நாக்கில் சரஸ்வதி நல்ல துணை ஆக இருக்க வேண்டும்! (நாபி) உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காக்க வேண்டும்! மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காக்க வேண்டும்!
கந்த சஷ்டி கவசம்
“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை”.
கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை (துதிப்போர்க்கு) படிபவர்களுக்குக் வலிமை வாய்ந்த கொடிய வினை (வல்வினை போகும்) இடர்ப்பாடுகள் துயரங்கள் போகும் (துன்பம் போகும்) நெஞ்சில் பதியும் படி. உணர்ந்து முழுமனதோடு ஓதுபவர்களுக்குக் (பதிப்போர்க்கு) செல்வம் சேரும் மேலும் வந்த செல்வம் குறையாமல் பெருகும் (கதித்து ஓங்கும்) ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்கள் இல்லாத தூயவன் (நிமலன்) அருளால் ஆழ்ந்து தியானம் மூலம் இறைவனை உணரும் நிலை (நிஷ்டை) கைகூடும்.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
அமர்களாகிய தேவர்களின் துயரை போக்க போர் புரிந்த குமரன் காலடி நோக்கியே நம் மனம் வணங்கி நிற்கட்டும்.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
சூரசம்காரம் எனும் சஷ்டி பொழுதில் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை மனதிற்குள்ளே கூறிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு உதவும் செங்கதிர் (சிவப்பு நிறம் கொண்ட) வேலோன்.
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட கிண்கிணி என்னும் மணிகள் அசைந்து ஆட
எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு கையில் வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் வந்தருள்வாராக! வேல் ஆயுதம் கொண்டவரே வருக!!மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்வந்து அருளுக!
இந்திரன் முதலாக இந்திரன் (கிழக்கு) – தேவர்களின் அரசன்.,அக்னி (தென் கிழக்கு) – நெருப்பு கடவுள்,எமன் (தெற்கு) – இறப்பு கடவுள், நிருத்தி (தென் மேற்கு) – அழிவு மற்றும் அழியாத தன்மையுடைய தெய்வம்,வருணன் (மேற்கு) – கடல் மற்றும் நீரின் கடவுள், வாயு (வட மேற்கு) – காற்று மற்றும் வாயுக்களின் கடவுள், குபேரன் (வடக்கு) –செல்வத்தின் கடவுள்,ஈசானன் (வட கிழக்கு) – ஈசனின் (இறைவனின்) ஒரு வடிவம்.எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து வந்து அருளுக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
தேவேந்திரனின் மருமகனே! வந்து அருள்க அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் கந்தக்கடவுள் வந்து அருள்க! ஆறு திருமுகங்களைக் கொண்ட தலைவனே வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக! சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! விரைவாக வருக சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
ரவண, பவச, ரரா. ரிவண பவச ரி ரி "சரவணபவ' என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ''போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப் பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும்.
விணபவ சரவண வீரா நமோ நம-சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர மூர்த்தியாக விளங்கும் வீரரே உம்மை நான் வணங்குகிறேன். நிபவ சரஹண நிற, நிற நிறென-ஆறெழுத்து மந்திரத்தின் ஒளிவடிவமாய் பிரகாசிக்கின்ற. சரவணப் பொய்கையின் வீராதி வீரன் இறைவன், தனது வாகனமான மயிலின் மீது வந்தடையும் அவனை வணங்குகிறோம். அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்களின் வீரத் தலைவனாக இருப்பவரை வணங்குகிறோம்.
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
என்னை ஆட்கொண்டு அருளும் சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் கையில் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும் பரந்து விரிந்த பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க என்னைக் காக்க வேகமாக வந்தருள்க!
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள் இது 'ஈம்,' 'கிள்ம்,' 'சௌம்' என்ற பீஜ மந்திரங்கள் குறிக்கிறது. 'பீஜ' அல்லது 'விதை' என பொருள் சொற்களின் தொடராக இருந்து, அதற்கு ஒரு தனிப்பட்ட 'சக்தி'யையும் அளிக்கிறது.
பீஜ மந்திரங்களில் நுண்மையான மற்றும் மர்மமான உள் அர்த்தம் உள்ளது.
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்: விழிகளும், கரங்களும் தெய்வீக அடையாளங்களுடன் இணைந்து, படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தெய்வீக பண்புகளை குறிப்பிடுகின்றன. உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்: உய்யும் ஒளியாகவும் (தெய்வீக பிரகாசம்-அருட்பெரும் ஜோதி), உயிரின் ஆதியாகவும், செழிப்பும் காத்திடும் ஆற்றலாகும். கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்: கரங்களிலும் ஒளி, இந்த ஒளி தெய்வீக காந்தம் மற்றும் சண்முகனின் பிரகாசமான உருவம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. நிலைத்து நிற்குமாறு எனக்கு முன் நாள் தோறும் ஒளிவீசுகின்ற ஆறுமுகனாகவும் நீயும் உன்னதமான, தனித்துவமான ஒரு ஒளி “அருட்பெரும் ஜோதி” அல்லது சிறப்பு ஆறுமுகனின் மகிமையுடன் பொருந்தி, மிக உயர்ந்ததாக இருக்கும், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சிவ அருளை பெற்று ஒவ்வொரு நாளும் மேலோங்க நம் மனத்தில் குடியிருக்கும் முருகன் (குகன்) வந்து அருள்க
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்
கந்த சஷ்டி கவசம் என்றல் என்ன?
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌணர்னமிக்கும் அடுத்து வரக்கூடிய ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். செவ்வாய் அதிபதி முருகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி,
சஷ்டி என்பது சூரனோடு முருகன் போர் புரிந்த காலம் ஆகும். போரிலே மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் தன்னோடு வைத்துக் கொண்டார். இதனை சங்கரன் மகன் சட்டியில் மாவரத்தான் என்று வட்டார மொழிச் சொற்களில் கூறுவது உண்டு. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை நோக்கி தொழுவது சஷ்டி விரதம் ஆகும்.
சஷ்டி பொழுதில் கணவன் மனைவி இருவரும் இணைந்து விரதம் இருந்தால் மக்கட் பேரு கிடைக்கும். இதனை “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவது உண்டு. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்றும் கூறுவார்கள்
சஷ்டி என்றால் ஆறு, ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். மனக்கவலை நீங்க ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன். முருகனை வணங்க எல்லா தீய வினைகளும் ஒழியும் வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். பழனியில் கிரிவலப் பாதையில் பலரும் நோயினால் அவதிப்படுவதை பார்த்து மனம் வருந்தி அதனை தீர்க்க முருகனை வேண்டி இயற்றப்பட்ட பாடல் ஆகும்.
கந்த சஷ்டி கவசம் என்ன பயன்?
இந்த கவசத்தை படிப்பதால் அல்லது பாடுவதால் நமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். இதில் உள்ள 240 வரிகளை தொடர்ந்து வாய் திறந்து படுவதால் நாளமில்லா சுரப்பிகள் சீராக வேலை செய்யும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் குணமடையும், மனஅமைதி கிடைக்கும், புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். உணர்ந்து முழுமனதோடு பாட வேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் மனதார நினைத்து சரி படுத்துவது யோகக் கலையில் ஒருவித முறையாகும். இதனை மறைப்பொருளாக சஷ்டியில் கொண்டுள்ளது.
கொடிய விஷமும் கண்களுக்கு, தெரியாத பில்லி சூனியங்களும், சஷ்டியை படிக்க படிக்க நம்மை விட்டு விலகும். இதனை எந்த நேரத்திலும் படிக்கலாம். தீராத பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் முருகன் தீர்த்து வைப்பார் அல்லது தீர்க்க வழி காட்டுவர்.
ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.
முன்னுரை
அகவும் மயிலும், கூவும் சேவலும், கூரான வேலும், பொங்கும் கடலும், பொதிகை மலையும், ஒதும் தமிழும் சிந்தையுள் நிறைந்த சித்தர்கள் வழிபடும் சிவமைந்தன் பெயரை, குறை தீர்க்க குன்றம் தோறும் குடியிருக்கும் குமரனையே கூறும்.
அறிமுகம்
முருகனின் வரலாறு என்றால்
பகுத்தறிவாளர்களும் அறிவியல் சிந்தனையாளர்களும் கந்தனை கடவுளாக பார்ப்பதில்லை இருப்பினும் குறமகள் வள்ளியை மணந்த குமரனை குறிஞ்சி நில தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர் அவர் முன்னர் ஒரு காலத்தில் இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்து உலகத்துக்காக போர் புரிந்து மக்களை காப்பாற்றி நல்வழி காட்டும் தலைவனாய் இருந்திருப்பார் என ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஷண்முகம் (ஆறுமுகம்)
ஈஸ்வரனின் "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருமுகம்- அதோ முகம் சேர்ந்து நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த அருட்பெரும் ஜோதி ஆறுமுகங்களாக மாறியது.
ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்)
ஓகம் என்ற தமிழ் கலையே வடமொழியில் யோகம் என பெயர் பெற்றது. இரண்டாக உள்ள பொருளை ஒன்று சேர்ப்பது ஓகம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும் விஞ்ஞானமே ஆகும். ஓகக் கலையின் நாயகன் முருகனே, மூலாதாரம்-ஓங்காரம், நிராகுலம் (சுவாதிஷ்டானம்)-நிலம், மணிப்பூரகம்-நீர், அனாகதம்-நெருப்பு, விசுத்தி-வளி(காற்று), ஆக்கினேயம்- வான்(ஆகாயம்) ஒரே நேர்கோட்டில் நிற்க வெளிப்படும் பேராற்றல் முருகன் என்ற அறியப்படுகிறது,
தமிழ் ஆயுதம் -வேல்
அரிதான யோக முறையால் புருவ மத்தியில் சக்தியாக திரண்டு சுழலும் உன்னத நிலையே முருகனின் அவதாரமாகும். கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள் ஃ இந்த மூன்று புள்ளிகளுக்கு இடையே தமிழின் ஆயுத எழுத்தான ஃ வடிவில் விரிவடையும் இந்தப் புள்ளிகளையும் 6 மையங்களையும் ஒன்று சேர்த்தால் வேல் வடிவில் உருவம் தோன்றும், யோகத்தில் இந்த உயர்ந்த நிலை அடையும்போது அவரது உடம்பு சூரியனைப் போல பிரகாசிக்கும் அனைத்து வித சித்திகளும் கைகூடும்
துரியம் (Crown or உச்சிமண்டை )
மனித உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன. இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாகவும் சுழுமுனை முருகனாகவும் உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள். மனித உடம்பு இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர இணையும்போது அங்கே ஏழாவது சக்கரமான துரியம் (சகஸ்ரநாமத்தில்) நிலைக்குச் செல்லும்.அப்போது ஓரு மனிதன் இறை தன்மை எனும் தெய்விக நிலையை அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது மருத்துவர்கள் பயன்படுத்தும் முதுகு தண்டில் இரண்டு பாம்புகள் பின்படுவது போல் உள்ள அடையாள குறிகளும் முருக தத்துவமே.
ஆறுமுகம்(நதி)
ஆறுமுகம் என்பது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் ஆறு சக்கரங்களை குறிப்பதாக கூறலாம். எண்ணிக்கை அடிப்படையில் ஆறு என்றும் மற்றும் ஓடும் நதிகளை ஆறு என்று கூறுவோம். இவை அனைத்தும் முருகனுக்கு உவமையாக இருக்கலாம். மலைகளிலே மழையாய் பொழிந்து, சுனையாய் ஒன்றிணைந்து, அருவியாய் கொட்டி, நதியாய் பெருகி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்த்து, பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகி. பெருங்கடலில் கலக்கும் ஆறு போல முருகனும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவ சக்திக்கு மைந்தனாக அவதரித்து குறிஞ்சி நிலத்தில் தவழ்ந்து ஆறுமுகமாக ஒன்றிணைந்து சூரனை அழிக்க வீறு கொண்டு எழுந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருளை வாரி வாரி கொடுத்து பிறப்பு இளமை முதுமை நோய் இறப்பு என்கின்ற கர்ம வினை கொண்டு அவதியுறும் பக்தர்களை குருவாய் அமர்ந்து ஞானம் கொடுத்து பரமாத்மா எனும் பெருங்கடலில் சங்கமிக்க ஞான வழிகாட்டியாக இருக்கிறார்.
