Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு சிறுகதைகள்

வகைகள் : ஒருபக்க கதை

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


ஒருபக்க கதை
இன்பத்துப்பால்

குனிந்த தலை நிமிராமல் தான் எழுதிக்கொண்டிருந்தான் வள்ளுவன், ஏடுகளில் கூரான எழுத்தாணி உரசும் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தன.

அறத்துப்பால், பொருட்பால் இரண்டும் சேர்த்து 1080 குறள்கள் எழுதி விட்டான், இத்துடன் 'திருக்குறள்'நிறைவு பெற்றதாக கூறி எழுத்தாணியிலிருந்து பிடி தளர்ந்தது வள்ளுவனிடம்...

அப்போதுதான் ஏறிட்டு பார்க்கிறான் தன் மனைவி வாசுகியை..
அங்கே அவள்....

கூர் மழுங்கிய எழுத்தாணி கொண்டு தன் கண்களில் மை தீட்டி கொண்டிருக்கிறாள்,
அப்போது வள்ளுவன் அவளை பார்க்க, மை தீட்டிய கண்களுடன் வாசுகியும் வள்ளுவனை பார்க்க..

அப்போதுதான் 'இன்பத்துப்பால்'பிறக்கிறது, அதன் பின்னர் 250 குறள்கள் எழுதி 1330 குறள்களாக நிறைவு பெற்றது..

இன்பத்துப்பாலில் முதல் குறளே இதுதான்...

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து"

விளக்கம் : இவள் பார்க்க நான் பார்க்க இவள் மை தீட்டிய கண்களின் எதிர் பார்வை சேனை போல் தாக்குகிறது./Ram(ஒரு கற்பனை தான்)

ஒருபக்க கதை
காமெடி குற்றவாளிகள்-1

'கூவம் ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணம்'
நாறிகொண்டிருந்தது.. கூவ ஆற்று நாற்றத்தையும் மீறி வந்தது...

போலீஸ்க்கு தகவல் பறக்க, போலீஸ் கூவத்தில் குதித்தது இல்லை களத்தில் குதித்தது,
போலீஸ் மூக்கை பொத்திக்கொண்டு மூட்டையை புரட்டி போட... அவ்வளவுதான் சோளிமுடிந்தது, அந்த சாக்கு மூட்டையில் பச்சை நிற மசியில்..'இசக்கி முத்து, தந்தை பெயர் நடேசன்.. பிறகு வீட்டு முகவரி..
பிறகு என்ன போலீஸ் வேர்க்கடலையை வாங்கி கொறித்து கொண்டே ஜீப்பில் ஏறி பக்கத்தில் உள்ள தண்டையார்பேட்டை சென்று..
வீட்டில் டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த இசக்கிமுத்து வை அள்ளி கொண்டு சென்றார்கள்..
அவனும் அவன் கூட்டாளிகளும் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்..

அவனை ஜெயிலில் தள்ளும் போது போலீஸ் ஒருவர் சொன்னது..'நீ ரொம்ப நல்லவன் டா! எங்களுக்கு எந்த சிரமும் வைக்காமல் அட்ரஸ் சோடு போட்ட பாரு அதை நினைத்து ரொம்ப பெருமை படுகிறேன் 'என்று பாராட்டியுள்ளார்

ஒருபக்க கதை
தனிப்படை

படைச்செருக்கு - 10

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

எழுத்தாளர் - நந்தினி சுகுமாரன்

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனிப்படை

பகைவர்கள் தேசத்தின் எல்லையைச் சுற்றி வளைத்திருக்க, போருக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.

இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை ஒரு தனிப் படையாக உருவாக்கி இருந்தனர் அந்நாட்டில். அதில் இருந்த வீரர்கள் அனைவருக்கும், இதுதான் முதல் போர்.

ஒரு தேசத்தின் எதிர்காலத்தைச் சிறந்ததாய் மாற்றக்கூடிய பெரும் சக்தி, இளைஞர்களிடம் உள்ளது எனத் தீவிரமான எண்ணம் உடையவர் அந்நாட்டின் படைத்தலைவர். ஆகையால் படைபலம் குறைந்தால் மட்டுமே, போரில் பங்கேற்கும் வாய்ப்பு அந்தத் தனிப்படைக்கு  வழங்கப்படும்.

வயது, அனுபவம், திறன், வீரத்தின் அடிப்படையில் வீரர்களைப் பிரித்து, தங்களது நாட்டின் படையை அமைத்திருந்தார் தலைவர்.

அதன்படி எட்டு நாட்கள் போர் ஏற்கனவே முடிந்திருந்தது. பெரும் சேதம் அடைந்து, பகைவரைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிகக்குறைவான வீரர்களுடன் மறுநாளைய போரை எதிர்கொள்ள இருந்தனர் அத்தேசத்தவர்கள். இந்நிலையில் தனிப்படையினரை, களத்தில் புகுத்த முடிவு செய்தார் தலைவர்.

அதனால் அவர்கள் அனைவரையும் அழைத்து நிலையை விளக்கியவர்.. இறுதியில், "நம் பக்கம் பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களைப் போரில் ஈடுபடுத்துதல், பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எஞ்சியிருக்கும் வீரர்களும், படைக்கு வெகு அவசியம்.

நாம் வெற்றியடைய மதியும், வீரமும் மட்டுமே போதாது. எதிராளியின் திறனையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம். தங்களில் இருந்து சிலர்.. பகைவரின் படைக்குள் ஊடுருவி, ஒற்று வேலை பார்க்க வேண்டும். அவசியம் எனில் அவ்விடம் ஆயுதமும் ஏந்துங்கள்.

சற்றுக் கடினமான பணி. உயிருக்கு ஆபத்து நேரலாம். எனினும் தாங்கள் உயிரை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. தப்பி வந்து நம்மோடு இணைந்து கொள்ளலாம். எவர் எவர் அப்பணியை ஏற்கின்றீர்கள்.?"

அனைத்து வீரர்களுமே முன்வர.. அவர்களின் திறன் அறிந்து எழுவரைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். அன்றிரவே அவர்கள், பகைவரின் கூடாரங்கள் இருக்கும் திசையை நோக்கிச் சென்றனர்.

எதிரிநாட்டு மன்னர், முதல் மந்திரி, போரில் முக்கியப் பொறுப்பை ஏற்று இருப்பவர்கள், படைத்தலைவர், நாற்படைகளிலும் தலைமை வகிப்பவர்கள், அவர்களது கூட்டு ஆலோசனை என.. ஒவ்வொருவரையும் தனித்தனியே உளவு பார்த்து செய்தி சேகரித்து, விடியும் முன்பே சிலர் தங்களது இருப்பிடத்தை அடைந்தனர்.

கிடைத்த தகவல்களால் மறுநாளைய போர் இவர்களுக்குச் சாதகமாய் மாற, எதிரிகள் சற்றே திண்டாடிப் போயினர்.

உளவு பார்க்கச் சென்ற வீரர்களில், பிறைசூடன் என்பவன் மட்டும் தினமும் அப்பணியினை வாடிக்கையாக்கினான்.

அவன் கொண்டு வரும் தகவல்கள் மேலும் இவர்களை வலிமை பெறச்செய்ய, தோல்வியைத் தழுவ வேண்டிய படை, பன்னிரு நாட்களிற்கு மேலும் போரை இழுத்துச் சென்றது.

எதிரியினர் 'தங்களது பக்கம் பலவீனம் ஆவதற்கானக் காரணம் யாது.?' என ஆலோசனையைத் துவங்கி, கவனமாய்ப் போர்த் திட்டங்களை வகுக்க.. அன்றைய தினம் பிறைசூடனிற்குச் சாதகமாய் அமையாது போனது.

எதிரிநாட்டின் முதல்மந்திரி அவனைக் கண்டுவிட்டு, சில அம்புகளைப் பரிசளித்தான். உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு தங்களது இருப்பிடத்தை அடைந்த பிறைசூடன், தான் அறிந்த விபரங்களை உரைத்து விட்டு உயிரைத் துறக்க.. அவனின் தேசப்பற்றையும் வீரத்தையும் வியந்து கண் கலங்கியபடி நின்றிருந்தார் படைத்தலைவர்.