ஆற்றுப்படுத்தல்
ஆறு என்ற சொல்லுக்கு ஆறுதல், ஆற்றுப்படுத்தல் என்ற பொருளும் உண்டு. சூடான தேநீர் சற்று ஆறிய பின் குடிக்க இதமாக இருக்கும். வேகமாக ஒருவர் ஓடிய வந்த பின்பு அவருடைய மூச்சு வேகமெடுக்கும், (இளைப்பு) அப்போது ஓய்வெடுக்கும் நேரம் மூச்சுக்காற்று சீராகும். (இளைப்பாறு). சாப்பிட்டு விட்டீர்களா என கேட்பதற்கு பதிலாக பசியாறியாச்சா (பசியாற்று) எனவும் கேட்பது உண்டு. ஏதோ ஒரு விஷயத்திற்கு நம்முடைய நெஞ்சம் அஞ்சும் போது மனம் பதைக்கும் போது யாமிருக்க பயமேன் என ஒருவர் நம்மை தேற்றும் போது நம் மனம் ஆறுதல் அடையும்.
ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்
இங்கே மேற்கண்ட பதத்தில் ஆறு என்பது தணிப்பு/ தணிக்கை எனப் பொருள் கொள்ளலாம். தணிகை என்ற சொல்லும் (திருத்தணிகை தணிகாசலம் தணிகை வேல்) முருகனுக்கே உரியது,
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
என்ற திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஆறு என்ற சொல் ஆறுதல் console என்ற பொருளிலே கையாண்டுள்ளார்.
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை
முருகனை குறித்த பாடலில் கவியரசு கண்ணதாசன் கையாண்டுள்ளார்
அபாயத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கு அபய கரம் நீட்டும் முருகனின் ஆறுதல் அளிக்கும் முகமே ஆறுமுகம் ஆகும்.
ஆறு எழுத்து மந்திரம்
சிவனை வழிபடுவோர் நமசிவாய என் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் அதுபோல முருக பக்தர்களுக்கு சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரம் ஆகும் சரவணபவன்-நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் சரவணபவ - என்பது ச–செல்வம், ர-கல்வி, வ-முக்தி, ண-பகை வெல்லல், ப-கால ஜெயம், வ–ஆரோக்கியம் குறிக்கும் அல்லது ச(கரம்)-உண்மை, ர(கரம்)-விஷயநீக்கம், அ(வ)(கரம்)-நித்யதிருப்தி, ண(கரம்)-நிர்விடயமம், ப(கரம்)-பாவநீக்கம், வ(கரம்)-ஆன்ம இயற்கை குணம் என விளக்கங்களை அளிக்கின்றனர்
காலங்களும் கார்த்திகை நட்சத்திரமும்
வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டமைப்புகளுக்கு கார்த்திகை நட்சத்திரம் என பெயர் வைத்தனர்.கார் என்றால் குளிரைக் குறிக்கும் சொல் தீ என்றால் வெப்பத்தை குறிக்கும் சொல் இவ்விரண்டையும் இணைத்து கார்த்திகை என அழைத்தனர். இந்த கால மாறுபாட்டை கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணித்தனர்.
ஆறு சிறுபொழுது
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நாள் எடுக்கும் இதனை ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர் 1.வைகறை( 2 am to 6 am) 2.விடியல்(6 am to 10 am). 3.நண்பகல்(10 am to 2 pm), 4.எற்பாடு(2 pm to 6pm), 5.மாலை (6 pm to 10 pm), 6.யாமம்(10 pm to 2am) ஆகும்.
ஆறு பெரும்பொழுது
சூரியனை பூமி சுற்றிவர ஒரு வருட காலமாகும் இதனையும் தமிழர்கள் ஆறு காலங்களாக பிரித்தனர் இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி), கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக் காலம் (மார்கழி, தை), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி) ஆறுமுகனை வழிபடும் தமிழர் காலத்தையும் நேரத்தையும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணக்கிட்டுஆறு பிரிவுகளாகவே பிரித்தனர் இதன் மூலம் காலநிலை அறிந்து அதற்கு ஏற்ப வேளாண்மை செய்தனர்.
சூரசம்காரம்
முருகனை குறிஞ்சி நிலத்தலைவன் என்பது மட்டும் உண்மையானால் சூரசம்ஹார போர் மனிதர்களுக்கும் மனிதர் அல்லாத விலங்குகளுக்கும் நடந்திருக்கும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனை மற்றும் சூரனை தோளில் சுமந்து போரிட்டு காட்சிப்படுத்தினர் எனவே சக்கரம் மற்றும் ரதம் கண்டறியாத காலமாக இருக்கும் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலமாக இருக்கும். சூரசம்கார விழாவில் சுரன் யானை முக வடிவிலும் சிங்க முக வடிவிலும் அசுரமுக வடிவிலும் முருகனோடு போர் புரிகின்றான். சூரனின் தங்கை அஜமுகி (ஆடு முகம்) என்றும் போருக்கான முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பெரிய கோள்களில் காணப்படும் யாழி முக்கிய வகையாக மூன்று வகையாக பிரிக்கலாம் ஆட்டுத்தலை கொண்ட மகர யாளி, யானை தலை கொண்ட கஜ யாளி, சிங்க தலை கொண்ட சிம்ம யாளி. யானை குதிரை சிங்கம் புலி மயில் குரங்கு ஆகிய விலங்குகளை தெய்வ வாகனமாகவும் வணங்கும் இந்து சமயம் யாளியை வணங்குவதில்லை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துள்ளது. அரண்மனைகளில் மன்னர் வேட்டையாடிய பொருளை காட்சி பொருளாக வைப்பது வீரத்தை வெளிக்காட்டும் தமிழ் மரபு அதுபோலத்தான் முருகனின் வீரத்தையும் வெளிகாட்ட யாளியை காட்சிப்படுத்திருக்கக்கூடும் ஆனால் பூஜை செய்வது இல்லை.
வேலுண்டு வினையில்லை!
மலைகளிலும் காடுகளிலும் வாழ்வோர்கள் கையில் உயர்ந்த கம்பு/தடி எப்போதும் வைத்திருப்பார்கள் விஷச் செடிகள் பூச்சிகள் விலங்குகள் இவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் மேலும் மலையற்றத்தின் போது கீழே விழாமல் இருக்க கையில் கம்பு இருப்பது மிக அவசியம் இன்றும் பெரிய மலைகளில் ஏறுபவர்கள் கையில் குச்சியில் பிடித்துக் கொண்டு ஏறுவது நடைமுறையில் உள்ளது. மலைகளில் வாழ்ந்த முருகன் கையில் வேல் வைத்திருப்பது இயல்புதான். சூரன் படை மிருக கூட்டம் எனில் போர் என்பது எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலாகதான் இருக்கும் எனவே கூர்மையான வேல் எப்போதும் கையில் இருப்பது தன்னையும் தன் குடிமக்களையும் காப்பதற்காகவே.
மயிலுண்டு பயமில்லை
மயில் தொலைதூரம் பறக்கின்ற பறவை கிடையாது சிறிய தூரம் மட்டுமே பறக்கும் யானை குதிரை ஒட்டகம் போன்ற விலங்கு போல் மனிதனை சுமந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் கிடையாது. அதேசமயம் முருகன் மயில்லோடு தான் இருக்கிறான் காரணம் என்னவெனில் மயில் முருகனைப் போன்றே அழகான ஆண் இனம் மேலும் மழை வருவதை முன்னரே உணர்த்தும் அறிவு படைத்தது. கொடிய விலங்குகள் தாக்குதலை முன்னரே உணர்ந்து பிற உயிரினங்களுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மேலும் தன் இருப்பை எப்பொழுதும் தன் குரலால் ஒலித்துக் கொண்டே இருக்கும் (ஆகவும்). சூரன் ஒரு விலங்கினமாக இருந்தால் போர் என்பது எதிர்பாராத தாக்குதல் அச்சமயத்தில் அபாய ஒலியை எழுப்பவும் முருகன் இருக்கும் இடத்திற்கு அறிந்து கொள்ளவும் செய்தி அனுப்ப முருகனின் மயில் உதவி செய்திருக்கும். மயில் மற்ற எல்லா வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் வித்தியாசமானது பழகிய மனிதரை தவிர வேறு யாரிடத்திலும் நெருங்கி பழகாது குறிப்பிட்டு நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகும். சேவலுக்கும் ஏறக்குறைய இதே குணாதிசயம் உண்டு.
கந்தன்உண்டு கவலை இல்லை
மறைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் ஈட்டு வீரனை அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு முருகன் நினைவாக எழுப்பப்பட்ட தூண் கந்து என்று அழைக்கப்படும். முருகன் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல சித்தர்கள் வணங்கும் சித்தராக தலைசிறந்த ஞானியாக இருந்தார் பிறப்பு இளமை முதுமை கர்மவினை நோய் இறப்பு என்னும் இயற்கை விதிகளை அறிந்து அதனை மாற்றும் வல்லமையும் பெற்று இருப்பார். முருக அடியார்களான அகத்தியர், ஔவையார், போகர் புலிப்பாணி அருணகிரிநாதர் வள்ளலார் இவர்களுக்கும் இயற்கை விதியை மாற்றியமைக்கும் வல்லமையோடு இருக்கிறார்!. பேசாத குழந்தையான குமரகுருபரரை பாட வைத்தது முருகன் அருளே! பாம்பன் சுவாமிகள் முறிந்த எலும்பை சரி செய்ததும் கந்தனின் கருணையே! ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 14/02/1984, 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என திருவள்ளுவரின் வாக்கின்படி முருகன் போர் வீரனாக, தலைவனாக மட்டுமல்ல கருணையே வடிவான இறைவனாக மாறியவன். அபாயத்தில் அஞ்சி இருப்பவருக்கு அபய கரம் நீட்டும் ஆறுதல் அளிக்கும் முருகனின் திருவருள் என்றென்றும் தொடரும்
நூறு சதவீத வாக்கு-அதுவே நமது இலக்கு
கட்டாய வாக்குப் பதிவு மீறினால் அபராதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு குடியரசு ஆட்சி முறை என்ற கொள்கையின் அடிப்படையில் தன்னை கட்டமைத்துக் கொண்டது முதல் தேர்தல் 1951 முதல் இன்று வரை 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளித்து வருகிறது. படித்தவர்- படிக்காதவர், ஆண்- பெண், செல்வந்தர்- ஏழை, ஜாதி, மதம், இனம், மொழி என எந்தவித வேறுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமையை அளித்தது போற்றுதலுக்குரிய விஷயமாகும்
மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நாடான இந்தியா இன்று வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மற்றும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உலகத்தின் அனைத்து நாடுகளும் வியந்தும், பாராட்டியும், பின்பற்றியும் வருகிறது
இந்திய ஜனநாயகத்தின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை முறையாகும்.
பாகிஸ்தான் வங்காளதேசம் சில ஆசிய நாடுகளில் மற்றும் உலகின் பல நாடுகளில் ஆங்காங்கே ராணுவ புரட்சிகளும் சர்வாதிகாரமும் தலை தூக்கினாலும் இன்று வரை மக்களைச் சத்தியத்தின் வழியிலும், அறவழியிலும் தொடர்ந்து நடத்தி வருவது இந்திய ஜனநாயகத்தின் வாக்குரிமை தான் முக்கிய காரணமாக உள்ளது
கொடுங்கோல் ஆட்சியாக இருந்தாலும் , கோமாளி ஆட்சியாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு சொட்டு ரத்தம் போடச் சிந்தாமல் மக்கள் நினைத்தால் தூக்கி எறியும்.. வாய்ப்பு தானாகவே இந்திய மக்களுக்கு வாக்குரிமையினால் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு ஈடு இணையற்ற சக்தியாகும்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை தான் தவிர அது கடமை அல்ல . வாக்கு அளிப்பது ஒரு தனி மனித உரிமை எனில் வாக்களிக்க மறுப்பதும் சுய விருப்பத்தைச் சார்ந்ததாக உள்ளது
ஒரு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் சுமார் 3,800 கோடிக்கு மேல் செலவு செய்கிறது இது தவிர அரசு ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும் துணை இராணுவத்தினர் என்று பலரது உழைப்பும் சேர்ந்துள்ளது
ஒரு வாக்குச்சாவடிக்குக் குறைந்தபட்சம் நான்கு முதல் பத்து நபர்கள் தேவைப்படுகிறது மேலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் ஒரு வாக்குச் சாவடிக்கு 5 முதல் 50 காவலர்கள் தேவைப்படுகின்றனர் பதட்டமான வாக்குச்சாவடி என்றால் துணை ராணுவத்தின் பங்களிப்பும் அதிகம் இவ்வாறாக ஒரு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு சுமார் 12 லட்சம் வாக்குச்சாவடிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அமைக்கிறது
ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முன்னதாக தயாராகிறது வாக்காளர்களின் பட்டியல் இறுதி செய்வதற்கும்,எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும் மற்றும் எவ்வாறு வாக்கு இயந்திரத்தைக் கையாள வேண்டும் என மாவட்டம் தோறும் பலமுறை பயிற்சி வகுப்புகளும் நடக்கிறது . இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கத் தோராயமாக ஒரு கோடி நபர்களுக்கு மேல் உடல் உழைப்பினாலும், சுமார் 4000 கோடி மக்களின் வரிப்பணமும் வாக்குரிமை நிலை நாட்டச் செலவு செய்யப்படுகிறது.
இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம்
Election year - Percentage
1951–52 —- 44.87%
1957—---------- 45.44%
1962—---------55.42%
1967—----------61.04%
1971—---------55.27%
1977—----------60.49%
1980—-------56.92%
1984—--------64.01%
1989—--------61.95%
1991—-------56.73%
1996—-------57.94%
1998—------61.97%
1999—-------59.99%
2004—-------58.07%
2009—----------58.21%
2014—--------66.44%
2019—---------67.40%
முதல் தேர்தலில் இருந்தும் இன்று வரை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை பொருத்தமட்டில் 67.4 சதவீதம் தான் அதிகபட்ச வாக்கு சதவீதமாகும் சராசரியாக 58% மக்கள் மட்டுமே தன்னை யார் ஆள வேண்டும் என்பதை உறுதி செய்கின்றனர் சராசரியாக மூன்றில் ஒரு நபர் எப்போதும் வாக்களிப்பதில்லை.
இந்திய ஜனநாயகத்தை மூன்றில் ஒருவர் புறக்கணிக்கிறார் இதற்கான காரணத்தைத் தேடும் போது, மக்களுக்கு வேட்பாளர்கள் யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று காலம் காலமாகக் கூறி வந்தனர் இது குறித்து பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களின் பேசப்பட்டு இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது உச்சநீதிமன்றம் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஓட்டுப் பதிவு சதவீதத்தை உயர்த்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது 2014 ஆம் ஆண்டு நோட்டா (NOTA- None Of The Above) என்ற புதிய முறையைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியது அதன் பிறகு நடந்த இரண்டு பொதுத் தேர்தலில் சராசரியா 58 சதவீதம் வாக்கு மீதம் 66% ஆக உயர்ந்தது ஆனால் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நோட்டாவிற்கு 2% இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவானது
மேற்கூறிய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது தேர்தலில் புறக்கணிப்பதற்காகவோ, வேட்பாளர்கள் விரும்பாத காரணத்தினாலோ மக்கள் ஓட்டளிக்கத் தவறுகின்றனர் என்பது உண்மை இல்லை
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைக் கவரும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது இவ்வாறு பெரும் வெற்றியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஊழல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது
இதனால் சமுதாய அக்கறையும் நற்சிந்தனையும் தூய எண்ணம் கொண்ட நல்லவர்கள் அரசியலில் தேர்ச்சி பெற முடியவில்லை. மேலும் இந்த அவல நிலை தொடர்வதால் பொதுவாக இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் குறைந்து கொண்டே செல்வது வேதனைக்குரியது
இந்த காலத்தில் இளைஞர்கள் குறைந்தபட்சம் தன்னுடைய நாடாளுமன்றத் தொகுதி எது? சட்டமன்றத் தொகுதி எது? நாம் எந்த தேர்தலில் ஓட்டு அளிக்கிறோம், யார் வேட்பாளர்கள் என்ற அடிப்படையே அறியாமல் இருப்பது மிகப்பெரும் கவலைக்குரியதாகும்
அரசியலில் மாற்றத்தை விரும்பும் எல்லோருடைய கனவும் நிறைவேற வேண்டுமென்றால் இந்தியாவில் தேர்தலில் 100% ஓட்டளிக்கும் பங்களிப்பு வேண்டும் அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் கட்சிகள் தனது வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பார்கள். சராசரியாக 67% ஓட்டுப் பதிவு நடக்கும் பொழுது இருமுனை போட்டி என்றால் கூட 34 சதவீதம் ஓட்டு வாங்குவார் வெற்றியாளராக ஆகிறார் பலமுனை போட்டி இருந்தால் 20% குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றியாளராகக் கருதப்படுகிறார் உண்மை நிலவரம் என்னவெனில் நூற்றுக்கு 80 பேர் புறக்கணிக்கப்படும் நபர் இந்திய நாட்டின் சட்ட இயற்றும் அதிகாரத்தைப் பெறுகிறார் என்பது வேதனைக்குரியது.
படித்த இளைஞர்களும் , உயர்மட்ட வகுப்பினரும் வாக்குரிமை மற்றும் அதன் அவசியம் குறித்துச் சிந்திக்க மறுக்கின்றனர் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் இருப்பதற்கு என்று எந்தவித சிறப்புக் காரணங்களோ காரியங்களும் இல்லை “நாம் வாக்களித்து என்ன நடக்கப் போகிறது?” என்ற ஒரு மந்த புத்தியும், சோம்பேறித்தனமும் வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணம் இந்த நிலை மாற கட்டாய ஓட்டுப் பதிவு முறையை Compulsory Voting இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் வேறு சில வசதிகளையும் செய்து முழுமையான மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் மக்கள் தொகையில் சிறிய எண்ணிக்கையில் நாடுகளின் இந்த முறை உள்ளது சிங்கப்பூர் ஆஸ்திரேலியா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறை உள்ளது இந்த நாடுகளில் சிறந்த ஆட்சி முறை இருப்பதும் கவனிக்கத்தக்கது
தினேஷ் கோஷ்சாமி ஆணையம் 1990 கட்டாய வாக்குப்பதிவு முறையை நிராகரித்தது அதனை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன என்ற காரணத்தினால் மறுத்தது. 1990 காட்டிலும் இப்போது தொழில் நுட்ப வசதிகள் மேம்பட்டு உள்ளனர்
ஓட்டளிக்க மறுப்பவர்களுக்குத் தண்டனை அளிப்பதைக் குறித்து ஆய்வு செய்ய 2001 ஆம் ஆண்டு மத்தியக் குழு ஒன்றை அமைத்தது ஓட்டளிக்காதவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் செயல்படுத்துவதிலும் பல நடைமுறை சிக்கலைச் சந்திக்க நேரிடும் எனக்கூறி நிராகரித்தது.
100 சதவீதம் வாக்கு பெற சில யோசனைகள்
தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணம் இருந்தால் அது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கும் அரசாங்கத்திற்கும் குறிப்பிட்ட காரணத்திற்காகப் புறக்கணிக்கிறேன் என்று தேர்தலுக்கு முன்னதாகவே ஆன்லைனிலோ தபால் மூலமாகவோ தெரிவித்திருக்க வேண்டும் இதற்கு உரியத் தொழில் நுட்ப வசதிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் அதன் பின் சம்பந்தப்பட்ட அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்
தேர்தல் நாள் முடிந்த பிறகு வாக்களிக்காதவர் அதற்கான சரியான காரணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்குரிய ஆவணங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும். காரணங்கள் சரியாக இருப்பின் அவருக்கு வாக்களிப்பதில் விடுப்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்
திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வெளியூரில் இறந்து விட்டால் அதன் காரணமாக ஓட்டளிக்க இயலவில்லை என்றால் ஓட்டளிப்பதில் விடுப்பு என்று ஏற்றுக் கொள்ளலாம்.
தேர்தல் புறக்கணிப்பு அல்லது தேர்தல் வாக்கு விடுப்பு இல்லாமல் காரணமின்றி வாக்கு அளிக்காமல் இருப்போருக்கு அபராதம் அளிக்க வேண்டும் குறைந்தபட்சம் ரூபாய் 50. முதல் 500 வரை அபராத தொகையாக நிர்ணயிக்கலாம்
இவ்வாறு செய்தால் பெரும்பான்மையோர் தனது வாக்கு எங்கு உள்ளது என்பதிலும் எங்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முன்னரே சரிபார்த்து வாக்களிப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும் அவ்வாறு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர் அபராத தொகையைச் செலுத்துவதால் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு பெரும் தொகை கிடைக்கும். அபராதம் என்பதன் நோக்கம் 100 சதவீதம் வாக்கு என்ற இலட்சியத்தை அடைவதற்காக மட்டுமே
தற்போதுள்ள நவீன யுகத்தில் இதனைச் செயல்படுத்துவது என்பது எளிதான காரியம் ஏற்கனவே இந்தியாவில் ஆதார் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் இணைத்துள்ளனர். அதுபோல ஆதார் அடையாள அட்டை வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டுள்ளது எனவே அபராத தொகை வசூலிப்பதில் பெரும் சிக்கல் நீடிக்காது. அபராதம் செலுத்தத் தவறினால் வரி வசூல் செய்யும் நடைமுறை போல் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இளைஞர்கள் அடிப்படை அரசியல் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கக் கட்டாய வாக்குப்பதிவு முறை சிறந்த யுத்தியாக இருக்கும்.
மேற்கூறிய யோசனைகள் நடைமுறைக்கு வந்தால் இந்தியா வல்லரசாகவும் கனவை மெய்ப்படவைக்கும் முக்கிய சக்தி சக்தியாக விளங்கும் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும்
பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் பரிதாப நிலைக்குத் தள்ளப்படக்கூடாது வல்லரசாகும் இந்தியர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். நூறு சதவீத வாக்கு அதுவே நமது இலக்கு
ஜெய்ஹிந்த்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்,
வழக்கறிஞர் சென்னை
கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்வது சுலபமா !?