ஒருபக்க கதை
இளவரசன்

படைச்செருக்கு - 9

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

எழுத்தாளர் - நந்தினி சுகுமாரன்

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இளவரசன்

போர் முரசு கொட்டினர். வீரர்கள் அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர், போர்க்களம் புகுந்திட. எங்கும் வீர முழக்கங்கள் ஆரவாரத்துடன் எதிரொலிக்க, இளவரசனின் இருப்பிடம் மட்டும் நிசப்தத் திரை போர்த்தி இருந்தது.

திருமணம் முடிந்த சில திங்களிலேயே போரில் தலைவனைப் பறிகொடுத்த மூத்த அரசியார்.. படைத் தளபதியின் உதவியோடு வெற்றிப் பெற்று தனது நான்கு வயது மகனை அரியணையில் ஏற்றினார். ஆனால் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அவனையும் வீரத்தாயிடம் ஒப்படைத்துவிட்டு, இளவரசன் மற்றும் மகனின் மனைவியோடு நாட்டை இழந்து வெளியேறினார்.

தற்போது பதினேழு வயது இளவரசன், தங்களது நாட்டை மீட்கப் போர்க்களம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

ஈன்றவள் ஒரு புறம் கனத்த மனதோடு.. தாய்மைக்கும் நாட்டின் மீதான பற்றுக்கும் இடையே ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, அவனின் தந்தைக்கு உயிர் கொடுத்த அன்னை மறுபுறம்.. உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துடன் அமர்ந்திருந்தார்.

"அன்னையே எமக்கு விடைக்கொடுங்கள்!" எனப் பாதம் பணிந்திட.. "நம் தேசத்தை உடைமையாக்கிக் கொண்டு, திரும்பி வருவேன் என்று வாக்குக் கொடு மகனே!"

"நிச்சயம் அன்னையே!"

"மகனே.!" என ஆரத்தழுவி கண்ணீர் வடிக்க, அன்னையைச் சமாதானம் செய்துவிட்டு, மூத்தவரின் எதிரே சென்று வணங்கினான்.

 

"வெற்றியோ தோல்வியோ.. போரின் முடிவினில்.. உம் கரம் ஆயுதம் ஏந்தும் திறனோடு இருந்தால், உயிர்க்காத்து வா. இல்லையேல் போர்க்களமே உனது வருகையினைத் தீர்மானிக்கட்டும்!" என அவர் ஆசிர்வதிக்க, "யான் சபதம் உரைக்கிறேன்! ஆயுதம் ஏந்தும் திறனிருந்தால் மட்டுமே வருகை புரிவேன்!" என்று புன்னகையுடன் விடைப்பெற்றுச் சென்றான்.

ஒவ்வொரு நாளும் யுகங்களாய்க் கடந்தது, இரு பெண்மணிகளுக்கும். இருபத்திரண்டு நாட்கள் போர் நிகழ்ந்தது.

வெற்றி பெற்ற செய்தி செவிகளை அடைய, நாட்டின் மீது பற்றுக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

வெற்றித் திருமகள் தங்கள் வசமானதை அறிந்து மனம் மகிழ்ந்தாலும், தங்களின் புதல்வனது வருகையினை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் மூத்த அரசியாரும், இளையவரும்.

ஆனால் இளவரசன் வரவில்லை. அவனிற்குப் பதில் வீரன் ஒருவன், அவனது செய்தியினைத் தாங்கி வந்தான்.

"அன்னைக்கும், மூத்த அன்னைக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கம். யான் தங்களைப் பிரிந்து வந்து, மூன்று வாரங்களுக்கு மேலும் கடந்துவிட்டது. யான் வீழ்ந்தால், நம் வீரர்களும் வீழ்ந்திடுவரே? திடம் கொண்டு போர் புரிந்தேன், பகைவரின் வாள்வீச்சைப் பரிசாகப் பெற்றுக் கொண்டேன். ஆகையால், எமது கரம் தோய்த்துப் போனது! ஆயுதம் ஏந்த இயலவில்லை. வீரர்கள் அனைவரும் உயிரைத் துச்சமென எண்ணி போராட.. இதோ, நம்தேசம் வெற்றிக் கொண்டு விட்டது.

ஆயுதம் ஏந்தும் திறன் இருந்தால் வருகிறேன் என்றேன். ஆனால் அதைத் தாங்கும் கரத்தினை இழந்து விட்டேன். மேற்க்கொண்ட சபதத்தை நிறைவேற்ற இயலவில்லை. தங்களின் மகனை ஏற்பீரா.?" என்று வினவி அனுப்பியிருக்க, கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்று முடியாது போனால், எவராலும் குறை கூறவோ தண்டிக்கவோ இயலுமா.?

"வா.. மகனே.. அன்னையர்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்!" என மறுசெய்தி அனுப்பினர், இருவரும்

ஒருபக்க கதை
சுய ஆட்சி

படைச்செருக்கு - 8

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

எழுத்தாளர் - நந்தினி சுகுமாரன்

 

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 

செறினும் சீர்குன்றல் இலர்.

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுய ஆட்சி

அவையில் இருந்த அனைவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர்.

குறுநிலமான, அந்நாடு.. பெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றிற்குக் காலம் காலமாய்த் திறை செலுத்தி வருகிறது. அதுபோல் சுற்றிலும் பல குறுநில பகுதியை, பல்வேறு இனத்தவர்கள் ஆண்டு வருகின்றனர்.

அவர்கள் அனைவருமே, சுயஆட்சியாய் தனித்து இயங்க நினைத்தாலும்.. அதற்கான படைபலமோ, பொருள்பலமோ இல்லாது, அடங்கி ஆட்சிச் செலுத்துகின்றனர்.

அந்த வருடம், பெரும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதால்.. மக்களும் சரி, அரசும் சரி பொருளாதார நெருக்கடியில் இருந்தனர். வெகுவிரைவில், அந்நாட்டின் அரசர் திறை செலுத்தியாக வேண்டும். ஏனெனில் அதற்கான கால அவகாசம், முன்னரே கடந்து போயிருந்தது.

மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் கவனமாக இருந்த அரசர், திறை செலுத்துவதைப் பற்றிச் சிந்திக்க மறந்து விட்டார். எந்நேரமும் படையெடுத்து வந்துவிடுவர் என்ற ரீதியில் இருந்தது, அந்தக் குறுநிலம்.

கஜானாவும் காலியாக இருந்ததால், செய்வது அறியாது கலக்கத்துடன் இருந்தார் அரசர்.

'திறை செலுத்துவதற்கான பொருளை எவ்வாறு சேர்ப்பது?' என ஆலோசனை செய்வதற்காக, கூடியிருந்தனர் அவையோர்.

முதல் மந்திரி, "நாட்டின் நிலையை உரைத்து, இவ்வருடம் மட்டும் திறை செலுத்துவதில் இருந்து விலக்குக் கேட்டு, அடுத்த வருடம் இருமடங்காய்த் தருகிறோம் என ஓலை அனுப்பலாம் அரசே.?"

அரசர், "அடுத்த வருடமும் வேறு ஏதேனும் இயற்கைச் சேதத்தில் அரசிற்கு வருவாய் கிட்டாது போனால் என்செய்வது மந்திரியாரே? இல்லாத பொருளை, எங்ஙனம் திறையாய்க் கொடுப்பது?"

மக்கள் நலத்துறை அமைச்சர், "பஞ்சத்தில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர். அவர்களிடமே நிலையை உரைத்து உதவி கோரலாம் அரசே."

படைத்தளபதி, "மக்களின் நலம் காட்கத்தான் அரசரும், தாங்களும், யானும். தற்போது அவர்களிடமே உதவி கோரச் சொல்கிறீர், இது எவ்வகையில் சேர்த்தியோ.?"

மற்றொரு அமைச்சர், "நாம் அனைவரும் மக்களின் சேவகர்கள் அன்றோ? சேவகன் வழியின்றித் தவிக்கையில், பொருள் கொடுத்து உதவுதல் எஜமானரின் கடமைதானே.?"

தளபதி, "தேவைக்காக அவர்களை நமக்கு எஜமானர் ஆக்கிவிட்டீர். எங்களால் இனி வரி செலுத்த இயலாது என மக்கள் உரைத்துவிட்டால், சேவகர்கள் நாம் என்செய்வது.?  நீரும், யானும், அரசரும் கூட இல்லாது போகக்கூடும்!"

மன்னர் சிரிக்க, "இவ்வாறு அடிமை வாழ்வு வாழ்வதற்கு, போர்க்களத்தில் பகைவரை துணிவுடன் எதிர்கொள்ளலாம் அரசே!" என்றார் தளபதி.

"பஞ்சத்தில் பாதி உயிரை இழந்து தவிக்கும் எம் மக்களை, போரில் பலியிடச் சொல்கிறீர்களா தளபதி? எம் மக்கள், எம் உயிரினும் மேலானவர்கள். அவர்களை ஆபத்தின் விளிம்பில் நிறுத்த யான் தயாரில்லை!" என்றவர் போரிற்கு மறுப்புத் தெரிவிக்க, தனது நாட்டைச் சுயமாய்ச் சுவாசிக்க வைத்திடும் லட்சியத்தை அடைந்திடத் துடித்தார் தளபதி.

காலம் கடந்துவிட.. அப்பெரும் ராஜ்ஜியத்தில் இருந்து படையெடுத்து வந்தனர். படைத்தலைவர் போரிற்கு ஆயத்தம் செய்ய, அவரிடம் சினந்து பொறுமைக் காக்கும்படி கட்டளையிட்டு விட்டு, சமாதானத்திற்காகத் தூதுவனை அனுப்பினார் அரசர்.

"எமது வீரத்தில் நம்பிக்கை இல்லையா? எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறீர் அரசே..?" எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த, "யாம் தடுப்பதால், நீர் வீரம் குறைந்தவர் என்றாகிவிட மாட்டீர் தளபதி. போருக்குத் தயாராய் இருக்கும் எவரும், வீர மறவராவர்! எம் நாட்டின் தளபதி, மனவலிமை செறிந்த வீர மறவராவார் எமக்கு!" என்று அமைதி படுத்தினார் அரசர்.

ஒருபக்க கதை
வீரக்கழலை

படைச்செருக்கு - 7

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

எழுத்தாளர் - நந்தினி சுகுமாரன்

 

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீரக்கழலை

போரில் வெற்றி பெற்றுத் தேசத்திற்குத் திரும்பி இருந்தனர் மன்னரும், படை வீரர்களும். நாடு எங்கிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள். மக்கள் இல்லம் தோறும் தோரணம் கட்டி, மாக்கோலம் இட்டு அழகுபடுத்தி இருந்தனர்.

அரண்மனை, மலர்களால் மலர்ந்து விகசித்தது. அரசியார், அரசருக்கு ஆரத்தி எடுத்து மாலை சூட்டி வரவேற்றார்.

வீரர்கள் அனைவரும், "வெற்றி வெற்றி! வாழிய மன்னர்!" என ஆரவாரத்துடன் உரைத்து, மகிழ்ச்சியில் கூத்தாடினர். போரில் பெற்ற வெற்றியைக் காட்டிலும், தம் மக்களின் மலர்ந்த முகங்களைக் கண்டு.. பூரித்துப் போயினர் அரசரும் அரசியாரும்.

அந்நொடியில் இருந்தே கொண்டாட்டங்கள் துவங்கின. மன்னரும், மக்களும், போர் வீரர்களும் புத்தாடை அணிந்து கோவிலில் கூடினர். சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றிட, இறைவனிற்கு அவ்வெற்றியைச் சமர்ப்பித்து வணங்கி மகிழ்ந்தனர்.

அதன் அடையாளமாய்ப் புதியதாய் ஒரு கலை மண்டபம் அமைப்பதற்காக.. மன்னர் பொன்னும் பொருளும் அளிக்க, நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் தங்களால் இயன்றதைத் தந்தனர். செல்வந்தர்களும், வணிகர்களும் கூட அதில் தனது பங்களிப்பைக் கொடுத்தனர்.

அதற்கு இணையாகப் போரில் வீரமரணம் தழுவிய வீரர்களுக்கு, நடுகல் நடும் பணியையும் துவங்கினர், அரசியாரது கட்டளையின் பெயரில்.

கொண்டாட்டம் என்றால் அதில் கலை இல்லாமலா.? நாட்டின் கலை சார்ந்த பணிகள் அனைத்தும், அரசியாரின் மேற்பார்வையிலேயே நடந்தன, அந்நாட்டில். அதனால் அவரது தலைமையின் கீழ்.. இயல், இசை, நாடகத்திற்கு ஏற்பாடு ஆனது.

தமிழையும், இம்மூன்றையும் பிரித்திடல் இயலுமோ.? தமிழ்த்தாய் ஈன்றெடுத்த மக்கள் அல்லவோ இயல், இசை, நாடகம்.

புதியதாய் கல்வி பயிலும் சிறார்கள், எழுதியும் பேசியும் தங்களது இயற்றமிழ் திறனை காட்ட, புலவர்கள் பண்ணிசைத்து இசைத்தமிழில் சிலிர்க்க வைத்தனர்.

நாடகத்தமிழ் அரங்கேறியது. புராணக்கதைகளைத் தவிர்த்து, போர் வீரன் ஒருவனின் நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர் கலைஞர்கள்.

ஆரவாரத்துடன் நடந்து கொண்டிருந்தது போர். பதினாறு வயது வீரன் ஒருவன், முதன்முறையாய்ப் போர்க்களம் புகுந்திருந்தான். பிறப்பெடுத்த பூமியின் மீது கொண்டிருந்த காதலால், எதிர்படும் பகைவர்கள் அனைவரது உயிரிற்கும் காலனாய் மாறி முன்னேறிக் கொண்டிருந்தான்.

எதிரி படையினராலும் பல விழுப்புண்களைத் தனது உடலில் பெற்றிருந்தான். உடல் எங்கும் குருதித் திட்டுகள். இருந்தும் அவனின் போர்க்குணம், தொடர்ந்து ஆயுதம் ஏந்த வைத்தது. முடிவினில் வீரனின் தேசம் வெற்றியடைந்தது.

இறுதியில்.. பூமியிலேயே தங்கிவிடும் ‘மாவீரன்!’ என்ற புகழை மட்டுமே வேண்டி, அதற்காக உயிரைத் துச்சமாய் எண்ணி எதிரியரின் ஜீவனைப் பறித்த அவ்வீரனது காலில் வீரக்கழலை அணிவிப்பதோடு அந்நாடகம் நிறைவு பெற்றது.

வீரனின் காலில் பொருந்துவதாலேயே, வீரக்கழலை எனப் பெயர் பெற்றதோ? 

கழலையால் வீரனிற்குப் பெருமையா? அன்றி வீரனால் கழலிற்குப் பெருமையா.?

எதுவோ ஒன்று! வீரனின் பாதத்தில் இணைந்திருக்கும் கழல் அழகு அன்றோ.?

 

ஒருபக்க கதை
இளம்வீரன்

 

படைச்செருக்கு - 6

 

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

எழுத்தாளர் - நந்தினி சுகுமாரன்

 

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.

இளம்வீரன்

கரத்தினில் பொருட்களோடு அந்த அறைக்குள் நுழைந்தான், இளம் வீரன் ஒருவன். அந்நாட்டின் போர்ப்படையில் பணிபுரிந்து வருகிறான். இதுவரை எப்போரிலும் அவன் பங்கேற்றது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, அந்தத் தேசத்தில் போர் என்று எதுவும் நடைபெறவில்லை.

படுக்கையில் இருந்தவரது தோளில் தட்டி, "பாட்டா கண்விழித்துக் கொள்!" என்றிட, இமைகளை மெல்லப் பிரித்தார் முதியவர்.

மூப்பின் காரணமாக உடல் தளர்ந்து இருந்தது. அத்தோடு இயலாமையில் விழுந்தவருக்கு, வேறு காரணங்களும் இருந்தன. அவர் எழுந்து அமர்வதற்கு உதவி செய்தான் வீரன்.

"பணிக்குச் செல்ல வில்லையா பெயரனே?"