உயிரைக் காப்பாற்றுகிற மருத்துவரே தன்னால் முடிந்தவரை முயற்சி செய்த பிறகு நம் கையில் ஆவது ஒன்றுமில்லை இனி எல்லாம் அவன் செயல் என்று மேலே கையுயர்த்தி காண்பித்து விட்டு செல்லும் சூழலை நம்மில் பலர் சந்தித்திருக்கிறோம். அதன் பின்னர் நல்லது நடந்து விடுகையில் அது மனித செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாக பார்ப்பதையும் ஓரிரு நிகழ்வுகள் நினைவுறுத்துகின்றன. இதனைப் பொதுமைப்படுத்தி நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதனைத் தொழுதால் முடியாத விசயங்களும் முடித்துக் காட்டப்படும் என்றும் ஒரு செய்தி ஆழமாக மக்கள் மனதில் வேரூன்றச் செய்யப்பட்டு விட்டது. நிகழ்தகவில் அரிதான விசயங்களை இவ்வாறு பொதுமைப்படுத்தி விடுவதால் உண்டாகும் நம்பிக்கை பெரும்பாலான சமையங்களில் பொய்த்துப் போகும்போது மக்களுக்கு தங்களது புரிதலில் மாற்றம் தேவை என்பதை விட தம் மீதே காழ்ப்பும் வாழ்வின் மேல் அவநம்பிக்கையும் தோன்றி விடுகிறது. இதற்கு காரணம், நடைமுறை வாழ்வு குறித்தான புரிதலை மக்கள் அடையாமல் அல்லது அது மக்களை அடைய விடாமல் வெறும் நம்பிக்கையின் பேரில் வாழ்க்கையை நகர்த்த வைப்பதின் விளைவாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அப்படியானால் நம்பிக்கையே கூடாது என்கிறீர்களா என்ற கேள்வி உடனே எழுகிறது. நாம் வாழும் இந்த வாழ்வு அறிவியல் முறைப்படி சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறுகிற எந்தவொரு மனித செயல்பாடும் அறிவியலுக்கு புறம்பானதாகவோ அல்லது அறிவியலுக்கு சம்பந்தமில்லாததாகவோ இருப்பதில்லை. மேலும் சமீப கால மனித வளர்ச்சி யாவும் அறிவியல் தந்த கொடையே (தீமைகளும் உண்டென்று மறுக்க முடியாத போதும்). இதில் புதிதாக ஏற்படுகிற அதீத நம்பிக்கை என்று எது வந்து சேர்ந்து கொண்டாலும் அதையும் ஆராய்ச்சி செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து முயற்சிகளும் இங்கே முன்பை விடத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதெல்லாம் புரிகிறது சரி ஆனால் மிகச் சரியாக எங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது என்பதுதான் புரியவில்லை என்கிறீர்களா. அப்படியானால் மீண்டும் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விளக்கம் சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.
தர்க்கம் தத்துவத்தின் படி இந்த மனித வாழ்வென்பது பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிற கேள்விகளால் ஆனது. ஆன்மீக விளக்கங்களின் படி வாழ்க்கை என்பது ஒரு மாயை. அறிவியலின் படி இந்த வாழ்வென்பது உடலில் உயிர் உள்ளவரை என்பதாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளைத் தாண்டிய விளக்கங்களும் சாத்தியமானது தான் என்றாலும் இப்போதைக்கு பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டவை என்ற வகையில் இந்த விளக்கங்கள் உண்மைக்கு அருகில் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் இங்கு முக்கியமாக நமது நாட்டில் ஆன்மீகப் புரிதல் என்பது மதநம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால் தான் கடவுள் இருக்கிறார் இல்லை என்ற தர்க்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த நம்பிக்கை வழியாக செய்யப்படுகிற அனைத்து வித மோசடிகளையும் அறிவுடையோர் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதே சற்றே ஆறுதலான விசயம். சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம். ஆக தன்னை உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதான ஆன்மீகப் புரிதல் தான் தர்க்க அறிவு சார்ந்த உயர்ந்த சிந்தனையாக இங்கே பார்க்கப்படுகிறது. ஏன் அப்படி என்றால், ஆன்மீக விளக்கங்களின் படி எதுவுமில்லாததிலிருந்தே இங்கு அனைத்தும் தோன்றுவதாலும் தன்னை உணரும் அந்த நிலை அப்படியான எதுவுமற்ற நிலையே என்பதாலும் அந்த நிலையில் இருந்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் இந்த உலகம் முழுமை பெற்று உண்டானதைப் போல முழுமையானதாகவே இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்பப்படுகிறது. அதனால் தான் உலகம் முழுக்க மேன்மையான அறிவு பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அனைவரும் இந்த நிலையை அடைவதையே வாழ்வின் இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள். இதை சிந்தனையை மேம்படுத்த அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல். சரி சரி இன்னும் விசயத்திற்கு வரவில்லை என்று தானே சொல்கிறீர்கள். இதோ அதையும் சொல்லி விடுவோம்.
ஆக தன்னை உணர்ந்து கொண்ட நிலையாக சொல்லப்படுகிற அந்த கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் என்ன நன்மை ஏற்பட்டு விடும் !?. ஏன் அதனை இத்தனை சிலாகிக்கிறார்கள் !?. உண்மையில் அதை அடைவது தான் வாழ்வின் சிறந்த செயலா அப்படியான அந்த நிலையை சுலபமாக அடைந்து விட முடியுமா எல்லோருக்கும் அது சாத்தியமா போன்ற கேள்விகள் பல இருக்கின்றன. இவைகளையெல்லாம் கடந்து தான் நமது கேள்விக்கு நாம் விடை காண வேண்டும். காலங்காலமாக தொடர்ந்து கடுமையான முயற்சி செய்து தியானம் செய்து அடையக் கூடிய ஒரு விசயமாகவே இதைப் பார்ப்பதும் அது இந்த மானுடத்திற்கு ஒரு எட்டாக்கனி என்பது போல் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது உண்மையே. காரணம், பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு அறிவு சென்று சேர்ந்திராத நிலையில் அப்போது வளர்ச்சியடைந்திருந்த அந்த அறிவுக்கு எட்டியதைச் சொன்னவர்கள் சொன்னதையே, அவர்களை விட பலமடங்கு பொதுவெளியில் பெரும்பாலான மக்கள் தமது அறிவில் வளர்ந்தவர்களாக இருக்கிற இந்த காலத்திலும் சொல்வதால், அது ஏதோ பெரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை என்ற தேவையில்லாத கருத்தாக்கம் ஏற்பட்டு நிலைபெற்று விட்டது. உண்மையில் அன்று பேசப்பட்ட அந்த நிலையை விட இன்றைய மனிதர்களின் புரிதல் வெகுவாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் சொன்ன அந்த அறிவு தான் மிகச் சிறந்த அறிவு என்று புரிந்து கொண்டிருக்கிற இன்றைய மக்களுக்கு, அவர்களை விட பல மடங்கு உயரத்தில் இருக்கிற தமது இந்த அறிவு தான் அன்று அவர்கள் சொன்ன தன்னை அறிந்து கொள்ளும் ஆன்மீக நிலை அல்லது கடவுள் தன்மை என்பது புரியவில்லை அல்லது புரிந்து கொள்வதிலிருந்து ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம். அறிவியலின் கூற்றுப்படி ஆழ்ந்த நுண்ணிய அறிவுதான் ஞானம் கைவரப்பெற்ற கவனம் நிறைந்த அந்த நிலை. ஆகவே இன்றைய கால மனிதன் ஏற்கனவே அந்த கவனம் குவிந்த ஞான நிலையில் தான் இருக்கிறான். அது ஏதோ அடைய முடியாத நிலை என்று சொல்லப்பட்டதால் அது இது தான் என்று அறிந்து கொள்ள முடியாத குழப்ப நிலையில் இருந்தான். இப்போது அது என்னவென்றத் தெளிவு கிடைத்து விட்டபடியால் நுண்ணிய அறிவாக இருக்கிற அந்த ஞான நிலை அல்லது கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இன்னும் சுலபமாகும் தானே நண்பர்களே.
நன்றியுடன்
உங்கள் நண்பன்
நடராஜன் பெருமாள்
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
-திருவாசகம்
அருவும், உருவும், அருவுருவம் தாங்கி நிற்கும் இறைவனை துதிக்க பற்பல வாக்குகள் உண்டு. அதில் மணிவாசகர் திருநா உதித்த இந்த திருவாசகம் பல நாளாய் என்னுள் உழன்று ,உணர்வில் கலந்து பலவாறு நிறைந்துள்ளது என் சிந்தையில்.
"அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே" , இதனினும் அழகாய் இறைவனின் இருப்பை உணர்த்தும் வாக்கு ஏதேனும் உண்டோ !
இறைவன் அறிவே வடிவானவன், ஞானானந்த மூர்த்தி, அஞ்ஞானம் என்பது எதுவென்று அவன் அறியான் ஏனெனில் அவன் அறிவே வடிவானவன். பதியை பற்றி நிற்கும் பசுவாகிய நாம் தான் அறிவித்தால் அறியும் அறிவு பெற்றவர்கள். அறிவித்தால் அறியப்படும் எனும் போதே அங்கே அஞ்ஞானம் நிறைந்து உள்ளது என்பதே பொருளாகும்.
ஆகவே அஞ்ஞானம் நம்மை சார்ந்தது, அதனை அகற்றி மெய் ஞானம் புகட்டுபவனே இறைவன்.
அஞ்ஞானம்- என்பதின் பொருளில் நம்மிடையே எவை எல்லாம் உண்டு என்ற கேள்விக்கு பதில் என்பதன் பட்டியல் நீண்டு நிறைந்திருக்கிறது. நம் மனம், செயல், வாக்கு ஆகியவற்றால் எண்ணற்ற வினைகளை செய்கிறோம், இதில் அத்தனையிலும் அந்த நொடியில் சரியெனப் பட்டத்தை அறிவுள்ள செயல் என்றே செய்கின்றோம், அதன் பின் விளைவில் அல்லது ஆராய்ந்த பின்னே, சமய சந்தர்ப்பம் கிடைத்து நாம் உணர்ந்தப் பின்னே அதில் உள்ள பல பிழைகள், அஞ்ஞானம் நமக்கு தெரியவருகிறது.
நம்மால் உணரப்பட்ட அஞ்ஞானம், உணரப்படாத அஞ்ஞானம் , என்றுமே உணர்த்தப்படாத அஞ்ஞானம் என இதுவும் வகைகள் அதிகம். சமய சந்தர்ப்பங்கள் பிழைகளை உணர்த்தலாம், என்றேனும் ஆத்ம தரிசனம் பெற்றால் அங்கே நிறைந்திருக்கும் அஞ்ஞானம் அகற்றப்படலாம், அதனினும் உற்று நோக்கினால் அவனும், அவனியும் புலப்படலாம் , அதுவரை நிலவிய அஞ்ஞானம் அகற்றப்படலாம். மறைந்து நிற்கும் ரகசியங்கள், புலப்படாத ஞானம், உணரப்படாத உணர்வுகள், உணர்த்தப்படாத வினை பிழைகள் யாவும் அஞ்ஞானம்.
அஞ்ஞானம் என்னும் இவற்றை எல்லாம் அகற்றும் ஆற்றலை நாம் இறைவன், பரமம் ,பிரம்மம், சிவம் என்கிறோம். ஞானமார்க்கிகள் யோக வழியில் ஞானம் என்கின்றனர், பக்தி வழியில் அதை சிவம் என்கிறோம், பகுத்தறிவாளர் என பெயரிட்டுக்கொள்ளும் மனிதர் மட்டும், நல்லறிவு தான் இறைவன் என்பதை பகுத்தறிய மறுத்து, இறை என்பதையும் மறுத்து அஞ்ஞானம் என்னும் கட்டில் பிணைந்துள்ளனர்.
அஞ்ஞானம் எனும் இருள் மறைந்து, நல்லறிவாகிய இறைவனின் ஒளி நிறைந்தால் உலகில் குற்றங்களும்,துன்பங்களும், துக்கங்களும் அகலும். அஞ்ஞானம் அகல என்றும் அவன் அருளை பெற பிரார்த்திப்போமாக!
சொல்லாமல் சொல்லுவது
ஆகஸ்ட் 1995 கலைமகள்.
வாயினால் பேசுவது தான் மனித சமுதாயம் கண்ட வழிமுறை என்பது தெரிந்தது. ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதற்கு வாயை காட்டிலும் அழுத்தமாக ஆணித்தரமாக குறிப்பினால் உணர்த்தி விடலாம் என்று ஆன்றோர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.
தக்ஷிணாமூர்த்தியாகிய இறைவன் குரு மூர்த்தமாக வந்த மருந்து சின் முத்திரை என்று சொல்லப்படும் வடிவத்தில் வலக்கையை காட்டி வாய் சொல்லே இல்லாமல் முனிவர்கள் நால்வருக்கும் உபதேசித்த இந்த சொல்லாமல் சொல்லும் கலையை, குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை வழிகாட்டி இருப்பதை
“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கம் முதல்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வர்க்கும் வாகிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இந்தபடி இருந்து, காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்
என்று பரஞ்சோதி முனிவரின் பாடல் உறுதிப்படுத்துகிறது.
ஒருவரது முக குறிப்பினால் அவரது உள்ள குறிப்பை அறியவல்ல அமைச்சரை அரசர் அவர் எதை கேட்டாலும் கொடுத்து தமக்கு துணையாக கொள்ள வேண்டும் என்ற பொருளில்
குறிப்பிற் குறிப்புணர் வரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் என்கிறது திருக்குறள்
சாணக்கியரை பற்றிய ஒரு குறிப்பு ‘சாணக்கியன் என்ற அந்த மந்திரி உன் முகத்தைப் பார்த்தே நீ என்ன நினைக்கிறாய் இனிமேல் நீ என்ன நினைக்கப் போகிறாய் என்பதை கண்டுகொள்ளும் நுண்ணறிவு படைத்தவன்’ என்கிறது ஆகவே வள்ளுவர் குரலுக்கு எடுத்துக்காட்டாகவே சாணக்கியர் திறமை காணப்படுகிறது.
வால்மீகியின் ஆதி காவியத்தில் நின்று மாறுபட்டு ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் காதலித்தே மணந்து கொண்டார்கள் என்று கதைப்போக்கை நடத்த விரும்பிய கம்பன் வள்ளுவரின் குறிப்பறிதல் என்ற வழியை மனதில் கொண்டு வாய்ப்பேச்சே இல்லாமல் இருவரையும் இணைத்து விட்ட சதுரப்பாட்டினை கம்பனில் காண்கிறோம்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்ற சீதாராமர் காதல் பரிவர்த்தனை வாயினால் ஒரு வார்த்தை கூட பேசாமலே ஒருவரை ஒருவர் ஈர்க்கும் பாசமாக பரிணமிக்கிறது. “வரிசிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்.இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்” என்ற அளவிலே அந்த தெய்வத்திருமணம் நிகழ்ந்து விட்டதாக தானே கொள்ளல் வேண்டும்.
அதன் பிறகு தயரதனும் பல்வேறு தேசத்து மன்னர்களும் மிதிலை வந்தடைந்ததும், கனகபுத்திரி அன்னமும் அரம்பையரும் ஆறாம்ழுதும் நாண மன்னவை இழந்த மணிமண்டபம் வந்தடைதல் காகித்தன் அவர் கரம் பற்றுதலும் எல்லாமும் ஏற்கனவே ராமர் சீதை இருவருடைய கண்களும் நடத்தி முடிந்துவிட்ட செயலை ஊர்திதம் செய்யும் வெறும் சம்பிரதாய சடங்குகள் தான் என்பது தானே உண்மை.
இதற்கு ஆதாரமாக வருகிறது குறள்.
“கண்ணோடு கண்ணீரை நோக்குகின்ற வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”
கண்கள் நடத்தும் நாடகத்தில் வாய் சொற்களுக்கு ஒரு வேலையும் இல்லை.
அசோகவனத்தில் சீதையை ராமனிடம் கொண்டு போய் சேர்க்க எண்ணிய அனுமன் அவளை தன் தோள் மீது ஏறுக என்று விண்ணப்பிக்கின்றான்.
அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து பிராட்டி வேறு பல காரணங்களை கூறுவதுடன் அனுமன் ஓர் ஆண் என்பதால் அவனை தீண்டுதல் கூடாது என்று சீதை கூறுகிறாள்.
அனுமனின் முக குறிப்பில் மாற்றம் ஏற்படுகின்றது ராவணன் பிராட்டியை தீண்டி தானே கொண்டு வந்திருக்க வேண்டும் என்னும் ஐயம் ஹனுமன் உள்ளத்தில் தோன்றுகிறது அனுமன் வாய் திறந்து தன் சந்தேகத்தை கேட்கவில்லை அவன் முகத்தோற்றமே இந்த ஐயத்தை சீதைக்கு புலப்படுத்துகிறது.
அரக்கன் உங்களை தீண்டவில்லையா என அனுமன் கேட்பதாக வைத்துக்கொண்டு அவன் முகக் குறிப்பறிந்து வருகிறது பதில்,
“நிலம் வங்கையால் கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையான்” ஆம் ராவணன் சீதையை தொடாமல் பர்ணசாலையுடன் பெயர்த்து கொண்டு வந்துவிட்டான்.
சீதையை தேடப் போனாலும் எப்போது வருவானோ என்று எதிர்பார்த்து காத்திருக்கிறான் ராமன் இதோ அனுமனும் வந்துவிட்டான் வந்தவன் எப்படியோ தரையில் விழுந்து வணங்கினான். யாரை? ராமனை வணங்கவில்லை, சீதை இருக்கும் திசை நோக்கி வணங்கியபடியே சீதையை புகழ்ந்து துதிக்கிறான்.
அனுமனின் இந்த செய்கையில் இருந்து சீதை எங்கேயோ சௌக்கியமாக உயிரோடு இருக்கிறாள் அவளை இவனே கண்டும் வந்து இருக்கிறான் என்பதுடன் அவை எல்லாவற்றையும் காட்டிலும் மிக மிக முக்கியமாக ராமனுக்கு தெரிய வேண்டிய விபரம் சீதையை அனுமன் வணங்குவதால் அவள் மாசுபடாத கர்ப்பின் செல்வியாக விளங்குகிறாள் என்ற அத்தனை விபரங்களையும் குறிப்பினால் ராமன் அறிந்து கொள்கிறான்.
“உலகம் விட்டு தென்திறவி தெரிய நோக்கினான்
வண்டுலோதியும் வழியில் மாற்றிவன்
கண்டதுண்டவள் கற்பும் நன்றெனக்
கொண்டவன் குறிப்பினால் உணரும் கொள்கையான்”
அது நுட்பமான பூர்மதி படைத்த அனுமன் வாய் திறந்து சொல்லாமலே இத்தனை விபரங்களையும் குறிப்பினால் உணர்த்துகின்றான்.
பாரதியார் கண்ணனை தன் தோழனாக கற்பனை செய்திருப்பதில் அவனுக்கு எத்தனையோ திறமைகள் எல்லாம் இருப்பதாக பெருமைப்படுவதுடன் நான் என் மனதில் என்ன நினைத்தேன் என்பதை குறிப்பா அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவன் என்பதை
“என்றன் நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இது என்று நான் சொல்லும் முன் உணர்வான்” என்று குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமல்ல எனக்கு தலைக்கனம் ஏற்பட்டு விட்டது என்பதை குறிப்பால் உணர்ந்து விட்டால் என் கன்னத்தில் பளார் என்று ஓர் அரை கொடுப்பான் மேலும் நான் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசினால் நீயும் ஒரு மனிதன் தானா என்று முகத்தில் காரி உமிழ்ந்திடுவான் என்ற தோழனின் குறிப்பறியும் திறனை
“உள்ளத்திலே கருவம் கொண்ட போதினிலே ஓங்கி எடுத்திடுவான் நெஞ்சில் கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னாலங்கு காரி உமிழ்ந்து விடுவான்” என்ற வார்த்தைகளால் குதூகலமாக குறிப்பிடுகிறார் பாரதியார்.
தலைவன் முக்கிய அலுவலாக வெளியூர் செல்ல நினைக்கிறான். இதை ஓர் தோழி மூலம் தன் மனைவிக்கு சொல்லி அனுப்புகிறான், மனைவியிடம் தோழி போய் சொன்னதும் அவள் வாய் திறந்து எதுவுமே பேசாமல்
தொடி நோக்கி மென்தோறும் நோக்கி
அடி நோக்கி அகுது ஆண்டு அவள் செய்தது
அதாவது கணவன் பிரிவினால் ஏற்படும் துயரத்தால் அவள் உடம்பு மெலிந்து கையில் அணிந்திருக்கும் வளைவிகள் எல்லாம் கலன்று விழுந்து விடத்தான் போகின்றன ஆகவே இத்தகைய துயரத்திற்கு நான் ஆளாகி விடாமல் தன் பாதங்களை பார்த்து என் தலைவருடனே நானும் நடந்து செல்ல நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று வாய் திறந்து பேசாமலே பேசுகிறாள்.
தலைவி தன் உள்ளத்திலே வாய் திறந்து சொல்லாமலே உணர்த்தி இருப்பதை இந்த குரல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ராமாயணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
ராவண சம்ஹாரம் முடித்து ராமரும் பரிவாரங்களும், ராவணனுடைய அரண்மனையைச் சுற்றிப் பார்க்கிறார்கள் அங்கு மிக மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடன் கூடிய ஒரு மரகத சிம்மாசனம் காணப்படுகிறது ராமரே அதன் அழகில் சற்று மயங்கி விடுகிறார்.
அயோத்திக்கு போகும்போது இதை எடுத்துப் போகலாமா என்று அவர் மனதில் ஒரு சபலம் ஏற்படுகிறது.
பிரபு என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார் எதிரே ஜாம்பவான் நின்று கொண்டிருக்கிறான்.
ஒருவருக்கு தானமாக வழங்கி விட்ட பொருளை யாரும் திருப்பி எடுத்துக் கொள்வது இல்லையே! ராமர் திடுக்கிட்டு தன் இயல்பு நிலைக்கு திரும்பி அந்த இடத்தை விட்டு அகறுகிறார்.
ராமர் மனசிலே ஓடிய நினைவூட்டத்தை குறிப்பால் கண்டுவிட்ட வயது முதிர்ந்த ஜாம்பவான் இந்த இலங்கையும் இதில் உள்ள அத்தனை பொருளும் விபீஷணனுக்கு ஏற்கனவே பட்டம் கட்டி விட்டதை நினைவூட்டுகிறான்.
கதைகளிலும் காவியங்களிலும் காணப்படும் கருத்துக்கள் ஒரு புறம் இருக்க பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்ப்போம்.
பிரதமர் நேரு சென்னை வந்திருந்தவர் காலையிலிருந்து மாலை வரை பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அவருடைய கலையான முகம் களையிழந்து சோர்வுடன் காணப்படுகிறது அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சி வேறு இருக்கிறது. குறிப்பாக உலர்ந்துவிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள் அந்த மாமனிதரை மனிதருள் மாணிக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்புடன் அதிகாரிகள் அவசரமாக கூடி பேசுகிறார்கள் விவாதிக்கிறார்கள் அடுத்த நிகழ்ச்சியை 2 மணி நேரம் தள்ளி வைப்பது என்றும் அந்த இடைவெளியில் நேரு ஓய்வெடுக்க வைப்பது என்றும் திட்டமிடுகிறார்கள்.
நேரு தமக்கு களைப்பாக இருக்கிறது என்று எதுவும் வைத்திருந்து சொல்லவில்லை குறிப்பால் உணர்ந்து கொண்டு ஆவண செய்த அதிகாரிகளின் திறமையும் கடமை உணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டியவை தானே.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது முக்கியமான ஒரு கூட்டம். பத்திரிகை நிருபர்கள் ஆங்காங்கு வந்து நின்று கொண்டு தலைவர்களை வெவ்வேறு கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது இந்த நிருபர்களை வெளியே அனுப்பு என்று வாய் திறந்து எதுவும் சொல்லாமலேயே இந்திரா காந்தி அங்கு பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அதிகாரியை ஒரு பார்வை பார்த்தார்.
அந்த குறிப்பை புரிந்து கொண்ட அதிகாரி மளமளவென்று பத்திரிகை நிருபர்களை வெளியேற்றி விட்டார் கூட்டம் ஆரம்பம் ஆகிறது.
ஆகவே வான் புகழ் கொண்ட வள்ளுவரே குறிப்பறிதல் என்று இரண்டு அதிகாரமும் குறிப்பு அறிவுறுத்தல் என்று ஓர் அதிகாரம் ஆக மூன்று அதிகாரங்களை ஒதுக்கி இருப்பதிலிருந்து சொல்லாமல் சொல்லும் இந்த மோனமொழியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
குடும்பம்
நவம்பர் 1984 கலைமகள்
ஊரார் கூடி உற்றார் கூடி மேளதாளங்கள் முழங்க அக்னி சாட்சியாக, அரசாணை சாட்சியாக இவள் உன் மனைவி இவன் உன் கணவன் என்று நிச்சயித்து நிர்ணயித்த காரணத்தினால் மனித இனம் தம்பதிகளாக இணைந்து கொள்கிறார்கள் குடும்பம் உருவாகிறது.