"தங்களுக்கு ஆகாரம் கொடுத்துவிட்டுச் செல்லலாம் என வந்தேன்." என்றவன், முதியவர் நீராட உதவி செய்தான்.

போரில் ஒரு கரத்தையும், இரு முழங்கால்களின் கீழ் பகுதிகளையும் இழந்தவரால், தனது தேவைகளைத் தானே செய்து கொள்ள இயலாத நிலை.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்.. தந்தையும் தனயனுமாய்ப் போருக்குச் சென்றிருந்த நிலையில், மகனின் உயிரை போர்க்களத்திற்குத் தத்துக் கொடுத்துவிட்டு, பெயரனிற்காக உறுப்புகளை மட்டும் இழந்து உயிரைப் பிடித்துக் கொண்டு வந்தார் அவர்.

அன்று முதல் இல்லத்திலேயே அடைந்து விட்டாலும், மகன் வயிற்றுப் பிள்ளைக்கு ஆசானாக இருந்து வருகிறார்.

கல்வி அறிவோடு, போர்க் கலையையும் கற்றுத் தந்து.. வாலிபம் எய்ததும், சொந்த தேசத்தைக் காப்பதற்காகப் படையினில் இணைத்து விட்டார்.

தனக்குப் பின் தனயன் என நினைத்திருக்க, அவனோ தந்தையை முந்திக் கொண்டான். ஆகையால் பெயரனை அந்த வழித்தடத்தில் கரம் பற்றி அழைத்து வந்தார். ஆனால் இன்னும் இலக்குதான் பார்வைக்குப் புலப்பட வில்லை.

போர்க்களத்தில் நின்று விழுப்புண் ஒன்றையேனும் உடலில் பரிசாய்ப் பெற்றால் அல்லவா, வீரன் என உரைத்துக் கொள்ள இயலும்?

முதியவரிற்கு உடையை அணிவித்தவன், "பாட்டா, உமக்கு என்ன வயதாகிறது.?"

"ஏன் பெயரனே, இந்த வினா.?"

"அறிந்து கொள்ளத்தான். வயோதிகத்திற்கு ஏற்றபடி, அனுபவமும் இருக்குமாம் அன்னை உரைத்தார்."

"எழுந்து வா!"

அவன் பாட்டனாரின் அருகில் வர, "எமது உடலில் உள்ள விழுப்புண்கள், எண்ணிக்கையில் எத்தனை எனக் கணக்கிடு!"

அவன் உடல் முழுவதும் ஆராய்ந்து கணக்கிட்டு, "இருபத்து நான்கு இருக்கிறது பாட்டா."

"எமது இழந்த கரத்தினில் நான்கும், இரு கால்களிலும் சேர்த்து மூன்றும் இருந்தது. மொத்தம் எத்தனை.?"

"முப்பத்து ஒன்று!"

"எமது வாழ்நாள், முப்பத்து ஒன்று தினங்கள் பெயரனே!"

"இவை என்ன கணக்கீடு? எமக்குப் புரிபட வில்லைப் பாட்டா"

"வீரன் என்பானிற்கு.. போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தி பகைவருடன் சண்டையிட்டு விழுப்புண் பெறுதலே அழகு! அந்நாட்கள் மட்டுமே அவன் உயிரோடு வாழ்வதாய்ப் பொருள். யான் முழுமையாய்ச் சுவாசத்தை நிறுத்தி, பதினேழு ஆண்டுகள் கடந்து விட்டது!" என உரைத்துப் பெருமூச்சு விட்டவரை, பெருமை பொங்க பார்த்தான் வீரன்.

"யான் இன்னமும் எமது வாழ்நாளைத் துவங்கவே இல்லை பாட்டனே!" என்று வருத்தத்தோடு உரைக்க, "எதிரிநாட்டுப் படைகள் நம் தேசத்தைச் சுற்றி வளைத்துள்ளன. படைத்தளபதி, வீரர்கள் அனைவரையும் போர்ப்பயிற்சிக் கூடத்தில் விரைவாய் கூடும்படி கட்டளை பிறப்பித்து உள்ளார்!" என வீதிகளில் தண்டோரா மூலம் உரைத்துச் சென்றனர்.

"உமது வாழ்நாளைத் துவங்கும் காலம் வந்துவிட்டது வீரனே. தேசத்தின் வெற்றியைச் சுமந்து வா, அன்றிப் போர்க்களத்திலேயே உமது சுவாசத்தை நிறுத்திவிடு!" என ஆசி கூறி, பெயரனை வழியனுப்பி வைத்தார் முதியவர்.

 

ஒருபக்க கதை
கொசு குர(ற)ல்

இரவு முழுதும் (வித்தியாசமான )திருக்குறள் போட்டி நடந்தது...
யாரோ காதில் வந்து 'ஹம்மிங் 'செய்து இது என்ன குறள் என்றார்கள்
பின்னர் முதுகில் எழுத்தாணியால் கீறி, கீறி...இது என்ன குறள் என்றார்கள் -

சட்டென்று தூக்கம் கலைய.. அது வரை முதுகில் மேய்ந்து கொண்டிருந்த 'கொசுக்கள் '   ஒரே கோரஷாக ஒரு குறளை சொல்லி பறந்து சென்றன...
 அந்த குறள்...
 "ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண் ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை "
அதன் பொருள் :தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்தது ஆகும்.  

ஒருபக்க கதை
ஆயுதம்

படைச்செருக்கு - 5

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

எழுத்தாளர் - நந்தினி சுகுமாரன்

 

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

 

ஆயுதம்

யுத்தபூமி செம்மை பூசி இருந்தது. இருபுற வீரர்களும் சரிசமமாய் மடிந்து கிடக்க, ஏனைய வீரர்கள் போர் புரிவதில் முனைப்பாய் இருந்தனர்.

 

எங்குக் காணிணும், வீரர்களது வெற்றியை அடைந்துவிடும் வேட்கையின் ஆரவாரம்.

யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படைகள் யாவும்.. தலைவனால் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்ய, காலாட் படையில் தான் அதிகச் சேதம். பாதி எண்ணிக்கைக்கு மேலும், தாய் மண்ணிற்காக உயிர் நீத்திருந்தனர் வீரர்கள்.

படையில் தன்னுடன் இணைந்து போர்ப் பயிற்சி செய்த தோழர்களைக் கண்டு மனம் வெதும்பி, கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான் அவ்வீரன்.

அவர்களது இறப்பிற்கும், தன்நாட்டினர் அவதியுறுவதற்கும் காரணமான.. எதிரி தேசத்து மன்னன் மீது சினம் பொங்கியது. அதைத் தனது கையில் இருந்த வேலிற்கும், கண்களிற்கும் இடம்மாற்றி, பார்வையில் படும் எதிரிகள் எவரையும் வேல் கொண்டு குத்தி வீழ்த்தினான்.

எதிர் நிற்பவர்களும் சாதாரணமானவர்கள் அல்லவே. பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அன்றோ. உயிர் நீர்க்கும் முன்னர், அவ்வீரனிற்குத் தங்களால் இயன்ற பரிசுகளைக் கொடுத்து விட்டே மடிந்தனர்.

வீரனின் உடல் எங்கிலும் காயங்கள். உற்பத்தியான வியர்வைத் துளிகள் யாவும் செங்குருதியாய் மேனியில் படர்ந்தன.

பார்வை மங்கிட, தோள்கள் சோர்வடைய, கால்கள் பலமிழக்க, தோய்ந்தபடி நடைபோட்டான் போர்க்களத்தில். எனினும் கரத்தினில் இருந்த வேல், அவனின் விரல்களது இறுகிய பிடிக்குள் உறுதியாய் இருந்தது. கண்கள் இமைத்திடாது இருக்க, போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன.

 

அந்நொடியில் கையில் ஆயுதத்தோடு வந்து நின்றான் எதிரிநாட்டு வீரன் ஒருவன். இவனை நோக்கி வேலைக் குறி வைக்க.. அதை அறிந்தும் கையினில் பட்ட காயங்களால் குருதி சொட்ட, தூக்க இயலாது நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.

"ஆயுதம் ஏந்து வீரனே! நிலம் நோக்கி கரம் வைத்திருப்பனிடம் சண்டையிடுது தர்மம் அல்ல!" என எதிரிநாட்டு வீரன் போருக்கு அழைக்க..

கர்வமாய்ப் புன்னகைத்தவன், "கரம் தோய்ந்தது வீரனே! செயல்பட மறுக்கின்றது. எனினும் நீர் ஆயுதம் ஏந்தலாம். எம் கண்கள், உமது வேலை விடக் கூர்மை வாய்ந்தவை!" என்றிட, "கண்கள் சிறு துரும்பிடம் போராட இயலாது தடுமாறுபவை. அவை வேலை எதிர்கொள்ளுமா? என்னே நிந்தன் கற்பனை.?” எனச் சிரித்தான் எதிரிநாட்டு வீரன்.

புன்னகை மாறாமலேயே.. முயன்று தனது கரத்தால் ஆயுதத்தை ஏந்த, வேலை எறிந்தான் எதிரில் இருந்தவன்.

இமைகள் திடம் கொண்டு இமைக்காது அதனை நோக்கிட, அடுத்த நொடி நிலத்தில் சுழன்று, தன்னை நோக்கி வந்த வேலினைக் கால்களால் தட்டிவிட்டு, மார்பை நிமிர்த்தியபடி எழுந்து நின்றான் அவ்வீரன்.


 

ஒருபக்க கதை
வேணுவும், சீனுவும்

வேணுவும், சீனுவும் நண்பர்கள், பிசினஸ் பார்ட்னர்கள்.
அவர்கள் தொழில் நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருந்தபோதுதான், சீனு எல்லா பணத்தையும் சுருட்டிக்கொண்டு வெளிநாடு தப்பி விடுகிறான். பல வருடங்கள் கழித்து மீண்டும் இங்கு வருகிறான்.
இப்போது அவன் பெரிய திரைப்பட இயக்குனர், அவன் தயாரிப்பில் அனைத்தும் வெற்றி படங்கள்.

தற்போது சீனு எடுக்கும் இந்த சினிமா சூட்டிங், சென்னையில் ஒரு பெரிய மனநல மருத்துவமனை வளாகத்தில் நடை பெறுவதாக கதை.

அதற்காக அந்த மருத்துவமனையில் தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து, அடுத்த காட்சி படம் எடுப்பது சம்பந்தமாக ஆழ்ந்த யோசனையில் இருக்கிறான்.

அப்போது தன் முதுகுக்கு பின்னால் யாரோ நிற்பது போல் உணர்கிறான்.
சட்டென்று திரும்பி பார்க்க.. அங்கு ஒரு மனநோயாளி..அவன் முகம் தெளிவாக தெரியாத அளவிற்கு அடர்ந்த முடிகள்..
அவன் கைகள் சீனுவின் கழுத்தை நெறிக்கும் பாவனையில் அவனை நோக்கி வருகிறது...
அந்த ஆக்ரோஷமான முகத்தை அருகில் பார்க்க, அவனுக்கு மின்னல் வெட்டியது போல் புரிந்து விடுகிறது அது வேறுயாருமல்ல, அவனால் ஏமாற்றப்பட்ட வேணுதான் இப்போது மனநோயாளியாக!!

திரைப்பட இயக்குனரான அந்த சீனு, இப்போது அவனிடம் வசமாக மாட்டிக்கொண்டதை நொடிபொழுதில் உணர..
உதவிக்கு யாரையும் கூப்பிட கூட அருகில் யாரும் இல்லை.
வேணுவிடமிருந்து உயிர் பிழைக்க ஓட்டமெடுக்கிறான்.
அருகில் இருந்த அந்த ஏழுமாடி  கட்டிடத்தில் ஏற.. பின்னாடியே வேணுவும் மாடிப்படியேறி துரத்தி வருகிறான்..
ஏழாவது மாடி கடைசி, அங்கு பால்கனி போன்ற ஒரு வளைவில் கம்பியை பிடித்தபடி, உடல் நடுங்க, வியர்த்து கொட்ட, முகத்தில் மரண பயத்துடன் நிற்கிறான்.

இப்போது அவன் அருகில் வேணு, அவனை தள்ளிவிடும் பாவனையில் கிட்டே நெருங்குகிறான்..

அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்று சீனுவும் மரணபயத்தில் நடுங்க...
அவன் அருகில் வந்த வேணு தன் கைகளால் சீனுவின் முதுகில் தொட்டு விட்டு "ஜுட் " என்னை பிடி பார்க்கலாம் என்று கத்தியபடி, மாடிப்படிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான்!!

ஒருபக்க கதை
சுடாதே.. சுடாதே.

அந்த மனநல மருத்துவரை பார்க்க ஒரு மனநோயாளி வருகிறான்.
டாக்டர் எதிரில் இருக்கும் சேரில் அமர..

டாக்டர் :உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க என்கிறார்.
பேஷண்ட் எதுவும் சொல்லாமல் டாக்டரை முறைத்து பார்த்தபடி இருக்க..
மீண்டும் டாக்டர் கேட்க அதற்கும் பதில் சொல்லவில்லை, டாக்டர் பொறுமை இழந்து கோபமாக கத்து கிறார் 'நீ எதுவும் சொல்ல வேணாம், எழுந்து போ! என்கிறார்.

அதன் பிறகுதான் அந்த பேஷண்ட் பேச ஆரம்பிகிறான்.. என் பிரச்சனையே இதுதான் டாக்டர்! யார் எது சொன்னாலும் அதற்கு எதிரா செய்கிறேன் என்கிறான்..

டாக்டர் :இந்த பிரச்சனை எவ்வளவு நாளா இருக்குன்னு சொல்லுங்க... இல்லை என் கிட்ட சொல்லாதீங்க..
இல்லை சொல்லுவேன் என்று சொல்கிறான்....
டாக்டர் : நைட் தூங்காதீங்க கொட்ட, கொட்ட முழிச்சுகிட்டு இருங்க..
'தூங்குவேன் என்கிறான்'
 பிறகு டாக்டர் அவன் அருகில் வந்து ஸ்டெதாஸ்கோப்பை மார்பில் வைத்து மூச்சை இழுத்து பிடித்து தம் கட்டுங்க என்று சொல்ல..
அவன் வேகமாக மூஸ், மூஸ் என்று மூச்சு விட.. செக் பண்ணுகிறார்.
கையை நீட்டாதீங்க என்று டாக்டர் சொல்ல, அவன் கையை நீட்டுகிறான் நாடி துடிப்பையும் 'செக்'பண்ணுகிறார்.

டாக்டர் :நான் எழுதி கொடுக்கும் இந்த மாத்திரையை மூணு வேளையும் போடவே போடாதீங்க..
அவன் :இல்லை, நான் கண்டிப்பா போடுவேன் என சொல்லி சட்டை பையில் வாங்கி வைத்து கொள்கிறான்.
டாக்டர் :நீங்கள் எனக்கு 'பீஸ்'ஐம்பது ரூபாய் தரவேணாம் என்று சொல்ல...
இல்லை.. நான் தருவேன் என்று பணத்தை தருகிறான்..

டாக்டர் அவன் கொடுத்த ரூபாயை மேஜை ட்ராயரில் வைக்கும் போதுதான் அவர் தற்காப்பு க்காக வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்து ஒரு அரை வட்டம் அடித்து நோயாளியின் காலடியில் கிடக்க..
அவன் குனிந்து எடுத்து.. டாக்டர்!இந்த துப்பாக்கி எங்கே வாங்குனீர்கள்? நல்லா இருக்கே!!.. இது சுடுமா என கேட்டு டாக்டரை நோக்கி திருப்ப..

டாக்டர் பதறி போய்!  சுடாதே!சுடாதே!!என்று பதற...
"டுமீல்" 

ஒருபக்க கதை
மலையகத்தில் ஒரு மன்னிப்பு

'அனிதா' பலமுறை முயற்சி செய்தும் அவளாள் அந்த கிடார் லிருந்து லயத்துடன் கூடிய இசையை வாசிக்க முடியவில்லை..

அவளின் மீயூசிக் மாஸ்டரிடம் தன் கவலையை சொல்கிறாள், அவர் அதற்கு.. ஒரு அமைதியான மலை பாங்கான இடத்திற்கு சென்று, மனம் அந்த சூழ்நிலையில் லயித்து வாசிக்க சொல்கிறார்..