ஆனால் இந்த ஆடம்பரம் எதுவுமே இல்லாமல் சடங்குகள் சம்பிரதாயங்கள் நடத்தாமல் நடத்த தெரியாமல் மற்ற உயிரினங்கள் ஆணும் பெண்ணுமாக இணைந்து கொண்டு தாம்பத்தியத்தில் ஒன்றி தங்கள் குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றன.
அவற்றின் இடத்திலும் ஆசா பாசம், பரிவு, பற்றுதல், குழந்தை குட்டிகளை கட்டி காத்து, குடும்பத்தை அரவணைத்து நடத்திச் செல்லும் தாம்பத்திய நெறியாகிய நியதியையும் காண முடிகிறது.
கிரவுஞ்சம் எனப்படும் அன்றில் பறவைகள் எப்போதும் எந்த நேரத்திலும் இணைபிரியாமல் வாழ்கின்றன அவற்றில் ஆண் இறந்து விட்டது என்றால் பெண் அன்றில் மனிதர்கள் கைம்மை நோன்பு நோற்பது போல் துயரத்தில் மூழ்கி இரவு பகல் இடைவிடாமல் கதறிக் கொண்டே பறந்து திரிந்து தன் உயிரையே மாய்த்துக் கொள்வதை பார்க்கின்றோம்.
“புலர்கின்ற பொழுதோடு மாடத் துலாவும்
புறவென்ன மனம் என்ன மணமக்கள் வாழ்க”
என்ற வாழ்த்துப் பாடலில் இருந்து புறா எப்படி இணைந்து இன்பம் துய்கின்றன என்பது புலனாகிறது.
தாய்மை பரிவும் பாசமும் காதல் கற்பு தியாகம் என்ற பண்புகளும் இறைவன் சிருஷ்டியில் காண்கின்றன. மனித இனத்துக்கே வழிகாட்டிகளாக குடும்ப பொறுப்புடன் பகுத்தறிவு படைக்காத உயிரினங்களும் வாழ்கின்றன சில இலக்கியச் சான்றுகள் இதோ
கொடிய விஷத்தைக் கக்கும் சினமிக்க பாம்புகளும் கூட ஒன்றை ஒன்று தழுவி இன்பம் பெறுகின்றன என்று தெரிகிறது. கோவலனும் கண்ணகியும் பாம்புகள் ஒன்றை ஒன்று தழுவி பிரியாது கிடப்பது போல் வாழ்க்கையை அனுபவித்தார்கள் என்பதை
“தூமப்பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவர்
காமர் மனைவி என கை கலந்து” என்று இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது.
மிருகங்களில் மான்கள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை. புதருக்குள் சரேல் என்று ஒரு சத்தம் கேட்டு விட்டால் நாலு மைல் ஓடித்தான் நிற்கும் ஆனால் ஆணும் பெண்ணும் இணைந்து இருக்கும்போது அவற்றை எந்த சக்தியாலும் பிரிக்க இயலாது என்று சொல்லப்படுகிறது.
பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டு மகாராஜா காட்டில் வேட்டையாடும் போது இரண்டு மான்கள் இணைந்திருந்த போது அம்பு விட்டு கொன்று விடுகிறான் அந்த குரூரமான செயலினால் பாண்டு சாபத்திற்கு உள்ளாகின்றான் உண்மையில் அவை மான்கள் அல்ல ஒரு ரிஷியும் அவர் பத்தினியும் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு தாம்பத்தியத்தில் இணைத்து இருந்தார்கள் என்பது பாரத கதை.
“இனவிருத்தி” காரணமாக உயிரினங்கள் தங்கள் உடலை வருத்தி குடும்ப நன்மைக்காக எத்தகைய துன்பங்களையும் ஏற்றுக் கொள்வதையும் பார்க்கின்றோம்.
பறவைகள் தங்கள் இரை எடுப்பதை கூட மறந்து முட்டைகளை அடைகாப்பதும் மீன் தன் முட்டைகளை தன் பார்வையினாலே பொரிப்பதையும் ஆமைகள் முட்டையை இட்டு வைத்துவிட்டு அதையே நினைத்துக் கொண்டிருக்கும் யோக சமாதி போன்ற நிலையும்
“அன்னை தம் சிசுவை ஐயன்
ஆமை மீன் பறவை போல
தன்னகம் கருதி நோக்கி
தடவ சந்ததியிருத்தி” என்று கைவல்யம் விளக்குகிறது.
இன்னமுதை காற்று நிலை எங்கும் கலந்தது போல் இசை மழையை பொழியும் குயிலும் அந்த இன்ப போதையில் என்றும் தன்னை விடுவித்துக் கொண்டு பொறுமையாக அடைக்காக இயலாமலோ அல்லது சோம்பேறித்தனத்தினாலோ தன் முட்டைகளை திருட்டுத்தனமாக காகத்தின் கூட்டினில் வைத்து குஞ்சுகளாக மாற்றிக் கொள்கிறது. ஆகவே பாடிய பொழுதை கழிக்கும் பாடகி ஆகிய குயிலும் தன் இனவிருத்தியை அசட்டை செய்து விடவில்லை.
இனவிருத்திக்கு பிறகு அந்த சிசுக்களை கட்டிக் காக்கும் உயிரினங்களின் அக்கறையும் கொஞ்சமல்ல.
அற்பமான கோழியானது குஞ்சு பொரித்த நிலையில் அருகில் யாரையும் அணுக விடுவதில்லை.
குட்டி போட்ட நாய் கிடக்கிறது என்றால் அந்த தெருவில் வேற்று ஆள் நுழைய முடியாது. சாதுவான பசு கன்று போட்டவுடன் புலிப்பாய்ச்சல் பாய்வதை காண்கிறோம்.
“கன்னல் எனும் கருங்குருவி
ககன மலைக்கு ஆற்றாது
மின்னல் எனும் புழுவெடுத்து
விளக்கு வைக்கும் கார்காலம்” இந்த பாடலில் இரவு நேரத்தை குருவியாகவும் மின்னலை புழுவாகவும் உருவப்படுத்தியுள்ளது என்றாலும் நல்ல மழைக்கால இருளில் தம் குஞ்சுகளின் பாதுகாப்புக்காக மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து களிமண்ணில் அவற்றை செருகி வைத்து தன் கூட்டுக்குள் வெளிச்சம் உண்டு பண்ணிக் கொள்ளும் சாமர்த்தியத்தையும் குருவிகளின் குடும்பப் பொறுப்பையும் காண முடிகிறது.
நல்ல கோடை காலம் ஆணும் பெண்ணும் ஆகிய மான்கள் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன. நா வறள்கிறது, ஓடி ஓடி தேடியும் துளி தண்ணீர் கிடைக்கவில்லை.
கடைசியில் ஒரு சுனையில் தண்ணீர் கிடைப்பது தெரிந்து ஆணும் பெண்ணும் ஆகிய இரண்டு மான்களும் சுனையை நெருங்குகின்றன ஆனால் அங்கு மிகச்சிறிய அளவு தண்ணீரே இருக்கிறது ஆண் மான் குடிக்காவிட்டால் பெண் மான் குடிக்காது இந்த தண்ணீர் முழுவதையும் பெண்மானை குடிக்க வைக்க வேண்டும் அதற்கு ஆண் மான் ஒரு தந்திரம் செய்கிறது என்ன அது
“சுனைவாய் சிறுநீரை எய்தா தென்றுண்ணி
பிணைமான் பெரிதுன்ன வேண்டி கலைமான்
தன் கன்னத்தால் ஊஞ்சும்”
ஆண் மான் தண்ணீரில் வாயை வைத்து உறிஞ்சும் சப்தத்தை எழுப்புகிறது ஆண்மானும் தண்ணீரை குடிப்பதாக நினைத்து பெண் மான் அத்தனை தண்ணீரையும் குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறது அதை பார்த்து ஆண் மான் மன நிறைவு அடைகிறது.
அந்தி நேரத்து காட்சி ஒன்று
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிரிகளும் தடங்கள் நோக்கின” மிகவும் எளிமையான பாடல், குரங்குகள் மரங்களை நோக்கி செல்கின்றன யானைக் கூட்டங்கள் தடாகங்களுக்கு போய்க்கொண்டிருந்தன அவ்வளவுதான் பொருள் ஆனால் கம்பனுடைய பாடல் அல்லவா கருத்தாலும் கவனிக்கத்தக்கது.
முதல் அடியிலேயே மந்தியாகிற பெண் குரங்கு முன்னே போகிறது அதாவது மரத்திலேயே நல்ல வசதியான இடமாக பார்த்து பெண் குரங்கு இரவை கழிக்கட்டும் நாம் எங்கேயாவது மரத்தின் அருகிலோ ஓரத்திலோ தங்கிக் கொள்ளலாம் என்ற தியாகம் உணர்வுடன் ஆண் குரங்கு பின்னே சாவகாசமாக செல்கிறதாம். ஆனால் அடுத்து ஆண் யானை நீர் தடாகத்தை நோக்கி முன்னே செல்ல பெண் யானை பின்னே தொடர்கிறது நீர் தடாகங்களுக்கு அருகே வேட்டுவர்கள் பள்ளம் வெட்டி பொறிவைத்து யானைகளை பிடிப்பது வழக்கம்.
அப்படி பள்ளத்திலே அகப்பட்டுக் கொள்ள நேரிட்டால் ஆண் யானை விழுந்து விட்டதை பார்த்து பெண் யானை தப்பி விட வேண்டுமாம், ஆகவே அத்தகைய ஆபத்தை எதிர்நோக்கி ஆண் யானை முன்னே போகின்றது.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தாரிரு
கட்சிக்கும் மஃதை பொதுவில் வைப்போம்” என்று மனிதர்களில் ஆண்களையும் அந்த ஒழுங்கில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறார் பாரதி.
பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும் அந்த நியதி உண்டா? நீண்ட நாட்களுக்கு முன் மேலைநாட்டில் சந்திக்கையில் வந்த ஓர் உண்மை சம்பவம் இது.
ஒருவருடைய வீட்டு மாடியில் ஒரு பகுதியில் ஆணும் பெண்ணுமாக இரண்டு நாரைகள் கூடு கட்டிக்கொண்டு வசிக்கின்றன. பெண் நாரை இரண்டு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது, இந்த நிலையில் வீட்டுக்காரர் ஒரு சோதனையை செய்கிறார். நாரைகள் இல்லாத நேரத்தில் அந்த இரண்டு முட்டைகளில் ஒன்றை எடுத்துவிட்டு வேறு ஒரு பறவையின் முட்டையை அதில் வைத்து விடுகிறார் அந்த முட்டை அளவிலும் நிறத்திலும் அதிக வேறுபாடு தெரியாததால் பெண்ணாறு அடைகாத்து குஞ்சுகள் வெளி வருகின்றன சில நாட்களிலேயே அந்த ஒரு குஞ்சு அழகற்றதாகவும் கருப்பாகவும் இருப்பதை ஆண் நாரை கவலையுடன் கவனிக்கிறது. அன்று ஒருநாள் மொட்டை மாடியில் கூடுகின்றன. அந்த அயல் குஞ்சை பார்த்து விட்டு காற்று மூச்சு என்று கத்துகின்றன ஏதோ ஒரு பஞ்சாயத்து நடப்பது போல் ஒரு தோற்றம்.
கடைசியில் அந்த நாரைகள் அத்தனையும் கூறி பெண்ணாறையை கொத்தி காயப்படுத்தி கொன்று விடுகின்றன. ஆண் நாரை அதன் பிறகு அங்கு வரவில்லை. பெண்ணாறையின் கற்பில் சந்தேகம் ஏற்படுவதற்கு தான் காரணமாகி, அந்த நாரை குடும்பமே குலைந்து விட்டதே என்று சோகமாக முடித்து இருந்தார் கட்டுரை ஆசிரியர்.