ஊட்டியில் உள்ள ஒரு மலை கிராமத்திற்கு சென்று அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்த இடத்தில் அமர்ந்து தன் கிடார் கையில் எடுத்த போதுதான் அந்த மலைவாசி குழந்தை ஒன்று ஆவலுடன் அந்த கிடாரை தொட வரும் போது அந்த கைகளை தட்டி விடுகிறாள்..

அவளின் செய்கை அவள் மன சாட்சியை உறுத்தியது..
அங்கிருந்த சர்ச் க்கு சென்று, தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி பிரார்த்தனை செய்கிறாள்.. அவள் கண்முன் அந்த பிஞ்சு விரல்களை தட்டி விட்ட காட்சியே மீண்டும், மீண்டும் வந்தது...

பின்னர் சர்ச் ஐ விட்டு வெளியே வந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த அந்த சிறுமியை அருகில் அழைத்து தன் மடியில் அமர்த்தி அணைத்தபடி அந்த பிஞ்சு விரல்களை தன் கையால் பிடித்து கிடாரை வாசிக்க...
மனதை உருக்கும் இசை காற்றில் பரவியது, பூக்கள் தலை யாட்டின, மலையில் ஊர்ந்து சென்ற மேகங்கள் இசைக்கு ஏற்றவாறு தவழ்ந்தன.. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கிடாரில் விழுந்து தெறித்தது..

அன்பும், இசையும் ஒரே லயத்தில் பரவியதை உணர்ந்தாள்.

ஒருபக்க கதை
ஒதுக்குப்புற வீட்டின் இரகசியம்

அடியே பேச்சி. இங்கன வா"

" என்ன இசக்கிக்கா? என்ன ஆச்சு திடீர்னு?"

" இல்லைடி எனக்கொரு சந்தேகம்.மனசு கெடந்து அடிச்சுக்குது. எங்க வீட்டுக் கிழம் ரெண்டு நாளா இருட்ட ஆரம்பிச்சதும் எங்கேயோ கெளம்பிப் போவுது. வெள்ளையும் சொள்ளையுமா உடுத்திக்கிட்டு மேல ஜவ்வாதுல்லாம் போட்டுக்கிட்டு அது போற ஷோக்கு இருக்கே எனக்குப் புரியவேயில்லை. ஒம் புருஷன் வீட்டில இருந்தாச் செத்தக் கூப்பிடு. கொஞ்சம் எங்க வீட்டுப் பெருசு எங்கே போகுதுன்னு பாக்கச் சொல்லறேன்".

"அடியாத்தி , இசக்கிக்கா , நானும் இதே சமாச்சாரத்தை யாருட்ட சொல்லலாம்னு யோசிச்சேன். நீயும் அதையே சொல்லறியேக்கா. பெரிய ரோதனையாப் போச்சே இந்தப் பெருசுங்களோட".

" அடியே மாரி, பொன்னம்மா, முத்தாயி, இருளாயி எல்லாரும் இங்குட்டு வாங்கடீ",

என்று இசக்கி பெருங்குரலில் கூவி அழைக்க , அந்தச் சிறிய கிராமத்தில் அந்தத் தெருவில் இருந்த அத்தனை கிழவிகளும் அங்கு கூடித் தங்கள் கணவன்மார்களின் நடவடிக்கைகள் பற்றி விவாதித்தார்கள்.

இரண்டு நாட்களாக எல்லாக் கிழவர்களும் பிரமாதமாக உடை உடுத்திக் கொண்டு கிளம்பி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்தத் தனி வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கோபத்துடன் பேசி விவாதித்தார்கள். அடுத்த நாள் அவர்கள் எல்லோருமே கிளம்பிக் கிழவர்களின் பின்னால் அவர்களுக்குப் பின்னாலேயே அவர்களுக்குத் தெரியாமல் போய்க்  கையும் களவுமாய் அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அன்று இரவு யாருக்கும் தூக்கமே வரவில்லை.அடுத்த நாள் சாயந்திர நேரம்.

கிழவர்கள் ஷோக்காகக் கிளம்பி வழக்கம் போல ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த
அந்த வீட்டை நோக்கி நடை போடக் கிழவிகள் ஒளிந்து ஒளிந்து பின்னாலேயே சென்றார்கள்.

அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரே சிரிப்பு சத்தம். கலகலப்பும் கும்மாளமும் காற்றில்.

இளம் பெண் ஒருத்தியின் குரலும் இனிமையாக நடு நடுவில் கேட்டது. திகைப்புடன் கிழவிகள் அந்த வீட்டுக் கதவைத் தள்ளக் கதவு சட்டென்று திறந்து கொண்டது.

" வாங்க வாங்க பாட்டிகளா. உங்களுக்காகத் தான் காத்துக் கிட்டு இருந்தேன். ஒழுங்காக் கூப்பிட்டா வர மாட்டீங்கன்னு தான் இப்படி வர வைச்சேன். வந்து உக்காருங்க.பாடத்தை ஆரம்பிக்கலாம்",

என்று அவர்களை வரவேற்றாள் அந்த ஊருக்குப் புதிதாக வந்திருந்த கிராம சேவகி. முதியோர் கல்விக்காகத் திட்டம் போட்டு எப்படியாவது அவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இரவில் பள்ளி ஆரம்பித்துத் தாத்தாக்களை முதலில் பள்ளியில்  வெற்றிகரமாகச் சேர்த்து விட்டாள். பாட்டிகள் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள் என்று இரகசியமாகத்
திட்டம் போட்டுத் தாத்தாக்களின் மேல் சந்தேகப்பட வைத்து அவர்களையும் அங்கே வரவழைத்து விட்டாள்.

அத்தனை பைர் கையிலயும் சிலேட்டு, பலப்பம் கொடுத்து அ,ஆ ,இ,ஈ
என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

கிழவிகளும் வேறு வழியில்லாமல் சிலேட்டில் எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் . திருதிருவென்று முழித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் கிழவிகளைப் பார்த்துக் கிழவர்கள் வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புவனா சந்திரசேகரன்

ஒருபக்க கதை
மெய்வேல்

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

 

படைச்செருக்கு - 4

 

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மெய்வேல்

தம் மக்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து பூமித் தாய் ரணத்தால் சிவந்தாலும், அவர்களின் ஒப்பற்ற வீரத்தை ஆசைதீர கண்டு களித்துக் கொண்டிருந்தாள்.

 

தேர் படை, குதிரைப் படை, காலாட் படைகளுக்கு இடையே நடந்த யுத்தங்களைக் கண்டவாறே வந்த தரணியவள், யானைப் படையில் நடந்த நிகழ்வைப் பார்த்து உள்ளம் பூரித்தாள்.

 

அவளின் மடியில் தாவிக் குதித்த வீரன் ஒருவன், தன்னை நோக்கி வந்த களிறின் மீது, கரத்தில் இருந்த வேல் ஒன்றை குறிபார்த்து வீசிக் கொண்டிருந்தான்.

 

அக்களிறின் உருவத்திற்கு எதிரே, அவன் சிறு எறும்பாய்த் தோற்றம் அளித்தான். இருந்தும் பயம் கொள்ளாது, வேலை வீசி அதற்கு வலியைக் கொடுத்த களிப்பில் நின்றிருந்தான்.

 

களிறு வலியால் பிளிற, அதனைக் கண்டு மற்றொரு யானை அவ்வீரனை நோக்கி ஓடி வந்தது. இரண்டும் நண்பர்கள் போலும். நட்பு என்பது அனைத்து உயிரிகளிடத்திலும் உண்டன்றோ..?

 

'இருந்த ஒரு வேலையும் வீசிவிட்டு, நிராயுதபாணியாய் நிற்கிறோம். தன்னை நோக்கி வரும் யானையை எவ்வாறு எதிர்கொள்வது, கையில் ஆயுதம் இல்லையே?' எனத் தவிக்க, பகைவரின் புறம் இருந்து வந்த வேல் ஒன்று, அவனது மார்பைத் துளைத்து நின்றது.

 

அதை எதிர்பாராத வீரன் நிலைக்குலைந்து போனான். செங்குருதி வெளியேறி, உடலெங்கும் பரவியது.

 

நில அன்னை, அவ்வீரனின் நிலையைக் கண்டு பரிதவித்தாள். அவனைத் தன்னோடு அணைத்து ஆறுதல் படுத்த எண்ணினாள்.

 

ஆனால் குருதியில் கலந்திருந்த வீரம், அவ்வீரனை மீண்டெழச் செய்தது. தனது மார்பில் இருந்த வேலை கண்டவன், முழுப் பலத்தையும் திரட்டி அதனைக் கையால் எடுத்தான்.

 

செந்நீர் பீறிட்டு நிலமங்கையை நனைத்தது.

 

“ஆயுதம் இழந்தேனே எனத் தவித்தேன். எம் பகைவரே, எமக்கு ஆயுதத்தைத் தந்துள்ளனர்! இனியும், யான் வீழ்வேனா.?" என உரைத்துக் களிப்பில் சிரித்தவன், அவ்வேலை தன்னை நெருங்கி வந்த களிறை நோக்கி வீசினான்.

 

அது குறித் தவறாமல் தாக்கிட.. யானை வலியால் தும்பிக்கையைத் தூக்கிப் பிளிற, பூமி அன்னை.. தான் ஈன்றெடுத்த வீரனைக் கண்டு, குருதியில் சிவந்து மகிழ்ந்து, தன்னோடு அவனை ஆரத் தழுவிக் கொண்டாள்.

 

 

ஒருபக்க கதை
பேராண்மை

படைச்செருக்கு - 3

 

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.

திருக்குறள் கதைகள்

அதிகாரம் - படைச்செருக்கு 

 

பேராண்மை

அந்நாட்டில் கடந்த சில திங்கள்களாய் போர் எதுவும் மூளவில்லை. அமைதியாய் ஆட்சிச் செலுத்திக் கொண்டிருந்தார் அரசர்.

 

ஆனால் நித்தமும் நாற்படை வீரர்களுக்கும்.. போர்ப் பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் தவறாது வழங்கப்பட்டது.

 

மற்ற நாட்டினர் எவரிற்கும், அந்த தேசத்தின் மீது படையெடுத்து வந்து போர் புரியும் துணிவு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் 'மன்னரின் நேர்மையான ஆட்சியும் குறைவில்லாத வீரமும், அத்தோடு படைத் தலைவன் பிறைசூடனின் புத்திக்கூர்மையும் போர் வியூகங்களும் தான்.' என்றால் மிகையாகாது.

 

அதனால் நீண்ட காலமாய்ப் படைவீரர்கள் எந்தப் போரிலும் ஈடுபடாது, தோய்ந்த மனதுடனே வலம் வந்து கொண்டிருந்தனர்.

 

அன்றைய பொழுது எவரும் எதிர்பாராத விதமாய், எதிர்நாட்டிலிருந்து போர் புரிய அழைப்பு விடுத்து ஓலை வந்தது. மன்னர், அரசவையில் முக்கியப் பதவி வகிப்பவர்களை அழைத்து விபரத்தைப் பகிர, யுத்தத்திற்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கினார் பிறைசூடன்.

 

அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தேற அடுத்தச் சில தினங்களில், எதிரி நாட்டுப் படையைத் தங்களது தேசத்தின் எல்லையில் எதிர்கொண்டனர்.

 

விடாது தொடர்ந்து கொடுக்கப்பட்ட பயிற்சியிலும், போர்க்களம் காணும் ஆவலாலும் வீரர்கள் அனைவருமே, தத்தம் திறனைக் காட்டி.. தரணியவளைச் செங்குருதியால் உக்கிரமடைய வைத்தனர்.

 

தம் மக்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து பூமித் தாய் ரணத்தால் சிவந்தாலும், அவர்களின் ஒப்பற்ற வீரத்தை ஆசைதீர கண்டு களித்துக் கொண்டிருந்தாள்.

 

எதிரிநாட்டின் குதிரைப் படைத் தலைவனை நோக்கி அம்பெய்தி, அவனின் எதிரே சென்று நின்றான் பிறைசூடன்.

 

'உமக்கு யான் சற்றும் சளைத்தவன் இல்லை!' எனும் விதமாய்த் தன்னை நோக்கி வந்த அம்பிலிருந்து லாவகமாய் விலகி, வில்லில் நாணேற்றி எய்தான், எதிரில் இருந்தவன்.

 

ஒன்று இரண்டு மூன்று என வரிசையாய்த் தொடுக்கப்பட்ட அம்புகளிலிருந்து தப்பிய பிறைசூடன், இம்முறை எய்த அம்பு சரியாய் இலக்கை அடைந்தது.

 

எதிரி நாட்டின் குதிரைப் படைத் தலைவன், தன் மார்பில் தாக்குதலை ஏற்றுத் துணிவுடன் எதிர்கொண்டான். இரண்டாம் அம்பில் தனது நிதானத்தை இழந்து, குதிரையில் இருந்து கீழே விழுந்திட, பிறைசூடனும் இறங்கினான்.

 

மார்பில் இருந்து செந்நீர் வழிய நின்றிருந்தவனிடம் சற்றும் இரக்கம் கொள்ளாது, "நீர் நிலத்தில் நிற்கையில், யான் குதிரை மேல் இருந்து தாக்குதல் நடத்துவது யுத்த தர்மம் அன்று! இனி வாட்போர் புரியலாமா.?" என்றிட, எதிரி நாட்டானும் இடையில் இருந்த வாளை உருவினான்.

 

தொடர்ந்த போரில் பிறைசூடன், மாற்றானின் வாளைத் தட்டிவிட, நிராயுதபாணியாய் நின்றான் அவன்.

 

அந்நேரம் போர்க்களத்தில் இருந்த களிறு ஒன்று தோற்ற வீரனை நோக்கி காலை உயர்த்த.. நடக்கப் போவதை கணித்த பிறைசூடன், அவ்வீரனைக் காப்பாற்றித் தள்ளி நிறுத்தினான்.

 

அருகே இருந்த வீரன் ஒருவன் அதைக்கண்டு, "எப்படியாகினும் அவன் மரணிக்கப் போகிறான். பின், எதற்காகக் களிறிடம் இருந்து காப்பாற்றினீர் படைத்தலைவரே.?"

 

பிறைசூடன், "எய்த அம்பை மார்பில் தாங்கிய உண்மை வீரன். களிறு மிதித்து இறந்தான் என்பது அவனின் பெயருக்கு இழுக்காகும் வீரனே!"

 

"எனில், தாங்கள் அவனை உயிரோடு விட்டு விடுவீரா.?"

 

"போர்க்களத்தில் பகைவரிடம் இரக்கம் கொள்ளாது இருப்பதே ஆண்மை. அதேபோல் பகைவருக்கு ஒரு தாழ்வு வருமாயின்.. நாம் காட்டும் இரக்கம் பேராண்மையாகும்!" எனத் தனது படையில் இருந்த வீரனிற்கு விளக்கம் கொடுத்த பிறைசூடன், எதிரி நாட்டவனிற்கு வீர மரணத்தைப் பரிசளித்தான்.

 

ஒருபக்க கதை
வீரன்

திருக்குறள் கதைகள்

 

படைச்செருக்கு - 2

 

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீரன்

மக்கள் வசிக்கும் ஊர்களைக் கடந்து, நாட்டின் தலைநகரை நோக்கிய காட்டு வழி பயணத்தில் இருந்தான் அவ்வீரன்.

 

சோர்ந்து போன குதிரையின் வேகம் குறைந்திட.. அதனில் இருந்து இறங்கி, கடிவாளத்தைப் பிடித்தபடி நடக்கத் துவங்கினான்.

 

அவ்வப்போது இடைக்கச்சையில் பாதுகாப்பாய் வைத்திருந்த ஓலைச்சுருளை சரிபார்த்துக் கொண்டான்.

 

இளவரசர் அனைத்து வகையான போர்க்கலைகளிலும் தேர்ச்சி பெற்று, பன்னிரு ஆண்டுகள் கடந்து அரண்மனைக்கு வரவிருக்கிறார், என்ற செய்தியைத் தாங்கி இருக்கும் ஓலை அது.