நாகரிகத்தில் முதிர்ச்சி பெற்று விட்டதாக கருதிக் கொள்ளும் மனித பரம்பரை நெறி இல்லா நெறிதனை நெறியாக நினைத்து சிறுநெறிகளில் சிக்கித் தன்னை கீழ்மைப்படுத்திக் கொள்ளும் போது பகுத்தறியும் தன்மை இல்லாத பறவை இனம் கற்பு நெறியை கடைப்பிடித்தன என்பதை எத்தனையோ பெரிய ஆச்சரியம் தான்.
ஆகவே பகுத்தறிவு இல்லாததாக கருதப்படும் பறவைகளும் விலங்கினங்களும் ஆணும் பெண்ணும் ஒன்றின் மீது ஒன்று அன்பு செய்ய செய்வதிலும் தாம்பத்திய இன்பத்திலும் குட்டிகளை குஞ்சுகளை கட்டிக் காப்பதிலும் தன் துணையின் துன்பத்தை போக்க மற்றொன்று காட்டும் தியாக பெரு உணர்விலும் மனிதனுக்கே வழிகாட்டியாக அவற்றின் குடும்பமும் அமைந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.
காவியத்தில் கண்கள்
செப்டம்பர் 1985 கலைமகள்
கவிஞர்கள் கண்களைப் பற்றி குறிப்பாக பெண்களின் கண்களை பற்றி எப்படி எல்லாமோ அழகுபட வர்ணித்து இருப்பதை பார்க்கின்றோம்.
வாள் போன்ற கண்கள் மீன் போன்ற கண்கள் மான்விழியால் வேல்விழியால் என்று வர்ணித்திருப்பதையும் காவிடும் மலரையும் குவளை மலரையும் தாமரையும் ஓத்திருப்பதையும் காண்கின்றோம்.
பெண்களின் கண்கள் மருண்ட நோக்குடையவை எனும் பொருளில் “பினை யேற் மட நோக்கு” என்று வள்ளுவரும் குறிப்பிட்டு இருக்கிறார். வேடன் ஒருவன் காட்டுக்குள் வேட்டையாடச் செல்கிறான் ஒரு பெண் மான் தனியே மேய்ந்து கொண்டிருக்கின்றது. முதல் மறைவில் இருந்தபடி அந்த மானின் மீது குறி வைக்கிறான் வேட்டுவன். மானின் மற்ற அவையங்களில் அம்பு பட்டாலும் மான் தப்பி ஓடி விடக்கூடும் என்று மானின் கண்களின் மீது குறி வைக்கிறான்.
இப்போது வேட்டுவரின் ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வையில் மானின் உடல் தெரியவில்லை. தலை தெரியவில்லை கொம்பு முகம் எதுவுமே தெரியவில்லை. ஆனால் மானின் கண்கள் மட்டுமே தெரிகிறது.
அந்த கண்களை கூர்ந்து கவனித்த மாத்திரத்தில் அவன் உடம்பே கிடு கிடு என நடுங்க ஆரம்பித்தது கண் கலங்க உள்ளம் கலங்க அவன் கையில் இருந்த அம்பும் வில்லும் நழுவி கீழே விழுந்து விடுகின்றன என்ன காரணம்
அந்த மானின் மருண்ட நோக்கு குடிசையில் விட்டு வந்துள்ள தன் மனைவியின் கண்களை ஞாபகப்படுத்தி விடுகின்றன இப்போது அந்த மான் வேடனின் கண்களுக்கு மானாகவே தோன்றவில்லை தன் பிரியமுள்ள மனைவியாகவே அந்த மானை பார்க்கின்றான் நினைக்கின்றான்.
“எய்யத் தொகுத்தேன்
குறத்தி நோக்(கு) ஏற்றதென
கையில் கணை கனைந்து
கன்னிமான் பையப்போ”
“நீ மெதுவாக போம்மா நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை” என்று அன்பொழுக பேசுகிறான். நக்கீர தேவனாயனார் பாடிய திருஈங்கோய்மலை எழுவதில் இந்த காட்சியை காண்கிறோம்.
ஆரம்பத்தில் ராமன் பர்ணசாலையில் தனியே அமர்ந்திருக்கின்றான். அவனை மயக்கி கவர்ந்து விட சூர்ப்பனகை திட்டமிடுகிறாள் இந்த இப்பிறவியில் பிறமாதரை சிந்தையாலும் தொடாத ராமனை அல்லவா நிலை தடுமாற வைக்க வேண்டும் அதற்காக சூர்ப்பனகை மோகன உருவம் பெற்று சிங்காரவல்லியாக வரும்போது
“மானின விழி பெற்று மயில்
வந்ததென வந்தாள்” என்று கம்பன் சொற்சித்திரம் காட்டுகிறது.
மதுரையில் கோயில் கொண்டுள்ள ஜெகன் மாதாவுக்கு அங்கையர் கண்ணி மீனாட்சி என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.
மீன் போன்ற அழகிய கண்களை உடையவள் தாய் என்பது மட்டும் பொருள் அல்ல. மீன் தான் ஈன்ற முட்டைகளை தன் பார்வையின் வேகத்தாலேயே குஞ்சுகளாகி அவற்றை கண்காணிப்பது போல் மும்மை புவன முழுதீன்ற அன்னையாகிய மீனாக்ஷி சகல ஜீவராசிகளையும் தன் கருணை கண்களின் கடாட்சத்தாலே காத்து ரட்சிப்பதால் தான் அவளுக்கு அத்தகைய பெயர்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் அறியத் தக்கன.
ராமன் சீதையை மாலையிட மணவாளனாக உலா வருகின்றான். மிதிலை நகரத்து பெண்கள் வீட்டு முற்றங்களிலும் மாடிகளிலும் சாளரங்களின் அருகிலும் குழுமி நிற்கிறார்கள். இங்கே கம்பன் பெண்கள் என்று சொல்லவில்லை கண்கள் என்று சொல்லவில்லை பார்த்தார்கள் என்றும் கூட சொல்லவில்லை.
“ஆனகத்திரை அரமியதளத்திலும் அனந்த
சாளரத்தினம் பூத்தன தாமரை மலர்கள்”
என்று சொல் ஜாலத்தின் மூலம் அந்த தாமரை மலர்களைப் போன்ற கண் அழகிகளாகிய பெண் அழகிகள் ஆங்காங்கே கூடி நிற்பதையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறான் கம்பன்.
உழவர்கள் வயல்களுக்கு களை எடுக்கச் சென்றவர்கள் அங்கே களையாக மண்டி கிடக்கும் குவளை மலர்களை எல்லாம் பிடுங்கி ஏறிய மனம் வராமலேயே மலைத்து நிற்கின்றார்களாம். காரணம் குவளை மலர்கள் தம் மனைவியரின் கண்களைப் போலவே தோன்றுகின்றனவாம்.
“மையணைந்த குவளை தம் கண்களெல்லாம்
மலர் குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்
செய்யணைந்து களைகளை யாதேறும்…” என்று வரும் திருமங்கையாழ்வாரின் பாடல் இப்படி கூறுகிறது
“கண்ணன குவளையும்
கட்டல் ஓம்பினார்”
என்று வரும் சீவக சிந்தாமணி பாடலிலும் இதே கருத்து காணப்படுகிறது.
பெண்களின் கண்களை வாளுக்கு ஒப்பிட்டுள்ளதை பல இடங்களில் பார்க்கின்றோம் ராமனும் சீதையும் முதன் முதலில் சந்திக்கும் போது
“வரிசிலை அண்ணலும் வாட் கண் நங்கையும்
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார்” என்று பேசப்படுகிறது.
இங்கே சீதையின் கண்கள் வாள் என்று உவமிக்கப்படுகிறது. அதாவது வரி சிலையாகிய ஆயுதம் ஏந்திய ராமனது பிரம்மச்சரிய கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே நுழைய சீதையிடம் வாள் என்ற ஆயுதம் இருக்கிறது
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ராமனது வில் ஏந்திய வீரசௌந்தர்யமும் சீதையினுடைய வாள் போன்ற கண்களை உடைய ரூபசௌந்தர்யமும் ஒன்றை ஒன்று ஆக்கிரமித்து வெற்றி பெற்று விட்டன என்பது தானே இராமாயண கதை
“காலாயுதக் கொடியோன்,
கையாயுத விழியாள்
மாலாயுதம் ஈன்ற மாமணியைத்
தானுகுத்தான்”
காலை ஆயுதமாக உடைய சேவல். சேவலை கொடியாக கொண்டவன் முருகன். அவனது ஆயுதம் வேல். அந்த வேல் போன்ற கண்களை உடைய ஒரு பெண், திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாகிய சங்கு ஈன்ற முத்தைப் போன்ற கண்ணீரை உகுத்தாளாம். ஒரு பெண் அழுதால் என்பதுதான் விஷயம் இதற்கிடையில் இத்தனை ஆயுதங்களையும் கொண்டு வந்து குவித்து விடுகிறார் கவிஞர்.
முதல் நாள் யுத்தத்தில் “இன்று போய் நாளை வா” என்ற ராமனுடைய வள்ளல் தன்மையால் உயிர்பிச்சை பெற்று ராவணன் “பூதலம் எனும் நங்கை தன்னையே நோக்கி” வீடு திரும்புகிறான்
இந்த பெருத்த அவமானம் தேவர்களுக்கெல்லாம் தெரிந்து சிரிப்பார்களே? மண்ணுலக மாந்தர்கள் எல்லாம் பார்த்து நகைப்பார்களே? தன்னுடைய எதிரிகளால் போரில் கேலி பேச்சுக்கு இடமாகி விடுமே என்று கூட ராவணன் கவலைப்படவில்லை. ஆனால் சீதை பார்த்து சிரித்து விடுவாளே என்று ஞானத்தால் சாம்புகிறான்.
இதைச் சொல்ல வந்த கம்பன்
“வேல்நடு நெடுங்க செவ்வாய் மெல்லியள்
மிதிலை தந்த சானாகி நகுவள்“ என்று குறிப்பிடுகிறான். அதாவது பெயர்களையெல்லாம் பார்த்து ஜானகியின் கண்கள் பூ இவ்வளவுதானா உங்கள் கூர்மை என்று பரிகசிக்கின்றனவாம்.
அரச சபைக்கு பாஞ்சாலியை மாடு நிகர்த்த துச்சாதனன் அவளுடைய மைக்குழல் பற்றி இழுத்து வந்து துகிலுருகிறான் அவளுடைய கணவர்களாகிய பாண்டவர்கள் மாயசூதினால் கட்டுண்டு இந்த அநீதியை அக்கிரமத்தை தடுக்க சக்தி அற்றவர்களாக தலைகுனிந்து இருக்கிறார்கள்.
இந்த தீய செயலை தடுப்பது என்பது தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துவிட்டது திரௌபதி இறைவனையே பரிபூரண சரணம் அடைகிறாள் அப்பொழுது அவளது அஞ்சனம் தீட்டிய அகன்ற பெரிய கண்கள் அருவியென கொட்டுகின்றன.
“ஆறாகி இருதடும் கண் அஞ்சன வெம்புனல்
சோர அளகம் சோர” என்று வில்லிபாரதம் கூறுகிறது
இந்த சோக கட்டத்திலும் கூட பாரதியும், பாஞ்சாலியின் கண்களை, கவிஞன் கண் கொண்டு கவனிக்க தவறவில்லை.
“நவ்வி நோக்கினாள்” அதாவது பெண் மானின் மருண்ட கண்களை உடையவள் என்று பேசுகிறார்.
இப்படியெல்லாம் பெண்களின் கண்களை அழகுபட வர்ணித்து இருக்கும் போது நெருப்பை கக்கி கொண்டிருக்கும் கொள்ளனது உலைப் போல் பயங்கரமாகவும் கண்கள் இருக்குமா? அப்படியும் ஒரு பெண்ணின் கண்கள் இருந்தன என்று கம்பன் அல்லவா சொல்கிறான் அதாவது ராமன் தாடகையுடன் செய்த கன்னி யுத்தத்தில் ராமனது அம்பு எத்தனை அற்புதங்களை எல்லாம் செய்தன என்று ஜனகரிடத்தில் சொல்ல வந்த விசுவாமித்திரர்.
“உலை உருவக்கனல் உமிழ் கண்
தாடகை தன் உரம் உறுவி” என்று பெருமையுடன் விவரிக்கிறார்.
வானம் இடிந்து விழுமா தெரியாது அப்படி விழுந்தால் சர்வநாசம் தானே அத்தகைய பயங்கரமான உத்பாதத்தை பற்றி சொல்லும் பாரதி அதற்கு சமமாக வைத்து மற்றொரு நிகழ்ச்சியையும் சொல்லுகிறார்.
“கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை” ஆகவே பெண்களின் கண்களுக்கு எத்தனை பெரிய மகத்தான சக்தி உண்டு என்பதை பாரதியின் வாக்கிலே காணுகின்றோம்.
பெண்களின் கண்கள் இப்படி இருக்க திருமாலின் கண்கள் “செங்கண்” என்று பல சந்தர்ப்பங்களில் சிறப்பிக்கப்படுவதை பார்க்கின்றோம்.
நெருப்பைக் கக்கும் பரமேஸ்வரனது நெற்றிக்கண் என்றால் தேவாதி தேவர்களும் நடுங்குவார்கள் அத்தகைய நெற்றிக்கண், நக்கீரர் என்ற அந்த தனி மனிதரை தாக்கிய போது அவர் கொஞ்சமும் நின்று அஞ்சவில்லை
“பற்றுவான் இன்னும் அஞ்சான், உம்பர் ஆர்பதி போலாக
முற்றும் நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்”
என்று சர்வ வல்லமை உள்ள சர்வேசுவரனையே எதிர்த்து வாதம் செய்தார் என்றால் அது தமிழின் தரம் குறைந்து விடக்கூடாது கட்டி காக்க வேண்டும் என்ற அவரது இலட்சிய வேகமே, நக்கீரருக்கு அத்தகைய திட சித்தத்தையும் மனதின்மையையும் அழித்திருக்க வேண்டும் என்று அறிய முடிகிறது.
இலக்கியத்தில் இமைகள்
நவம்பர் 1983 கலைமகள்
மனிதனுடைய அவயங்களில் மிகச்சிறந்ததாக மிக மிக அருமையானதாக கருதப்படுபவை கண்கள். அன்பு குழந்தையை ஆசை மனைவியை “கண்ணே என் கண்மணியே” என்றெல்லாம் புகழ்வதை பார்க்கின்றோம்.
அத்தகைய அபூர்வமான பொருள்களாகிய கண்களை கட்டி காக்கும் பொறுப்பு இமைகளை சார்ந்தது.
தூசு தும்பு பறக்கும் போது ஏதாவது ஒரு பொருள் கண்களை தாக்கி விடுமோ என்ற நிலைமையிலும் இமைகள் நம்மை அறியாமல் தானாகவே இயங்கும் இயல்புடையனைய இமைகளை இலக்கிய கர்த்தாக்கள் பல இடங்களில் எடுத்து கையாள்வதை காண்கின்றோம்.
இமைகள் இமைக்கின்ற அந்த குறுகிய நேரத்திலும் இறைவனது திருவடிகள் தன்னுடைய நெஞ்சை விட்டு அகலாத பெரும் பேரு பெற்றவர் வாதவூர் அடிகள் ஆகவே இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று பெருமுகத்துடன் பேசுகிறார்.
கலைகளிலே ஈடுபாடு பகுதியாக உள்ள அயோத்தி நகரத்து பெண்கள் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். திரையிலும் ஒரு பெண் உயிர் பெற்று வருகிறாள், பேசுகிறாள், சிரிக்கின்றாள். அவள் மனதிலே எண்ணுகின்ற எண்ணங்களையும் ஓடுகின்ற நினைவூட்டங்களையும் கண்களிலும் முகத்திலும் புருவங்களின் நெருப்பிலும் கண்டுகொள்ள முடிகிறது ஆனால் இன்னும் நெருங்கிப் பார்க்கும்போது அந்த உயிரோவியத்திலும் ஒரு குறை தென்படுகிறது. என்ன அது? அந்த ஓவியப் பெண்ணின் கண்கள் இமைக்கவில்லை ஏன்? காரணத்தை கம்பரே சொல்லுகிறார்.
“தொழுததை மடந்தையர் சுடர் விளக்கென
பழுதரு மேனியை பார்க்கும் ஆசை கொல்
ழுது சித்திரங்களும் இமைப்பில்லாதவோ!”
ஆமாம்! இந்த சித்திரப்பாவை சித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் அழகு பாதையை ஆசை தீர, ஆவல் தீர கண்களை இமைக்கவும் மறந்து அப்படியே பார்த்துக் கொண்டிருக்கின்றாளாம்.
விசுவாமித்திரனின் வேள்விக்காக சென்ற ராம இலக்குமனர்களை,
“மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினை காக்கின்ற இமையிற் காத்தனர்”
என்பது பிரசித்தமானது.
இமைகளின் இயக்கத்தின் போர் ஒழுங்குமுறை இருப்பதை பார்க்கலாம்.
அதாவது கீழ் இமை இருந்த இடத்திலேயே இருக்க, மேல் இமை தான் போய் வந்து கீழ் இமையுடன் இணைந்து கொள்கிறது.
அதேபோல் வேள்வி நடக்கும் இடத்தில் இளையவனாகிய இலக்குவன் காத்து நிற்க மூத்தவனாகிய ராமன் சுற்று சுற்றி வந்து இலக்குவனுடன் இணைந்து கொள்கிறான் என்று பொருள் கொள்வாரும் உண்டு.
பரதனிடம் ராமன், இலக்குவன், சீதை மூவரும் இரவில் எங்கே படுத்திருந்தார்கள் என்பதை சொல்ல வரும் போது குகன்,
“அழகனும் அவளும் துஞ் கங்கில் நின்றான்.இமைப்பிலன் நயனம்” என்றான்.
இதிலேயே இலக்குவன் இமையாது காவல் செய்ததை குகனும் அங்கு நின்ற ராமன் சீதையுடன் அந்த இளையவளையும் சேர்த்து இமை காத்தான் என்பதும் சொல்லாமலே விளங்குகின்றது.
தேவர்கள் இமய நாட்டம் பெற்றவர்கள் என்பதால் இமையோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
தமயந்தியின் பேரழகை கண்டு மயங்கிய தேவர்கள் தமயந்தியின் சுயம்வரத்தில் நளனை போல் உருமாறி அங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள் தமயந்தி உண்மையான மானுட நளனை கண்டுகொள்ள இமைகள் தான் உதவி செய்கின்றன.
“கண்ணிமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால் அறிந்தாள் நலன்றன்னை ஆங்கு” என்று வரும் நளவெண்பாவின் மூலம் தெரிய வருகிறது.
தேவர்களைப் போலவே புஜங்களும் இணையாத தன்மையுடையன எனினும் நாக பாச படலத்தில் வரும் கருடனது இறக்கை வீச்சின் வேகத்தில் இமையாத திக்கஜங்களின் கண்களும் மூடி ஒடுங்கி விட்டன என்பதை
“இமையா திசையானை கண்கள் முகிழாவொடுங்கு
நிறைகால் வழங்கு கிறையான்”
என்று வரும் கம்பன் பாடலால் அறிகிறோம்.
பாரத யுத்தத்தில் ஒப்பற்ற வீரசிங்கமாகிய அபிமன்யு என்ற குலக்கொழுந்து வந்தனையால் கருகி விழுந்து விடுகிறது ஈரறிண்டு போர்வழிய மற்ற எதிரிகளும் கூட அபிமன்யுவின் மரணத்திற்காக அழுது புலம்புகிறார்கள் தருமர் மணமடைந்து கதறுகிறார் என்னை பாதுகாத்து நின்ற உன்னை நீ போ என்று அனுப்பியதும் யுத்த களத்தில் பாய்ந்து புகுந்து எதிரிகளை இமைப்பொழுது கொன்று குவிந்த வீரனே என்ற பொருளை
“நின்றனையே எனை காத்து நீரகென்று
யானுரைப்ப நெடும் தேரூர்ந்து
சென்றனையே இமைப்பொழுதில்
தெவ்வரோட வென்றணையே “
என்று வரும் வில்லிபாரத கவி விளக்குகின்றது.
அர்ஜுனது அம்பால் கர்ணன் வீழ்ந்து பட்டான். பாண்டவர்கள் நிம்மதியாக நெடுமூச்சு விடுகிறார்கள், ஆனால் கர்ணனின் சடலதின் அருகே நின்று கதறும் ஒற்றைப் பெண் குரல் சந்தேகமே இல்லை குந்திதேவியின் உடையது தான். பாண்டவர்கள் குழம்புகிறார்கள்.
ஓடிப் போய் சூத்திரதாரியாக நடத்தி வைக்கும் கிருஷ்ண பரமாத்மாவை விசாரித்தார்கள் என்பதை
“ஆழியானை ஓரிமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்தற் பின்” என்ற வரிகள் உணர்த்துகின்றன.
பாரதியாருக்கு கண்ணன் சேவகன் ஆக வந்து எத்தகைய சேவை எல்லாம் செய்தான் என்று சொல்லி வரும் போது கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான் என்று பெருமையாக நன்றியறிதல் உடன் குறிப்பிடுகின்றார்.
கண்கள் இமைப்பதை சிமிட்டுதல் என்றும் குறிப்பிடுவது உண்டு.
பாரதியாரின் குயில் பாட்டில் வரும் குயிலின் காதலர் ஆகிய குரங்கு காதல் போதையில்
“கண்ணை சிமிட்டுவதும்
காலாலும் கையாலும்
மண்ணை பிறாண்டி எங்கும்
வாரி இறைப்பதையும் பார்க்கின்றோம்.”
விறலியை தூது அனுப்பும் போது
“அங்கே பட்ட சீரமும் தழைக்க பக்தர் மனம் தாமுறுக” பாடும்போது ஆடாமல் அசையாமல் அங்க சேஷ்டை எதுவும் இல்லாமல் கத்தி முனை வில் போல் என்னும் விழி இமையும் கொட்டாமல் என்று போற்றப்படுவதை விறலி விடு தூதில் பார்க்கின்றோம்.
காதலர் உலகத்திலேயே கண்களும் கண்களுடன் சேர்ந்த இமைகளுமே வேலை அதிகம் என்பதை
“கண்ணோடு கண்ணின் நோக்கின் வாய்சொற்கள்
என்னு பயனும் இல” என்று திருவள்ளுவரே கூறுகிறார்.
காதல் வயப்பட்ட பெண் ஒரு நாள் இமைகளை மூடி தூங்காமலே காலம் கடத்துகிறாள். ஊரார் என்ன பேசிக் கொள்கிறார்கள், “இவளுடைய காதலன் இவளை இப்படி தூக்கம் கெட செய்து விட்டானே அன்பில்லாதவன்” என்றெல்லாம் ஏசுகிறார்கள். ஆனால் காதலில் என்ன நினைத்து கொள்கிறாள்
“நான் கண்ணின்மைகளை மூடிவிட்டால் என் கண்ணிலே குடியிருக்கும் காதலரின் உருவம் மறைந்து விடுமே என்றுதான் தூங்காமல் இருக்கின்றேன்.”
கவி காளமேகம் எதையும் ஹாஸியமாகவும் சிலேடை நயத்துடனும் கவி பாடும் சதுரப்பாடுடையவர்.
முருகன், வள்ளி என்ற குறப்பெண்ணை மணந்து விட்டான் என்பதற்காக அவர் தந்தை நஞ்சுண்டராம், மாமன் மண்ணை அள்ளி தின்றாராம், தேவர்கள் கவலையுடன் தூங்காமல் கழித்தார்களாம் என்பது போல்
“கடவுள் அவர்கள் இரு விழியுமையாமல் இரவு பகல் உறங்காமலிருக்கின்றாரே என்று வித்தாரமாக பேசுகிறது கவி காளமேகத்தின் கவி.
தாமரை பூத்த தடாகங்கள்