 

அதனைத் தலைநகரில் இருக்கும் மன்னரிடம் சேர்ப்பிக்கும் பணி அவ்வீரனிற்கு வழங்கப்பட்டிருந்தது, போர்ப்பயிற்சி அளிக்கும் அந்நாட்டின் படைத்தலைவரால்.

 

பயணம் காட்டு வழியில் என்பதால் சற்று எச்சரிக்கையுடனே நடை போட்டான். சிறிது தொலைவில் நீர் சலசலக்கும் ஒலி கேட்க, இடத்தைத் தேடிச் சென்றான்.

 

சலங்கையின்றிச் சப்தமிட்டபடி ஆறு பாய்ந்தோடிக் கொண்டிருக்க.. தாகத்தைத் தீர்த்துவிட்டு, குதிரைக்கு ஓய்வளிப்பதற்காக அருகே இருந்த மரத்தில் கட்டிவிட்டு, தானும் அதனது நிழலில் அமர்ந்தான். அனிச்சையாய் கண்களானது மூடிக்கொண்டது.

 

சிறிது நேரம் கடந்திருக்கும். வீரனின் காதை உரசிய படி அம்பு ஒன்று காற்றை ஊடுருவிச் செல்ல.. சட்டென்று அவன் விழிக்க, குதிரையும் ஏதோ ஆபத்து என உணர்ந்து கனைக்கத் துவங்கியது.

 

வீரனின் கூர்ப்பார்வை எண்திசையிலும் வலம்வர, சிறிது தொலைவில் ஓடிக் கொண்டிருந்தது முயல் ஒன்று.

 

அத்தோடு காலடி சப்தமும் கேட்க.. அப்பகுதியில் திரும்பிய வீரனைக் கடந்து, கையில் வில் அம்புடன் முயலைப் பின்தொடர்ந்தான் சிறுவன் ஒருவன்.

 

"நில் சிறுவனே! ஓர் உயிரைக் கொல்வது பாவமாகும். விட்டுவிடு, அது செல்லட்டும்!" என வீரன் அவனைத் தடுத்து நிறுத்த, "நான் வேடன் ஐயா. இது பாவம் இல்லை, எனது தர்மத்தைச் செய்கிறேன்!"

 

மெலிதாய்ச் சிரித்த வீரன், "வேடனின் குறி தவறலாமோ.? எனில் எங்ஙனம் உனது தர்மம் நிலைபெறும்.?"

 

"பயிற்சியின் துவக்கத்தில் தவறுவது இயல்பு தானே ஐயா.?"

 

வியப்பாய் நோக்கிய வீரன், "உனது பயிற்சியைத் தொடரு!" என்றுவிட்டுக் குதிரையுடன் புறப்பட, "தங்களுக்குக் குறிபார்த்து அம்பெய்யத் தெரியுமா வீரரே.?"

 

சிறுவனின் வினாவில் சற்றே நிதானித்த வீரன், "இதுகாரும் எம் இலக்கு தவறியதில்லை சிறுவனே!"

 

"எனில் அந்த முயலை அம்பெய்தி பிடித்துத் தருகிறீர்களா? இன்று ஒருநாள் எனது குடும்பத்தின் பசிதீரும்!"

 

"ஓடும் காட்டு முயலைக் குறிதவறாது எய்யும் அம்பைக் காட்டிலும், குறி தவறினாலும் எதிரில் நிற்கும் யானையை நோக்கி வீசப்படும் வேல்தனை கரத்தினில் தாங்குவதே வீரனிற்குப் பெருமை சிறுவனே! ஐய்யன் வள்ளுவன், எமக்கான தர்மமாய் அதையே உரைத்திருக்கிறார். யான் அவ்வீரனாய் இருக்கவே விரும்புகிறேன்! உமக்கு, பயிற்சி வேண்டுமானால் தருகிறேன். நீயே, முயலை வேட்டையாடிக் கொள்!" என்று அச்சிறுவனிற்கு அம்பெய்யக் கற்றுக் கொடுத்தான் வீரன்.

 

ஒருபக்க கதை
படைத்தலைவன்

திருக்குறள் கதைகள்

படைச்செருக்கு - 1

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படைத்தலைவன்

கிழக்கே பகலவனிற்கு ஈடு கொடுக்கும் விதமாய், வீரர்கள் போர்க்களம் புகுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

படைத்தலைவனது கட்டளையில் நாற்படைகளும் அணிவகுத்து நின்றிட, எதிரி நாட்டாரும் யுத்தத்திற்குத் தயாராய் இருந்தனர்.

"வெற்றி வேல், வீர வேல்!" என்ற வீர முழக்கங்களின் ஒலி அவ்விடத்தின் காற்றில் நிறைந்து, வீரப் பெருமக்களின் சுவாசத்திற்குள் கலந்து, வெற்றியை ருசிப் பார்த்திடும் வித்தை அவர்களுக்குள் விதைத்து, விருட்சமாய் வளர்ந்து, சொந்த நாட்டின் மீதான பக்தியை ஆழமாய்ப் பரவச் செய்தது.

தலைவன் உத்தரவு பிறப்பித்ததும்.. வீரர்கள் ஒவ்வொருவரும் காற்றைத் துளைக்கும் அம்பாய் சீறிப் பாய்ந்தனர்.

முன்பே திட்டமிட்டதைப் போல் ஒரு பகுதியினர் மட்டும் பிரிந்து, எதிரியின் படைகளுக்குள் நுழைந்து.. அவர்களின் தலைவன் இருக்கும் இடம் நோக்கி விரைந்து சுற்றிவளைக்க முயன்றனர்.

அதை உணர்ந்து கொண்ட அந்நாட்டின் வீரர்கள் தங்களது தலைவனிற்கு அரணாய் மாறி, உள்நுழைந்தோரை எதிர்த்து நிற்க.. மதம் கொண்ட யானையும், அதை அடக்கும் யானையும் நேருக்குநேர் நிற்பதைப் போன்றதொரு பிரம்மையைக் கொடுத்தது அக்காட்சி.

இருபக்க வீரர்களும் தாக்குதலைத் துவங்க.. வாயுவிற்குள் துளையிடும் ஈட்டியின் ஒலியும், இரு மின்னல்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வது போன்றதான வாள்கள் மோதும் சப்தமும் போர்க்களத்திற்குள் குருதியின் வாசத்தைத் பரப்பத் துவங்கி இருந்தது.

எதிரிநாட்டின் தலைவனிற்குப் பாதுகாப்பாய் இருந்தவர்களை வீழ்த்திவிட்டு முன்னேற, இறுதியாய் இருந்த ஒருவீரன் மட்டும் அவர்களது வழியை மறித்து நின்றான்.

"யாம் சுவாசம் நிறுத்தும் அக்கணம் வரையிலும், எமைக் கடந்து எவரும் எம் தலைவனை நெருங்கிட இயலாது!"

மாற்று நாட்டு வீரர்களில் ஒருவன் சிரித்து, "தலைவன் என்பான் தம்மவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் அன்றோ? உம் தலைவன் மட்டும், உமை முன்விட்டுப் பின்னால் ஒளிந்து கொண்டாரோ.?"

தனித்து நின்ற வீரமகன் போர்க்களம் அதிரும் அளவிற்குச் சிரித்து,

"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.

பொருள் அறிவீரோ வீரர்களே? தத்தம் தலைவனது திறம் அறிந்து, அவரிடம் பக்தி கொண்டுள்ள ஒவ்வொரு வீரனும் அறிவான். தாங்களும் அறிவீர்! எனினும் எம் தலைவனின் சேவகனயாய் யாம் உரைக்கின்றோம்!

எம் ஐயனின் முன்னர் எதிர்த்து நிற்காதீர். இதுகாரும் முன்நின்று போர் புரிந்தோர் யாவரும் மாய்ந்து, நடுகல் ஆயினர்!" என்றான்.

அந்நொடியே தனியாய் நின்றிருந்த அவ்வீரனிற்குத் துணையாய் மேலும் பல வீரர்கள் அங்கு வந்தடைந்தனர், அவர்களின் தலைவன் இட்ட கட்டளையின் பெயரில்.

 

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!